கம்யூனிஸம் தனிமனித சுதந்திரத்திற்கு எதிரியா ?

Posted by அகத்தீ Labels:

 




தொடக்கநிலைக் கேள்வி -பதில் :[3]

 

 

கம்யூனிஸம் தனிமனித சுதந்திரத்திற்கு எதிரியா ?

 

 

கேள்வி :

தனிமனிதச் சுதந்திரம் (Individual Freedom) முதலாளித்துவத்தில் மட்டுமே சாத்தியம் என்ற கருத்து உண்மையா? சோசலிசத்தில் தனிமனித சுதந்திரம் பறிக்கப்படுமா? இரும்புத்திரை நாடாக இருந்த ரஷ்யாவில் பெரிஸ்த்ரோய்கா , கிளாஸ்நாஸ்ட்  என்று கோர்ப்பசேவ் முழங்கியது ஏன் ?

 

 

பதில் :

 

 

[ பதில் சொல்லுமுன் ஒரு விளக்கம் . கேள்வி பதிலில் நான் மிகவும் தொடக்க நிலையில் உள்ளவர்களை மனதில் வைத்து மட்டுமே எழுதுகிறேன். சென்ற இரண்டு கேள்விகளிலும் கருத்து சொன்ன சிலர் அது பற்றி ... இது பற்றி...என அதிகம் தெரிந்து கொள்ளக்   கேட்பது நியாயந்தான் . ஆயின் எல்லாவற்றுக்கும் ஒரே மூச்சில் பதில் இல்லை .அடுத்தடுத்து வருகிற கேள்வி பதில்களில் மேலும் பல சொல்லுவேன் .இக்கேள்விக்கும் அந்தப் புரிதலுடன் வாசிக்க வேண்டுகிறேன் .]

 

 

இக்கேள்வியில் முதல் அம்சம் தனிமனித உரிமை’ . அச்சொல் என்ன அர்த்தப்படுத்துகிறது ? பொதுவாய் புரிந்து கொள்ளப்படுவது யாதெனில் எந்த ஒரு மனிதனும் தான் விரும்பியபடி வாழும் உரிமை . அப்படி வாழ எல்லா வகையிலும் முயற்சிக்கும் உரிமை . கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும் ; ஆயின் அப்படி வாழ முயற்சிக்கும் போது வரும் தடைகள் என்ன என்ன என ஆய்ந்து அதனை உடைக்க முயற்சிக்கும் போது எழும் சவால்கள் யதார்த்ததைக் காட்டும் . ஆகவேதான் முதலாளித்துவம் தனி மனித உரிமை என முழங்குவதற்கும் ; சோஷலிசம் அதைநோக்கி உறுதியாய் அடியெடுத்து வைப்பதற்குக் பெருத்த இடைவெளியைக் காணலாம்.

 

 

  ‘Free to become unequal’   ஒருவருக்கொருவர் சமத்துவமின்றி ஏற்றதாழ்வுடன் சுதந்திரமாய் வாழ கைகாட்டுவது முதலாளித்துவம் .  ‘Must be more equal to be truly free’ உண்மையில் சுதந்திரமாக இருக்க மேலும் அதிக சமத்துவம் வேண்டும்என அடிக்கோடிடுவது சோஷலிசம் .

 

 

 உனக்கு அம்பாசமுத்திரம் அம்பானிஆக முழு உரிமை உண்டு ; ஆனால் அன்றாடம் சோற்றுக்கே திண்டாட்டம் .” அந்த உரிமையின் பொருளென்ன ?  “வேலை உரிமை அடிப்படை உரிமை.” இது சோஷலிசம் .  ”நீ விரும்பிய வேலையைத் தேர்ந்தெடுக்க நீ விரும்பிய உயரத்துக்குப் போக உனக்கு உரிமை உண்டு” ; ஆனால் வாய்ப்பு மறுக்கப்படும் . இது முதலாளித்துவம் .

 

 

டைட்டானிக் கப்பலில் எந்த அடுக்கில் வேண்டுமாயினும் பயணிக்க உனக்கு உரிமை உண்டு ; ஆயின் உன் பொருளாதார சமூக அந்தஸ்த்துதான் நீ எதில் பயணிக்க வேண்டும் எனத் தீர்மானிக்கும். கப்பல் மூழ்கும் நிலையில் முதலில் தப்பிக்க மேல்தட்டுக்கே வாய்ப்பு என்பதுதான் யதார்த்தம்.

 

 

ஒரு கப்பல் நிறைய அடிமைகளை ஏற்றிக்கொண்டு கடலில் பயணித்த கப்பல் .அது மூழ்கும் நிலை ஏற்பட்டது . அப்போது அதன் தளபதி ஓர் அறிவிப்பு செய்தார் .

 

 

ஆண்டவன் முன் எல்லோரும் சமம் . நான் உண்மையான கிறுத்துவன் . நான் உங்களை அடிமையாக வைத்திருக்க விரும்பவில்லை . உங்களுக்கு விடுதலை அளிக்கிறேன் . நீங்கள் சுதந்திரமானவர்கள் . நீங்கள் விரும்பிய திசையில் செல்லலாம் ... இப்போது கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கிறது...என்றவாறே தன்னிடம் இருந்த ஒற்றைப் படகில் தளபதியும் அவரின் கூட்டாளிகளும் தப்பிப் பறந்தனர் .

 

 

அடிமைகளுக்கு இப்போதுள்ள சுதந்திரம் எந்த திசையில் கடலில் மூழ்குவது என்பதா ? அதைக்கூட கடலின் போக்கே தீர்மானிக்கும் அல்லவா ? ஆக, முதலாளித்துவம் வழங்கும் சுதந்திரம் இப்படிப்பட்டதுதான்.

 

 

தனி மனித சுதந்திரம் என்பது ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒவ்வொரு விதமாக இருந்தது . தொழிற்புரட்சிக்கு பின்னரே இது குறித்த பார்வையில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழலாயின .... இங்கிலாந்தில் வெடித்த மகாசாசன இயக்கம்,பிரெஞ்சுப் புரட்சி போன்றவை புதிய பார்வையைக் கொடுத்தன . பேச்சுரிமை ,எழுத்துரிமை , மத சுதந்திரம் என பலதும் பேசப்படலாயின. ஆயினும் இவை எல்லாம் சுரண்டலையும் சொத்துரிமையையும் ஆதிக்கத்தையும் காப்பாற்றவே என்பதை காரல் மார்க்ஸ் வந்து அம்பலப்படுத்தும்வரை நாகரீகச் சிந்தனை என்றே மகுடம் சூட்டித் திரிந்தன.

 

 

Inequality is the price of freedom  ஏற்ற தாழ்வோடு  வாழப்பழகுவதுதான் சுதந்திரத்திற்கான நிபந்தனை என்ற முதலாளித்துவ நியதிக்கு எதிராக ;  Inequality is the barrier to freedom ஏற்ற தாழ்வான சமூக வாழ்நிலைக்கு ஒடுங்கிப் போவதே சுதந்திரத்தின் முதல் வைரி என்றது சோஷலிசம் .

 

 

ஆகவே தான் அனைவருக்கும் உணவு ,உடை ,கல்வி ,வேலை ,மருத்துவ வசதி போன்றவற்றை உறுதி செய்வதே தனிமனிதன் தன் சுதந்திரத்தைப் பேண முதல் நிபந்தனை என்று சோஷலிசம் வரையறைத்தது.

 

 

தொண்டை வறளும் வரைக் கத்த உனக்கு சுதந்திரம் வழங்கப்படும் ஆனால் நீ கத்துவது சுரண்டல் தர்பாருக்கு ஆபத்து எனில் உன் குரல் வளை சட்டம் ஒழுங்குஎன்கிற பெயரால் நெரிக்கப்படும் . இப்படி நாம் சொன்னால் சீனாவில் சர்க்காரை எதிர்த்துப் பேசினாலே சுட்டுவிடுவான் என இங்கு பிள்ளைக் கதைகள் பிதற்றித் திரிவோர் ஏராளம் . அமெரிக்காவில் கம்யூனிசம் பேச அனுமதி உண்டா ? டார்வினின் படி மலர்ச்சிக் கொள்கையை - பரிணாமக் கொள்கை பள்ளிக்களில் கற்றுக்கொடுக்க பல அமெரிக்க மாநிலங்களில் தடை உண்டு .

 

 

தனிமனித சுதந்திரம் யாருக்கு எங்கு எப்போது எதற்கு எப்படி இப்படி கேள்விகள் எழுப்பினால் , ’பட்டாடைகளுக்குள்ள சுதந்திரம் பஞ்சைப் பராரிகளுக்கு இல்லைஎன்பது நடைமுறையில் விளங்கும் . நாடுகள் தோறும் மனித உரிமை விதவிதமாக வியாக்கியானம் செய்யப்படுகிறது . தேவையும் சூழலும் அதனைத் தீர்மானிக்கிறது . இந்தியாவில் மநுதர்மத்திற்கும் வர்ணாஸ்ர அநீதிக்கும் எதிராக சமூகநீதியை உயர்த்திப் பிடிக்காமல் பேசப்படும் மனித உரிமை போலித்தனமானதாகவே அமையும் .

 

 

உழுபவனுக்கே நிலம் சொந்தம் ; நிலத்தில் இறங்கிப் பாடுபடாத நிலப்பிரபுக்கள் நிலத்தைப் பிடுங்கி உழுபவனுக்கு பிரித்துக் கொடுத்தால் நல்லதுதானே . அப்போது நிலப்பிரபுக்கள் தங்கள் சொத்துரிமை பாதிக்கப்படுவதாக அலறுவார்கள்தானே !

 

கல்வியில் நிர்வாகத்தில் மதம் தலையிடக் கூடாது என்பது நியாயம்தானே ;ஆயின், மதவாதிகள் மதசுதந்திரம் பாதிக்கப்படுவதாக கூக்குரலிடத்தானே செய்வார்கள் .

 

பதுக்கலும் கொள்ளை லாபமும் தடை செய்யப்படுவது சமூகத் தேவைதானே ; ஆயின் தங்கள் வர்த்தக சுதந்திரம்பறிபோவதாய் அவர்கள் அலறத்தானே செய்வார்கள் .

 

 

சொற்களுக்குள் பதுங்காமல் இதன் மெய்ப்பொருளை உணரவேண்டும் . ஆளுக்கு ஒரு கிலோ என்பதால் அது சுதந்திரமாகிவிடாது .யாருக்கு ஒரு கிலோ தங்கம் யாருக்கு ஒரு கிலோ களிமண் என்பதில்தான் உண்மை அடங்கி இருக்கிறது . தராசு முள் சமமாகக் காட்டும் .ஆனால் யாருக்கு எந்தத் தட்டு என்பதுதான் அடிப்படைக் கேள்வி . மொட்டையாய் சமம் என்று சொல்லுவது சுதந்திரமல்ல .

 

 

பெண்களுக்கு வாக்குரிமை என்பதை முதலில் வழங்கி வழிகாட்டியது சோவியத் யூனியன்தான் . இதனை மறுக்க முடியுமா ? மரண தண்டனைக்கு எதிராக ,குழந்தை உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக காரல் மார்க்ஸ் தொடங்கிய போர் இன்னும் முடியவில்லை . தொடர்கிறது .

 

 

 சோஷலிசத்தை காக்க இரண்டாம் உலகப் போரின் போது  சில கறாரான கெடுபிடிகளை சோவியத் யூனியன் இரண்டாம் உலகமகா யுத்த காலத்தில் மேற்கொண்டது உண்மைதான் . அதன் எதிரொலி பின்னர் சோவியத் யூனியனில் வெளிப்பட்டதும் உண்டு . அது படிப்படியாக நீட்சி அடைந்து ஒருகட்டத்தில் கோர்ப்பசேவால்  சீர்திருத்தம் [ பெரஸ்த்ரோய்க்கா ] , வெளிப்படைத்தன்மை [ கிளாஸ்நாஸ்ட் ] என முன்வைக்கப்படதும் வரலாறு . அதன் விளைவு  துணியைத் துவைக்கிறோம் என ஆரம்பித்து துணியையே கிழித்தெறிந்து விட்டனர் . இந்த வரலாற்று அனுபவத்தை பின்னர் தனியாகப் விரிவாகப் பேசுவோம் .

 

 

LGBTQ பாலின சுதந்திரம்  போன்ற விவகாரங்களில் கியூப கம்யூனிஸ்ட் கட்சியில்கூட ஒத்த கருத்து இல்லை என்றும் ; தாம் பாலின சுதந்திரத்தை வரவேற்பதாகவும் , அதே நேரத்தில் கருத்தொற்றுமையை உருவாக்க படிப்படியாக முயற்சிப்பதாகவும் ஃபிடல் காஸ்ட்ரோ ஒரு பேட்டியில் கூறினார் . இது போல் ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டின் வரலாற்று ,பண்பாடு சார்ந்து புரிதல் வேறுபாடு இருக்கும் . அதனை உணராமல் வறட்டுத்தனமாகப் பேசிடல் இயலாது .

 

 

இறுதியாக ஒன்று தனிநபர் என்று முதலாளித்துவம் கொண்டாடுவது யாரை ? கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்சும் எங்கெல்சும் தெளிவு படுத்துகிறார்கள் ,

 

“ …..’தனிநபர்என்று நீங்கள் குறிப்பிடும்போது ,முதலாளியைத் தவிர ,நடுத்தர சொத்துடைமையாளரைத் தவிர ,வேறு எவரையும் குறிப்பிடவில்லை என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டாக வேண்டும் .உண்மையில் இந்த தனிநபர் துடைத்தெறியப்படத்தான் வேண்டும் . இத்தகைய தனிநபர் உருவாகாதபடி செய்யத்தான் வேண்டும் …….

 

 

….… உங்கள் வர்க்கத்தின் விருப்பத்தை அனைவருக்குமான சட்டமாக ஆக்கி இருப்பதே உங்கள் சட்ட நெறியாக உள்ளது . அந்த விருப்பத்தின் சாரமான பண்பும் திசைவழியும் உங்கள் வர்க்கம் நிலவுவதற்குரிய பொருளாதார உறவுகளால் தீர்மானிக்கப்படுகின்றன…..”

 

 

Capitalism says, "No one is stopping you, therefore you are free."

Socialism says, "If you don't have the material conditions to act, you are not free, even if no one is legally stopping you."

 

முதலாளித்துவம் சொல்கிறது , “ உன்னை யாரும்  தடுக்க வில்லை  ,கட்டிப்போடவில்லை நீ சுதந்திரமாக தாரளமாக வளரலாம்.” .

சோஷலிசம் சொல்கிறது , “ நீ வளர்வதற்கேற்ற பொருளாதார சமூகச் சூழல் இல்லாத போது , உன் கையை யாருக் கட்டிப் போடாவிட்டாலும் கூட உன்னால் ஒரு இஞ்சுகூட நகர முடியாது .” இந்த அடிப்படைப் புரிதல் இல்லாமல் பொத்தாம் பொதுவாய் பேச இயலாது .

 

 

மனித உரிமை : வரலாறும் அரசியலும்.” என்ற என் புத்தகத்தில் இதுகுறித்து நான் இன்னும் விரிவாய்ப் பேசி இருக்கிறேன் . “ பசியிலிருந்தும் அச்சத்திலிருந்தும் விடுதலையேமெய்யான மனித உரிமை . இதற்காக உலகெங்கும் கம்யூனிஸ்டுகள் செய்த தியாகத்துக்கு ஈடாக இன்னொரு கட்சியைக் கூற முடியுமா ? சிறை ,சித்திரவதை இவற்றால் அதிகம் பாதிக்கப்பட்டது கம்யூனிஸ்டுகளே . உலகளவிலும் சரி இந்தியாவிலும் சரி இதுவே உண்மை .எனவே கம்யூனிஸ்டுகள் என்றும் மனித உரிமைச் சாம்பியன்களே !

 

 

இந்த அடிப்படைப் புரிதலின் மேல் நின்றுதான் நாம் அனைத்தையும் பொதுவாகப் பார்க்க வேண்டும் . ஆயினும் மனித உரிமைசார்ந்த பலவேறு கூறுகளில் கடந்த நூற்றாண்டுகளில் புரிதலும் அனுபவமும் மிகவும் மேம்பட்டுள்ளது . காலம் நிறைய படிப்பினைகளைத் தந்துள்ளது .அது சார்ந்து பல்வேறு விமர்சனங்களை பேச இங்கு இடமில்லை .பின்னொரு கேள்வி பதிலில் பார்ப்போம்.

 

 

வர்க்கங்களையும் வர்க்கப் பகைமைகளையும் கொண்ட பழைய முதலாளித்துவ சமூகத்திற்குப் பதிலாக ,ஒவ்வொருவரின் சுதந்திரமான வளர்ச்சியையே அனைவரின் சுதந்திரமாகக் கொண்ட ஒரு கட்டமைப்பை நாம் நிச்சயம் பெறுவோம்.” என அறைகூவல் விடுகிறது கம்யூனிஸ்ட் அறிக்கை .

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

11 /09/26 .

 

 

குறிப்பு : ஒவ்வொரு சனிக்கிழமையும் ‘கேள்வி -பதில்’ வெளிவரும் . நீங்களும் கேள்விகளை அனுப்பலாம்.