எத்தனை எத்தனை கட்சிகள் – 4

Posted by அகத்தீ Labels: ,



எத்தனை எத்தனை கட்சிகள் – 4

 


முதல் பொதுத் தேர்தலிலேயே 53 கட்சிகள்

 

1952-ல் நடைபெற்ற முதல் தேர்தலில் மொத்தம் 53 கட்சிகள் போட்டியிட்டன. அகில இந்திய அளவில் போட்டியிட்ட தேசிய கட்சிகள் எனப்பட்டவை 14 மட்டுமே. ஆயினும் நாடாளுமன்றத்திற்கு வென்று சென்ற கட்சிகள் 22 தான். இந்த கட்சிகள் எல்லாவற்றுக்குமான விதை 1947-ற்கு முன்பே போடப்பட்டுவிட்டது. இந்த கட்சிகளோடு பல குட்டிக் கட்சிகள் தேர்தலில் போட்டியிடாமலே கூட்டணிகளில் இருந்தன. அகில இந்திய அளவில் போட்டியிட்ட 14 கட்சிகளும் சின்னங்களும் விவரம் வருமாறு:

 

1. போல்ஷ்விக் கட்சி (Bolshevik Party): ஐந்துமுனை நட்சத்திரம்

 

2. அகில இந்திய பார்வேர்ட் பிளாக் [மார்க்சிஸ்ட்] கட்சி (All India Forward Bloc): சிங்கம்

 

3. அகில பாரதிய ஹிந்து மகாசபா (Akhil Bharatiya Hindu Mahasabha): குதிரை மீது வீரன்

 

4. ஆல் இண்டிய ஷெட்டூல்ட் காஸ்ட் பெடரேஷன் (All India Scheduled Caste Federation): யானை

 

5. அகில இந்திய புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி (Revolutionary Communist Party of India): தீப்பந்தம்

 

6. அகில பாரதிய ராம் ராஜ்ய பரிஷத் (Akhil Bharatiya Ram Rajya Parishad): உதய சூரியன்

 

7. சோஷலிஸ்ட் கட்சி (Socialist Party): ஆலமரம்

 

8. அகில இந்திய பாரதிய ஜனசங் கட்சி (All India Bharatiya Jan Sangh Party): அகல் விளக்கு

 

9. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி (Indian National Congress): இரட்டைக் காளை

 

10. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India): கதிர் அரிவாள்

 

11. புரட்சிகர சோஷியலிஸ்ட் கட்சி (Revolutionary Socialist Party): மண்வெட்டியும் மண்வாரியும்

 

12. கிரிஷிகர் லோக் கட்சி (Krishikar Lok Party): கலப்பை

 

13. அகில இந்திய பார்வேர்ட் பிளாக் (All India Forward Bloc): கைச் சின்னம்

 

14. கிஸான் மஸ்தூர் பிரஜா கட்சி (Kisan Mazdoor Praja Party): குடிசை

 

குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் என் தந்தையின் கடைச் சுவரில் குடிசைச் சின்னம் பெரிதாக வரையப்பட்டிருந்தது. ஏன் என்று எனக்கு அப்போது தெரியாது. நான் அரசியலில் ஆர்வம் காட்டிய போதுதான் என் தந்தை காங்கிரசை எதிர்க்க குடிசையை ஆதரித்ததாகச் சொன்னார்.

 

தமிழ்நாட்டின் அரசியல் களம்

தமிழ்நாட்டில் கொஞ்சம் மாறுபட்டது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி (Indian National Congress), சோஷலிஸ்ட் கட்சி (Socialist Party), கிஸான் மஸ்தூர் பிரஜா கட்சி (Kisan Mazdoor Praja Party), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India), கிரிஷிகர் லோக் கட்சி (Krishikar Lok Party), அகில இந்திய பார்வேர்ட் பிளாக் (All India Forward Bloc) ஆகிய அகில இந்திய அளவில் போட்டியிட்ட கட்சிகளோடு மேலும் அதிகமாக சில கட்சிகளும் தமிழ்நாட்டில் (அப்போது மதறாஸ் பிரசிடென்சி) போட்டியிட்டன.

 

அவை வருமாறு: குடியரசுக் கட்சி (Republican Party), மாணிக்கவேல் நாயக்கரின் காமன்வீல் கட்சி (Commonweal Party), ராமசாமிப் படையாட்சியாரின் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி (Tamilnadu Toilers Party), மெட்ராஸ் ஸ்டேட் முஸ்லீம் லீக் கட்சி (Madras State Muslim League Party): ஏணி, நீதிக் கட்சி (Justice Party): தராசு சின்னம். ஆக மொத்தம் பதினோரு கட்சிகள் 1952 பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் (மதறாஸ் பிரசிடென்சியில்) போட்டியிட்டன. ஒன்பது கட்சிகளே வெற்றி பெற்றன. ஆயினும் ஆங்காங்கு வேறு சில சிறிய கட்சிகளும் களங்கண்டன. இதுபோக பல குட்டிக் கட்சிகள் தேர்தலில் போட்டியிடாமலே கூட்டணிகளில் இடம் பிடித்தன.

 

இந்தியா முழுவதும் 53 கட்சிகள் போட்டியிட்ட போதும் இந்திய தேசிய காங்கிரஸின் ஆதிக்கம் வலுவாக இருந்தது. 22 கட்சிகளே பாராளுமன்றத்திற்கு வெற்றி பெற்று செல்ல முடிந்தது. அதே வேளை தமிழ்நாட்டில் காங்கிரஸ் போதுமான பெரும்பான்மை பெறாததால் மாணிக்கவேல் நாயக்கரையும், ராமசாமி படையாட்சியையும் சேர்த்துக் கொண்டு சுயேட்சைகள் ஆதரவோடு ராஜாஜி கொல்லைப் புறம் வழி முதல்வரானார். ஆம், தேர்தலில் போட்டியிடாமல் மேலவை மூலம் நுழைந்தார். ஜம்மு காஷ்மீர் நிலை தனி. அங்கே ஷேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியும் இந்துத்துவ சார்பு பிரஜா தந்திரி கட்சியும் செயல்பட்டன. வேறு சில கட்சிகளும் இயங்கின. 1952-ல் அங்கு தேர்தல் இல்லை.

 

இந்த இரண்டு பட்டியலையும் கூர்ந்து கவனித்தால் காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல பல இடது சாரிக் கட்சிகளும் மதவாதக் கட்சிகளும் சாதிய கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் அப்போதே களத்துக்கு வந்துவிட்டன. பிற மாநிலங்களிலும் அங்குள்ள சூழ்நிலை சார்ந்து பல புதிய கட்சிகள் களங்கண்டன. இன்னும் கூர்ந்து கவனித்தால் இந்திய சமூகத்தின் வர்க்க, வர்ண, மத, சாதி, மாநில, வட்டார, முதலாளித்துவ, சோஷலிச, கம்யூனிஸ என எல்லா முகமும் வெட்டவெளிச்சமாயின.

 

அரசியல் கட்சி என்ற ஜனநாயக வடிவம் பிறந்து நூறு ஆண்டுகளுக்குள்ளேயே இந்தியாவில் இவ்வளவு கட்சிகள் எனில் அதற்கான சமூகத் தேவை என்ன இருந்தது? தனி நபர் ஈகோ அல்லது பதவிப் பித்து சில இடங்களில் கட்சிகளைப் பிளந்திருக்கலாம் அல்லது புதிய கட்சியை உருவாக்க நிர்பந்தித்திருக்கலாம் மறுக்க முடியாது. ஆயினும் அது மட்டுமே வினையாற்றியதாகச் சொல்ல முடியாது. இந்திய சமூகம் வர்க்கம், வர்ணம், சாதி, மொழி, இனம், பொருளாதார வேறுபாடு, மாநில நலன், வட்டார ஏற்றத்தாழ்வு, அதையொட்டிய தேவைகள், கோரிக்கைகள், பிரஸர் டேக்டிஸ் எனப்படும் அழுத்தம் கொடுக்கும் யுத்தி என ஒவ்வொரு கட்சி பிறப்புக்குப் பின்னாலும் ஏதோ ஒரு சமூகக் காரணி செயல்பட்டிருக்கிறது. அதன் விளைவுதான் ஆரம்ப ஆண்டுகளிலேயே பல்வேறு கட்சிகள் களத்துக்கு வரத்துவங்கின. இந்தக் கட்சிகள் எல்லாவற்றையும் ஒரே கூடையில் அள்ளி வெளியே கொட்டவும் முடியாது. எல்லாவற்றையும் ஒருசேர நாற்காலியில் உட்கார வைக்கவும் முடியாது. ஆக தேர்தல் போராட்டம் ஆரம்பம் முதலே பல்வேறு சமரசங்களும் முரண்பாடுகளுமாய் மாறிப்போனதில் வியப்பில்லை.

 

கட்சிகளின் வகைப்பாடு

இப்படி பிறக்கும் கட்சிகளை வகைப்படுத்திப் பார்ப்பதும் வரலாற்று நோக்கில் தவிர்க்க முடியாததே! பொதுவாக உலகில் கட்சிகளை இருவிதமாகப் பகுத்துப் பார்ப்பார்கள்.

முதலில், கட்சிகளை 1) கன்சர்வேடிவ் கட்சிகள் (Conservative Parties) அதாவது பழமைவாதக் கட்சிகள். 2) லிபரல் கட்சிகள் (Liberal Parties) அதாவது தாராளவாதக் கட்சிகள் எனப் பகுத்துப் பார்ப்பார்கள். இரண்டாவதாக, இன்னொரு விதமாக பகுப்பார்கள்: 1) மாஸ் பார்ட்டி (Mass Parties) எனப்படும் வெகுஜனக் கட்சி, 2) கேடர் பேஸ்டு பார்ட்டி (Cadre Based Parties) எனப்படும் தொண்டர்கள் அடிப்படைக் கட்சி.

 

நாம் புரிந்து கொள்ள வசதியாகச் சொல்கிறேன்; தலைவரைப் பின் தொடர்கிற வெகுஜனங்களைக் கொண்ட கட்சி. இதில் தலைவர் சொல்லே வேதம். அவரைச் சார்ந்துதான் பாதை, பதவி எல்லாம். ஆனால் தொண்டர் அடிப்படைக் கட்சியில் ஒரு கருத்துநிலை சார்ந்து உருவாக்கப்பட்ட அமைப்பே அதன் வேர். தலைவர் வரலாம் போகலாம் அமைப்பு நீடிக்கும்.

 

முதல் வகைக் கட்சிகளில் பழமைவாதக் கட்சியோ தாராளவாதக் கட்சியோ தாம் செயல்படுகிற சமூக அமைப்புக்குள் சில சீர்திருத்தங்களை, சலுகைகளை முன்வைக்கிற கட்சிகளே தவிர அடிப்படை சமூக மாற்றம் கோருகிற கட்சிகளல்ல. வெளிப்படையாகச் சொல்லப்போனால் சுரண்டல் சமூக அமைப்பை முதலாளித்துவத்தை அப்படியே பேணிப் பாதுகாத்துக் கொண்டே சில்லறை நிவாரணங்களை அளிப்பது, அவ்வளவுதான். சுரண்டலுக்கும் கொடுமைகளுக்கும் எதிராக மக்கள் புரட்சி வெடித்துவிடாமல் காக்கும் ஷேப்டி வால்வுகளே (குக்கர் விசில் போல்) இக்கட்சிகள்.

 

சுருங்கச் சொன்னால் பழமைவாதக் கட்சியோ தாராளவாதக் கட்சியோ இரண்டுமே முதலாளித்துவக் கட்சிகளே! இருப்பினும் பழமைவாதக் கட்சி பழமைவாதத்தில் ஊன்றி நின்று சமூகத்தைப் பின்னுக்குத் தள்ளுகிற கொடுஞ்செயலில் ஈடுபடும். தாராளவாதக் கட்சிகள் தங்கள் முதலாளித்துவ நலனைக் காத்துக்கொண்டே கொஞ்சம் சுதந்திரச் சிந்தனைக்கு இடம் கொடுக்கும். ஆகவே இது அதைவிட மேல்.

 

வெகுஜனக் கட்சியோ, தொண்டர் அடிப்படைக் கட்சியோ இரண்டிலும் சமூகத்தை அப்படியே பாதுகாத்து சில்லறை சலுகைகளோடு திருப்தி அடையச் சொல்கிற கட்சிகளும் உண்டு; மாறாக சமூக அமைப்பில் கொள்கைரீதியான மாற்றம் தேவை என்று கருதுகிற கட்சிகளும் உண்டு. சமூக மாற்றத்தை விரும்புகிற கட்சிகள் கட்டுக்கோப்பான அமைப்பாகத் தன்னை வலுப்படுத்திக் கொள்ளும் தேவையும் உண்டு. நாட்டுக்கு நாடு ஆங்காங்கு நிலவும் சமூக பொருளாதார பண்பாட்டு சூழலுக்கு ஏற்ப இக்கட்சிகள் முகங்காட்டும். வரலாற்றுப் பின்புலத்தோடு அவற்றை பார்க்காமல் தனித்துப் பார்த்து சரியான முடிவுக்கு வர இயலாது.

 

நான் மாஸ்கோ உலக இளைஞர் விழாவுக்கு சென்ற போது, “காங்கிரஸ் கட்சி கன்சர்வேட்டிவ் கட்சியா லிபரல் கட்சியா?” என கேள்வி கேட்டனர். அவர்கள் நாட்டு சூழலில் அந்தக் கேள்வி சரிதான். ஆனால் இங்கு காங்கிரஸ் தோற்றம் முதல் ராஜேந்திர பிரசாத், பட்டாபி சீத்தாராமய்யா, வல்லபாய் பட்டேல், மொரார்ஜி போன்றோர் கன்சர்வேட்டிவ்களும்; தாதாபாய் நெளரோஜி, நேரு, நேதாஜி போன்ற லிபரல்களும்; காந்தி போன்ற வெகுஜன தலைவர்களும் நிரம்பிய கட்சியை சட்டென்று ஒரு பிரிவில் தள்ளிவிட முடியுமா?

 

இவற்றில் இருந்தெல்லாம் மாறுபட்டு சமூகத்தை தலைகீழாக மாற்றுவதே தம் இறுதி இலக்கு; சுரண்டல் சமூக அமைப்புக்கு எதிராக சமத்துவ சமூகத்தை உருவாக்குவதே தம் பாதை என அறிவித்துவிட்ட கட்சி கம்யூனிஸ்ட் கட்சி. மற்ற கட்சிகளெல்லாம் தாம் மக்கள் கட்சி, எல்லோருக்குமான கட்சி என்றெல்லாம் வெளிப்படையாக அறிவித்துவிட்டு முதலாளித்துவ நலனைப் பாதுகாப்பதையே செய்யும். கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே தான் பாட்டாளி வர்க்கக் கட்சி என பகிரங்கமாக தன் வர்க்க சார்பை அறிவித்து செயல்படுகிற கட்சி. அது தேர்தல் கட்சியா அல்லது ஆயுதம் தாங்கிய கட்சியா என்பது அந்தந்த நாட்டின் தனித்துவமான அரசியல் சமூகப் பொருளாதாரச் சூழலைப் பொறுத்தது. நம் நாட்டு அரசியலில் கம்யூனிஸ்ட் கட்சி, சோஷலிஸ்ட் கட்சி, இடதுசாரி கட்சிகள் விடுதலைப் போரிலேயே களத்துக்கு வந்துவிட்டன; அது குறித்து கொஞ்சம் புரட்டுவோம்.

 

தொடரும்

 

-சு.பொ.அகத்தியலிங்கம்

 

  

எத்தனை எத்தனை கட்சிகள் – 3

Posted by அகத்தீ Labels:

 



 

எத்தனை எத்தனை கட்சிகள் – 3

தமிழ்நாடு தனித்துவத்தோடு போட்ட தடங்கள்

 

தமிழ்நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சியில் வைகுண்ட சாமிகள் (1809-1851), வள்ளலார் ராமலிங்க அடிகளார் (1823-1874), அயோத்திதாசப் பண்டிதர் (1845-1914), ரெட்டைமலை சீனிவாசன் (1860-1945), டி.ஜான் ரத்தினம் (1846-1914), டி.பி.பாண்டியன் (1861) இப்படி பல சீர்திருத்த முன்னோடிகள் களத்துக்கு வந்தனர். காங்கிரஸில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த பெரியார் பின்னர் சமூக சீர்திருத்த போருக்கு தலைமை ஏற்று வலுவாகத் தொடர்ந்தார். தமிழகத்தில் கட்சிகளின் தொடக்கத்தை இதனூடேதான் பார்க்க வேண்டும்.

 

சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன் இருந்த இத்தேசத்து கல்வியில்லாத அரசர்களை, பிராமணர்கள் அடுத்து தாங்கள் மட்டும் எப்போதும் பெருமையாய் இருக்கும் பொருட்டு கல்வியைத் தங்களுக்கு உபயோகஞ் செய்து கொண்டும், அதற்கு வேண்டிய பூஸ்துதி, மான்யங்களைப் பெற்றுக் கொண்டும், மற்றவர்கள் கல்வியறிவு இல்லாமல் எப்போதும் தங்களுக்குத் தாழ்ந்த ஸ்திதியில் இருக்கவும் மோசவெண்ணங் கொண்டு, கல்வி உபயோகப்பட்டுக் கடவுள் அறிய செய்யத்தக்க, கனமாகிய பொருளை ஒவ்வொரு கல் முதலானவைகளுக்கும் பிரயோசனப்படும்படி செய்து விட்டார்கள்

 

இதைப் பேசியது பெரியாரோ அண்ணாவோ அல்ல. அவர்களுக்கெல்லாம் முன்னால் சைவ சித்தாந்த ஏடானதத்துவ போதனியில் 1862-ஆம் ஆண்டு எழுதப்பட்ட வியாசமே (அந்தக் காலத்தில் கட்டுரைகளை வியாசம் என்பார்கள்) இது.

 

திராவிட இயக்கத்தின் வேர்கள்

1847-ஆம் ஆண்டு துவக்கப்பட்ட ஒரு ஏட்டுக்குதிராவிட தீபிகைஎன்று பெயர். ‘திராவிட பாண்டியன் (1885) போன்று திராவிட என்ற பெயர் தாங்கி அன்றைய காலகட்டத்தில் டஜனுக்கும் மேற்பட்டப் பத்திரிகைகள் வந்துள்ளன. ஆக, நீதிக்கட்சி பிறப்பதற்கு முன்பேதிராவிடக் கருத்தியல்இந்த மண்ணில் வேர் கொள்ளத் துவங்கிவிட்டது.

 

தமிழர் தத்துவ மரபை எடுத்துக் கொண்டாலும் வேத மறுப்பு என்பது அதன் ஆணிவேராக இருப்பதைக் காணலாம். ‘சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்அதாவது நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன் என்று சொல்லுகிற பகவத் கீதையின் உபதேசத்தை ஏற்க மறுத்துபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்என்கிற சமத்துவ சிந்தனைத் தமிழ் மரபில் இரண்டாயிரம் ஆண்டுகளாய் நன்கு வேர் விட்டுத் தழைத்துள்ளது. “சாத்திரங்கள் ஓதுகிற சட்டநாதப் பட்டரே / வேர்த்திரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமாஎன சித்தர்கள் சீறிய பாரம்பரியமும் உண்டு. அதனுடைய தொடர்ச்சியாகத்தான் பார்ப்பன எதிர்ப்பு என்பது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஒரு இயக்க வடிவம் பெறலாயிற்று. அதற்கான சமூகத் தேவையும் சமூகச் சூழலும் அன்றைக்கு இருந்தது என்பதுதான் உண்மை.

 

இந்திய தேசிய காங்கிரஸை உருவாக்க முன்முயற்சி மேற்கொண்டதில் சென்னைக்கு ஒரு முக்கிய பங்குண்டு. 1884-இல் இங்குள்ள பிரம்மஞான சபையில் 17 அமைப்புகள் கூடிப் பேசிய போதுதான் விதை தூவப்பட்டது. 1884-ல் துவக்கப்பட்டசென்னை மகாஜன சபையும்சேர்ந்துதான் காங்கிரஸ். ஆகவே துவக்கம் முதலே தமிழ்நாடு காங்கிரஸ் பேரியக்கத்திலும் பங்கேற்றது. மூன்றாவது மாநாடு சென்னையில் 1887 டிசம்பர் 27-ல் நடைபெற்றது. அப்போது தமிழில் பிரசுரம் வெளியிடப்பட்டதும், முந்தைய மாநாடுகளில் இருந்து மாறுபட்டு ஆங்கிலத்தில் மட்டுமே பேசாமல் (காங்கிரஸ் உருவாகும் போது ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்கிற விதி ஆலன் ஆக்டேவியன் ஹியூமால் சேர்க்கப்பட்டது) தமிழிலும் பேசியது வரலாறு. அதனால் பிரிட்டிஷ் அரசு வெகுண்டு தாய்மொழியில் பிரச்சாரம் செய்வதை தடை செய்தது. அடுத்த மாநாட்டில்தான் லாலா லஜபதிராய் இந்தியில் பேசினார். ஆக தாய்மொழியைக் களத்தில் கொண்டுவந்தது தமிழ்நாடே.

 

பார்ப்பனியத்திற்கு எதிரான சிந்தனையிலும் செயல்பாட்டிலும்அயோத்திதாசரோடு இடையறாது ஊடாடுபவராகயிருந்த ஜான் ரத்தினம், 1885-ஆம் ஆண்டு அயோத்திதாசரின்திராவிட பாண்டியன்ஏட்டிற்கு ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இவ்வேடுதிராவிடர்என்ற சொல்லாடலை சமூகஅரசியல் தளத்தில் முன்வைத்துபார்ப்பனரல்லாதார்என்ற அணிசேர்க்கையை உருவாக்கியது. மேலும், “திராவிடம்என்ற சொல்லாடலில் மொழிக்குடும்பம், நிலப்பகுதி ஆகியவற்றுக்கு அப்பாலும் சமூகஅரசியல் தளத்தை நீட்டியது.

 

1891-ஆம் ஆண்டு அயோத்தி தாசப் பண்டிதர்திராவிட மகாஜன சபைஎன்கிற அமைப்பை உருவாக்குகிறார். அவர் ஆரியர் எதிர்ப்பு, வேத எதிர்ப்பு இவற்றில் காலூன்றி தமிழரின் தத்துவ சித்தாந்த மரபை மீட்டு எடுக்கவும் மேன்மைப்படுத்தவும் தொடர்ந்து முயற்சிக்கிறார். அவர் ஆதி பௌத்தம் என்கிற புத்த மத மரபை முன்னிறுத்தி மிகப்பெரிய கருத்துப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினார். இன்று படித்தாலும் அவரது சிந்தனைகள் புத்தெழுச்சி தருபவையாகவே உள்ளன. அவர் நடத்தியஒரு பைசாத் தமிழன்எனும் ஏடு முக்கிய வரலாற்றுத்தடம்.

 

பிரிட்டிஷ் ஆட்சியில் படித்த இந்தியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று சுரேந்திரநாத் பானர்ஜி, தாதாபாய் நெளரோஜி போன்றோர் கோரிக்கை வைத்துப் பெற்றனர். இதன் மூலம் இந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு பிரிட்டிஷ் ஆட்சியில் உத்யோகங்கள் கிடைக்க வழி ஏற்பட்டது. இந்திய சமூகத்தில் சூத்திரர்களுக்கும் பஞ்சமர்களுக்கும் கல்வி மறுக்கப்பட்டிருந்தது. மேல் ஜாதியினர் மட்டுமே படித்து வந்தனர். அதிலும் பார்ப்பனர்கள் ஆங்கிலக் கல்வியில் முன் நின்றதால் அரசு உத்யோகங்களை அவர்கள் எளிதாகப் பறித்துக் கொண்டனர்.

 

19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் செங்கல்பட்டில் வெங்கம் என்ற இடத்தில்சென்னை-செங்கல்பட்டு பிராமணர்கள் மாநாடுஒன்றைக் கூட்டி அரசு உத்யோகங்களைப் பெறத் திட்டம் தீட்டிச் செயல்பட்டனர் என்பது ஒரு வரலாற்றுச் செய்தி. முதல் முதல் சாதிரீதியாக மாநாடு கூட்டி தன் சாதியினர் மட்டுமே முன்னேற வழிகண்டது இந்த நிகழ்வில்தான். இந்தப் பின்னணியில் கல்வி, வேலை வாய்ப்பில் தங்களுக்கு உரிய இடம் கிடைக்கவில்லை என்கிற மனக்குறை பார்ப்பனர் அல்லாத மேல்ஜாதிக்காரர்களிடம் மேலோங்கியது. அவர்கள் தங்களுக்கு உரிய பங்கைப் பெற ஒரு அமைப்பை உருவாக்க உந்தித் தள்ளியது.

 

1892-ஆம் ஆண்டு இரட்டைமலை சீனிவாசன்பறையர் மகாஜன சபையைத் தொடங்கினார். பின்னர் அதுஆதி திராவிட மகாஜன சபைஎனப் பெயர் மாற்றப்பட்டது. இந்த ஆதிதிராவிடர் மகாஜனசபைதான் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் வாழ்வுரிமைக்காகத் தொடங்கப்பட்ட முதல் அரசியல் அமைப்பு எனில் மிகையாகாது.

 

நீதிக்கட்சியின் உதயம்

1912-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதி மெட்ராஸ் யுனைடெட் லீக்அமைப்புதான் பார்ப்பனர் அல்லாதோருக்கான முதல் முன்னெடுப்பு. பின்னாளில் டெபுடி கலெக்டராக விளங்கிய சரவணப்பிள்ளை, ஜி.வீராசாமி நாயுடு, பொறியியல் துறை சார்ந்த துரைசாமி முதலியார், நாராயணசாமி நாயுடு போன்றோர் இதன் முன்னணியில் நின்றனர். டாக்டர் சி.நடேசன் இதன் செயலாளராகப் பணியாற்றினார். அந்தப் பெயர் பொருத்தம் இல்லை என அதன் உறுப்பினர்கள் கருதியதால்பார்ப்பனர் அல்லாதார் சங்கம்என்ற பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அது எதிர்மறையாக இருப்பதால் சிலருக்குப் பிடிக்கவில்லை. எல்லோருக்கும் பிடித்த பெயராகசென்னை திராவிடர் சங்கம் 1912 நவம்பர் 10-ஆம் நாள் துவங்கப்பட்டது. எப்படியோ திராவிட இயக்கம் ஒரு அமைப்பாக முளைவிட்டு விட்டது. இதன் தொடர்ச்சியாக 1916-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் நாள் வேப்பேரி எத்திராஜூ இல்லத்தில் பலர் கூடிதென்னிந்திய நல உரிமை சங்கம்என்ற அமைப்பை உருவாக்கினர். இவர்கள் நடத்திய ஆங்கில பத்திரிகையின் பெயர்ஜஸ்டிஸ். அந்த பத்திரிகையின் பெயரால்ஜஸ்டிஸ் பார்ட்டிஎன மக்களால் அழைக்கப்பட்டது. இதுவே நீதிக்கட்சி ஆகும்.

 

இந்த கட்சியின் சார்பில் சர்.பி.டி. தியாகராய செட்டியார் சொற்பொழிவு ஆற்றியது பற்றி திருவிக, தன் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ள செய்தி வருமாறு: “1916-ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் ஓய்வில் சென்னை ஹாமில்டன் வாராவதி அருகே இராஜூ கிராமணியார் தோட்டத்தில் யாழ்ப்பாணம் முதலியார் சபாரத்தினம் தலைமையில் சைவ சித்தாந்த மகாசமாஜத்தின் சார்பில் சைவர் மகாநாடு கூடியது. மகாநாடு மூன்று நாள்கள் நடைபெற்றது. மூன்றாம் நாள் பகல் ஓர் அறிக்கை வழங்கப்பட்டது. அதில் அம் மாநாட்டுக் கொட்டகையிலேயே அன்று மாலை பிராமணர் அல்லாதார் முன்னேற்றம் பற்றி பி. தியாகராயச் செட்டியார் பேசுவார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அவ்விதமே தியாகராயச் செட்டியார் பேசினார். அவர் பிராமணர் செல்வாக்கைப் பற்றியும், அதனால் பிராமணர் அல்லாதார் நசுக்குண்டு நாசமடைவதைப் பற்றியும் பேசி, காங்கிரசை நம்ப வேண்டாம், அவற்றினால் பிராமணரல்லாதார் மயங்குறல் வேண்டாம் என்று வற்புறுத்தினார்.

 

இப்படி உருவான நீதிக்கட்சிக்கு 1944-ஆம் ஆண்டு சேலம் மாநாட்டில்தான்திராவிடர் கழகம்என்று பெயர் சூட்டப்பட்டது. அந்த மாநாட்டின்போதே திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டக்கூடாது, ‘தமிழர் கழகம்எனப் பெயர் வைக்க வேண்டும் என கி..பெ. விசுவநாதமும் அவரது கூட்டாளிகளும் குரல் எழுப்பினர்.

 

திராவிடர் இயக்கத்தின் தோற்றத்தை 1891-ஆம் ஆண்டு அயோத்திதாசர் உருவாக்கிய திராவிட மகாஜன சபையில் துவங்குவதா? 1912-ஆம் ஆண்டு உருவான சென்னை திராவிடர் சங்கத்தில் துவங்குவதா? 1916-ல் உருவான தென்னிந்திய நல சங்கத்தில் துவங்குவதா? எல்லாவற்றிற்கும் முன் ஜான் ரத்தினம் ஊட்டியில் ஒரு மாநாடு கூட்டி உருவாக்கிய திராவிடர் கழகத்தைத் துவக்கமாகச் சொல்வதா? தென் இந்திய நலவுரிமை சங்கம் 1944-ல் திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றம் பெற்றதில் துவங்குவதா? அறிஞர்கள் விவாதித்து முடிவெடுக்கட்டும்.

 

நீதிக்கட்சிசமூக இயக்கமாகத் தோன்றினாலும் விரைவிலேயேத் தேர்தலில் பங்கேற்கிற இயக்கமாகிவிட்டது. நீதிக்கட்சியில் பங்கேற்ற பலர் ஜமீன்தார்கள், மன்னர்கள், சர் ராவ் பகதூர் பட்டம் பெற்றவர்கள் என்பது கசப்பான உண்மை. அண்ணாவே ஜரிகைக் குல்லாக்காரர்கள், அரண்மனைவாசிகள் என இவர்களைக் கேலி பேசியதுண்டு. ஆயினும், காங்கிரஸ் கட்சி தேர்தலில் பங்கேற்காத சூழலில்நிலவரி கட்டுகிறவர்கள் மட்டுமே வாக்களிக்க உரிமை உள்ளவர்கள் என்ற பின்னணியில் நீதிக்கட்சி வெற்றி பெற்று 16 ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறது. அப்போதுதான் கம்யூனல் ஜி.. எனப்படுகிற இடஒதுக்கீடு முறைக்கு முதல் வித்து போடப்பட்டது.

 

சமூக நீதி என்ற வகையில் இடஒதுக்கீட்டைப் பிற்படுத்தப்பட்ட சமூகம் இன்று அனுபவிக்கிறது எனில் அதன் தொடக்கம் இந்த ஜி..தான். மேலும் கோயில் சொத்துகளைப் பாதுகாக்க சட்டம் இயற்றியதும் தேவதாசி முறையை ஒழித்ததும் இதுபோன்ற பல சமூக சீர்திருத்த செயல்களுக்கு நீதிக்கட்சி ஆட்சியில் முன்னுரிமை வழங்கப்பட்டது அடிக்கோடிட்டு காட்டத்தக்கன. பின்னால் சமூக நீதி மற்றும் சமூக சீர்திருத்த முயற்சிகள், போராட்டங்கள், வெற்றிகள் அனைத்திலும் நீதிக்கட்சியின் ஆரம்பகாலப் பங்கை மறுக்கவே முடியாது.

 

பெரியாரைப் பொறுத்தவரை காங்கிரசில் தன் பயணத்தைத் துவக்கியவர். பார்ப்பன எதிர்ப்பு, வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் என பல அம்சங்களில் காங்கிரசோடு முரண்பட்டு 1925-இல்சுயமரியாதை இயக்கம்கண்டார். சிங்கார வேலர், ஜீவானந்தம் போன்றோர் அவரோடு இருந்தனர். சுயமரியாதை இயக்கம் தமிழகத்தில் ஒரு மிகப் பெரிய சமூக சீர்திருத்த கருத்தியல் எழுச்சிக்கு வித்திட்டது எனில் மிகையல்ல. பெரியார் காங்கிரசை எதிர்ப்பதற்கும் பார்ப்பனர் அல்லாதார் நலன் காப்பதற்கும் நீதிக்கட்சியை பயன்படுத்த முனைந்தார். அவர்களோடு நெருங்கினார்.

 

இந்த இடத்தில்தான் .திருநாவுக்கரசு ஒரு கருத்தைநீதிக்கட்சி வரலாறுஎனும் தன் நூலில் சொல்லுகிறார். திராவிட இயக்கத்தின் பிரம்மாண்டத்தையும் பிரம்மிப்பையும் தெரிந்து பெருமிதம் கொள்கின்றோம் என்றவர் ஓரிடத்தில் கூறுகிறார், ‘பிட்டி தியாகராயர் காலந்தொட்டு நீதிக்கட்சிக்குள் நிலவிய குழுவாதப் போக்குகளை பெரியார் விமர்சித்துள்ளார். பெரியார் ரசவாதம் செய்யவில்லையெனில் 1926-லேயே நீதிக்கட்சி முடிந்து போயிருக்கும்.’ திருநாவுக்கரசின் இந்த நிர்ணயிப்பை ஏற்று அந்நூலின் முன்னுரையில் கி.வீரமணி வழிமொழிந்திருப்பது கவனத்துக்குரியது.

 

இது பெரிதும் உண்மை. நீதிக்கட்சியின் பக்கம் வந்த பெரியார் இச்சூழலில் இருந்து அதனைக் காக்க நினைத்தார். நாடாளுமன்ற அரசியலுக்குள் போவதால்தான் சமூக சீர்திருத்தக் கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ள நேருகிறது. எனவே, நமக்கு நாடாளுமன்ற அரசியல் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து திராவிடர் கழகத்தை சமூக சீர்திருத்த இயக்கமாகவே நடத்தலானார். அதே சமயம், குலக்கல்விக்கு எதிரான போராட்டம், இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம், இட ஒதுக்கீட்டுக்கான போராட்டம் என பலவற்றை நடத்தினார்.

 

ஆனால், ஆட்சியைப் பிடிக்கும் ஆசை கொண்டவர்கள் மெல்ல மெல்ல மாற்று வழி தேடினார்கள். அதன் பரிணாம வளர்ச்சிதான் திமுக (1949 செப்டம்பர் 17) என்ற கட்சி உதயமானது. அண்ணா வார்த்தைகளில் சொல்வதானால் அறைக்குள்ளிருந்த நீதிக்கட்சியை பெரியார் ஆலமரத்தடிக்குக் கொண்டு வந்தார். ஆனால் அதைவிடப் பெரிய வெட்ட வெளிக்கு அதைத் தொடர்ந்து கோட்டைக்கு நான் (அண்ணா) கொண்டு வந்திருக்கிறேன். பெரியாரோ ஆலமரத்தடியே போதுமென்று அங்கேயே நின்றுவிட்டார்.

 

காங்கிரஸ், பார்வேர்ட் பிளாக், சோஷலிஸ்ட் கட்சி, முஸ்லீம் லீக், இந்து மகாசபா, ஆர்.எஸ்.எஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்டு பல கட்சிகளுக்கு துவக்க காலத்திலேயே தமிழ்நாட்டிலும் கிளை உருவாகிவிட்டது. வடக்கே உருவான எந்தக் கட்சிக்கும் தெற்கே கிளை ஒன்றேனும் இருக்கும். தமிழ்நாட்டில் நிச்சயம் ஒரு கிளை உடனே பிறந்துவிடும். ஆனால் தமிழ்நாட்டில் வேர்பிடித்த எந்தக் கட்சிக்கும் வடக்கே கிளை காண்பது அரிது. இதன் அரசியலும் பேசப்பட வேண்டும். இனி இந்தியா முழுவதிலும் தமிழ்நாட்டிலும் கட்சிகள் உடைந்தது, இணைந்தது, புதிதாய் பிறந்தது, பிறந்து கொண்டிருப்பது இவற்றின் விபரங்களையும் கொஞ்சம் புரட்டத்தான் வேண்டும்.

 

தொடரும்

 

-சு.பொ.அகத்தியலிங்கம்