இன்ஸ்டாகிராம் லைப்…

Posted by அகத்தீ Labels:

 


இன்ஸ்டாகிராம் லைப்…

 

ரீல்ஸ்களில் காதலித்து

ரீல்ஸ்களில் குடும்பம் நடத்தி

ரீல்ஸ்களில் பெரியாளாகி

ரீல்ஸ்களில் அரசியல் பயின்று

ரீல்ஸ்களில் மாற்றம் கண்டு

ரீல்ஸ்களில் புலம்பித் தீர்த்து

ரீல்ஸ்களில் முடிந்து போகும் நண்பா ! நண்பி !

ரியல் எதுவென கொஞ்சமேனும் தேடு !

 

சுபொஅ.

27 /04 /26 .


என்ன கணக்கு ?

Posted by அகத்தீ Labels:

 


என்ன கணக்கு ?

 

பெரும்பாலோர் வீட்டில்

பூஜை அறை இருக்கிறதோ இல்லையோ

பூஜை ஷெல்ப் ஒன்று நிச்சயம் இருக்கும் !

அதில் யார் யார் இருக்கிறார்கள்

கொஞ்சம் பட்டியலிடுங்கள் !

ஒற்றைக் கடவுள் இருக்கும் வீடு

அநேகமாய் இருக்காது

ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு கூட்டணி

கூட்டணிதான் நல்லது என்கிற கணக்கா ? இல்லை

யாராவது காப்பாற்ற மாட்டாரா என்கிற கணக்கா ?

ஒன்று தெரியுமா ? இந்தக் கூட்டணியில்

அவ்வப்போது சேர்த்தலும் கழித்தலும்கூட நடக்கும் !

கோவில் தர்க்கா மசூதி சர்ச் எங்கும்

நேர்ச்சைக் கடன் தீர்க்க பயணமும் உண்டு

சாமிகளுக்கும் கோயிலுக்கும் சாதி வீம்பும் உண்டு

இந்த வட்டம் நம்பிக்கை சார்ந்ததா ?

வெறும் சடங்கு சார்ந்ததா  ?

தெரியாமல்தான் தெய்வங்களும்

செயலற்று பேச்சு முச்சற்றுக் கிடக்கின்றன ….

 

சுபொஅ.

25 /04 /26 .

 

சுபொஅ.

 

 


கையில் புத்தகத்தோடு தேர்தலில் வாக்களிப்போம் …

Posted by அகத்தீ Labels:

 



கையில் புத்தகத்தோடு தேர்தலில் வாக்களிப்போம் …

ஏப்ரல் 23 : உலகப் புத்தக நாள் சிந்தனை

சு.பொ.அகத்தியலிங்கம் .

2026 ஏப்ரல் 23 , உலகப் புத்தக நாளும் தமிழ்நாட்டில் சட்ட மன்றத் தேர்தல் நாளும் ஒன்றாக அமைந்துவிட்டது . இரண்டுக்கும் தேவை விழிப்புணர்வு . புத்தக வாசிப்பு உங்களை மனிதனாக்கும் . உங்களின் நெஞ்சில் பொங்கும் மனிதம் தேர்தலில் எதிரொலிக்கும் . ஆகவே கையில் புத்தகத்தோடு தேர்தலில் வாக்களிப்போம் . பாசிசத்தை வீழ்த்தும் பேராயுதம் புத்தகங்கள்தாமே !
[ புத்தகத்தை உள்ளே எடுத்துச் செல்ல அனுமதிக்காவிட்டாலும் ; வாக்குச் சாவடி வாசல் வரை கையில் வைத்திருக்கத் தடை இல்லை . ]

இன்றைய உலகில் புத்தக நாள் என்பது ஒன்றல்ல . இரண்டு . ஆம் . ஒன்று ,ஏப்ரல் 23 உலகப் புத்தக நாள் . இரண்டு ,பிப்ரவரி 21 சிவப்புப் புத்தக நாள் . எதில் எதைக் கொண்டாடுவது ? முற்போக்காளர்கள் இரண்டையும் கொண்டாடுவார்கள் . வலதுசாரிகளுக்கு இரண்டும் கசப்புத்தான் , ஆனாலும் ஏப்ரல் 23 ஐத் தவிர்க்க முடியாமல் சடங்காகக் கடைப் பிடிப்பார்கள் . இரண்டின் வரலாற்றையும் கொஞ்சம் புரட்டலாமே !

உலகெங்கும் பாசிசமும் சர்வாதிகாரமும் நூலகங்களைத் தீயிட்டுப் பொசுக்கியதை வரலாறு நெடுகிலும் பார்த்தோம் . ஹிட்லரின் பாசிச நெருக்கடியிலும் , இலங்கையில் இனவெறி ஆட்சியிலும் இன்னும் பல நிகழ்வுகளிலும் இக்கொடுமை நடந்தேறியது .

சதாம் உசேனை அழிக்க ஈராக்கில் அமெரிக்கப் படைகள் நுழைந்த போது துறைமுக நகரமான பாஸ்கரா நகரின் மிகப் பெரிய நூலகத்தின் புத்தகங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இடம் மாற்றி பாதுகாத்த பெண் நூலகர் ஆலியாவும் அவர் தம்பி அனீஸ் முஹமதுவும் வரலாற்றில் தனி இடம் பிடித்துவிட்டனர் . ஜெர்மனியிலும் இத்தாலியிலும் இது போன்ற வரலாற்று நிகழ்வுகள் உண்டு . அது இருக்கட்டும் உலகப் புத்தக நாள் எப்போது தொடங்கியது ?

ஐக்கியநாட்டின் கலை பண்பாட்டு பிரிவான யுனெஸ்கோ முடிவின் படி உலக “புத்தக நாளும் படைப்புரிமை நாளுமாக” [ book day and copy right day ] 1995 ஏப்ரல் 23 முதல் கொண்டாடப்படுகிறது. இப்போதும் அதுதான் .ஆயினும் இரண்டாவது விஷயம் பதிப்பாளர்களுக்குப் பிடிக்காது எனவே வெறும் புத்தக நாளானது .

[ தமிழ்ப் பதிப்பகங்கள் பெரும்பாலானவை ராயல்ட்டி நியாயமான எழுத்துக்கூலி தருவதே கிடையாது .இதுவும் வரலாறே . என் அனுபவமும் அப்படியே ]

வரலாற்றில் பின்னோக்கிப் போனால் 1922 இல் புத்தக நாள் ஸ்பெயினில் பார்சிலோனா நகரில் கொண்டாடப்பட்ட தகவல் கிடைக்கிறது . அதைத் தொடர்ந்து 1926 இல் தேதி மாற்றிக் கொண்டாடப்பட்டது . 1930 இல் ஸ்பெயினில் கத்தலான் [ catalan ] மொழிப் பாதுக்காப்பு நாளாகவும் புத்தக நாளாகவும் கொண்டாடப்பட்டது . Day of books and roses புத்தகம் மற்றும் ரோஜாக்களின் நாளாக ஒரு பாதிரியார் முன்னெடுப்பில் இது நடந்தது . ஆண்களுக்கு பெண்கள் புத்தகங்களையும் பெண்களுக்கு ஆண்கள் ரோஜாக்களையும் பரிமாறிய நாளானது . நாளடைவில் இரு பாலரும் புத்தகங்களைப் பரிமாறத் தொடங்கினார்கள் .இந்நாட்களுக்கு எல்லாம் அவ்வப்போது வெவ்வேறு நினைவுகளும் கதைகளும் வலம் வந்துகொண்டே இருக்கின்றன .

ஆங்கில நாடகாசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் [William Shakespeare] , பெரு நாட்டில் பிறந்து ஸ்பெயினில் வாழ்ந்த எழுத்தாளர் இன்கா கார்சிலசோ டே லா வேகா [ Inca Garcilaso de la Vega ] ஆகியோரின் நினைவுநாள் ஏப்ரல் 23 என்றும் அதுவே உலக புத்தகநாள் என்றும் சொல்லும் வழக்கம் 1995க்கு பிறகு உறுதியானது . இருவர் நினைவுநாட்கள் தேதிகளில் சில மாறுபாடு உண்டென்று சொல்வாரும் உண்டு ; ஆயினும் இருவர் நினைவைப் போற்றும் நாளே உலக புத்தகநாளானது .

இப்புத்தக நாள் தமிழ்நாட்டில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகக் கொண்டாடப்பட்டு வருகிறது . மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு அரசு முன்கை எடுப்பில் தன்னார்வலர்களும் இணைந்து மாவட்டம் தோறும் புத்தகத்திருவிழா நடத்துவது போற்றத்தக்க முன்னேற்றம் . தேர்தலுக்குப் பின்னும் அது தொடர அதற்கொப்ப வாக்களிப்போம் .

‘பிப்ரவரி 21 சிவப்பு புத்தக நாள்’ என்பது உலக புத்தக நாளு [ ஏப் 23 ] க்கு போட்டி நாளல்ல ; மேலும் ஓர் நாள் . உலகை மாற்றும் ஓர் சித்தாந்தத்தின் வெளிச்சத்தில் உதயமான நாள் .

1848 பிரவரி 21 ஆம் நாள் என்பது காரல் மார்க்சும் பிரடெரிக் எங்கெல்சும் இணைந்து எழுதிய மாபெரும் ஆவணம் . உலகைக் குலுக்கிய இன்னும் குலுக்கிக் கொண்டிருக்கிற சிந்தனைக் களஞ்சியம் ; உலகைப் பற்றி வியாக்கியானம் செய்கிற சித்தாந்தமாக இல்லாமல் மாற்றி அமைக்கும் அறிவுச்சுடராய் இன்றும் பிரகாசிக்கும் ‘கம்யூனிஸ்ட் அறிக்கை” வெளிவந்த நாள் . இப்புத்தகத்தின் 150 வது ஆண்டு கொண்டாட்டத்தின் போது 1998 இல் இவ்வறிக்கையை மீண்டும் பெருமளவு கொண்டு போக வேண்டுமென்கிற தேவை உலகெங்கும் முன்னுக்கு வந்தது . இடதுசாரிகளும் கம்யூனிஸ்டுகளும் ஆங்காங்கு அவர்களுக்கான வழியில் முயன்றனர் . 2020 பிப் 21 இல் சிவப்புப் புத்தக தினமாகப் பிறந்தது .

1920 பிப்ரவரி 21 ஆம் நாள் தென்கொரியா முதல் வெனிசுலா வரை சுமார் முப்பதாயிரம் பேர் ஒன்றாக ’கம்யூனிஸ்ட் அறிக்கை’யை வாசித்த நாள் . அன்றுதான் சிவப்பு புத்தகதினம் தொடங்கியது . உலகெங்கிலும் உள்ள கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரி பதிப்பகங்களும் , கம்யூனிஸ்ட் கட்சிகளும் பல்வேறு வர்க்க வெகுஜன அமைப்புகளும் கூட்டாக முன்னெடுக்கும் நாளானது . தமிழ்நாடு ,கேரளா ,ஆந்திரா ,தெலுங்கானா என்கிற நான்கு மாநிலங்கள் இந்நாளின் துவக்கத்திலேயே வலுவாக தன்னை இணைத்துக் கொண்டு ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’யை வாசித்தது சிறப்புக்குரியது. இம்முயற்சி சித்தாந்தப் போராட்டத்தின் ஓர் பகுதி எனில் மிகையல்ல.

எந்தப் புத்தக நாளாயினும் நமக்கு உவப்பே . புத்தகம் என்பது புதிய புதிய சாளரங்களைத் திறக்கும் . புதியபுதிய சேதிகளைச் சொல்லும் . புதிய புதிய பண்பாட்டோடு கைகுலுக்க வைக்கும் .விசாலப் பார்வையால் மனித குலத்தை அரவணைக்க வழிகோலும். புத்தகம் வாசிக்காத எந்த ஒரு நாளாயினும் அது வீணான நாளென கணக்கில் பதிக !

வாசிக்க நேரம் எங்கே இருக்கிறது ? எதை வாசிப்பது ? எப்படி வாசிப்பது ? இக்கேள்விகளுக்கான விடையை , ‘ ஏன் வாசிக்க வேண்டும்?’ என்ற கேள்விக்கான விடையோடு தொடங்க வேண்டும் . ‘ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதான் வளர்ச்சி’ என்றார் பட்டுக்கோட்டை . அறிவு நாளும் , வளர புதியன அறிய ,உலகத்தோடு ஒட்ட ஒழுக ;படித்துக் கொண்டே இருக்க வேண்டும் ; படித்துக் கொண்டே இறக்க வேண்டும்.

இந்த முடிவுக்கு வந்துவிட்டால் நேரத்தை கண்டடைவது பிரச்சனையே அல்ல . வீடு ,அலுவலம் ,பயணம் ,போர்க்களம் ,காத்திருக்கும் நேரம் எங்கெங்கும் கொஞ்சம் அவகாசம் கிடைத்தாலும் புரட்ட புத்தகத்தை எப்போதும் உங்களுடன் சுமந்து திரியுங்கள் !

முதலில் படி ! கிடைத்ததை எல்லாம் படி … இந்த வாசற்படி உன்னை நல்லவை நோக்கி நகர்த்தும் .உன் வாசிப்பின் வழிவாசல் துலங்கும் . நீயே தேடித்தேடி படிப்பாய் . வாசித்துப் பழகிவிட்டால் வாசிக்காமல் இருக்க முடியாது உன்னால் . ‘வாசிப்பின் போதை’ ஆரோக்கியமானதே !!

புத்தக நாள் எனில் ,புத்தகங்களின் பெருமையைப் பேசிப்பேசி ஓய்வதற்கான நாளல்ல ; மாறாகப் புத்தகங்களை ஆயுதங்களாக்க வேண்டிய நாள் .இன்றைய சமூகச் சூழலில் நாட்டைப் பீடித்த பீடைகளை விரட்ட புத்தகமே பேராயுதம் என்பதை நெஞ்சில் ஏந்துக !

எந்த ஆயுதங்கள் , யார் கையில் ,யாரை நோக்கி என்பது மிகவும் அடிப்படையான கேள்வி .

§ உங்கள் புத்தகம் மதம் பிடிக்கத் தூண்டுகிறதா ? மனிதனாக்க உந்துகிறதா ?
§ உங்கள் புத்தகம் சாதி அழுக்கை சுமக்கிறதா ? சமத்துவத்தை பேசுகிறதா ?
§ உங்கள் புத்தகம் சுயநலக் கூட்டுக்குள் அடைக்கிறதா ? பிறருக்காக கண்ணீரும் செந்நீரும் சிந்தச் சொல்கிறதா ?
§ உங்கள் புத்தகம் யார் சொன்னாலும் எதைச் சொன்னாலும் அப்படியே நம்பச் சொல்கிறதா ? கேள்வி கேட்கத் தூண்டுகிறதா ?
§ உங்கள் புத்தகம் தாலாட்டுப் பாடித் தூங்க வைக்கிறதா ? பூபாளம் இசைத்துப் புரட்டிப் போடுகிறதா ?
§ உங்கள் புத்தகம் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டச் செய்கிறதா ? விசாலப்பார்வையால் மானுடசமுத்திரம் நாமென கூவச் சொல்கிறதா ?
§ உங்கள் மன நிம்மதிக்காகப் படிக்கிறீர்களா ? மனதைக் குடையும் கேள்விகளுக்கு விடைதேடிப் படிக்கிறீர்களா ?
§ உங்கள் கண்ணெதிரே நடக்கும் அநீதிகளை நியாப்படுத்தப் படிக்கிறீர்களா?அநீதிகளுக்கு எதிராய் வெகுண்டெழப் படிக்கிறீர்களா ?

நீங்கள் எவ்வளவு பக்கம் படித்தீர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ ? அதைவிட கற்றபின் அதற்கொப்ப நின்றீர்களா என்பதும் மிகமிக முக்கியம்.

நானும் எல்லோரையும் போல முதலில் ரசிகனாக – மேலோட்டமான வாசகனாகவே இருந்தேன் .என் தொடர் வாசிப்பு என்னை வேறு தளத்துக்கு கொண்டு சென்றது .நான் களப் போராளி ஆனேன் .அதன் பின் என் வாசிப்பும் ,பேச்சும் ,எழுத்தும் எப்போதும் என் களப் போராட்டத்தின் இன்னொரு பக்கமாகவே மாறிப்போனது .இதனாலேயே , என்னை எழுத்தாளனாகவே கருதாத எழுத்துலகப் பிரம்மாக்கள் இங்கு உண்டு . எனக்கு கவலை இல்லை .நான் ஓர் கலகக்காரன்தான்.அதுதான் என் பெருமை .அதுதான் என் அடையாளம்!!

நேற்றும் வாசித்தேன்
இன்றும் வாசிக்கிறேன்
சாகும் வரை வாசித்துக் கொண்டே இருப்பேன் .
நீங்கள்….!!!

2026 ,ஏப்ரல் : 23 உலக புத்தக நாள் வாழ்த்துகள் .
கையில் புத்தகத்தோடு தேர்தலில் வாக்களிப்போம் …

ஓர் அனுபவம் – ஓர் வாசிப்பு …..

Posted by அகத்தீ Labels:

 





 

ஓர் அனுபவம் – ஓர் வாசிப்பு …..

 

முதலில் அனுபவம் …

 

தமிழ்நாட்டைச் சார்ந்த ஓய்வு பெற்ற ஓர் போக்குவரத்துத் தொழிலாளியோடு ஒரு நாள் பெங்களூரில் நடை பயிற்சி போய்க் கொண்டிருந்தேன் . வழியில் அம்பேத்கர் படம் தாங்கிய ஒரு அறிவிப்புப் பலகையைப் பார்த்ததும் , “  என்ன சாதிச்சிட்டதுக்காக இப்ப தெருவெல்லாம் நட்டு வைச்சிருக்காங்க …” என ஆரம்பித்து வசை பாடினார் . எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது . நான் கொடுத்த விளக்கங்கள் எதையும் அவர் ஏற்கத் தயார் இல்லை . ஆதிக்க சாதி மனோநிலையில் அவர் உறைந்து போயிருந்தார் .

 

அடுத்து வாசிப்பு ….

 

 எட்டாம் வகுப்பு ‘அ’ பிரிவில் ஓர் தமிழாசிரியர்.” ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய சிறுகதை . அழகிய பெரியவன் எழுதிய கதை . அண்மையில் வாசித்தேன் . வகுப்பில் அம்பேத்கர் பாடத்தையே வாசிக்க விரும்பாமல் தட்டிக் கழித்த ஒரு தமிழாசிரியர் கதை அது . ஆனால் மாணவர்களின் அடுக்கடுக்கான கேள்விகளால் திணறுகிறார் . தெளிவு பெறுகிறார் .

 

“ அம்பேத்கருடைய பாடத்தை நான் இப்ப நடத்தப் போறேன்! இந்தப் புத்தகத்தை எனக்குப் படிக்கக் கொடுத்தவன் என்னுடைய நண்பன் சிவராஜ் . ஒரு முறை இதே மாதிரி வகுப்பறையில எனக்குப் பிறந்த நாள் கொண்டாடிய போது காட்டுப் பழங்களைக் கொடுத்தான் …. பதிலுக்கு நான் அவனுக்கு என்ன கொடுத்தேன்னு நினைவில்ல ! இன்னும் கொஞ்ச தூரம்தான் நகர்ந்து நகர்ந்து வந்துவிட்டோம் ! இன்னும் கொஞ்ச தூரம் நகர்ந்து நகர்ந்து போவோம்! ஒண்ணாவே போவோம் ! இன்னும் கொஞ்ச தூரம்தான்.”

 

இக்கதை நாட்டு நடப்பை நமக்குச் சொல்லித் தந்துவிட்டது . ஆம் ‘அ’ கூட அறியாமல் இன்னும் வெறுப்புப் பள்ளத்தில் வீழ்ந்து கிடப்போரிடம் அம்பேத்கரைக் கொண்டு சேர்ப்போம் .

 

16 சிறுகதைகள் . அனைத்தும் தலித் சிறுகதைகள் . புதியவர்கள் எழுதிய 8 கதைகள் . அனுபவம் பெற்ற எழுத்தாளர்கள் எழுதிய எட்டு கதைகள் . புதுசோ பழசோ வலிகள்தான் இக்கதைகளில் நிரம்பி வழிகிறது. தலித் வாழ்க்கை அதுதானே . வாசிக்க வேண்டிய நூல் .

 

இன்று ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த நாள் .

 

நவீன தலித் சிறுகதைகள் , தொகுப்பு : ப்ரதிபா ஜெயச்சந்திரன் , பாரதி புத்தகாலயம் , www.thamizhbooks.com ,பக்கங்கள் :176 , விலை : ரூ.180 /

 

சுபொஅ.

14 /06 /26 .





பரபரப்புனூடே...

Posted by அகத்தீ Labels:

 



நேற்றின் பரபரப்பை

இன்றின் பரபரப்பு காணாமல் செய்துவிட்டது

நாளை பரபரப்பிற்காக

பிரேக்கிங் நியூஸ் தேடி

ஓடிக்கொண்டே இருக்கிறது ஊடகங்கள் !

ஒவ்வொரு நாளும்

இந்த பரபரப்பினூடே

தொலைந்த வாழ்க்கையைத்

தேடிக்கொண்டே இருக்கிறான்

அப்பாவி மனுஷன் …

 

சுபொஅ.

24 /03 /26.


மலர்களின் கொண்டாட்டம்..

Posted by அகத்தீ Labels:

 





மலர்களின் கொண்டாட்டம்..

 

 [ சென்ற ஆண்டு செர்ரி ப்ளாசம் [ cherry  blossom ] கொண்டாட்டத்தின் போது அமெரிக்காவில் பேரன் பேத்தியோடு இருந்தேன் . இந்த ஆண்டு அதனை நினைவூட்டி கான்வாஸில் Acrylic paint cherry blossom வரைந்து புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பேரன் முகில் . பழைய நினைவும் புதிய புகைப்படமுமாய் இங்கு …]

 

புகுந்த வீட்டில் கொண்டாடப்படும் மருமகள்களைப் பார்த்திருக்கிறீர்களா ?

 

ஆண்டுதோறும் அலைஅலையாய் திரண்டு ஆர்ப்பரிக்கும் அதிசயத்தை தரிசித்து இருக்கிறீர்களா ?

 

மருமகள்கள் கூட்டம் ஒருப்போல் புன்னகைத்து மெல்லிய ஊதா கலந்த வெள்ளுடையோ மெல்லிய இளம் சிவப்பு கலந்த வெள்ளுடையோ பூண்டு ஒயிலாக ஆடுவதை கண்டு ரசிக்காத கண்கள் இருந்தென்னவோ !

 

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன்னில் ஆண்டுதோறும் வசந்த கால துவக்கத்தில் ( மார்ச் இறுதி முதல் இரண்டு வாரங்கள் ) கொண்டாடப்படும் " மலர்களின் புன்னகைத் திருவிழா" -  "செர்ரி ப்ளாசம் (cherry blossom ) திருவிழாவில்" தான் இந்த அற்புதம்

 

செர்ரி மலர் கூட்டம் அமெரிக்க மண்ணில் இயல்பாய் பிறந்ததல்ல.

 

வந்தேறியதுதான் ; குடியேற்ற அமெரிக்க மண்ணைப் போல..

 

பூர்வகுடிகளை அழித்து உரிமைகொண்ட இரத்த கறை படிந்த பாரம்பரியம் இந்த மண்ணுக்குத்தான் செர்ரி மலருக்கல்ல..

 

1912 ல்  ஆம் முதல் உலகப்போருக்கு இரண்டு ஆண்டுகள் முன்பு நட்பு கரத்தோடு ஜப்பானில் இருந்து வந்ததே இம்மலர் கூட்டம் . இம்மலரின் பூரவீகம் சீனா எனபது அதன் சொந்தக்கதை.இந்த மலர் காகித மலர் போல் மெனமையாக இருக்கும். மல்லிகை முல்லை போல் வாசம் கிடையாது.

 

ஜப்பான தலைநகர் டோக்கியோ மேயர் ஓகியோ முவாயிரம் செரி மலர் செடிக் கனறுகளோடும் சர்வதேச சகோதரத்துவச் செய்தியோடும் இந்த மண்ணுக்கு வந்தார்.

 

அன்று வேர்பிடித்த மலர்க்கூட்டம் .இன்றும் கொண்டாடப்படுகிறதே வரலாற்று அற்புதம். 1935 ல் தான் அரசின் அதிகாரபூர்வ கொண்டாட்டமானது.

 

 

 

இடையில் இரண்டாம் உலகப்போரின் போது கொண்டாட்டம் இல்லாது போனது.

 

மதப்பூச்சோ சடங்குகளின் தொகுப்போ இல்லாத ஜனநாயகத் திருவிழா. எல்லோருக்குமாக புன்னகையை வாரி இறைக்கும் திருவிழா ! ஊட்டி மலர் காட்சியோடு ஒப்பிடலாம். ஆனால் அங்கு போவோரும் கோவில்கள் தேடுவது நம் ஊர். ஸ்பெஷல்.

 

ஜோடிகளாய் தம்பதிகளாய் குடும்பமாய் நட்பாய் இளையோர் நடுத்தரவயதினர் முதியோர் குடும்ப அங்கமாகிவிட்ட நாய்கள் மகிழ்வோடு கூடும் நாளே செர்ரி ப்ளாசம்.

 

ஆடிப்பாடி ,காற்றாடி விட்டு ,பாய் விரித்தமர்ந்து ,கொண்டுவந்த உணவைக் கூடி உண்டு இன்பச் சிற்றுலா ( PICNIC)வென மகிழ்வே முந்தி நிற்கும்.

 

ஓவியம் வரைவோர் ஓர்புறம். புகைப்படம் எடுக்காதோர் விழாவுக்கு வராதாரே என்பது எழுதா இலக்கணம்.

 

சடங்குகளில் சம்பிரதாயங்களில்  கொண்டாட்டங்களை தொலைத்த இந்தியன் தமிழன் மலர்களின் புன்னகைக் கொண்டாட்டத்தில் மனதைப் பறிகொடுத்தேன்.

 

30/03/25 எங்கள் வாழ்வில் இனிய நினைவலைகள்...

 

சுபொஅ.

31/03/25

வர்ஜீனியா.

 

 

 


 


ஞான பீட விருதும் விவாதங்களும் …

Posted by அகத்தீ Labels:

 



ஞான பீட விருதும் விவாதங்களும் …

 

விருதுகள் குறித்த விமர்சனம் எல்லா காலகட்டத்திலும் உண்டு . தாகூருக்கு நோபல் பரிசு கொடுத்த போது பாரதியார் வருந்தியதாகச் செய்தி உண்டு .

 

சமாதானத்துக்கான நோபல் பரிசு  வெனிசுலாவைச் சார்ந்த  மரியா கொரீனா மஹாடோவுக்கு இவ்வாண்டு வழங்கப்பட்ட போது உலகே காறித்துப்பியது ; அவர் அப்பரிசை டிரம்புக்கு அர்ப்பணித்தபோது அது கேவலப்பட்டுப் போனது .

 

பொதுவாய் அண்மைக்காலங்களில் விருதுகள் வழங்கப்படுவதில்லை ; வாங்கப்படுகின்றன என்பது புதிய செய்தி அல்ல .

 

விருதா எனில் குமரி மாவட்ட வழக்கில் வீணான என்ற பொருள் . நிற்க !

 

வைரமுத்துக்கு ஞான பீடம் கொடுத்ததும் கூச்சல் அதிகம் கேட்கிறது .

 

ஜெயமோகனின் வன்மம் கொப்பளிக்கும் எதிர்வினை மட்டுமல்ல பல்வேறு தொணிகளில் வெளிப்படும் எதிர்குரல்களும் ஆச்சரியப்படுத்தவில்லை . ஆதரவும் எதிர்ப்பும் எப்போதும் இருக்கத்தானே செய்யும் .

 

வைரமுத்துவுக்கு எதிராக இரண்டு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன

 

1] அவரின் இலக்கியத் தரம்

2] அவரின் தனி ஒழுக்கம்

 

பொதுவாக ஒன்றைச் சொல்லிவிடுகிறேன் . இவ்விருது அரசு தரும் விருதல்ல ; தனியார் முதலாளி தரும் விருதே . எல்லா விருதுக்குப் பின்னாலும் ஏதேனும் ஒரு கதை இருக்கும் . ஒரு கை இருக்கும் .

 

எம் தமிழ்மொழிக்கு இவ்விருது கிடைத்தால் மகிழாமல் இருக்க முடியுமா ? இது தமிழுக்கே அவமானம் என ஜெயமோகன் சொல்வதெல்லாம் எரிச்சலின் உச்சம் . இந்த ஜெயமோகனுக்கே கொடுத்திருக்கலாம் என சேலத்திலிருந்து ஒரு சிபாரிசும் பார்த்தேன் . எதிர் எதிர் முகாம்களின் ஒற்றுமையை அதில் பார்த்தேன் .

 

1 ] வைரமுத்து குறித்து அருணன் ஒரு நூலே எழுதி இருக்கிறார் .அதில் நான் உடன்படும் இடமும் உண்டு ; முரண்படும் இடமும் உண்டு . இலக்கிய ரசனையில் எல்லோரோடும் எல்லாவற்றோடும் எல்லோரும் உடன்பட வேண்டும் என்கிற அவசியம் இல்லைதான்

வைரமுத்துவின் ‘ தண்ணீர் தேசம்’ நாவலை கடுமையாக விமர்சித்தேன் . அதே வேளை ‘ கள்ளிக்காட்டு இதிகாசம்’ , ‘ கருவாச்சி காவியம் ‘ இரண்டையும் பாராட்டினேன் . ‘ மூன்றாம் உலக யுத்தம்’ அதன் கரு நன்று ; ஆயின் அதன் செய் நேர்த்தி கொஞ்சம் பலவீனம் சுட்டினேன் .

 

அவரது கவிதைகளில் மெச்சத்தகுந்தவையும் உண்டு ; அல்லாதவையும் உண்டு . அவர் சினிமாப் பாடலும் அப்படித்தான் உச்சம் தொட்டதும் உண்டு . பள்ளத்தில் குப்புற விழுந்ததும் உண்டு .

 

அவரின் ’ தமிழாற்றுப்படை’ [ இலக்கிய உரைகள் ] ,’ வள்ளுவர் மறை ; வைரமுத்து உரை’ உள்ளிட்ட நூல்களை வாசித்தேன் .தீர்ப்பு சொல்ல நான் தமிழாய்ந்த அறிஞன் அல்ல .

 

யாராயினும் எழுதுகிற எல்லாம் வெற்றிகரமானவை ; தரமானவை எனச் சொல்லிவிட முடியாது . எதிர்பார்க்கவும் முடியாது .

 

வைரமுத்துவின் பங்களிப்பில் பாராட்டத்தக்கவையும் உண்டு . குப்பையில் வீச வேண்டியவையும் உண்டு .

 

சமுத்திரத்துக்கு சாகித்திய அகடாமி கொடுத்த போது , இங்கும் ரிசர்வேஷனா என கொந்தளித்த படைப்புலகப் பிரம்மாக்கள் உண்டு ; அப்போது அவர் சொன்னார் , “ நீங்கள் எல்லாவற்றையும் பூணூலால் அளக்கிறீர்கள் ; நான் பனைநாரால் அளக்கிறேன்.” கொஞ்சம் காரநெடி வீசும் விமர்சனம்தான் .ஆயினும் அதன் அடிநாதம் ஓர் சமூகக் கொந்தளிப்பு என்பதைப் புரிய வேண்டும் .

 

இப்போது இதை நினைவூட்டும் தேவை வந்ததால் சொல்கிறேன் .மேலாண்மையை , சின்னப்பபாரதியை ,சமுத்திரத்தை தங்கள் தொகுப்புப் பட்டியலில் சேர்க்காத தமுஎகச தோழர்களும் உண்டு . இலக்கிய அளவு கோல் ஆளுக்கு ஆள் காலத்துக்கு காலம் மாறுபடும்.சு.வெங்கடேசனின் காவல் கோட்டத்துக்கு விருது வழங்கிய போது கொந்தளித்த எழுத்தாளர்கள் உண்டே !மேலாண்மைக்கு விருது கொடுத்த போது ஜீரணிக்க முடியாமல் திணறியவர்களைப் பார்த்திருக்கிறேன் .எங்கும் அகநிலைப் பார்வை உரத்து ஒலிக்கிறது என்ன செய்ய ?

 

தமிழுக்கு கிடைத்தது என்று மகிழவா ? ஏண்டா தமிழுக்குக் கொடுத்தாய் என அழவா ? தமிழ் இலக்கிய உலகப் போக்கு கவலையாகத்தான் இருக்கிறது.

 

2] தனிநபர் ஒழுக்கம் என கருணாநிதியை ,வைரமுத்துவை சதா துவைத்து எடுக்கும் மேட்டிமை மனிதர்கள் எம்ஜிஆர் ,ஜெயலலிதா ,வாஜ்பாய் என நீளும் பட்டியல் குறித்து கனத்த மவுனம் காப்பார் . ஜெயகாந்தனும் பாரதியும் கஞ்சா புகையும் ஊரறிந்த செய்தி . கோப்பையில் குடியிருந்தவர் என கண்ணதாசனை விமர்சிக்கவில்லையா ? எழுத்தாளர்கள் ,கலைஞர்கள் அகவாழ்வில் சறுக்கல்களும் பிழைகளும் உண்டு .வெளிச்சத்திற்கு வந்தவை கொஞ்சம் . வராதவை மலையளவு . எம் ஆர் ராதா , என் எஸ் கே இருவரும் சிறை மீண்டவரே . அவர்களின் கலைப் பங்களிப்பு அதனால் குறைத்துப் பார்க்கப்படுவதில்லை .சின்மயி சொன்ன புகார் மீது வழக்கோ விசாரணையோ நடத்தி தண்டனை வழங்குவதில் யாருக்கும் ஆட்சேபம் இருக்கவே முடியாது .சின்மயி புகார் சொன்ன அனைவர் மீதும் [ ஆம் . பிராமணர்கள் சங்கத் தலைவர் உட்பட] விசாரிக்க முதலில் முயற்சி எடுங்கள் . அதை விட்டுவிட்டு எப்போதும் அதையே பேசிக்கொண்டே இருப்பது தனிநபர் வெறுப்பு என்றே கொள்ள வேண்டும் .

 

குறை சொல்கிறவர்களின் இரண்டு வாதமும் அப்படியே ஏற்கத்தக்கதல்ல . அதே நேரம் எல்லா விருதுகளும் வாங்கப்படுவையே என்பதிலும் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை .

 

பொதுவாய் எல்லா விருதுகளும் விருதாப் போனவர்களுக்கே ! இதுதான் இன்றைய பொதுவிதி!

 எம் தமிழுக்கு ஞானபீடம் கிடைத்ததில்  மகிழ்ச்சி . வைரமுத்துவைப் பாராட்டுகிறோம். அவ்வளவுதான்.

சுபொஅ.

16 /03 /26 .