Posted by அகத்தீ Labels:

 


எதுவாயினும்

நியாயப்படுத்த

ஆயிரம் வார்த்தைகள் கிடைக்கும்

ஆனால்

நியாயமாக

ஒரே வழிதான்

அது

நியாயமாக இருக்க வேண்டும் .

 

சுபொஅ.


Posted by அகத்தீ Labels:

 


பகுதி கடந்து போய் உங்களால் சாதியை கடக்க முடியுமா?

மாவட்டம் கடந்து?

மாநிலம் கடந்து?

தேசம் கடந்து,

கண்டம் கடந்து

நிதர்சனம் இல்லை.

கரையான்போல இது....

 

சாதி பார்க்க மாட்டேன், எல்லோர் வீட்டிலும் சாப்பிடுவேன்என்பதின் உள்ளார்ந்த அர்த்தம் ….நேரடி அர்த்தம் என்ன?

 

உங்கள் last name என்ன?

நீங்கள் vegetarian?

Non veg ?

அப்ப Beef சாப்பிடுவீர்களா?

நீங்கள் என்ன ஆள்கள்?’ என்பதின் இரண்டாம் அடுக்கு கேள்விகள் இவையே.

 

ஆனால் நான் கண்டது என்னவென்றால்

சாதி ஒருபோதும் மறையவில்லை.

அதை நேரடியாக கேட்கும் துணிவு மட்டும் சிலரிடம் குறைந்திருக்கலாம். 

 

 

என் மகள் பானுநவீன் எழுதிய கவிதை அதிர்ச்சி அல்ல உறுத்தும் உண்மை . கடல் கடந்து கனடா போனாலும் அங்கேயும் தூக்கிச் சுமக்கும் சாதியம் கண்டு அவள் எழுதியதை இங்கு பகிர்ந்திருக்கிறேன் . அவள் என்னோடு உரையாடும் போது சொல்லும் செய்திகள் இன்னும் கொடுமையானவை . சாதியம் எங்கும் ஏதோ ஓர் வடிவத்தில் மென்மையாகவோ வண்மையாகவோ …. நம்முன் உள்ள சவால் .

 

சுபொஅ.

08 /05 /26.

 

 

 


தோழமையான அறிவிப்பு

Posted by அகத்தீ Labels:

 


தோழமையான அறிவிப்பு

 

அன்பான தோழர்களே !

வணக்கம் .

நாளை தேர்தல் முடிவுகள் வந்துவிடும் . திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் .எனக்கு ஐயமில்லை.  

மாநில அரசு புதிய சூழலை , புதிய சவால்களை உறுதியோடு எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் .

ஒவ்வொரு கட்சியும் மக்கள் நலன் சார்ந்து போராட்டங்களையும் பரப்புரைகளையும் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் .

பாசிச அபாயம் தொடர்வதையும் ; மாநில உரிமைகள் ஆபத்தானக் கட்டத்தை நெருங்குவதையும் ; ஜனநாயக  சமூகப்  பொருளாதாரப்  பண்பாட்டு நெருக்கடிகள் முற்றுவதையும் ; முழுமையாக உள்வாங்கி ஒவ்வொரு நகர்வையும் திட்டமிட வேண்டும் . 

 

நான் தமிழ்நாட்டில் இப்போது குடியிருக்கவில்லை . நேரடி அரசியல் பங்கேற்பும் இல்லை . சமூக வலைதளங்களில் முடிந்தவரை இயங்கி வந்தேன் . இனி இதில் என் பணியை முடிந்தவரை குறைத்துக் கொள்ளலாம் என யோசிக்கிறேன் .

 

ஏனெனில் என் நெடுநாள் கனவான  ஒரு எழுத்துப் பணிக்கு திட்டமிட்டு வருகிறேன் .அதற்கு நிறைய வாசிக்க வேண்டி உள்ளது . தயாரிக்க வேண்டி உள்ளது . நேரம் ஒதுக்க வேண்டி உள்ளது . எனவே சமூக வலைதளங்களில் உலவும் நேரத்தைக் குறைத்துக் கொள்ள விழைகிறேன் .

 

தேவைப்படும்போது சந்திப்பேன் .

 

நன்றி !

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

03 /05 /26 .


இன்ஸ்டாகிராம் லைப்…

Posted by அகத்தீ Labels:

 


இன்ஸ்டாகிராம் லைப்…

 

ரீல்ஸ்களில் காதலித்து

ரீல்ஸ்களில் குடும்பம் நடத்தி

ரீல்ஸ்களில் பெரியாளாகி

ரீல்ஸ்களில் அரசியல் பயின்று

ரீல்ஸ்களில் மாற்றம் கண்டு

ரீல்ஸ்களில் புலம்பித் தீர்த்து

ரீல்ஸ்களில் முடிந்து போகும் நண்பா ! நண்பி !

ரியல் எதுவென கொஞ்சமேனும் தேடு !

 

சுபொஅ.

27 /04 /26 .


என்ன கணக்கு ?

Posted by அகத்தீ Labels:

 


என்ன கணக்கு ?

 

பெரும்பாலோர் வீட்டில்

பூஜை அறை இருக்கிறதோ இல்லையோ

பூஜை ஷெல்ப் ஒன்று நிச்சயம் இருக்கும் !

அதில் யார் யார் இருக்கிறார்கள்

கொஞ்சம் பட்டியலிடுங்கள் !

ஒற்றைக் கடவுள் இருக்கும் வீடு

அநேகமாய் இருக்காது

ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு கூட்டணி

கூட்டணிதான் நல்லது என்கிற கணக்கா ? இல்லை

யாராவது காப்பாற்ற மாட்டாரா என்கிற கணக்கா ?

ஒன்று தெரியுமா ? இந்தக் கூட்டணியில்

அவ்வப்போது சேர்த்தலும் கழித்தலும்கூட நடக்கும் !

கோவில் தர்க்கா மசூதி சர்ச் எங்கும்

நேர்ச்சைக் கடன் தீர்க்க பயணமும் உண்டு

சாமிகளுக்கும் கோயிலுக்கும் சாதி வீம்பும் உண்டு

இந்த வட்டம் நம்பிக்கை சார்ந்ததா ?

வெறும் சடங்கு சார்ந்ததா  ?

தெரியாமல்தான் தெய்வங்களும்

செயலற்று பேச்சு முச்சற்றுக் கிடக்கின்றன ….

 

சுபொஅ.

25 /04 /26 .

 

சுபொஅ.

 

 


கையில் புத்தகத்தோடு தேர்தலில் வாக்களிப்போம் …

Posted by அகத்தீ Labels:

 



கையில் புத்தகத்தோடு தேர்தலில் வாக்களிப்போம் …

ஏப்ரல் 23 : உலகப் புத்தக நாள் சிந்தனை

சு.பொ.அகத்தியலிங்கம் .

2026 ஏப்ரல் 23 , உலகப் புத்தக நாளும் தமிழ்நாட்டில் சட்ட மன்றத் தேர்தல் நாளும் ஒன்றாக அமைந்துவிட்டது . இரண்டுக்கும் தேவை விழிப்புணர்வு . புத்தக வாசிப்பு உங்களை மனிதனாக்கும் . உங்களின் நெஞ்சில் பொங்கும் மனிதம் தேர்தலில் எதிரொலிக்கும் . ஆகவே கையில் புத்தகத்தோடு தேர்தலில் வாக்களிப்போம் . பாசிசத்தை வீழ்த்தும் பேராயுதம் புத்தகங்கள்தாமே !
[ புத்தகத்தை உள்ளே எடுத்துச் செல்ல அனுமதிக்காவிட்டாலும் ; வாக்குச் சாவடி வாசல் வரை கையில் வைத்திருக்கத் தடை இல்லை . ]

இன்றைய உலகில் புத்தக நாள் என்பது ஒன்றல்ல . இரண்டு . ஆம் . ஒன்று ,ஏப்ரல் 23 உலகப் புத்தக நாள் . இரண்டு ,பிப்ரவரி 21 சிவப்புப் புத்தக நாள் . எதில் எதைக் கொண்டாடுவது ? முற்போக்காளர்கள் இரண்டையும் கொண்டாடுவார்கள் . வலதுசாரிகளுக்கு இரண்டும் கசப்புத்தான் , ஆனாலும் ஏப்ரல் 23 ஐத் தவிர்க்க முடியாமல் சடங்காகக் கடைப் பிடிப்பார்கள் . இரண்டின் வரலாற்றையும் கொஞ்சம் புரட்டலாமே !

உலகெங்கும் பாசிசமும் சர்வாதிகாரமும் நூலகங்களைத் தீயிட்டுப் பொசுக்கியதை வரலாறு நெடுகிலும் பார்த்தோம் . ஹிட்லரின் பாசிச நெருக்கடியிலும் , இலங்கையில் இனவெறி ஆட்சியிலும் இன்னும் பல நிகழ்வுகளிலும் இக்கொடுமை நடந்தேறியது .

சதாம் உசேனை அழிக்க ஈராக்கில் அமெரிக்கப் படைகள் நுழைந்த போது துறைமுக நகரமான பாஸ்கரா நகரின் மிகப் பெரிய நூலகத்தின் புத்தகங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இடம் மாற்றி பாதுகாத்த பெண் நூலகர் ஆலியாவும் அவர் தம்பி அனீஸ் முஹமதுவும் வரலாற்றில் தனி இடம் பிடித்துவிட்டனர் . ஜெர்மனியிலும் இத்தாலியிலும் இது போன்ற வரலாற்று நிகழ்வுகள் உண்டு . அது இருக்கட்டும் உலகப் புத்தக நாள் எப்போது தொடங்கியது ?

ஐக்கியநாட்டின் கலை பண்பாட்டு பிரிவான யுனெஸ்கோ முடிவின் படி உலக “புத்தக நாளும் படைப்புரிமை நாளுமாக” [ book day and copy right day ] 1995 ஏப்ரல் 23 முதல் கொண்டாடப்படுகிறது. இப்போதும் அதுதான் .ஆயினும் இரண்டாவது விஷயம் பதிப்பாளர்களுக்குப் பிடிக்காது எனவே வெறும் புத்தக நாளானது .

[ தமிழ்ப் பதிப்பகங்கள் பெரும்பாலானவை ராயல்ட்டி நியாயமான எழுத்துக்கூலி தருவதே கிடையாது .இதுவும் வரலாறே . என் அனுபவமும் அப்படியே ]

வரலாற்றில் பின்னோக்கிப் போனால் 1922 இல் புத்தக நாள் ஸ்பெயினில் பார்சிலோனா நகரில் கொண்டாடப்பட்ட தகவல் கிடைக்கிறது . அதைத் தொடர்ந்து 1926 இல் தேதி மாற்றிக் கொண்டாடப்பட்டது . 1930 இல் ஸ்பெயினில் கத்தலான் [ catalan ] மொழிப் பாதுக்காப்பு நாளாகவும் புத்தக நாளாகவும் கொண்டாடப்பட்டது . Day of books and roses புத்தகம் மற்றும் ரோஜாக்களின் நாளாக ஒரு பாதிரியார் முன்னெடுப்பில் இது நடந்தது . ஆண்களுக்கு பெண்கள் புத்தகங்களையும் பெண்களுக்கு ஆண்கள் ரோஜாக்களையும் பரிமாறிய நாளானது . நாளடைவில் இரு பாலரும் புத்தகங்களைப் பரிமாறத் தொடங்கினார்கள் .இந்நாட்களுக்கு எல்லாம் அவ்வப்போது வெவ்வேறு நினைவுகளும் கதைகளும் வலம் வந்துகொண்டே இருக்கின்றன .

ஆங்கில நாடகாசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் [William Shakespeare] , பெரு நாட்டில் பிறந்து ஸ்பெயினில் வாழ்ந்த எழுத்தாளர் இன்கா கார்சிலசோ டே லா வேகா [ Inca Garcilaso de la Vega ] ஆகியோரின் நினைவுநாள் ஏப்ரல் 23 என்றும் அதுவே உலக புத்தகநாள் என்றும் சொல்லும் வழக்கம் 1995க்கு பிறகு உறுதியானது . இருவர் நினைவுநாட்கள் தேதிகளில் சில மாறுபாடு உண்டென்று சொல்வாரும் உண்டு ; ஆயினும் இருவர் நினைவைப் போற்றும் நாளே உலக புத்தகநாளானது .

இப்புத்தக நாள் தமிழ்நாட்டில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகக் கொண்டாடப்பட்டு வருகிறது . மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு அரசு முன்கை எடுப்பில் தன்னார்வலர்களும் இணைந்து மாவட்டம் தோறும் புத்தகத்திருவிழா நடத்துவது போற்றத்தக்க முன்னேற்றம் . தேர்தலுக்குப் பின்னும் அது தொடர அதற்கொப்ப வாக்களிப்போம் .

‘பிப்ரவரி 21 சிவப்பு புத்தக நாள்’ என்பது உலக புத்தக நாளு [ ஏப் 23 ] க்கு போட்டி நாளல்ல ; மேலும் ஓர் நாள் . உலகை மாற்றும் ஓர் சித்தாந்தத்தின் வெளிச்சத்தில் உதயமான நாள் .

1848 பிரவரி 21 ஆம் நாள் என்பது காரல் மார்க்சும் பிரடெரிக் எங்கெல்சும் இணைந்து எழுதிய மாபெரும் ஆவணம் . உலகைக் குலுக்கிய இன்னும் குலுக்கிக் கொண்டிருக்கிற சிந்தனைக் களஞ்சியம் ; உலகைப் பற்றி வியாக்கியானம் செய்கிற சித்தாந்தமாக இல்லாமல் மாற்றி அமைக்கும் அறிவுச்சுடராய் இன்றும் பிரகாசிக்கும் ‘கம்யூனிஸ்ட் அறிக்கை” வெளிவந்த நாள் . இப்புத்தகத்தின் 150 வது ஆண்டு கொண்டாட்டத்தின் போது 1998 இல் இவ்வறிக்கையை மீண்டும் பெருமளவு கொண்டு போக வேண்டுமென்கிற தேவை உலகெங்கும் முன்னுக்கு வந்தது . இடதுசாரிகளும் கம்யூனிஸ்டுகளும் ஆங்காங்கு அவர்களுக்கான வழியில் முயன்றனர் . 2020 பிப் 21 இல் சிவப்புப் புத்தக தினமாகப் பிறந்தது .

1920 பிப்ரவரி 21 ஆம் நாள் தென்கொரியா முதல் வெனிசுலா வரை சுமார் முப்பதாயிரம் பேர் ஒன்றாக ’கம்யூனிஸ்ட் அறிக்கை’யை வாசித்த நாள் . அன்றுதான் சிவப்பு புத்தகதினம் தொடங்கியது . உலகெங்கிலும் உள்ள கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரி பதிப்பகங்களும் , கம்யூனிஸ்ட் கட்சிகளும் பல்வேறு வர்க்க வெகுஜன அமைப்புகளும் கூட்டாக முன்னெடுக்கும் நாளானது . தமிழ்நாடு ,கேரளா ,ஆந்திரா ,தெலுங்கானா என்கிற நான்கு மாநிலங்கள் இந்நாளின் துவக்கத்திலேயே வலுவாக தன்னை இணைத்துக் கொண்டு ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’யை வாசித்தது சிறப்புக்குரியது. இம்முயற்சி சித்தாந்தப் போராட்டத்தின் ஓர் பகுதி எனில் மிகையல்ல.

எந்தப் புத்தக நாளாயினும் நமக்கு உவப்பே . புத்தகம் என்பது புதிய புதிய சாளரங்களைத் திறக்கும் . புதியபுதிய சேதிகளைச் சொல்லும் . புதிய புதிய பண்பாட்டோடு கைகுலுக்க வைக்கும் .விசாலப் பார்வையால் மனித குலத்தை அரவணைக்க வழிகோலும். புத்தகம் வாசிக்காத எந்த ஒரு நாளாயினும் அது வீணான நாளென கணக்கில் பதிக !

வாசிக்க நேரம் எங்கே இருக்கிறது ? எதை வாசிப்பது ? எப்படி வாசிப்பது ? இக்கேள்விகளுக்கான விடையை , ‘ ஏன் வாசிக்க வேண்டும்?’ என்ற கேள்விக்கான விடையோடு தொடங்க வேண்டும் . ‘ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதான் வளர்ச்சி’ என்றார் பட்டுக்கோட்டை . அறிவு நாளும் , வளர புதியன அறிய ,உலகத்தோடு ஒட்ட ஒழுக ;படித்துக் கொண்டே இருக்க வேண்டும் ; படித்துக் கொண்டே இறக்க வேண்டும்.

இந்த முடிவுக்கு வந்துவிட்டால் நேரத்தை கண்டடைவது பிரச்சனையே அல்ல . வீடு ,அலுவலம் ,பயணம் ,போர்க்களம் ,காத்திருக்கும் நேரம் எங்கெங்கும் கொஞ்சம் அவகாசம் கிடைத்தாலும் புரட்ட புத்தகத்தை எப்போதும் உங்களுடன் சுமந்து திரியுங்கள் !

முதலில் படி ! கிடைத்ததை எல்லாம் படி … இந்த வாசற்படி உன்னை நல்லவை நோக்கி நகர்த்தும் .உன் வாசிப்பின் வழிவாசல் துலங்கும் . நீயே தேடித்தேடி படிப்பாய் . வாசித்துப் பழகிவிட்டால் வாசிக்காமல் இருக்க முடியாது உன்னால் . ‘வாசிப்பின் போதை’ ஆரோக்கியமானதே !!

புத்தக நாள் எனில் ,புத்தகங்களின் பெருமையைப் பேசிப்பேசி ஓய்வதற்கான நாளல்ல ; மாறாகப் புத்தகங்களை ஆயுதங்களாக்க வேண்டிய நாள் .இன்றைய சமூகச் சூழலில் நாட்டைப் பீடித்த பீடைகளை விரட்ட புத்தகமே பேராயுதம் என்பதை நெஞ்சில் ஏந்துக !

எந்த ஆயுதங்கள் , யார் கையில் ,யாரை நோக்கி என்பது மிகவும் அடிப்படையான கேள்வி .

§ உங்கள் புத்தகம் மதம் பிடிக்கத் தூண்டுகிறதா ? மனிதனாக்க உந்துகிறதா ?
§ உங்கள் புத்தகம் சாதி அழுக்கை சுமக்கிறதா ? சமத்துவத்தை பேசுகிறதா ?
§ உங்கள் புத்தகம் சுயநலக் கூட்டுக்குள் அடைக்கிறதா ? பிறருக்காக கண்ணீரும் செந்நீரும் சிந்தச் சொல்கிறதா ?
§ உங்கள் புத்தகம் யார் சொன்னாலும் எதைச் சொன்னாலும் அப்படியே நம்பச் சொல்கிறதா ? கேள்வி கேட்கத் தூண்டுகிறதா ?
§ உங்கள் புத்தகம் தாலாட்டுப் பாடித் தூங்க வைக்கிறதா ? பூபாளம் இசைத்துப் புரட்டிப் போடுகிறதா ?
§ உங்கள் புத்தகம் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டச் செய்கிறதா ? விசாலப்பார்வையால் மானுடசமுத்திரம் நாமென கூவச் சொல்கிறதா ?
§ உங்கள் மன நிம்மதிக்காகப் படிக்கிறீர்களா ? மனதைக் குடையும் கேள்விகளுக்கு விடைதேடிப் படிக்கிறீர்களா ?
§ உங்கள் கண்ணெதிரே நடக்கும் அநீதிகளை நியாப்படுத்தப் படிக்கிறீர்களா?அநீதிகளுக்கு எதிராய் வெகுண்டெழப் படிக்கிறீர்களா ?

நீங்கள் எவ்வளவு பக்கம் படித்தீர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ ? அதைவிட கற்றபின் அதற்கொப்ப நின்றீர்களா என்பதும் மிகமிக முக்கியம்.

நானும் எல்லோரையும் போல முதலில் ரசிகனாக – மேலோட்டமான வாசகனாகவே இருந்தேன் .என் தொடர் வாசிப்பு என்னை வேறு தளத்துக்கு கொண்டு சென்றது .நான் களப் போராளி ஆனேன் .அதன் பின் என் வாசிப்பும் ,பேச்சும் ,எழுத்தும் எப்போதும் என் களப் போராட்டத்தின் இன்னொரு பக்கமாகவே மாறிப்போனது .இதனாலேயே , என்னை எழுத்தாளனாகவே கருதாத எழுத்துலகப் பிரம்மாக்கள் இங்கு உண்டு . எனக்கு கவலை இல்லை .நான் ஓர் கலகக்காரன்தான்.அதுதான் என் பெருமை .அதுதான் என் அடையாளம்!!

நேற்றும் வாசித்தேன்
இன்றும் வாசிக்கிறேன்
சாகும் வரை வாசித்துக் கொண்டே இருப்பேன் .
நீங்கள்….!!!

2026 ,ஏப்ரல் : 23 உலக புத்தக நாள் வாழ்த்துகள் .
கையில் புத்தகத்தோடு தேர்தலில் வாக்களிப்போம் …

ஓர் அனுபவம் – ஓர் வாசிப்பு …..

Posted by அகத்தீ Labels:

 





 

ஓர் அனுபவம் – ஓர் வாசிப்பு …..

 

முதலில் அனுபவம் …

 

தமிழ்நாட்டைச் சார்ந்த ஓய்வு பெற்ற ஓர் போக்குவரத்துத் தொழிலாளியோடு ஒரு நாள் பெங்களூரில் நடை பயிற்சி போய்க் கொண்டிருந்தேன் . வழியில் அம்பேத்கர் படம் தாங்கிய ஒரு அறிவிப்புப் பலகையைப் பார்த்ததும் , “  என்ன சாதிச்சிட்டதுக்காக இப்ப தெருவெல்லாம் நட்டு வைச்சிருக்காங்க …” என ஆரம்பித்து வசை பாடினார் . எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது . நான் கொடுத்த விளக்கங்கள் எதையும் அவர் ஏற்கத் தயார் இல்லை . ஆதிக்க சாதி மனோநிலையில் அவர் உறைந்து போயிருந்தார் .

 

அடுத்து வாசிப்பு ….

 

 எட்டாம் வகுப்பு ‘அ’ பிரிவில் ஓர் தமிழாசிரியர்.” ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய சிறுகதை . அழகிய பெரியவன் எழுதிய கதை . அண்மையில் வாசித்தேன் . வகுப்பில் அம்பேத்கர் பாடத்தையே வாசிக்க விரும்பாமல் தட்டிக் கழித்த ஒரு தமிழாசிரியர் கதை அது . ஆனால் மாணவர்களின் அடுக்கடுக்கான கேள்விகளால் திணறுகிறார் . தெளிவு பெறுகிறார் .

 

“ அம்பேத்கருடைய பாடத்தை நான் இப்ப நடத்தப் போறேன்! இந்தப் புத்தகத்தை எனக்குப் படிக்கக் கொடுத்தவன் என்னுடைய நண்பன் சிவராஜ் . ஒரு முறை இதே மாதிரி வகுப்பறையில எனக்குப் பிறந்த நாள் கொண்டாடிய போது காட்டுப் பழங்களைக் கொடுத்தான் …. பதிலுக்கு நான் அவனுக்கு என்ன கொடுத்தேன்னு நினைவில்ல ! இன்னும் கொஞ்ச தூரம்தான் நகர்ந்து நகர்ந்து வந்துவிட்டோம் ! இன்னும் கொஞ்ச தூரம் நகர்ந்து நகர்ந்து போவோம்! ஒண்ணாவே போவோம் ! இன்னும் கொஞ்ச தூரம்தான்.”

 

இக்கதை நாட்டு நடப்பை நமக்குச் சொல்லித் தந்துவிட்டது . ஆம் ‘அ’ கூட அறியாமல் இன்னும் வெறுப்புப் பள்ளத்தில் வீழ்ந்து கிடப்போரிடம் அம்பேத்கரைக் கொண்டு சேர்ப்போம் .

 

16 சிறுகதைகள் . அனைத்தும் தலித் சிறுகதைகள் . புதியவர்கள் எழுதிய 8 கதைகள் . அனுபவம் பெற்ற எழுத்தாளர்கள் எழுதிய எட்டு கதைகள் . புதுசோ பழசோ வலிகள்தான் இக்கதைகளில் நிரம்பி வழிகிறது. தலித் வாழ்க்கை அதுதானே . வாசிக்க வேண்டிய நூல் .

 

இன்று ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த நாள் .

 

நவீன தலித் சிறுகதைகள் , தொகுப்பு : ப்ரதிபா ஜெயச்சந்திரன் , பாரதி புத்தகாலயம் , www.thamizhbooks.com ,பக்கங்கள் :176 , விலை : ரூ.180 /

 

சுபொஅ.

14 /06 /26 .