எத்தனை எத்தனை கட்சிகள் – 8

Posted by அகத்தீ Labels:

 



எத்தனை எத்தனை கட்சிகள் – 8

 

சலிப்பூட்டும் கட்சிப் பிளவுகளும் இணைப்புகளும்

 

 

1977 மார்ச் மாதம் பிரதமரான மொரார்ஜி தேசாய் 1979 ஜூலையில் பதவி இழந்தார். உட்கட்சி முரண்பாடே பிரதான காரணம். ஜனதா கட்சியில் சங்கமமான பின்பும் தங்கள் ஆர்.எஸ்.எஸ் உறவை கைவிட ஜனசங்கினர் மறுத்தனர். இந்த இரட்டை உறுப்பினர் பிரச்சனை பூதாகரமானது. இச்சந்தர்ப்பத்தைக் காங்கிரஸ் கட்சி ரசித்தது; மறைமுகமாக ஊக்குவித்தது. 1979 ஜூலையில் சரண்சிங் பிரதமரானார். 1979-ல் பதவி இழந்தார். மீண்டும் பொதுத் தேர்தலை நாடு சந்திக்க நேர்ந்தது.

 

ஜனதாகட்சியிலிருந்து பிரிந்து ஜெயபிரகாஷ் நாராயணன் சமூக ஜனநாயக ஜனதா கட்சி (மதச்சார்பற்றது) Social-Democratic Janata Party (Secular) என்று தனியானார். தேர்தலில் இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார். 1980 ஏப்ரலில் முன்பு ஜனதா கட்சியில் சங்கமமான ஜனசங்கம் தன் முகமூடியை மாற்றி ‘பாரதிய ஜனதா கட்சியாகப் பிறந்தது. கொஞ்சம் அதிகாரத்தில் இருந்ததும் பரவலான அறிமுகமும் ஆர்.எஸ்.எஸ் வேரும் கொண்ட அதிதீவிர பாசிஸ்ட் வலதுசாரி பாஜக கட்சி தன் வெறுப்பு அரசியலை மூலதனமாக்கி வளர திட்டமிட்டது.

 

1984-இல் இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து ராஜீவ் பிரதமரானார். கணினி யுகத்தை நோக்கி இந்தியாவைத் திருப்பியதில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு. ஷாபானு வழக்கில் பல்டி அடித்துத் தலாக்கை ஆதரித்ததும், நெடுங்காலமாக மூடப்பட்டிருந்த பாபர் மசூதி கதவைத் திறந்து ராமருக்கு பூஜை செய்ய வழிவிட்டதும் ராஜீவ் காந்தியின் மிகப்பெரும் அரசியல் பிழையானது. வலதுசாரி பாஜகவுக்கு நுழைய இடம் கொடுத்த பெரும் தவறு. இலங்கைப் பிரச்சனையை அவசரகோலத்தில் கையாண்ட விதம் பின்னர் அவர் சாவுக்குக் காரணமானது.

 

ஜனதா தளமும் கூட்டணி ஆட்சிகளும்

காங்கிரஸ்காரரான வி.பி.சிங் ராஜீவ் அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருந்தார். குறிப்பாக பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தார். போபர்ஸ் ஊழலைச் சுட்டிக்காட்டி 1988-இல் பதவி விலகி ’ஜன் மோர்ச்சாவை உருவாக்கினார். லோக் தளம், ஜன் மோர்ச்சா, ஜெகஜீவன் ராமின் கட்சி எல்லாம் இணைந்து ’ஜனதா தளம் உருவானது .

 

1989-இல் வி.பி.சிங் பிரதமரானார். வி.பி.சிங் தனிப்பெரும்பான்மை பெறாவிடினும் தெலுங்கு தேசம், திமுக, அசாம் கணபரிஷத் கட்சிகள் ஆதரவோடு வி.பி.சிங் தேசிய முன்னணி அமைத்தார். பாஜக ஒரு புறமும் இடது சாரிகள் ஒரு புறமும் வெளியிருந்து ஆதரவு தெரிவித்த விசித்திரம் நிகழ்ந்தது. பதவி ஆசை கொண்ட சந்திரசேகரைத் தூண்டிவிட்டு காங்கிரஸ் கட்சி வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தது. 343 நாளில் பதவி இழந்தார் வி.பி.சிங். சந்திர சேகர் சமாஜ்வாதி ஜனதா கட்சி (ராஷ்டிரிய) யில் செயல்பட்டார். காங்கிரஸ் ஆதரவோடு பிரதமரானார். 223 நாளில் ஆட்சி கவிழ்ந்தது.

 

வி.பி.சிங் ஆட்சியில் நீண்ட நாட்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த மண்டல் கமிஷன் அறிக்கை தூசி தட்டி எடுக்கப்பட்டது. பிற்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த மண்டலுக்கு எதிராக பாஜகவும் சங்பரிவாரும் கட்டற்ற வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர். ராமர் கோயில் பிரச்சனையை முன்வைத்தனர். மந்திருக்கும் மண்டலுக்குமான மோதலானது. இந்தச் சூழலும் உலகெங்கிலும் தாராளமய உலகமய பொருளாதாரச் சூழல் வந்ததும் இந்தியாவில் அது தீவிரமாக அமலாகத் துவங்கியதும் வலதுசாரி அரசியல் அதிகரிக்க காரணியாயின.

 

1991 தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். காங்கிரஸ் பெரும்பான்மை பெறாவிடினும் பி.வி.நரசிம்மராவ் பிரதமரானார். அத்வானி தலைமையில் சங்பரிவார் நடத்திய ரதயாத்திரை, கரசேவையைத் தொடர்ந்து பாபர் மசூதி இடிக்கப்பட்டது இவர் ஆட்சியில்தான். இதில் இவருக்கும் பங்குண்டு என அண்மையில் முன்னாள் காங்கிரஸ் எம்பி மணிசங்கர் ஐயர் கூறினார். பெரும்பான்மை இல்லாவிடினும் தந்திரமாகக் காய்களை நகர்த்திப் பதவியைத் தக்க வைத்துக் கொண்டார் நரசிம்மராவ்.

 

அடுத்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் வாஜ்பாய் 1996-இல் பிரதமரானார். 16 நாட்களில் ஆட்சி கலைந்தது. ஜெயலலிதாவின் டீ பார்ட்டி ஆட்டத்தில் அஇஅதிமுக ஆதரவைத் திரும்பப்பெற ஆட்சி கவிழ்ந்தது. இடதுசாரிகள் திமுக ஆதரவோடு தேவகவுடா பிரதமரானார். 324 நாளில் ஆட்சி கவிழ்ந்தது. இந்தர் குமார் குஜ்ரால் 322 நாள் பிரதமராகத் தொடர்ந்தார்.

 

1998-இல் வாஜ்பாய் பிரதமரானார் திமுக ஆதரவோடு. இவரின் ஐந்தாண்டு ஆட்சியில்தான் முக்கிய துறைகள் அனைத்திலும் நீதித்துறை நிர்வாகத்துறை உட்பட ஆர்.எஸ்.எஸ் ஊடுருவல் கச்சிதமாக நடந்தேறியது; அதன் கொடூர விளைவை 2025-லும் நாம் அனுபவிக்கிறோம். மன்மோகன் சிங் 2004-இல் பிரதமரானார் இதிலும் திமுக இடம் பெற்றது. மன்மோகன் சிங் ஆட்சியை சிபிஎம் வெளியே இருந்து ஆதரித்தது. சிபிஐ அமைச்சரவையில் கொஞ்சகாலம் இடம் பெற்றது. 2014 முதல் நரேந்திர மோடி பிரதமராக உள்ளார். பாஜகவின் தேசிய கூட்டணி ஆட்சியில் உள்ளது. ஆக தொடர்ந்து ஏதாவது ஒரு வகையில் கூட்டணிக் கட்சிகளே ஆட்சியில் உள்ளன. ஆயினும் இப்போது பாஜகவே ஆதிக்கம் செய்கிறது.

 

மாநிலக் கட்சிகளின் பெருக்கம்

ஜனதா தளம் பல்வேறு கட்சிகளாக உடைந்தது. காங்கிரஸிலும் உடைசல்கள் ஏற்பட்டன. இவற்றின் விளைவாக தோன்றிய கட்சிகளின் பட்டியல் நீண்டது. கட்சிகள் உருவான ஆண்டு அடைப்புக் குறிக்குள். முலாயம் சிங் யாதவ் (இப்போது அகிலேஷ் யாதவ் தலைமையிலான) உ.பி-யை மையம் கொண்ட சமாஜ்வாதி கட்சி (1992), லல்லு பிரசாத் தலைமையிலான (இப்போது தேஜஸ்வி யாதவ்) ராஷ்டிரிய ஜனதா தளம் (1996), பசுபதி பாரஸ் தலைமையிலான ராஷ்டிரிய லோக ஜனசக்தி கட்சி (2021) ஆகியன இப்போதும் 2025 நிலவரப்படி இந்தியா கூட்டணியில் தொடர்வன.

 

சரண்சிங்கின் பேரன் சவுத்திரி ஜெயந்த் சிங் தலைமையிலான ராஷ்டிரிய லோக் தளம் (1996), ஹெச்.டி. தேவகவுடா தலைமையிலான ஜனதா தளம் (மதச்சார்பற்றது) (1999), நிதிஷ்குமார் தலைமையிலான ஜனதா தளம் (ஐக்கியம்) (2003), ஜிட்டின் ராம் மாஞ்சி தலைமையிலான ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சா (2015), சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜன் சக்தி கட்சி (ராம் விலாஸ் பாஸ்வான்) (2021), உபேந்திரா குஷ்வா தலைமையிலான ராஷ்டிரிய லோக் மோர்ச்சா (2023) உள்ளிட்ட கட்சிகள் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளன. இது போக ஓம் பிரகாஷ் தலைமையிலான இந்திய தேசிய லோக் தளம் (1996), அஜீத் சிங் சவுதாலா தலைமையிலுள்ள ஜனநாயக் ஜனதா கட்சி (2018) முதலியன எந்தப் பக்கமும் சேராமல் தனித்து நிற்கின்றன.

 

தமிழ்நாட்டில் நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம் என எளிதாகக் கடந்து போகிறோம். நீதிக் கட்சி தொடங்கி 1990 வரையிலான திராவிட இயக்க பிளவுகளை ‘திராவிட இயக்கத்தில் பிளவுகள் என்ற தலைப்பில் 148 பக்க நூலாக பேராசிரியர் கோ.கேசவன் தந்துள்ளார். வாய்ப்புள்ளோர் தேடிவாசிக்க வேண்டிய நூல். சில நினைவில் நிற்கும் பிளவுகள் வருமாறு: எம்ஜிஆர் தலைமையில் 1972-இல் திமுக பிளவைச் சந்தித்தது. ‘அஇஅதிமுக தோன்றியது. தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிராக தன்னை வலுவாக ஊன்றிக்கொண்டது. வைகோவின் மறுமலர்ச்சி திமுக (1994)-இல் திமுகவில் இருந்து பிரிந்து இன்னும் களத்தில் தொடர்கிற கட்சி. டி.ராஜேந்தர் தலைமையிலான தாயக மறுமலர்ச்சிக் கழகம் (1991) மற்றும் லட்சிய திமுக (1996) கொஞ்சகாலம் மினுமினுப்பு காட்டியது. அஇஅதிமுக (ஜெ அணி) & (ஜானகி அணி (1988), நெடுஞ்செழியன் தலைமையில் ’மக்கள் திமுக (1977), எஸ்.டி.சோமசுந்திரம் தலைமையிலான ’நமது கழகம் (1984), பாக்கியராஜ் தலைமையில் மக்கள் முன்னேற்றக் கழகம், நடிகர் ராமராஜனின் தனிக்கட்சி இப்படி அஇஅதிமுக விலும் பல துண்டுகள் பிரிந்ததும் பின்னர் சேர்ந்ததும் வரலாற்றில் காணாமல் போனதும் நடந்தது. இப்போதும் அஇஅதிமுக எடப்பாடி, தினகரன், ஓ.பன்னீர் செல்வம், சசிகலா என தனித்தனியே செயல்படுவதும் வரலாறு. செங்கோட்டையன் பிரிந்து சென்று விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்வது போன்ற செய்திகள் அண்மைக் கூத்து.

 

உழவர் உழைப்பாளர் கட்சி, காமன்வீல் கட்சி இரண்டும் வன்னியர் கட்சி என்றே அரசியல் அறிந்தோர் பகர்வர். 1989-இல் ராமதாஸ் உருவாக்கிய பாட்டாளி மக்கள் கட்சியும் அப்படியே. அது குறிப்பிடத்தக்க கட்சியாக வட மாவட்டங்களில் இருக்கிறது ஆயினும் அதிலும் ராமதாஸ், அன்புமணி மோதல் துவங்கிவிட்டது. பாமகவில் இருந்து பிரிந்த வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி (2012) ஒரு சிறுவட்டத்தில் இயங்குகிறது.

 

ஏ.சி.சன்முகத்தின் புதிய நீதிக் கட்சி (2001), பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி (2010), கொங்கு மக்கள் முன்னேற்றக் கழகம் (2009), கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி (2013). பார்வேர்ட் பிளாக் தமிழ்நாட்டில் முக்குலத்தோர் கட்சியாகிவிட்டது. அதில் தேசிய பார்வேர்டு பிளாக், அய்யண்ணன் அம்பலத்தின் பசும்பொன் பார்வேர்ட் பிளாக், பி.கே.முத்துராமலிங்கதேவரின் பார்வேர்ட் பிளாக், நடிகர் கார்த்திக்கின் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி, நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை (2016) என அதில் பல கூறுகள். இப்படி சாதி, வட்டாரம் இவற்றை சுற்றி பல கட்சிகள்.

 

இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ எனப்படும் சமூக ஜனநாயக கட்சி இன்னும் பல்வேறு முஸ்லீம் குழுக்களும் உண்டு. அதுபோல் கிறுத்துவர்களுக்கும் பெயரளவில் சில கட்சிகள் உண்டு. திருமாவளவனின் தலித் பாந்தர் இயக்கம் 1982-இல் தொடங்கி பின்னர் விடுதலைச் சிறுத்தை கட்சியாக ஒடுக்கப்பட்டோர் முகமாக உள்ளது; இதனை பொது நீரோட்டத்தில் இணைக்க முயல்கிறார். கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் (1999), இரா.அதியமானின் ஆதித் தமிழர் பேரவை (1994), பூவை மூர்த்தியின் புரட்சி பாரதம் கட்சியும் இன்னும் சில குட்டிக் கட்சிகளும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வார்ப்பாகும். பகுஜன் சமாஜ் கட்சி ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்குப் பிறகு இரண்டாகிவிட்டது. தமிழருவி மணியன், மூப்பனார் மகன் வாசன் போன்ற தனிநபர் கட்சிகளும் உண்டு. இன்னும் பல கட்சிகள் தோன்றுவதும் மறைவதுமாக உள்ளன.

 

இது போல் ஆந்திராவில் தெலுங்கு தேசம் உட்பட சில கட்சிகள், மகாராஷ்டிராவிலும் சிவசேனா, பவாரின் தேசிய காங்கிரஸ் இவற்றில் பிரிந்த கட்சிகள், தொழிலாளி விவசாயி கட்சி, அம்பேத்கரிய கட்சிகள், ஒரிசாவிலும், அசாமிலும், வடகிழக்கு மாநிலங்களிலும், உத்திர பிரதேசத்திலும், பீகாரிலும் பல பல கட்சிகள்.

 

இந்தியாவில் இடதுசாரி மையம், கம்யூனிஸ்ட் தளம் என்று சொல்லப்பட்ட மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா மூன்றிலும் கூட பல கட்சிகள் இயங்கின. கேரளாவிலும் பல்வேறு சாதி, மத, வட்டாரக் கட்சிகள் உண்டு. மேற்கு வங்கத்தில் சில இடது சாரிக் கட்சிகளும், வங்க காங்கிரஸ், திரிணாமுல் போன்ற கம்யூனிஸ எதிர்ப்பு கட்சிகளும் உண்டு. விடுதலைக்கு முன்பு இந்துமகா சபையும் முஸ்லீம் லீக்கும் சேர்ந்து மேற்கு வங்க அமைச்சரவையில் பங்கு கொண்ட வரலாறும் உண்டு. திரிபுராவிலும் பழங்குடியினர், வங்காளிகள், திரிணாமூல் என பல கட்சிகள் உண்டு. இடது சாரிகளுக்கும் இதர கட்சிகளுக்கும் இடையே ஆன உறவில் கேரளம் தனிப்பாதை. மேற்கு வங்கத்திலும் திரிபுராவிலும் ’இடது முன்னணி; இப்போது பதவியில் இல்லை. கேரளாவில் ’இடது ஜனநாயக முன்னணி. ஆட்சியில் தொடர்கிறது. இந்த வேறுபாடு முக்கியமானது. இந்த மாநிலங்களைத் தனியே ஆய்வு செய்ய வேண்டும்.

 

சலிப்பூட்டும் விவரங்களை பெயர் பட்டியலை சொல்லுவது கட்டுரையைத் தொய்வடையச் செய்யும். ஆயின் இந்தியா முழுவதும் எப்படி பல கட்சிகள் களத்திற்கு வந்தன; போயின; அணி மாறின என்பது ஒட்டு மொத்த பிரச்சனையைப் புரிய உதவும் அல்லவா? ஏன் இத்தனை கட்சிகள்? விஜயின் ’தமிழக வெற்றிக் கழகம் போல் புதியன முளைக்கின்றன. எல்லாம் எதை நோக்கி? தேவை என்ன? அதைப் பேசி இக்கட்டுரைத் தொடரை நிறைவு செய்வோம்.

 

தொடரும்

 

-சு.பொ.அகத்தியலிங்கம் .


’கைத்துப்போன வாழ்வின் உணர்ச்சி வெடிப்புகள்’

Posted by அகத்தீ Labels:

 



’கைத்துப்போன வாழ்வின் உணர்ச்சி வெடிப்புகள்’

 

சுஜாதா செல்வராஜின்  சிறுகதைத் தொகுப்பான “ கன்னிமார் சாமி” உறுத்தும் உண்மைகளைப் பேசுகிறது . “ அவலச்சுவை” மேலோங்கி இருக்கும் நூலென முன்னுரை சொல்கிறது . ’கைத்துப்போன வாழ்வின் உணர்ச்சி வெடிப்புகள்’ என்றே எனக்குச் சொல்லத் தோன்றுகிறது.

 

 “…… நம்மள மாதிரி பொம்பள ஜென்மங்க மனசுல ,எல்லாற்றையும் போட்டு, மூடி வச்சு நொதிச்சுப் போய்க் கெடக்கு .அதையெல்லாம் திறந்து வெளியே கொட்டுனா ஆம்பளங்க பவுசு எல்லாம் மண்ணாய்ப் போய்டும் …” ‘காந்தாயி’ சிறுகதையின் முத்தாய்ப்பு வரிகள் இவை . இந்நூல் பேசும் செய்தி அதுதான் . ஒவ்வொரு கதையும் பெண் மனதின் வலியைத்தான் சொல்கிறது .

 

ஒவ்வொரு கதையும் காயத்தை தடவிக்காட்டும் கதைகள்தாம் . குளிப்பாட்டும் போது அந்தத் தழும்பின் முன் சத்தியமூர்த்தி ஒரு குற்றவாளியாக நின்றிருந்தார். “ என்னம்மா முதுகுல தழும்பு ” என்று கேட்க மனம் தவித்தது . ஆனால் அவள் சொல்லப்போகிற பதிலை எதிர் கொள்ள அவர் அஞ்சினார் …. ’ தழும்பு ‘ கதையில் வரும் இந்தவரிகள்  அழுத்தமானவை .

 

இந்நூலில் இடம் பெற்றுள்ள 15 கதைகளையும் வாசித்தபின் ஒவ்வொரு ஆணும் குற்ற உணர்சியில் சில நொடிகளாவது மவுனித்தால் , அதுவே இந்நூலின் பெருவெற்றி !

 

எல்லா கதைகளையும் சொல்ல ஆசை . நீங்களே வாசித்து உணர்வதே நன்று .

 

இவர் கவிஞர் என்பதால் இவர் எழுத்தில் அதில் கூர்மை கொள்கிறது .”ஒரு வீட்டின் உயிர்ப்பு ,சமையில் அறையிலிருந்துதான் ஆரம்பிக்கிறது.” என்ற வரியும் அதைத் தொடர்ந்த சித்தரிப்பும் அதை மெய்பிக்கிறது .

 

பெண்ணின் ஆழ்மன உணர்வுகளை படம்பிடிக்கும் ஆயிரம் கதைகள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் . இந்த ஆண் மையச் சமூகம் உணர ஒன்று இரண்டு போதாது .

 

ஒரே ஒரு வேண்டுகோள் . அடித்தட்டு மக்கள் எல்லோரும் குடிகாரர்கள் அல்ல . குடி மட்டுமே குடும்ப வாழ்வின் நிம்மதியைக் கெட்டுக்கும் வில்லன் அல்ல .குடி ஒழுக்கம் சார்ந்த பிரச்சனை அல்ல .அது ஓர் நோய் . அது உடல் நலம் சார்ந்த பிரச்சனை . இந்தப் பண்பாட்டுப் புரிதல் நம் சமூகத்துக்கு வர வேண்டும் .இனி வரும் உங்கள் எழுத்துகளிலும் அது தலை காட்டட்டும் .

வாழ்த்துகள் .

 

 

கன்னிமார் சாமி ,ஆசிரியர் : சுஜாதா செல்வராஜ் ,

வெளியீடு : காலச்சுவடு பப்பிளிகேஷன்ஸ் [பி] லிட்.,

தொடர்புக்கு : 91-4652-278525, publications@kalachuvadu.com  பக்கங்கள் : 143 , விலை : 190 /

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

16 /02 /26 .

 

 


சொர்க்கம் எவ்வளவு தூரம் ?

Posted by அகத்தீ Labels:

 


 

சொர்க்கம் எவ்வளவு தூரம் ?       

அப்பாவி பக்தன் தெரியாமல் கேட்டான் .

 

ஐநூறு ரூபாய் கொடுத்தால்

வெகு தொலைவில் ஒரு கட்டத்தில் …

ஆயிரம் ரூபாய் கொடுத்தால்

அடுத்து ஒரடி முன்கட்டம்…

 

ஐயாயிரம் ரூபாய் கொடுத்தால்

இன்னும் ஒரு கட்டம் முன்னால்…

பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால்

மேலும் ஒரு கட்டம் முன்னாடி…

 

ஐம்பாதயிரம் , ஒரு லட்சம் ரூபாய் எனில்

அதற்கேறப மேலும் மேலும் முன்னால்..

பத்து லட்சமும் அதற்கு மேலும் வழங்கினால்

சொர்க்கம் மடியில் …

 

மதம் – போதை – ஆட்டம் விடிய விடிய

சாமி யார்.. சாமி யார் … சாமி யார் ?

அது தெளியாதவரையில் தான்

சாமியார்கள் இராத்திரிகள் சொர்க்கமாகும் .

 

சொர்க்கம் எவ்வளவு தூரம் ?           

அப்பாவி பக்தன் தெரியாமல் கேட்டான்

 

சுபொஅ.

15 /02 /26 .

 


எத்தனை எத்தனை கட்சிகள் – 7

Posted by அகத்தீ Labels:

 

 

எத்தனை எத்தனை கட்சிகள் – 7

ஜனதா கட்சியாய் ஒன்றிணைந்த தடம்

 

 

முந்தைய அத்தியாயங்களில் கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும் சோஷலிசம் குறித்தும் சில செய்திகளைச் சொல்லி வந்திருக்கிறோம். இங்கே கம்யூனிஸ்ட் கட்சி துவக்கப்படும் முன்பே அதன் சித்தாந்தமும் ஈர்ப்பும் பரவிவிட்டது. இந்தப் பின்னணியில் 1920-இல் முதல் கம்யூனிஸ்ட் கட்சிக் கிளை தாஷ்கண்டில் துவக்கப்பட்டது. இது சிபிஎம் வரலாற்றுப் புரிதல். சிபிஐ இதனை ஏற்கவில்லை; 1925-இல் கான்பூரில் உருவானதையே தொடக்கமாகக் கொள்கின்றனர்.

 

1920 அக்டோபர் 17 ஆம் நாள் சோவியத் யூனியனில் தாஷ்கண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை துவக்கப்பட்டது. வங்கத்திலிருந்து சென்ற புரட்சியாளர் நரேந்திரநாத் (இவர் தன் பெயரை மனபேந்திர நாத் ராய்எம்.என்.ராய் என மாற்றிக் கொண்டார்), அவரது மனைவி ஐரோப்பியரான ஈவிலின் டிரெண்ட் ராய், அபானி முகர்ஜி, அவரது மனைவி ரஷ்யரான ரோசா ஃபிட்டிங், முகமது ஷாபிக் சித்திக், தமிழகத்தைச் சார்ந்த எம்.பி.பி.டி. ஆச்சார்யா ஆகியோர் அக்கிளையில் இருந்தனர். முகமது ஷாபிக் சித்திக் செயலாளரானார்.

துருக்கியைப் பிரிட்டிஷாரிடமிருந்து மீட்க நடை பயணமாகச் சென்றவர்கள்முஜாஹிர்கள்என அழைக்கப்பட்டனர். அவர்களில் சிலர் காபூல் வழி மாஸ்கோ சென்று பயிற்சி பெற்றனர். மாஸ்கோ ராணுவக் கல்லூரியில் பயின்ற முஜாஹிர்களையும் சந்தித்த லெனின் இந்தியா செல்லுமாறும்; இந்திய விடுதலைப் போரில் பங்கு பெறுமாறும்; இந்தியச் சூழலை நன்கு கணித்து அதற்கொப்ப கட்சியைக் கட்டுமாறும் ஆலோசனை வழங்கி அனுப்பினார்.

 

முதல் அகிலத்தின் வழிகாட்டுதலும் சரிலெனின் ஆலோசனையும் சரி – ‘இந்தியச் சூழலை நன்கு கணித்து; சுதேசித் தன்மையுடன் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டுகஎன்பதாகத்தான் இருந்தது. ஆனால் நாடு திரும்பியோர் சந்தித்தது அடுக்கடுக்கான சதி வழக்குகளே! பிறந்த உடனேயே தாஷ்கண்ட் சதி வழக்குகள் ஒன்றல்ல இரண்டல்ல ஐந்து (1922-27), கான்பூர் சதி வழக்கு (1924), மீரட் சதிவழக்கு (1929) என வரிசையாக சதி வழக்குகளை கம்யூனிஸ்ட் கட்சி சந்தித்தது.

 

1929-ஆம் ஆண்டின் புனையப்பட்ட மீரட் சதிவழக்குதான், வரலாற்றில் நெடுங்காலம் நடந்த சதிவழக்கு. கிட்டத்தட்ட மூன்று ஆண்டு ஏழுமாதம் விசாரணை. 320 பேர் அரசு சாட்சிகள். 3500 ஆவணங்கள் என நீண்டது. கம்யூனிஸ்டுகள் வழக்கு மேடையை கம்யூனிஸ்ட் இயக்க பிரச்சார மேடை ஆக்கினர். மூவர் விடுவிக்கப்பட்டனர். முசாபர் அகமதுக்கு ஆயுள் தண்டனை. பிலிப்ஸ் ஸ்பிராட் (பிரிட்டிஷார்), டாங்கே, நிம்கர், ஜோக்லேகர், காட்டே ஆகியோருக்கு 12 ஆண்டு சிறை; பென் பிராட்லி (பிரிடிஷார்), மிராஜ்கர், சவுகத் உஸ்மானி, அப்துல் மஜித் ஆகியோருக்கு 10 ஆண்டுச் சிறை; ஏனையோருக்கு 7 ஆண்டு, ஐந்து ஆண்டு தண்டனைகள்.

 

இந்த வழக்கின் போதே காந்தியும் நேருவும் சிறையில் கம்யூனிஸ்டுகளைச் சந்தித்து சட்ட மறுப்பு இயக்க ஆதரவு கேட்டனர். குடியரசு ஏட்டில் தந்தை பெரியார் எழுதிய உணர்ச்சி கொப்பளிக்கும் கட்டுரையில் குறிப்பிட்டார்:

பொதுவுடைமைக் கொள்கை என்பதை 27 பேரைத் தண்டித்தோ அல்லது 27 லட்சம் பேரத் தண்டித்தோ அல்லது 27 லட்சம் பேரை சமணர்களைக் கழுவிலேற்றியது போல நடுத்தெருவில் நிறுத்தி கழுவிலேற்றிக் கொல்வதன் மூலமோ அடக்கி விடலாம் என நினைப்பது கொழுந்து விட்டெரியும் நெருப்பை நெய்விட்டு அணைத்துவிடலாம் என்று எண்ணுவது போல்த்தான் போய் முடியும். ஆடவே மீரட்டின் முடிவை நாம் மேளதாளத்துடன் வரவேற்பதுடன், தண்டனை அடைந்த தோழர்களை மனமார, வாயார, கையாராப் பாராட்டுகிறோம். முக்காலும் பாராட்டுகிறோம். நமக்கும் நம் போன்ற வாலிபர்களுக்கும் இப்பெரும்பேறு கிடைக்கவில்லையே என வருந்தி மற்றொரு முறை பாராட்டுகிறோம்.”

 

இப்படி நாடு தழுவிய சதி வழக்கு மட்டுமல்ல நெல்லை சதி வழக்கு, மதுரை சதி வழக்கு, சென்னை சதி வழக்கு என்பன போன்று நாடெங்கும் எண்ணற்ற சதி வழக்குகளைச் சந்தித்து நெருப்பில் நீந்தி வந்தது கம்யூனிஸ்ட் இயக்கம். கம்யூனிஸ்ட் கட்சி பிரிட்டிஷ் ஆட்சியில் பெரும்பாலும் தடை செய்யப்பட்டே இருந்தது. எனவே காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் இணைந்தே இயங்கியது உண்டு. காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியோ காங்கிரஸ் கட்சியின் உள்ளே இயங்கியது. ஆக ஒன்றுக்குள் ஒன்றாக, அதாவது காங்கிரஸ் கட்சிக்குள் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சிகாங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சிக்குள் கம்யூனிஸ்ட் கட்சி என்றே 1934 முதல் 1940 வரை இயங்கியது. பொதுவாக சோஷலிஸ்ட் குழுக்களும் பொதுவுடைமை நேசித்த தலைவர்கள் பலரும் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது பாசம் கொண்டிருப்பினும்; பல கருத்துகளில் முரண்பட்டும் இருந்தனர்.

 

உலகப்போர் மற்றும் பிளவுகள்

1942 இரண்டாம் உலகப்போரின் ஆரம்பத்தில் யுத்தத்தை கடுமையாக எதிர்ப்பவர்களாக கம்யூனிஸ்ட் கட்சியினர் இருந்தனர். அதனால் பல தலைவர்கள் சிறைப்பட்டனர். ஆனால் நிலைமை மாறி ஹிட்லர் சோவியத் யூனியனைத் தாக்கியதும் யுத்தத்தின் போக்கு திசை மாறியது. கம்யூனிஸ்ட் கட்சி தன் நிலைபாட்டை மாற்றி பாசிசத்தை முறியடிக்க பிரிட்டன் அமெரிக்கா ரஷ்யா கூட்டணியை ஆதரிக்க முடிவெடுத்தனர்.

 

தேசபக்த கனலோடு பிரிட்டிஷ் எதிர்ப்பில் தீவிரமாக இருந்த முற்போக்காளர்களால் கூட இதனை ஏற்க முடியவில்லை. இதுவரை கம்யூனிஸ்ட்டுகளிடம் அனுதாபம் காட்டிய ஒரு சாரார் கம்யூனிஸ்டுகளை விமர்சிக்கத் துவங்கினர். அன்றைக்கு அரசியல் ரீதியாக எடுத்த முடிவு மிகச்சரிதான். ஆனால் அதனை வெளிப்படுத்துவதில் கொஞ்சம் எச்சரிக்கையோடும் சாதுரியத்தோடும் இருந்திருக்க வேண்டும் என பின்னர் கட்சித் தலைமை சுயவிமர்சனம் செய்து கொண்டது.

இந்தியா சுதந்திரமடைந்த சூழலில் ஆந்திராவில் நடைபெற்ற விவசாயிகளின் ஆயுதப் புரட்சியை முன்னெடுக்க முடியாத சூழலில் கட்சி சவாலை எதிர் கொண்டது. இந்திய ஆளும் வர்க்கம், சமூக அமைப்பு, புரட்சிக்கான பாதை இவற்றைத் தீர்மானிப்பதில் உள்கட்சி தத்துவார்த்த மோதல் தீவிரமானது.

 

1962-இல் இந்தியசீன யுத்தம் துவங்கிய காலகட்டத்தில் கட்சிக்குள் உட்கட்சி மோதல் உச்சத்தை எட்டி பிளவை நோக்கி நகர்ந்தது. 1964-இல் வலது கம்யூனிஸ்ட் கட்சி என மக்களால் அழைக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), இடது கம்யூனிஸ்ட் கட்சி என அழைக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (சிபிஎம்) கட்சி என இரண்டாகப் பிரிந்தன.

பின்னர் ஆயுதப் போராட்டத்தை முன்வைத்து நக்சலைட்டுகள் சிபிஎம்மிலிருந்து பிரிந்தனர். பின்னர் நக்சலைட்டுகள் பல கூறுகளாயினர். சிபிஐ, சிபிஎம்மிலிருந்து மேலும் சில தனிப்பட்ட தலைவர்கள் பிரிந்து சென்று சில கட்சிகளை குழுக்களை உருவாக்கினர். முதல் பொதுத் தேர்தலிலேயே கம்யூனிஸ்ட் என்ற பெயரைத் தம்மோடு கொண்ட ஓரிரு கட்சிகளைப் பார்த்தோம். இப்படி சில சிறிய குழுக்களும் முளைத்தன. இவ்வளவுக்குப் பிறகும் சிபிஎம் இருக்கிற கம்யூனிஸ்டுகளில் பெருமளவு சரியான பாதையில் செல்வதாகவும், இருப்பதில் பெரிய கம்யூனிஸ்ட் கட்சியாகத் திகழ்வதாகவும் இருக்கிறது.

 

இந்திய சமூகத்தின் வர்க்க வர்ண வேறுபாடுகளைச் சரியாக உள்வாங்குவதிலும் அதற்கொப்ப வியூகம் சமைப்பதிலும் ஏற்பட்ட பலவீனமும், தாராளமய உலகச் சூழலும் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னேற்றத்தில் தொய்வை ஏற்படுத்தின எனினும் கம்யூனிஸம்தான் பாசிசத்துக்கு சரியான பதிலடி கொடுக்க முடியும் என்பது மெல்ல உறுதியாகி வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சியில் ஏற்பட்ட பின்னடைவு இடதுசாரிகள் பலவீன மடைவதில் கொண்டுபோய் விட்டன. உலகமய தாராளமய சூழலில் வலுதுசாரி தத்துவம் கொஞ்சம் வேகமெடுக்கத் துவங்கியது.

 

காங்கிரஸ் பிளவு மற்றும் ஜனதா கட்சி

1964-ல் நேரு மறைவுக்கு பிறகு அடுத்து யார் என்பதில் கடும் போட்டி எழுந்தது. காமராஜ்கிங் மேக்கர்ஆனார். லால்பகதூர் சாஸ்திரி பிரதமரானார். மொரார்ஜி தனக்கு உரிய வாய்ப்பு கைதவறிப் போனதாகக் கருதினார். 1966-இல் சாஸ்திரி மறைவுக்குப் பின் மீண்டும் காமராஜ்கிங் மேக்கர்ஆனார். இந்திரா காந்தி பிரதமரானார். மொரார்ஜி மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளானார். பகை புகைய ஆரம்பித்தது.

பிரதமர் பதவிக்கு தகுதியானவராக ஒய்.பி.சவான் இருந்த போதிலும் அவர் எப்போதும் அடக்கி வாசிப்பவராக இருந்ததால் தன் அரசியல் குரு ஒய்.பி.சவானுக்கு பிரதமர் பதவி கிட்டாமல் நழுவிப் போனதுபோல், தனக்கும் நழுவிப் போனதாகஎன் வாழ்க்கைப் பயணம்என்ற நூலில் சரத்பவார் மறைமுகமாகச் சொல்லியுள்ளார், “அதிகாரத்தின் நுழைவுவாயில் வரைஎன அவர் அந்நூலுக்கு உபதலைப்பிட்டது அதனால்தான். காங்கிரஸுக்குள் மோதல் வலுத்ததற்கு சரத்பவார் வாழ்க்கை வரலாற்று நூலும் சாட்சியாகிறது.

 

காங்கிரஸ் கட்சியில் சுதந்திரத்துக்கு முன்பே கோஷ்டி சண்டை நிறைய உண்டு. 1907-லேயே தீவிரவாதிகள், மிதவாதிகள் என காங்கிரஸ் இரண்டு பிரிவானது. சூரத் கட்சிக் காங்கிரஸில் பகிரங்கமாகவே வெளிப்பட்டது. பாலகங்காதர திலகர், லாலா லஜபதி ராய், பிபின் சந்திரபால் போன்றோர் தீவிரவாத முகாம். கோபாலகிருஷ்ண கோகலே, சுரேந்திரநாத் பானர்ஜி, தாதாபாய் நவ்ரோஜி போன்றோர் மிதவாதிகள். தீவிரவாதிகள் இந்து பழமைவாதத்தைத் தூக்கிப் பிடித்ததும்; மிதவாதிகள் முற்போக்கை முன்மொழிந்ததும் நகை முரண்.

 

1923-லேயே சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு, விட்டல்பாய் பட்டேல் ஆகியோர் சுவராஜ்ய கட்சி (Swaraj Party) யைத் துவங்கினர் என்பது வரலாறு. 1922 செளரி செளராவில் ஒத்துழையாமை இயக்கத்தின் போது வெடித்த மோதலை, உயிர்பலியைக் காரணம் காட்டி மகாத்மா காந்தி போராட்டத்தைக் கைவிட்டதைத் தொடர்ந்த எதிர்ப்பு இது. கட்சி நீடிக்கவில்லை.

 

ஆட்சி அதிகாரம் வந்த பின், அதை சுவைக்க கடும் போட்டியும் பொறாமையும் மிக்க பல்வேறு குழுக்கள் இயங்கின. இந்திரா காந்தி காலத்தில் வெடித்தது. இந்திரா காந்தி வங்க தேச யுத்தத்தில் வென்று வங்க தேசம் தனிநாடாக உதவியது வரலாறானது, வங்கிகள் தேசிய மயம்சோஷலிச மாதாவேடத்துக்கு உதவியது. மீண்டும் வென்று ஆட்சிக்கு வந்தார். ஆனால் கட்சிக்குள் மோதலும் தீவிரமானது. குறிப்பாக 1975-இல் குடியரசு தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர் நீலம் சஞ்சீவ ரெட்டிக்கு எதிராக; இந்திராகாந்தியின்மனச்சாட்சிப்படி வாக்களிங்கஎன்கிற வேண்டுகோள், வி.வி.கிரி குடியரசு தலைவராக வெற்றி பெறுவதில் போய் முடிந்தது.

 

காங்கிரஸ் இண்டிகேட், சிண்டிகேட் என இரண்டாக உடைந்தது. சிண்டிகேட் எனப்படுவது நிஜலிங்கப்பா தலைமையிலான பழைய காங்கிரஸ் எனப்படும் ஸ்தாபன காங்கிரஸ் Congress (O), இண்டிகேட் எனப்பட்ட இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் (R) என்றானது.

 

ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில்முழுபுரட்சிஎன்கிற போராட்டம் நாடெங்கும் வலுத்தது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தப் பல்வேறு சக்திகள் முயன்றன. தேசந்தழுவிய ரயில்வே போராட்டம் வெடித்தது. ஜார்ஜ் பெர்ணாண்டஸ் கதாநாயகன் ஆனார். பின்னர் அவர் பாஜக கூட்டணியில் கரைந்து மோசமான வரலாறாய்ப் போனார். வலது சாரிகள் அவர்கள் பாணியில் முயற்சித்தனர். அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. ஜனநாயக உரிமைகள் முடக்கப்பட்டன.

 

1977 இந்திராகாந்தி அவசரநிலையைத் திரும்பப் பெற்று தேர்தலை அறிவித்தார். ஜனவரி 19-ஆம் நாள் மொரார்ஜி தேசாயின் இல்லத்தில் நான்கு கட்சித் தலைவர்கள் சந்தித்தனர். இதில் முக்கியமான கட்சிகளாவன: சரண்சிங் தலைமையிலான பாரதிய லோக் தளம் (இது அடிப்படையில் விவசாயிகளின் கட்சி), சோஷலிஸ்ட் கட்சி, மொரார்ஜியின் பழைய காங்கிரஸ், ஆர்.எஸ்.எஸ்-ன் அரசியல் முகமான ஜனசங்கம் ஆகியவை. சேர்மானத்தைப் பார்த்தாலே முரண்பட்டவர்களின் சங்கமம் என்பது விளங்கும். ’ஜனதா கட்சியாக ஒன்றிணைந்தது. ஜெயபிரகாஷ் நாராயணன் தொடங்கி வைத்த மாநாட்டில் ஜனதா கட்சி முறையாக அறிவிக்கப்பட்டது. காங்கிரஸின் மிக நம்பகமான தலித் தலைவர் ஜெகஜீவன் ராமும் விரக்தி அடைந்து காங்கிரஸிலிருந்து விலகிஜனநாயகத்துக்கான காங்கிரஸ்என்ற பெயரில் தனிக்கட்சி கண்டு ஜனதாவோடு கூட்டணி ஆனார். அடுத்து இந்த ஜனதா கட்சி உடைந்து சிதறியதையும் இதரச் செய்திகளையும் பார்ப்போம்.

 

தொடரும்

 

-சு.பொ.அகத்தியலிங்கம்