Posted by அகத்தீ Labels:

 




ஒட்டடை அடித்துக் கொண்டே இருக்கிறோம்

ஒட்டடை சேர்ந்து கொண்டே இருக்கிறது

ஒவ்வொருமுறை வீட்டை சுத்தம் செய்யும் போதும்

வேண்டாத பொருட்கள் மூட்டையாகக் கிடைக்கிறது

வீட்டைக் காலையில்தான் பெருக்கினோம்

மாலையில் குப்பையாக் கிடக்கிறது

உடையோ உடலோ உள்ளமோ மீண்டும் மீண்டும்

அழுக்காகிக் கொண்டே இருக்கிறது

சாக்கடையும் சந்தணமும் கலந்ததுதான் வாழ்க்கை

சுத்தம் செய்துகொண்டே இருந்தால்தான்

சந்தணத்தின் வாசத்தை நுகர முடியும் ! தோழா !

 

சுபொஅ.

 

Posted by அகத்தீ Labels:

 






ஆஞ்சநேயா ! ஆஞ்சநேயா !

உன் பக்தன் ஆகிவிடுகிறேன்

முதியவன் என்னைச் 

சுமந்து செல்வாயா ?

ஒரு சாலையில் சந்து பொந்தில்கூட

நடக்க முடியவில்லை

கொத்துப் பரோட்டோ போட்டு

குவித்து வைத்திருக்கிறார்கள் !

 

என் கவலையை

அனுமானிடம் சொன்னேன்

அவன் என்னிடம் சொன்னான்..

 

போடா போடா மூடா !

தேர்தல் வந்தால்தான்

எனக்கு மவுசு

’ அனுமன் சாலிசா’

கட்சிகளுக்கு நினைவுக்கு வரும்

கலவரம் செய்யணும்னா

பஜ்ரங்தள்ன்னு அவனுகளே

கிளம்பீருவானுக !

உன்னை சுமந்து பறந்தால்

என்னை உடைச்சு

ரோட்டில போட்டிருவானுக

எனக்குத் தேவையா ?

 

சர்க்காரும் கேட்கல

சாமியும் கேட்கல

மூத்த குடிமக்கள்

எங்கே போய் முட்டுறது ?

 

சுபொஅ.

14 /05 /26 .

Posted by அகத்தீ Labels:

 நன்கு வடிவமைத்துக் கொடுத்தத் தோழர் லெனின் முருகனுக்கு நன்றி 



Posted by அகத்தீ Labels:

 


வழுக்கைத் தலையில் மயிர் முளைக்க

ஆயிரம் முறை தைலம் தடவிய பின்னும்

இன்னும் தடவிக்கொண்டே இருக்கிறான்

நம்பிக்கையா ? அறியாமையா ?

 

சிகப்பழகு கிரீம் தடவித் தடவி முகம்

சிகப்பானதாகச் சரித்திரம் இல்லை

அனாலும் கிரீம் விற்பனை குறையவே இல்லை

வியாபார வெற்றியா ? அறியாமையா ?

 

எத்தனைமுறை குரு பெயர்ச்சி வந்தாலும்

நம் வீட்டில் மட்டும் எப்போதும் சனிப்பெயர்ச்சிதான்

கடன் வாங்கி பரிகாரம் செய்து கடனில் மூழ்கினும்

ஜோதிடப் பொய்மையை உணர்வதே இல்லை

 

எண்ணையோ வெண்ணையோ உண்மையோ பொய்யோ

ரீல் சொல்வதையே  வாங்கு ! ரீல் சொல்வதையே நம்பு !

ரீலில் உழன்று ரீலில் மூழ்கி ரீலில் செத்தால் சொர்க்கம் நிச்சயம்

அல்காரிதமே அனைத்தையும் ஆக்கும் கொடுங்காலம் ....

 

சுபொஅ.

12 / 05 /26 .

 

 

 



Posted by அகத்தீ Labels:

 



நம்பிக்கை பட்டுப்போன

முதுமையில்

பேரப்பிள்ளைகளுக்கு

தொலை தூரத்திலேனும் காட்ட

புள்ளியாய் கூட

ஒளிதெரியா இருட்டில்

நிகழ்காலத்தை மறந்து

கடந்த காலத்தில் வாழும்

ஞாபகமறதிநோய்கூட

நல்லதுதானோ !

 

சுபொஅ.


Posted by அகத்தீ Labels:

 


எதுவாயினும்

நியாயப்படுத்த

ஆயிரம் வார்த்தைகள் கிடைக்கும்

ஆனால்

நியாயமாக

ஒரே வழிதான்

அது

நியாயமாக இருக்க வேண்டும் .

 

சுபொஅ.


Posted by அகத்தீ Labels:

 


பகுதி கடந்து போய் உங்களால் சாதியை கடக்க முடியுமா?

மாவட்டம் கடந்து?

மாநிலம் கடந்து?

தேசம் கடந்து,

கண்டம் கடந்து

நிதர்சனம் இல்லை.

கரையான்போல இது....

 

சாதி பார்க்க மாட்டேன், எல்லோர் வீட்டிலும் சாப்பிடுவேன்என்பதின் உள்ளார்ந்த அர்த்தம் ….நேரடி அர்த்தம் என்ன?

 

உங்கள் last name என்ன?

நீங்கள் vegetarian?

Non veg ?

அப்ப Beef சாப்பிடுவீர்களா?

நீங்கள் என்ன ஆள்கள்?’ என்பதின் இரண்டாம் அடுக்கு கேள்விகள் இவையே.

 

ஆனால் நான் கண்டது என்னவென்றால்

சாதி ஒருபோதும் மறையவில்லை.

அதை நேரடியாக கேட்கும் துணிவு மட்டும் சிலரிடம் குறைந்திருக்கலாம். 

 

 

என் மகள் பானுநவீன் எழுதிய கவிதை அதிர்ச்சி அல்ல உறுத்தும் உண்மை . கடல் கடந்து கனடா போனாலும் அங்கேயும் தூக்கிச் சுமக்கும் சாதியம் கண்டு அவள் எழுதியதை இங்கு பகிர்ந்திருக்கிறேன் . அவள் என்னோடு உரையாடும் போது சொல்லும் செய்திகள் இன்னும் கொடுமையானவை . சாதியம் எங்கும் ஏதோ ஓர் வடிவத்தில் மென்மையாகவோ வண்மையாகவோ …. நம்முன் உள்ள சவால் .

 

சுபொஅ.

08 /05 /26.