ஜீனி போட்ட டீ யா ? கருப்பட்டி காப்பியா ?

Posted by அகத்தீ Labels:

 

 




ஜீனி போட்ட டீ யா ? கருப்பட்டி காப்பியா ?

 

தமிழில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான சொற்கள் நா. கதிரைவேற் பிள்ளையின் அகராதியில் தொகுக்கப் பெற்றுள்ளது . [ கெளரா பதிப்பகம் வெளியிட்டுள்ளது ] இப்போது இதன் எண்ணிக்கை மேலும் விரிந்திருக்கும். எல்லாவற்றையும் எல்லோரும் தெரிந்திருக்க வாய்ப்பும் இல்லை .தேவையும் இல்லை .

 

மிகப்பெரிய எழுத்தாளர்கூட தன் படைப்பு மொத்தத்திலும் ஐயாயிரம் ஆறாயிரம் சொற்கள் பயன்படுத்தினாலே அதிகம் . ஷேக்ஸ்பியரே அப்படித்தான் என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள் . ஒரு மொழியில் சுமார் [ தோராயம் இன்னும் வழக்காகவில்லை] ஐநூறு சொற்களுக்குள்தான் சாதாரண மனிதன் வாழ்க்கையில் புழங்கும் என்கிறார்கள் மொழியிலாளர்கள் .அவர் தொழில் சார்ந்து புழகுவது தனி.

 

இதில் வட்டார வழக்குகளே மேலோங்கி நிற்கும் .அதுவே இயல்பு . அதே போல் பிற மொழிக் கலப்பே இல்லாமல் நூறு சதம் [ விழுக்காடு என தூய தமிழிலும் சொல்லலாம் ] இயங்குவதாய்ச் சொல்வது கற்பனை .  தோழர் வீ.பழநியும் ’என்னுரையில்’ அதைச் சுட்டி இருக்கிறார் .

 

பெயர் சொற்களை மொழிபெயர்ப்பது வீண் . வினைச் சொற்களைப் புறக்கணித்து வாக் பண்ணி ,ஸ்மைல் பண்ணி ,குக் பண்ணி ,மியூசிக் பண்ணி , டைரக்ட் பண்ணி ,ரீட் பண்ணி  இப்படி பண்ணித் தமிழாக்குவது மொழியைக் கழுத்தை நெரித்துக் கொல்வதாகும் .தொலை காட்சியும் ஊடகங்களும் இந்தக் கொலையில் முக்கிய பங்காற்றுகிறது .

 

பெளதீகம் ,இரசாயணம் , ஜியோமதி என்றால் இந்த காலத்துப் பிள்ளைகளுக்குத் தெரியாது .அழகிய தமிழில் இயற்பியல் ,வேதியல் ,வரைகணிதம் என புழக்கத்திற்கு வந்துவிட்டது . அருமையாய்  ‘வணக்கம்’ சொல்வதை விடுத்து ’நமஸ்காரம்’ என காராமாவது சங்கித்தனமே !

 

நான் ஐடிஐ படிக்கும் போது தமிழில் பாடநூல்கள் மிகக்குறைவு .ஒன்றிரண்டு இருக்கும்.அதுவும் மிகவும் கேலிக்குரியதாய் இருக்கும் . எடுத்துகாட்டு . மரத்தாலான சுத்தியல் / பிளாஸ்டிக்காலான சுத்தியல் இருக்கும் .இது அடிப்பதற்கல்ல  வடு இல்லாமல் நேர் செய்ய பயன்படும் .இதனை ஆங்கிலத்தில் soft hammer என்பர் . தமிழில் நாங்கள் கொட்டாப்புளி என்போம் . கொட்டாப்பிடி என வீ.பழநி அகராதியில் தொகுத்துள்ளார் . ஆனால் அதனை மெதுவடை போல் மெதுசுத்தி என அப்போது மொழியாக்கம் செய்திருந்தார்கள்  . ஸ்குரூ டிரைவரை  திருப்புளி [ இந்த அகராதியிலும் உள்ளது ] என்போம் .இதை முடுக்கும் கருவி என அப்போது மொழி பெயர்த்திருந்தனர் .anvil என்பது சம்மட்டி அடிக்கும் போது அடியில் வைக்கப்படும் கனமான இரும்பு மேடை .இதனை அடிதாங்கி  /இடிமனை என நாங்கள் சொல்வோம்  அதனை  ‘வைத்தடி மேடை’ என மொழியாக்கம் செய்திருந்தனர்.உழைக்கும் மக்கள் தன் வாழ்க்கையோடு ஏராளமானச் சொற்களை சுமந்து திரிகின்றனர் . அதனை அறியாமல் மொழியாக்கம் செய்வோர் இப்படித்தான் நம்மை காயப்படுத்துகின்றனர் .

 

விருதாப் போனவனே என நாஞ்சில் நாட்டில் ஏசுவார்கள் . வீணாகப் போனவனே என்று பொருள் . விருதாப் போனவர்களுக்கு விருதா கொடுக்கும் இந்நாளில் அச்சொல் முக்கியத்துவம் பெறும் .இந்த அகராதியில் அச்சொல்லைத் தேடினேன் கிடைக்கவில்லை . எல்லா சொற்களையும் அவர் எழுத முடியாது .இந்நூல் நல்ல முயற்சி .

 

முச்சூடு என்ற சொல் முழுவதும் எனப் பொருள் படும் . நாஞ்சில் ,நெல்லை மாவட்ட வழக்கு .“பாலின்றி பிள்ளை அழும்” எனத் தொடங்கும் பாடலில் ப.ஜீவானந்தம் “ வீடு முச்சூடும் அழும்” எனப் பாடி இருப்பார். இந்த அகராதியில் அச்சொல் இடம் பெற்றுள்ளது. கருப்பட்டி என்பதா பனைவெல்லம் என்பதா ? அது , நீ வாழும் ஊரைப் பொறுத்தது .

 

சந்து என்பதை நாஞ்சில் நாட்டில் முடுக்கு என்பார்கள் .இந்நூலில் முடுக்குதல் இருக்கிறது முடுக்கு இல்லை . ஈருள்ளிதான் வெங்காயம் இல்லை நாஞ்சில் நாட்டிலும் நெல்லையிலும் .அட, கன்னடத்திலும் ஈருள்ளிதான்.

 

காணத் துவையலும் சுடுகஞ்சியும் பப்படமும் சின்ன வயதில் அம்மை  [அம்மாவின் நாஞ்சில் வழக்கு] அதிகம் தந்திருக்கிறார் .சென்னைக்கு வந்த போது ஒரு கடையில் போய் காணம் கேட்டேன் .அண்ணாச்சி சொன்னார் இங்கே இதன் பெயர் கொள்ளு . இந்த அகராதியில் காணம் உள்ளது .

 

எல்லா சொற்களையும் எழுதுவது சிரமம் . மாதிரிக்கும் ஒன்றிரண்டு சுட்டினேன். இந்நூலை வாசிக்கும் முன் வெள்உவனின் முன்னுரை ,கிருஷியின் அணிந்துரை , பழநியின் என்னுரை மூன்றையும் அவசியம் படியுங்கள் .

நீங்கள் ஒரு வேற்று மொழி ஊருக்குப் போகிறீர்கள் . அங்குள்ள மொழியைக் கற்றுக்கொள்வது எளிது .காய்கறிகள் ,மளிகைச் சாமான்கள் ,விழிச் சொற்கள் , மரியாதைச் சொற்கள் என சுமார் முன்னூறு சொற்கள் தெரிந்தால் சமாளிக்கலாம் .போகப்போக நிறைய அறியலாம் .

 

[ உபதேசம் செய்யும் நான் பத்துவருடங்கள் கடந்த பின்னும் கன்னடத்தில் ஒற்றை வார்த்தை கற்றுக்கொள்ளவில்லை .என்னை பார்த்த உடனே எல்லோரும் எப்படியாவது தமிழில் பேசிவிடுகின்றனர் .என் செய்வது ?]

 

 ஆனால் அடுத்த மொழி பேசத் துவங்கும் போது முதலில் எந்தெந்த சொற்களை பயன் படுத்தக்கூடாது அல்லது அந்த சொல் எந்த கெட்ட நோக்கில் உள்ளது என முதலில் அறிய வேண்டும் . நாம் பேசாமல் தவிர்க்கவும் ,பிறர் பேசும் போது உஷாராகவும் இது அவசியம் . சே குவேரா கூட இந்த ஆலோசனையை அவர் பயணத்தில் சொல்லி இருக்கிறார் .கடைப் பிடித்திருக்கிறார்.

 

ஆமாம் கண்டக்ட்ரிடம்  மீதிச் சில்லறையை பையக் கொடுங்கள் என்றால் , மெதுவாகக் கொடுங்கள் என்றுதானே அர்த்தம் . பணப்பையை கேட்பதாய் கருதினால் சண்டைதான் . உங்களுக்கு தெரிந்த சொல்தான் சரியென ‘ நிலையாநிக்காதீங்க’ [அடம் பிடிக்காதீங்க] அந்த ஊரில் அதன் பொருள் வேறாக இருக்கக்கூடும் .  திருநெல்வேலியில் போய் சக்கரையில்லா டீன்னு கேட்காதீங்க ஜீனி இல்லா டீன்னு கேளுங்க .சரிதானே !

 

கம்யூனிஸ்டுகளின் மொழிப்பற்றுக்கும் அக்கறைக்கும் இந்நூலும் சாட்சி .தோழர் பழநியும் சாட்சி.

 

சொல்லும்…. பொருளும்…. [ 2800 தமிழ்ச் சொற்கள் ]

ஆசிரியர் : வீ.பழநி , வெளியீடு : அ ஆ இ பதிப்பகம் , 27,அழகர் நகர் , பெருமாள்புரம் அஞ்சல் ,பாளையங்கோட்டை ,திருநெல்வேலி – 627 007 .தொடர்புக்கு : 94433 91196 / 63816 48023 /   palanicpm55@gmail.com பக்கங்கள் : 168  , விலை : ரூ.120/

 

 

சு.பொ.அ.

13/05/2024

 

சொல்ல வேண்டிய கதைகள்.. சொல்ல வேண்டிய மொழியில்….

Posted by அகத்தீ Labels:

 



சொல்ல வேண்டிய கதைகள்.. சொல்ல வேண்டிய மொழியில்….

 

தமிழில் சிறார் இலக்கியம் ,குழந்தை இலக்கியம் ஆக்குவதில்  இப்போது ஏற்பட்டுவரும் வளர்ச்சியும் மாற்றமும் மிகவும் நம்பிக்கை அளிக்கிறது . ராமாயணம் ,மகாபாரதம்  என அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைத்து அறிவை முளையிலேயே கிள்ளி எறியும் போக்கு மெல்ல சாகட்டும் !

 

அறிவைத் தூண்டிவிடும் நம்பிக்கையை போராட்ட குணத்தை சமத்துவ உணர்வை முளையிலேயே  உசுப்பிவிடும் முயற்சிகள் மெல்ல முகிழ்த்தாலும் வலுவாய் எழுகிறது . இ.பா.சிந்தனின் “அப்பா ஒரு கதை சொல்றீங்களா…. “ நூல் காத்திரமான வரவு . ஏற்கெனவே விழியன் ,உதயசங்கர் போன்ற சிலர் இப்பாதையில் தடம் அமைக்கின்றனர் .

 

இந்நூலில் உள்ள இருபது கதைகளும் வெறும் கதைகளல்ல ; கதை வடிவிலான சாதனையாளர் வாழ்க்கை .

 

” ஹேப்பி பர்த் டே “ நாமும் சொல்லி இருக்கிறோம் .கேட்டிருக்கிறோம் .அதன் பின்னால் ஹில் சகோதரிகளின் இதயமும் உழைப்பும் இருப்பதை இப்போதுதானே அறிந்தோம்.

 

போர் மேகம் சூழ்ந்த ஈராக்கில் நூலகத்தைக் காப்பாற்றிய ஆலியாவின் கதை சொல்லும் செய்திகள் வலுவானவை .

 

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரி பூலே , புதை படிவ ஆய்வாளர் மேரி ஆனிங் , உலகின் முதல் பெண் சாஃப்ட்வேர் இஞ்ஜினியர் அடா லவ்வேஸ் ,உலகை சைக்கிளில் சுற்றி வந்த ஆனி லண்டண்டெரி ,மரங்களின் தாய் வங்காரி மாத்தாய் , கிரிகெட்டில் சாதனைப் பெண் மித்தாலி ராஜ் ,அனிமேசன் நாயகி மேரி ப்ளேரின் ,முதலில் காரை ஓட்டிய பெண் பெர்த்தா பென்ஸ் உட்பட பல சாதனைப் பெண்களையும் ,சில ஆண்களையும் பிஞ்சுகளுக்கு அறிமுகம் செய்திருப்பது பாராட்டத் தக்க முயற்சி .

 

உரையாடல் வடிவம் , எளிய சொற்கள்,  குழந்தைக்கு சொல்ல வேண்டிய அளவில் செய்தி இவற்றை  சரியான விகிதத்தில் கலந்து தந்திருப்பதுதான் இ.பா.சிந்தனின் வெற்றி .

 

அவர் ஓர் குழ்ந்தைகளுக்கான யூ டியூப் சேனலும் நடத்தி வருகிறார். உங்கள் குழந்தைகளுக்கு அந்த சேனலை அறிமுகம் செய்து வையுங்கள் .

 

 [ Kutti Story Kids@KuttiStoryKids1.52K subscribers759 videosகுழந்தைகளுக்கு கதைசொல்வது மிகமிக அவசியம். இவ்வுலகைப் புரிந்து…]

 

 நான் என் பேரனுக்கும் பேத்திக்கும் கதை போல் ஒரு அறிவியலையோ வரலாற்றையோ சொன்னால் போதும் மறுநாள் சக நண்பர்களோடு விளையாடும் போது இந்த புதிய செய்தியை அவன் /அவள் பாணியில் கைகால் முளைக்க வைத்து சொல்லிக் கொண்டிருப்பார்கள் . அவர்களே இதுபோல் தகவல்களை கூகுளில் தேடி நமக்கு பரிட்சை வைக்கும் போது பெரும்பாலும் தோற்றுப் போவேன் . அதில் எவ்வளவு இன்பம் தெரியுமா ?

 

இந்நூல் அது போன்ற ஆவலை நிச்சயம் கிளர்த்தி விடும் என்பதில் ஐயமில்லை . வாசலை திறந்து விடுங்கள் அவர்கள் வானத்தை ,கடலை அளந்து சொல்வார்கள் .

 

அப்பா மகளுக்கு சொல்வது நல்ல உத்தி . என் ஞானப் பிள்ளை இ.பா.சிந்தன் எப்போதும் லட்சியத் தெளிவுள்ள தன் படைப்புகளால் என்னை வியக்கவைத்துக் கொண்டே இருக்கிறான் .வாழ்த்துகள் !

 

அப்பா ஒரு கதை சொல்றீங்களா…. பெரிய சாதனைகள்… குட்டிக் கதைகள் .

ஆசிரியர் : இ.பா.சிந்தன் , வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன் , பாரதி புத்தகாலயம் , தொடர்புக்கு :044 – 24332924 /8778073949

 Email :  bharathiputhakalayam@gmail.com  / www.thamizhbooks.com 

பக்கங்கள் : 144 , விலை :ரூ.140/

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

10/05/2024.

10/05/2024.

 


கேள்வியை எழுப்பினால் தலைகுனிவோம் .மனம் மலரும் !

Posted by அகத்தீ Labels:

 

கேள்வியை எழுப்பினால் தலைகுனிவோம் .மனம் மலரும் !


எவ்வளவு படித்தவராக இருந்தாலும் , எவ்வளவு மேதையாக இருந்தாலும் , எவ்வளவு வயது முதிர்ந்தவராக இருந்தாலும் ; சக மனிதர்களோடு உரையாடுவதிலும் உறவாடுவதிலும் தோற்றுப்போனால் அந்த இடத்தில் அவர் பூஜ்யமே !

மனிதர்களோடு உரையாடுவதும் உறவாடுவதும் எளிய கலையல்ல .வெறும் அறிவு நுட்பம் மட்டுமே பயன்படாது . விசாலப் பார்வை வேண்டும் . விரிந்த உள்ளம் வேண்டும் . யாரையும் கிள்ளுக்கீரையாய் நினைக்காத மனம் வேண்டும்.

நாம் ஒவ்வொருவரும் இதில் நூறுமுறை ஆயிரம் முறை தோற்றிருக்கிறோம். ஆனாலும் பாடம் கற்றுக்கொள்ள முடியவில்லை .அனுபவமே சிறந்த ஆசான் என்பது கூட பல நேரங்களில் இதில் பயனளிக்க வில்லை . காரணம் நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இயல்பாய் இருக்கிறார்கள் .

அவரால் நமக்கும் நம்மால் அவருக்கும் சில தேவைகள் பூர்த்தியாகும் எனில் சகித்துக் கொள்கிறோம் . தேவை முடிந்ததும் தூக்கி எறிகிறோம் .எறியப்படுகிறோம். தேவை ஓங்கும் போது குறை சிறிதாகத் தெரிகிறது .தேவை முடிந்ததும் குறை பெரிதாய் விஸ்வரூபமெடுக்கிறது .

காரணமே இல்லாமல் ஒருவரை வெறுக்கவும் முடிகிறது , தலையில் வைத்து கூத்தாடவும் முடிகிறது . நமக்கென்று வரும் போது வலிக்கிறது ; அடுத்தவர்க்கு எனில் ரசிக்க முடிகிறது .விசித்திரமான மனித மனம் . ஒருவேளை சுயநலமும் சுயபச்சாதாபமும் தான் பொது இயல்போ ? மீளப் போராட வேண்டாமா ?

வாழ்க்கை நெடுகிலும் சொந்தகளுக்குள் , அலுவலகத்துக்குள் ,பொதுவாழ்வுக்குள் எங்கேயும் இந்த முரண் இருக்கத்தான் செய்யும் .விதிவிலக்காய் சில நட்புகளும் தோழமையும் அமைந்து விடுவதும் உண்டு .

குறை நிறைகளோடு நேசிக்கப் பழகுவது என்பது ஒரு கழைக் கூத்தாடியின் சாமர்த்தியத்தை ஒத்தது . ஆனால் கழைக்கூத்து பயிற்சியில் கைகூடும் . இங்கு அன்பால் அரவணைக்கும் போது மட்டுமே சாத்தியம் .

வெறுப்பின் இடத்தில் அன்பை வையுங்கள் . நெருப்பு அணைந்து ஆறிய பிறகு தூர நின்று அசை போடுங்கள் . நெஞ்சில் ஒளி தோன்றலாம். நாமென்ன தவறே செய்யாதவரா ? அவரென்ன தவறு மட்டுமே செய்யப் பிறந்தவரா ? பரஸ்பரம் இக்கேள்வியை எழுப்பினால் தலைகுனிவோம் .மனம் மலரும் !

எளிதாகச் சொல்லிவிட்டேன் . வயது எழுபதைத் தாண்டியும் இன்னும் நான் இதில் ஆரம்பப் பள்ளி மாணவனே .சொல்வது எளிது . முதலில் சொல்வோம் . பிறகு சொல்லுக்கு நியாயம் வழங்க நமக்குள் போராடுவோம்.!சரிதானே !

சுபொஅ.
8/05/24.

தன்னையும் திருத்தும் !உன்னையும் திருத்தும் !

Posted by அகத்தீ Labels:

 





தன்னையும் திருத்தும் !உன்னையும் திருத்தும் !

 

இயற்கை அதன் போக்கில் நம்மை வாழவைக்கிறது . நாம் அதற்கு கொடுக்கிற தொல்லைகளுக்கு அவ்வப்போது பதிலடி கொடுத்தாலும்.தன் கடமையில் அது வழுவுவதில்லை.

 

மழை ,வெயில் ,பனி ,வசந்தம் எல்லாம் மாறி மாறி வருவது இயல்பான சுழற்சி .ஒன்றில்லாமல் இன்னொன்று இல்லை .ஒன்று மட்டுமே இருந்தால் இயக்கம் அற்றுப்போகும்.

 

வெயில் இல்லாமல் மழை இல்லை .மழை இல்லாமல் பனி இல்லை .பனி இல்லாமல் வசந்தம் இல்லை .வசந்தம் இல்லாமல் வெயில் இல்லை .சுழன்றுகொண்டே இருந்தால்தான் பூமி .நின்று போனால் என்ன ஆகும் ?

 

உன் உறைவிடம் , உன் உடை ,உன் உணவு ,உன் பழக்க வழக்கங்கள், உன் வாழ்முறை எல்லாம் பருவ மாறுதலோடு இயைந்து மாறிக்கொண்டே இருந்தால் இயற்கை உனக்கு தொல்லை இல்லை நண்பன் .தோழன்.

 

நீ இயற்கையை உன் முன் மண்டியிட வைக்க மல்லுக் கட்டுகிறாய் . இயற்கை உன்னை அதன் முன் மீண்டும் மீண்டும் மண்டியிட வைக்கிறது ?உன் கர்வம் ஒவ்வொரு முறையும் பங்கப்படுகிறது .என்ன செய்ய ?

 

இயற்கையை புரிந்து கொள்ள முயற்சி செய் ! மழை உனக்கு மட்டுமல்ல , நிலத்துக்கும் கடலுக்கும் உரிய பங்கு உண்டு . எல்லாவற்றையும் நீயே சுருட்ட நினைத்தால் சுழற்சி முடங்கும் .முதலுகே மோசம் வரும் .முதலில் இதனை அறிந்து கொள் !

 

வெயில் நிலத்தில் மீது மட்டுமா ஆட்சி செய்கிறது கடல் மீதும்தான் ; விளைவு பருவமழைக்கு வெற்றிலை வாக்கு வைத்து அழைப்பு விடுகிறது .நீ ஏன் வெயிலைச் சபிக்கிறாய் ?

 

இயற்கையப் புரிந்து கொள்வது என்பது முகநூலிலும் வாட்ஸ் அப்பிலும் போடும் அரைகுறை தகவல் அல்ல . அடி முடி அறியாமல் அவசரகோலத்தில் பழிபோடும் சின்னப்பிள்ளைத்தனம் ஆகவே ஆகாது .

 

பருவகாலம் ஒவ்வொன்றுக்கும் ஓர் பங்கு உண்டு .ஓர் பணி உண்டு .அதனை செய்தால் மட்டுமே அது பருவகாலமாய் இருக்கும் . தப்புத் தாளங்கள் எங்கும் இருக்கும் .பருவ காலங்கள் மட்டும் தப்புமா ?

 

தப்புத் தாளங்கள் என்பது நிரந்தரமல்ல .அதனை வைத்து மட்டுமே எந்த அவசர அரைகுறை முடிவுக்கும் போகாதே ! இயற்கையும் தப்பு செய்யும் .தன்னை திருத்தி தகவமைத்துக் கொள்ளும் .

 

உன்  பொறுப்பற்ற அளவுக்கு மீறிய தலையீட்டால் தாமதமாகலாம் .ஆனால் முடங்கி விடாது .இயற்கை தன்னையும் திருத்தும் !உன்னையும் திருத்தும் ! முடங்குவதல்ல முன்னேறுவதே இயற்கையும் நீயும் என்று உணர் !

 

அரைகுறைகளால்தான் எப்போதும் பேராபத்து.அரைக்கிணறு தாண்டுவது அறிவிலித்தனம் . ஆனாலும் எல்லாம் உனக்குத் தெரியும் என்கிற இறுமாப்புக்கு மட்டும் குறைவில்லை .

 

இளைய தலைமுறையே!  இயற்கையை ஆழப்படி ,அகலப்படி , முழுதாய் படி , ஒன்றோடு  ஒன்று இணைத்துப் படி ! இயற்கை உன் வசப்படும் ! நீ இயற்கையோடு இயைந்து நடப்பாய் !

 

சரிதானே ! தோழா!

 

சுபொஅ.

04/05.2024.

 


பெண்களின் உள்காயங்களிலிருந்து ….

Posted by அகத்தீ Labels:

 






 

பெண்களின் உள்காயங்களிலிருந்து ….

 

 “ உன் மெளன விலகல்

கணக்கில்லா காலம்

என்னை வதைத்தது”  -எனத் தொடங்கி

 

“ உன்னை நினைக்கையில்

எனக்கு எந்த உணர்வு மில்லை.”

 

-  என முடியும் ”அப்பால்” எனும் கவிதையே கிட்டத்தட்ட இந்த முழுத்தொகுப்பின் சாரம் .

 

பல கவிதைகளில் கவிஞர்  தன் உள் காயங்களை பெண்ணியக் குரலில் வலுவாய்ச் சொல்லுகின்றார் . ஆனால் அது தனித்த குரல் அல்ல.சமூகத்தின் ஊனப் பார்வையை எரிக்கும் நெற்றிக்கண் பார்வை . தன்னைப் போலவே பிற பெண்களின் ,மனிதர்களின் உள்வலியை  சொல்லும் பல கவிதைகளும் உள்ளன.

 

 

“ திடீரென இறந்து விட்டாள் மாமி

சுமங்கலியாய்

வீட்டிற்குள் வந்தபின்

அம்மா பெரிதாக அழுதாள்

‘ அவர் பிடுங்கல் இல்லாமல்

பத்துநாளாவது இருக்கணும்னு

சொல்லுவையே

இப்படிப் போயிட்டியே’

எனக் கூறி.”

 

 “சுமங்கலி” எனும் இக்கவிதையைப் படித்த பின்னர் அசைபோட்டேன் . “ தீர்க்க சுமங்கலி பவா”ன்னு வாழ்த்துகிறோமே , ஆயின் பெண்ணுள்ளம் அறிந்தோமா ?

 

ஆண்டாள் பிரியதர்ஷினியின் ஒரு சிறுகதையில் என நினைக்கிறேன். சதா சந்தேகப்படும் கணவன் ,மாமியார் இவர்களோடு வதைபட்டு வதைபட்டு சாகக் கிடக்கும் ஒரு பெண் , டாக்டரைப்  பார்க்கப் போவதுகூட அவர் மேலுள்ள ஆசை என்று குற்றம் சாட்டும் அவலம் . பிறந்த பிள்ளை எல்லாம் தனக்கு பிறந்ததுதானா என மரணப் படுக்கையிலும் அவளை துளைப்பான் கணவன். அவள் “ இறைவா என்னை மன்னித்துவிடு !” மனதிற்குள் வேண்டிவிட்டு ,அவனை அருகழைத்து காதில் சொன்னாள் “ மூன்று பிள்ளைகளில் ஒன்று உனக்குப் பிறக்கவில்லை.” இதோடு அவள் கண்மூடிவிட்டாள் . அவன் நடை பிணமானாள்.

 

பெண்களின் மனக்காயங்களின் வலியும் வீச்சும் ஆண்களுக்கு பிடிபடுவது சிரமம் . இத்தொகுப்பில் ஒரு பார்வையில் கடந்தால் “ கூறியது கூறல்” மலிந்திருப்பதாக் கூறலாம் ; ஆயின் உள் காயம் சீக்கிரம் ஆறுவதே இல்லை . மீண்டும் மீண்டும் வலி  கொப்பளிக்கும் போது என் செய்வது ?

 

“ ஆட்டோ” என்றொரு கவிதை ஆட்டோகாரர்கள் மீதான பொதுக் கோபம் முதல் பாதியில் ; மறுபக்கம் மழையில் தவிக்கும் போது , குழந்தைகளை பொறுப்போடு அழைத்துச் செல்வது ,மருத்துவ மனைக்கு செல்லும் போது மனிதம் ஓங்கும் ஆட்டோக்காரர் பொழுதுகளைச் சொல்லி நெகிழ வைத்து விடுகிறார். குப்பை வண்டி ஓட்டுபவர் குறித்த ,”இன்னாரின் மகன்” எனும் கவிதை,  பாபர் மசூதி இடிப்பைப் பேசும் “ இனியுமா ?” எனும் கவிதை இப்படி சுட்டிக்காட்ட நிறைய உண்டு.

 

வித்தியாசமான உவமானம் பலகவிதைகளில் தலைநீட்டும் . எடுத்துகாட்டு

 

“ இன்று இல்லை” எனும் கவிதையில்

 

“ ஆனாலும் நீ இருந்தாய்

வெகுநாட்களுக்கு

நாத்திகனாகிவிட்ட

முன்னாள் பக்தனின் நினைவில் தங்கிப் போன

மந்திரங்களைப் போல்

என் மனதின் இடுக்குகளில்..”

 

தேர்ந்தெடுக்கப்பட்ட 420 கவிதைகளின் தொகுப்பு இந்நூல் .

 

 “அரசியல் கதை அல்ல ; குடும்பக் கதை . கணவனைப் பிரிந்த பெண்ணின் வாழ்க்கை ரணம்தான் நூல் நெடுக நம் இரக்கத்தை யாசித்துக்கொண்டே இருக்கிறது .ஆனால் வழக்கமான குடும்பத்தின் கதையல்ல உறவுகளுக்குள் நடக்கும் போட்டி ,பொறாமை இவற்றின் கதை மட்டுமல்ல  ;  ஆணாதிக்கத்தையும் பெண்ணடிமைத்தனத்தையும் எவ்வளவு நுட்பமாகச் சமூகம் கட்டி அமைக்கிறது என்பதை கதைப் போக்கில் சொல்லிச் செல்வதுதான் இந்நூலின் தனிக்கூறு .”

 

 “கண்ணுக்குள் சற்று பயணித்து” எனும் ஆர் .வத்சலாவின் நாவலொன்றுக்கு 2017 டிசம்பரில் எழுதிய நூலறிமுகத்தில் குறிப்பிட்டேன். அதன் நீட்சிதான் இந்த கவிதைத் தொகுப்பும் எனில் மிகை அல்ல.

 

கடைசியாக ஒன்று , நானும் ஏராளாமான கவிதைகள்  எழுதி இருந்தாலும் அவற்றை தொகுத்து நூலாக்கத்  துணியவில்லை . வத்ஸலாவின் “ எப்படியாயினும் கவிதையைப் படித்தபின் என்னுள்ளும் ஓர் சலனம் .அவர் கவிதையைப் பார்ப்போம்.

 

“நான் எழுதிய கவிதை

நல்ல கவிதை

சுமாரான கவிதை

மோசமான கவிதை

கவிதையே அல்லாத கவிதை

உனக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும்

அது என் கவிதை

நான் பெற்றது.”

 

கவிதைத் தொகுப்புக்கு  “உள்வலி” என்றோ ”உள்காயம்” என்றோ பெயர் சூட்டி இருக்கலாமோ ?

 

வத்ஸலாவின் தேர்ந்தெடுத்த கவிதைகள்,

ஆசிரியர் : ஆர்.வத்ஸலா ,

வெளியீடு : ரெட் ரிவர் பதிப்பகம் ,

157/1 ,பத்பர்கஞ்ச் [ patparganj] , புது தில்லி -110091.

பக்கங்கள் : 530 விலை : ரூ.699/

 

 

 


சாவு செய்திகளைக் கேட்கும் போதும்…..

Posted by அகத்தீ Labels:

 

சாவு செய்திகளைக் கேட்கும் போதும்…..

 

சாவு செய்திகளைக் கேட்கும் போதும் ; துக்கம் விசாரிக்கச் செல்லும் போதும் என்னுள் ஓர் தத்துவ விசாரணை தொடங்கிவிடுகிறது.

 

என்ன சொல்லி ஆறுதல் சொல்வது ? நெஞ்சோடு அணைத்து முதுகைத் தடவிக் கொடுப்பதா ? இதமான சொற்களால் இதயத்தை வருடிவிடுவதா ?

 

குக்கரில் விசில் வந்ததும் வெளியேறும் நீராவி போன்றதா துக்கம் ?

 

வீட்டை விட்டு உடல் வெளியேறியதும் வந்த கூட்டமும் சட்டென கரைந்து விடுக்கிறதே !

 

நிர்பந்தத்தால் கொஞ்சம் மிஞ்சியிருக்கும் கூட்டமும் மெல்ல மெல்ல விடை பெற்று விடுகிறதே !

 

இதுவரை துக்கத்தை பகிர்ந்து கொண்டிருந்தவர்கள் அவற்றை எங்கே வீசிவிட்டுச் சென்றிருப்பார்கள் ? பூத ஊடலில் போர்த்திய மாலைகளை வீசிய அதே குப்பையிலா ?

 

உறவை இழ்ந்தவர் மீண்டெழ வழி யாது ? தோள் கொடுப்பவர் யார் ? துணை இருப்பவர் யார் ? உதவிக்கரம் நீட்டுபவர் யார் ?

 

பொருளாதாரமே  மைய  அச்சாகிப் போகிறது .பந்தம் ,பாசம் ,உறவு  எல்லாம் இருந்தாலும் நெருக்கம் ஒருப்போல் இல்லையே !

 

தோள் கொடுக்கும் தோழமையும் , உடன் நிற்கும் நட்பும் மட்டுமே ஊன்றுகோலாய் பெரும்பாலும்  இருக்கிறது .

 

சாதி ,மதம்  எல்லாம் சடங்குகளை ,சம்பிரதாயங்களைத்  திணித்து  மேலும் கடனாளியாக்குவதைத் தவிர வேறு என்ன இதுவரை சாதித்திருக்கிறது ? வேலிக்குள் முடக்குவதைத் தவிர வேறு என்ன செய்திருக்கிறது ?

 

ஒவ்வொருவரும் தம் சாவுக்குப் பின் என்னென்ன நடக்க வேண்டும் ? என்னென்ன கூடாது ? தன்னால் முடிந்த சேமிப்பு இவ்வளவுதான் ,கடன் இவ்வளவுதான் ,இதற்குத்தான் அது என எழுதி வைப்பதில் என்ன பிழை ?

 

அறுபதைக் கடந்தவர்கள் மரணத்தை எதிர்பார்த்து சிலவற்றை யோசித்து எழுதி வைக்கலாம் / சொல்லி வைக்கலாம் .அகால மரணங்களின் போது என்ன செய்வது ?

 

மரணம் கதவைத் தட்ட வயது ஒரு பொருட்டல்ல. மரணத்தைப் பற்றி பேச மட்டும் வயது எப்படித் தடையாகும் ?  மரணம் எப்போதும் வரலாம். பயந்து சாக வேண்டாம் .

 

கொஞ்சம் திட்டமிட்டு வாழலாமே ! ஆயினும் சமூகச் சூழலும் வாழ்க்கைச் சூழலும் அதற்கு உகந்ததாக இல்லையே !

 

கணவன் ,மனைவி , பிள்ளைகள் உடன் வசிக்கும் இதர உறவுகள் போராடி வாழப் பழகின் கொஞ்சம் தாக்குப் பிடிக்கலாமோ ! இல்லாவிடிலும் கையறு நிலை கற்றுக்கொடுத்துவிடும் .

 

மரணமும் ஓர் பாடசாலைதானே ! கற்றுக்கொடுத்துக் கொண்டே இருக்கிறது . வாழ்க்கையே ஒரு பட்டறைதானே !வாழப் பழகுவதும் வாழப் போராடுவதும் ஒன்றுதானே !

 

சுபொஅ.

02/04/2024.