பசு மாட்டோடு சேர்த்து நம்மையும் பாடாய்ப் படுத்தும் புத்தகம்…..

Posted by அகத்தீ Labels:

 


பசு மாட்டோடு சேர்த்து நம்மையும் பாடாய்ப் படுத்தும் புத்தகம்…..

 

 


பேராசிரியர் .பி. ராஜமாணிக்கம் எழுதிய  பசு மாடு படும் பாடு’ என்னும் இச்சிறிய புத்தகம்  [ 32 பக்கங்கள் ] ஒவ்வொரு வரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் .

 

சில கேள்விகள்…

1] பசு மாட்டின் சிறுநீர் புற்று நோயைக் குணப்படுத்துமா ?

2] பசு மாட்டின் சிறுநீரில்  தங்கம் இருப்பது உண்மையா ?

3] பசு மாடு ஆக்சிஸனை சுவாசித்து ஆக்சிஸனை வெளியிடுகிறதா ?

4 ] பசுஞ்சாணம் கதிர்வீச்சைத் தடுக்குமா ?

5] பசு மாட்டின் பூர்வீகம் எது ? அது எங்கே பிறந்தது ? மூதாதையர் யார் ?

 

இப்படி சில அடிப்படையான கேள்விகளுக்கு அறிவியல் ரீதியாக ஆணித்தரமான பதில்களைத் தருகிறது இந்நூல் .ஆகவே ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டுகிறேன்.

 

தமிழ்நாடு அறிவியல் இயத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான பேரா.பி. ராஜமாணிக்கம்  தேவையான நேரத்தில் , மிக அவசியமான இந்நூலை எழுதி இருக்கிறார்  . மாட்டுக்கறி வெறுப்பு அரசியலுக்குள் நுழையாமல் வேறு தளத்தில் நின்று அறிவியல் பூர்வமான நான்கைந்து கேள்விகளுக்கு மட்டும் தக்க ஆதாரத்துடன் பதில் சொல்லி இருக்கிறார். படங்கள் ,கார்ட்டூன் , சிந்திக்கத் தூண்டும் அட்டை என புத்தகம் நன்கு தயாரிக்கப்பட்டுள்ளது .

 

புரளிகளை அறிவியல் என விற்கும் புழுகுணிப் பிரச்சாரங்களில் சிக்கிக் கொண்ட மக்களை விடுவிக்க ஒவ்வொருவருக்கும் இந்நூலைப் பரிசளியுங்கள் !  அறிவியல் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் ஈடுபடுவோர் இதனைக் கருத்தில்க் கொள்க !

 

பசு மாடு படும் பாடு , ஆசிரியர் : பேரா.பி. ராஜமாணிக்கம் , வாசல் வெளியீடு , 40 D / 3 – முதல் தெரு ,வசந்தா நகர் , மதுரை 625 003 , vasalviji@gmail.com + 91 98421 02133 . பக்கங்கள்: 32 , விலை : ரூ.42 /

 

சுபொஅ.

நகரென்று எதைச் சொல்கிறீர்கள் ?

Posted by அகத்தீ Labels:

 நகரென்று எதைச் சொல்கிறீர்கள் ?

 

 


நகரென்று எதைச் சொல்கிறீர்கள் ?

ஓங்கி உயர்ந்த கட்டிடங்களையா ?

விளம்பரத்தில் மினுக்கும் வர்த்தக நிலையங்களையா ?

கார்ப்பரேட் கொளையை பொதிந்த பெரும் நிறுவனங்களையா ?

பளபளப்பான கல்வி ஏலக் கடைகளையா ?

மரண வியாபாரத்தில் கல்லா கட்டும் மருத்துவ மனைகளையா ?

பகட்டும் போலித்தனமும் நிரம்பி வழியும் மெகா திருமண மஹால்களா ?

பாலம் ,சாலை ,ரயில் ,பஸ் ,கார் ,ஆட்டோ ,டூ வீலர் நெரிசல் நெரிசல் இதுதான் அடையாளமா ?

நின்று பேச நேரமின்றி ஓடிக்கொண்டே இருக்கும் மனிதர்களா ?

நுனி நாக்கு ஆங்கிலமும் நவநாகரீக உடையும் காதோடும் கண்ணோடும் ஒட்டிக்கொண்ட அலைபேசியுமாய் திரியும் இளைஞர்கள் இளைஞிகளையா ?

நகரென்று எதைச் சொல்கிறீர்கள் ?

நவீனத்தோடு கைகுலுக்கினும் சாதி ,மத ,பாலின வன்மத்தை சுமந்து திரியும் மானுடம் கொன்ற மனித உருவங்களையா ?

அம்பேதர் சாதி ,மத ஒடுக்குமுறையின் கொடூர உறைவிடமாய்  ; ஆதிக்கம் , ஏற்ற தாழ்வு மிக்க கிராமங்களைக் கண்டு கொதித்தார்

கிராமங்களின் நகலாய் திரியும் மனித மந்தை உலவும் சந்தையை நகரம் என்று எப்படி அழைப்பது ?

 

சுபொஅ.

 

 

Posted by அகத்தீ Labels:

 



கணணுக்கெடிய தூரம் வரை ஒளிக்கீற்றுத் தெரியவில்லை .

இருட்டு என்பதும் குறைந்த ஒளிதான் ; கொஞ்சம் கொஞ்சமாய் ஒவ்வொன்றாய் புலப்படும் .

தேவை ; கொஞ்சம் நம்பிக்கை ,கொஞ்சம் தைரியம் , நிறைய ஞானம் .

இதுவரை கடந்ததைவிட , பல மடங்கு கொடிய பாதையே நம்முன் விரிகிறது.

முடங்க முடியாது .அடிபணிய முடியாது . முட்டி மோதி நடந்து கொண்டே இரு !

முடிந்தவரை கூட்டம் சேர்த்துக் கொள் ! எல்லோரும் கடைசிவரை வருவார்கள் என எதிர்பார்க்கதே !

அவரவர் சக்திக்கு ஏற்ப , புரிதலுக்கு ஏற்ப வருவதுவரை வரட்டும் !

மயக்கம் தெளியாவிட்டால் மரணம் . மயக்கம் தெளிந்துவிட்டால் விழிப்பு...

நட ... பேசு ... ஓடு ... கத்து .... இன்னும் ... இன்னும் ... இன்னும் ... இன்னும் ....


சுபொஅ.

Posted by அகத்தீ Labels:

 




கீழ்வானில் சூரியன் உதிக்கும் நொடியில்

மெல்ல ஜன்னலில் வந்தமர்ந்து

கொஞ்சிக் கொண்டிருக்கும் ஜோடிப்புறாக்கள்

இரவு சரியாகத் தூங்கி இருக்குமோ ?

 

நேற்று இரவு முழுவதும் தூக்கத்திலும்

விழித்து விழித்து குரைத்த நாய்கள்

விடியும் முன்பே ஓடத்  துவங்கிவிட்டன

என்ன அவசர வேலையோ ? யாரறிவார் ?

 

நிற்காமல் ஊர்ந்து கொண்டே இருந்தன

வரிசை மாறா எறும்புகள்

ஒரு வேளை வானிலை அறிக்கையைக் கேட்டு

தூங்காமல் இடம் பெயர்கிறதோ ?

 

இரவிலும் தூங்கி பகலிலும் தூங்கி

வாழ்வையும் நாட்டையும்

கோட்டை விட்டுக்கொண்டிருக்கிறானே

இந்த பாழும் மனிதன் ....

 

சுபொஅ.

 

 

 

 

Posted by அகத்தீ Labels:

 



’கமலாலயன் : இலக்கிய பெரினா விருது 2016 – சிறப்பு வெளியீடு’ வாசித்தேன் . 133 பக்கங்களில் கமலாலயன் பற்றி ஓர் பருந்துப் பார்வை அறிமுகம் எனில் மிகையல்ல .

 

சிறுகதை ,நாவல் ,மொழிபெயர்ப்பு ,கட்டுரை என பல முனைகளின் அவர் அளித்தப் பங்களிப்பை இந்நூல் பட்டியலிடுகிறது . பாவண்ணன் , உதயஷங்கர் இருவரின் கட்டுரைகளும் கமலாலயனின் காத்திரமானப் பங்களிப்பைச் சொல்கிறது .

 

கமலாலயனின் ‘ நகரப் பருந்துகள்’ எனும் குறுநாவல் இந்நூலுக்கு அழகு சேர்ப்பதோடு கமலாலயனின் சமூக அக்கறையையும் கூர்த்த பார்வையையும் பறை சாற்றுகின்றன . வேலூர் திருவண்ணாமலை மாவட்டங்களில் தனியார் பேருந்துகள் செய்யும் அட்டகாசம் ; அதற்கு துணைபோய் அரசு பேருந்துகளை பழிவாங்கும் காவல்துறையும் நிர்வாகமும் இன்றும் தொடர் கதை . வேலூரில் இது தொடர்பாக நடந்த போராட்டத்தை ரத்தமும் சதையுமாய் பதிவு செய்கிறது இந்நாவல் . மனித உயிரைவிட லாபம்தான் உயிர்நாடியாகிப்போன சமூக அவலத்தின் சாட்சி . இன்னும் சொல்லப் போனால் 1990 களில் நடந்த ஓர் நிகழ்வை உள்ளது உள்ளபடி துல்லியமாய் பதிவு செய்துள்ளது .இதுவும் வரலாறு அன்றி வேறென்ன ?

 

முதுமையின் வலியைச் சொல்லும் ‘ ஓய்ந்தவர்கள்’ சிறுகதையும் , வாழ்க்கை துயரையும் கடவுள் நம்பிக்கையும் சேர்த்து பகடி செய்யும் ஓர் நுட்பமான சிறுகதையும் இதில் இடம் பெற்றுள்ளன .

 

இக்கதைகள் ஏற்கெனவே வெளிவந்தவைதான் . இங்கு இவரின் ஆற்றலை படம்பிடித்துக் காட்ட தரப்பட்டுள்ளது .

 

இத்துடன் இவரின் பன்முகத்தைக் காட்டும் நான்கு கட்டுரைகளும் ஓர் நேர்முகமும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன .இவையாவும்  இவர் விருதுக்கு முற்றிலும் பொருத்தமானவர் என்பதற்கு சாட்சியாகிறது .

 

வாலிபர் சங்கத்தில் தொடங்கிய எங்கள் தோழமை இன்றுவரை அதே உயிர்ப்புடன் தொடர்கிறது . தோழரை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன்.

 

தேநீர் பதிப்பக வெளியீடு .விலை : ரூ140 / தொடர்புக்கு 9080909600.

 

சுபொஅ. 

இரங்கற் குறிப்புகளில்

Posted by அகத்தீ Labels:

 

இரங்கற் குறிப்புகளில்

சொல்லப்படுபவை  எல்லாம்

உண்மைதானேன்று

இறந்தவரா சாட்சி சொல்லுவார்

 

அஞ்சலி உரைகளில்

உள்ளொன்று வைத்து

புறமொன்று பேசப்படவில்லை என

மரித்தவரா மறுமொழி சொல்லப்போகிறார்

 

நினைவுகூரும் சடங்குகளில்

வரலாறு திரிக்கப்படவில்லை என

வாக்குமூலம் தந்திட இறந்தவர்

மீண்டும் வரவா போகிறார் ?

 

மேடைகளில் சொல்லப்படும்

இறந்தவர் பெருமைகள்

பெரும்பாலும் கட்டுக்கதைகளாய்

சிறுத்துப் போனது எப்படி ?

 

நான் கேட்டுக்கொண்டிருந்த போது

இடைமறித்த இறந்தவர்,

 வாழும் போது மட்டும் புகழ்கையில்

உண்மையா பொங்கி வழிகிறது?” 

 

இருப்பவரோ இறந்தவரோ

அவரவர் தேவைக்கு

கூட்டியும் குறைத்தும்

கதை கட்டவேண்டியதுதான் .

 

ஆனாலும் 

அடுத்தவரால் நெய்யப்படும்

வாழ்க்கைக் கதையைவிட

சுயவரலாற்றில் பொய் குறைந்து

உண்மை கொஞ்சம் நெருங்குமல்லவா ?

 

[ சமூக வலைதளங்களில் பட்டி மன்ற பேச்சாளர்களும் ரீல்ஸ் பிரியர்களும் அவிழ்ந்துவிடுகிற பொய் மூட்டைகளுக்கு எதிர்வினையே இது . ]

 

சுபொஅ.

 

விஷ வேர் சமூகம் நெடுக விஷப் பார்த்தீனியமாய்…

Posted by அகத்தீ Labels:

 



பாலியல் வன்கொடுமை :

விஷ வேர் சமூகம் நெடுக விஷப் பார்த்தீனியமாய்…

 

’தப்பு’ நாவலைத் தாமதமாகவே படிக்க வாய்ப்பு கிடைத்தது ஆயின் சரியானதைப் படித்தேன் என உறுதியாகச் சொல்லலாம் . கதை நேர்கோட்டுப் பாதையில் எளிமையாய்ச் செல்கிறது . திருப்பங்களும் இயல்பு போக்கிலேயே நடக்கிறது. தப்பு ஓரிடத்தில் மட்டுமே இல்லை திரும்பகிற இடமெல்லாம் தப்பு ,தப்பு ,தப்பு ,தப்பு ,தப்பு …..

 

ஒரு மகளிர் காவல் நிலையத்துக்கு வரும் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு . முதலில் குழந்தை மீதான பாலியல் வன்முறை என்ற வகையில் தொடங்குகிறது . பின் 28 வயதுப் பெண் என நகர்கிறது .பெண்ணின் பெயர் சின்னப் பொண்ணு   அவள் மனநிலைப் பிறந்தவள் என காணப்பட்டு , அதன் பின் அவள் வயிற்றில் ஏழுமாதக் கர்ப்பமோடு இருப்பதைச் சொல்லி , அப்புறம் அக்குழந்தை வயிற்றில் செத்து இருப்பதை கண்டுபிடித்து … இப்படி நாவல் சிக்கல் மேல் சிக்கலாக நகருகிறது . குற்றவாளி யார் என்பதுதான் சஸ்பென்ஸ் . இது கிரைம் நாவல் அல்ல .சமூக நாவல் . சமூகத்தை ஸ்கேன் செய்து காட்டும் நாவல் .

 

கிட்டத்தட்ட நாவல் முழுவதும் ஆய்வாளர் மனோன்மணியம் பார்வையில் நகர்கிறது . நாவல் நெடுக மனிதர்களுக்குள் இருக்கும் வன்மமும் போலித்தனமும் தோலுரிக்கப்பட்டுக்கொண்டே கதை நகர்கிறது .

 

காவல்துறை ,அரசு மருத்துவமனை இவற்றின் செயல்பாடு அன்றாடம் சமூக வாழ்வோடு நெருங்கி இருப்பதால் . இவற்றின் மீது எல்லோருக்கும் எரிச்சலும் கோபமும் இருக்கும் . அதற்கான நியாயமும் உண்டு . பணம் ,அதிகாரம் ,சாதி ,மதம் , அரசியல் செல்வாக்கு இவற்றின் கோரப்பிடி இங்கு வலுவாகவே உண்டு .

 

இங்கேயும் மனித இதயமும் , நீதி நேர்மைமீது பசிதாகமும் கொண்டவர்கள் இருக்கிறார்கள் . இங்குள்ள ஊழியர்கள் ,டாக்டர்கள் ,காவல்துறையினர்  படும்பாட்டை இந்நாவல் காட்டுகிறது .கிராமமோ நகரமோ தோற்றத்தைக் கண்டோ , பேச்சைக் கேட்டோ ஒருத்தரை எடை போட்டுவிட முடிவதில்லை .ஒவ்வொரு மனிதருக்குள்ளும் புதைந்து கிடக்கும் ரகசியங்களும் உண்மைகளும் மிகவும் ஆழமானவை . குரூரமானவை .அருவருப்பனவைகூட .கசப்பானவைம்தான் .

 

பாலியல் குற்றவாளி யார் ? அவர் தண்டிக்கப்பட்டாரா ? நாவலை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள் . ‘ தப்பு’ என உன் ஒற்றை விரல் பிறரை நோக்கி நீளும் போது ஏனைய நான்கு விரல்களும் உன்னை நோக்கி நீள்கிறது . பாலியல் வன்கொடுமை பெரும் அநீதி . அயோக்கியத்தனம் . ஆயின் அதன் விஷ வேர் சமூகம் நெடுக விஷப் பார்த்தீனியமாய் விரவிக் கிடப்பதை இந்நாவல் அழுத்தமாய்ப் பதிவு செய்கிறது . 24 வது அத்தியாயத்தின் மனோத்த்துவ மருத்துவரோட உரையாடல் நாவல் வாசிக்கிறவர்களையும் குற்றவாளிக் கூண்டிலேற்றிவிடுகிறது . மனச்சாட்சியை உலுக்கிவிடுகிறது .

 

நாவலை வாசித்து விடுங்கள். நாவலிருந்து ஒரு சில வரிகளை மேற்கோள் காட்டுவதுகூட முழுவாசிப்புக்குத் தடையாகிவிடக்கூடாது என்பதால் தவிர்க்கிறேன் .கட்டாயம் வாசியுங்கள் !

 

தப்பு [ நாவல் ], நாராயணி கண்ணகி , எழுத்து பிரசுரம் , zerodegreepublishing@gmail.com , 89250 61999 , பக் : 284 , விலை : ரூ. 340 /

 

சு.பொ.அகத்தியலிங்கம்.