தொடக்கநிலைக் கேள்வி - பதில் : [ 1]

Posted by அகத்தீ Labels:

 





தொடக்கநிலைக் கேள்வி - பதில் : [ 1]

 

ஐ போணும் அமெரிக்க பயணமும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு அழகா ?

 

 

கேள்வி [1] :

 

கம்யூனிஸ்ட் என்றால் ஏழையாகத்தான் இருக்க வேண்டுமா? அவர்கள் கம்யூனிஸ்ட் ஊழியர்கள் ஐபோன் (iPhone), பைக் போன்ற நவீனப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாதா? என்றொருவர் கேள்வி கேட்கிறார்.  இன்னொருவர் கேட்கிறார் , “ ஏகாதிபத்தியம் ஒழிக !” ன்னு கோஷம் போட்டுவிட்டு தம் பிள்ளைகளை அமெரிக்காவுக்கு வேலைக்கு அனுப்பலாமா ? இன்றைக்கு கம்யூனிஸ்ட் அலுவலகமே கணினி மயமாகிறதே சரியா ?

 

பதில் :

 

நான் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பக்கம் நகரத் தொடங்கிய காலத்தில் என் அப்பாவின் நண்பர் கிருஷ்ண மூர்த்தி ஐயர் என்பவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார் , “ இவ்வளவு நாள் அந்த கறுப்புச் சட்டைக்காரன் பின்னாடி போய்த் தப்புத்தப்பாக உளறிக் கொண்டிருந்தாய் , இப்போது சிவப்பு சட்டையா ? யோசிக்கவே மாட்டயா ? உங்க மார்ஸும் லெனினும் சூட்டுக் கோட்டுப் போட்டப் பணக்கார வீட்டுப் பிள்ளைக … அவங்க கோமணத்துக்கே வழி இல்லாத தொழிலாளர்களுக்குத் தலைவனா ? “

 

அந்தக் கேள்வி , என்னை உலுக்கியது பதில் தெரியாமல் முழித்தேன் . அதன் பின் பல தோழர்களிடம் உரையாடி அவர் வாழ்ந்த நாட்டின் தட்ப வெப்பத்திற்கு ஏற்ற உடை அது என அறிந்தேன் . அவரிடமும் வாதிட்டேன் .

 

அவர் திதி சாப்பிடுவதைத் தொழிலாகக் கொண்டவர் . என் திருமணம் வரை எனக்கு வேட்டி சட்டை கொடுத்துக்கொண்டே இருப்பார் . எங்கள் அப்பாவுக்கு ஆதரவாக இருப்பார் . ஆனால் என்னிடம் இப்படி குதர்க்கமாக  ஏதேனும் கேட்பார்.

 

 “மேல் சாதியில் பிறந்த காந்தி அரையாடை அணிகிறார் ; தலித்தாகப் பிறந்த அம்பேத்கர் கோட்டு சூட்டு அணிகிறார் .” அவர் இப்படி சொன்ன போது உடன் பதில் சொல்ல முடியாமல் தயங்கினேன் .

 

உயர் சாதியில் பிறந்தவர் மக்களைத் திரட்ட அவர்களைப்போல் தம்மையும் மாற்றிக்கொண்டதும் சரி ; ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த அம்பேத்கர் - தோளில் துண்டு போடக்கூட உரிமை மறுக்கப்பட்ட - வேட்டியைக் கூட முழங்கால் அளவு தூக்கிக் கட்ட நிர்பந்தித்த- சமூகக் கொடுமைகளைச் சந்தித்த சமூகத்தில் பிறந்த அம்பேத்கர் ; கல்வியும் போராட்டமும் நம்மை மனிதனாக்கும் என தம் மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட கோட்டு சூட்டு அணிந்ததும் அணியச் சொன்னதும் சரியே ! இந்தப் புரிதல் எனக்கு மிகவும் பின்னால்தான் ஏற்பட்டது .

 

இது போன்ற கேள்விகளைக் குதர்க்கமாக வீசி கம்யூனிஸ்டுகளைப் பேசவிடாமல் செய்துவிட்டதாக சிலர் தங்களைத் தாங்களே மெச்சிக் கொள்கிறார்கள் . அவர்கள் மகிழட்டும் ! ஆயினும், உண்மைகளை இளையதலையினருக்குத் தெரிவிப்பது எம் கடன் அல்லவா ?

 

இது போல் ஒரு கேள்வியை தோழர் இஎம்எஸ் அவர்களிடமும் எழுப்பினார்கள் . சிந்தா வார தழில் இக்கேள்வி பதில் இடம் பெற்றிருந்தது . தோழர் பி.ஆர்.பரமேஸ்வரன் தழிழாக்கம் செய்து நூலாகவும் வெளிவந்துள்ளது . அதில் “ அன்றையக் கம்யூனிஸ்டுகள் எளிமையாக உடை அணிந்தனர் .இன்றைய இளைய தலைமுறையினர் மிடுக்காக உடை அணிகின்றனர் ,பைக்,ஸ்கூட்டர் ,கார் எனப் பறக்கின்றனர் . விமானத்தில் பறப்பதை விரும்புகின்றனர் . இதெல்லாம் கம்யூனிஸ எளிமை ஆகுமா ? என்பதே கேள்வியின் சாரம் .

 

அதற்கு தோழர் இ எம் எஸ் பதில் சொன்னார் . இதில் முரண்பாடில்லை . நானும் [ இஎம்எஸ் ] என் போன்றோரும் காந்தியினால் ஈர்க்கப்பட்டவர்கள் .நாங்கள் கம்யூனிஸ்டுகள் ஆன பின்னும்  காந்திய எளிமை எங்களைத் தொடர்ந்தது .  உடை ,உணவு , பயணம் எல்லாவற்றிலும் அது தொடர்ந்தது .அதுதான் உண்மை .

 

“ எல்லோரும் நன்றாக உடுத்த வேண்டும் . நன்றாக உண்ண வேண்டும் . விரைவாக பயணிக்க வேண்டும் .நன்றாகப் படிக்க வேண்டும் . எல்லோருக்கும் வேலை வேண்டும் . எல்லோருக்கும் கல்வி வேண்டும் . எல்லோருக்குக் வீடு வேண்டும் “ என்பதுதான் கம்யூனிசக் கனவே தவிர ; எல்லோரும் அரையாடையோடு அரைப்பட்டினி கிடக்க கம்யூனிஸ்ட்டுகள் ஒரு போதும் சொல்லவில்லை . சொல்லவும் மாட்டார்கள் .

 

இன்றைய தலைமுறை இளைஞர்கள் படித்தவர்கள் . அவர்கள் நன்றாக உடுத்துவதோ உண்பதோ பயணிப்பதோ பிரச்சனையே அல்ல . அவர்கள் யாருக்காகப் போராடுகிறார்கள் என்பதே கேள்வி . உழைக்கும் மக்கள் பக்கமும் ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கமும் நிற்கிறார்களா என்பதே அளவு கோல்.

நாலு முழம் வேட்டியோடு , காலில் செருப்புப் போடாமல் மதவெறி கலவரத்திற்கு துணை போவதைவிட , மிடுக்காக உடையணிந்து உழைப்பாளி மக்களுக்காகப் போராடுவது நூறு மடங்கு மேலானது அல்லவா ?

 

இதன் பொருள் கம்யூனிஸ்டு ஊழியர்கள் ஆடம்பரமாய் படோடோபமாய் வாழலாம் என்பதல்ல . தங்கள் வருவாய்க்கு உட்பட்டு செயல்பாட்டுகுத் தேவையான வசதிகள் செய்து கொண்டு வாழ வேண்டும் ; அதுவும் நேர்மையான முறையில் வாங்கப்பட்டதாக இருக்க வேண்டும் . கம்யூனிஸ்டு ஊழியர்கள் இப்படித்தான் நேற்றும் வாழ்ந்தனர். இன்றும் வாழ்கின்றனர் .நாளையும் வாழ்வர்.

 

கம்ப்யூட்டர் எதிர்ப்பு போராட்டங்கள் ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது உண்மையே ! நான் பொறுப்பேற்றிருந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் மின்வாரியத்தில் , வங்கியில் கம்யூட்டர் புகுத்தப்பட்டபோது , வேலை வாய்ப்பைப் பறிக்காதே! என்றே போராடினோம் .  மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாத இதழ்  ‘மின் கதிரில்’ அன்றைக்கு இது குறித்து நான் [ சு.பொ.அலி என்ற பெயரில் ] எழுதிய கவிதை பிரசுரமானது . யாராவது கைவசம் வைத்திருந்தால் அனுப்பவும் . இங்கு மறு பதிவு செய்கிறேன் .

 

கம்யூனிஸ்டுகள் நவீனத்துக்கு எதிரியல்ல ; அறிவியல் தத்துவமான மார்க்சியம் ; அறிவியல் கண்டு பிடிப்புகளுக்கு எப்படி எதிரியாக இருக்க முடியும் ? கத்தியின் மீது கோபம் இல்லை .அக்கத்தி காய்கறி பழங்கள் வெட்டப் பயன்படுகிறதா ? அறுவை சிகிட்சைக்கு பயன்படுகிறதா ? . நல்லது .இரண்டும் மானுடத் தேவைதான் .ஆனால் கொலை ஆயுதமாகக் கத்தி மாற்றப்படும் போதுதான் கம்யூனிஸ்டுகள் எதிர்க்கிறோம் . இப்போது செயற்கை நுண்ணறிவு குறித்து பேசும் போதும் இதே அணுகுமுறைதான் .

 

நவீன உலகில் - வீட்டுக்கு வீடு - ஆளுக்கு ஆள் நவீனத் தகவல் தொடர்பு சாதனங்களோடு உலா வருகையில் கம்யூனிஸ்டு ஊழியர்ளும் அதில் ஒரு பகுதியாக அவற்றைக் கற்பதும் கையில் ஏந்துவதும் பயன்படுத்துவதும் சரியே ! சரியே ! ஒதுங்கி இருப்பதுதான் தவறு !

 

எல்லாம் வேதத்தில் இருப்பதாய்ச் சொல்லி சமஸ்கிருத மந்திரத்தில் இந்தியாவை மூழ்கடித்திட சதா கொக்கரிக்கும் காவிகள் இந்த நவீன அறிவியல் கண்டு பிடிப்புகளை பயன்படுத்துவதுதான் நகை முரண் !

 

கம்யூனிஸ்டுகள் வீட்டுப் பிள்ளைகள் வெளிநாட்டில் வேலை செய்யலாமா ? ஏகாதிபத்தியம் என முழங்கிவிட்டு அங்கு போய் உழைக்கலாமா ? இப்படி என்னை நோக்கியும் கேள்வி வீசப்பட்டது உண்டு .

 

நான் பலமுறை சொல்லிவிட்டேன் . இப்போது சுருக்கமான நினைவூட்டல் . கம்யூனிஸ்டுகள் சர்வதேசவாதிகள் . எந்த நாட்டு மக்களுக்கும் எதிரி அல்ல . ஆட்சியாளர்களின் அரசியல் பொருளாதாரப் பண்பாட்டு ஆதிக்கக் கொள்கைக்குத்தான் எதிரி . அமெரிக்காவிலும் ஜப்பானிலும் இடதுசாரி மேயர்கள் வெற்றி பெற்றதும் உண்டு .

 

வெளிநாட்டுக்குப் படிக்கவும் வேலைசெய்யவும் மேல்தட்டு வீட்டுப் பிள்ளைகள் மட்டும்தான் போக வேண்டும் என்பது ஆதிக்க வெறிதான் . எல்லா பிள்ளைகளும் போகலாம் .எம் வீட்டுப் பிள்ளைகளும் போகலாம் .கம்யூனிஸ்ட் வீட்டுப் பிள்ளைகளும் போகலாம் . பிழையில்லை . அதுதான் சமூகநீதியும் சமநீதியும்

எங்கு போனாலும் அவர்கள் உலக சமாதனத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் நிற்கிறார்களா அல்லது போர்வெறிக்கும் பகைமை வெறிக்கும் இரையாகி நிற்கிறார்களா என்பதுதான் கேள்வி .

முதலாளித்துவத்தை எதிர்க்கிறோம் என்பதால் முதலாளிகளிடம் வேலை செய்யக்கூடாது எனச் சொல்ல முடியுமா ? நிலபிரபுத்துவத்தை எதிர்க்கிறோம் என்பதற்காக நிலத்தில் இறங்கி வேலை செய்யாமல் இருக்க முடியுமா ? ஊரில் நிலவும் சாதி ஆதிக்கத்தை எதிர்ப்பதால் அந்த ஊரிலேயே இருக்கக்கூடாது என சொல்ல முடியுமா ?

 

ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பது வேறு உலகெங்கும் சென்று கல்வி கற்று வேலை செய்து பிழைப்பது என்பது வேறு . எங்கு சென்றாலும் தம் உழைப்பை விற்றுத்தானே வாழ்கிறார்கள் . உள்ளூரில் தக்க கல்வியும் வேலையும் கிடைக்காத போது அதனைத்தேடி வெளி ஊர்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் வெளிநாட்டுக்கும் போவதில் தப்பே இல்லை . உள்ளூரில் இவற்றைத் தர முடியாத அரசுதான் குற்றவாளியே தவிர போகிறவரோ அவர் குடும்பமோ அல்ல .

இன்றைக்கு வர்க்கப் போருக்கான - வர்ண ஆதிக்க எதிர்ப்புப் போருக்கான கருத்துக் களத்தை ; அனைத்து மட்டத்திலும் ,அனைத்து துறையிலும், அனைத்து வழிகளிலும், அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னெடுப்பதே சரியான வியூகம் ஆகும் .

 

“ புரட்சி என்பது எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும்  எதிரான கண்மூடிக் கலகம் என்றோ ; எல்லாவற்றையும் அழிக்கும் அராஜகம் என்றோ ; மார்க்சியவாதிகள் ஒரு போதும் எண்ணவில்லை . புரட்சி என்பது எல்லாவித சுரண்டலையும் , சமுதாயம் மற்றும் நாட்டின் ஒடுக்குமுறையின் எல்லா வடிவங்களையும் ஒழிப்பதற்கான போராட்டமாகும் . அறிவியல் ,தொழில்நுட்பம் ,பண்பாடு ஆகியவற்றின் கப்பெரிய சாதனைகள் அனைத்தும்  உழைப்பாளி மக்களின் உயர்வுக்குத் தொண்டாற்ற வேண்டும் .அவர்களுடைய வாழ்வை அதிகச் சுவையும் அதிகப் பொருளும் உடையதாக்க வேண்டும் என்பதற்கான போராட்டமே புரட்சி . சோவியத் புரட்சியின் வீரிய வெற்றி அது . ஆம் ! போர்க்களத்தில் இரத்தமும் வியர்வையும் சிந்தி ஈட்டியது மட்டுமல்ல ; சமூக வாழ்க்கை முழுவதையும் மனித நேயமிக்கதாய் மாற்றி அமைத்திட இடைவிடாது தொடர்ந்த முயற்சியுமாகும் .”  [ புரட்சியில் இளஞர்கள் எனும் புத்தகத்திலிருந்து ....]

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

29/08/26.

 

குறிப்பு : ஒவ்வொரு சனிக்கிழமையும் கேள்வி -பதில் வெளிவரும் . நீங்களும் கேள்விகளை அனுப்பலாம்.

 


பொய்களின் காலம்

Posted by அகத்தீ Labels:

 




இது பொய்களின் காலம்

பொய்களின் கூட்டம் மிகப்பெரியது

 

விதவிதமான பொய்கள்

புராணப் பொய் சாஸ்திரப் பொய்

கவிதைப் பொய் கதைப் பொய்

சினிமாப் பொய் சரித்திரப் பொய்

பொருளாதாரப் பொய் புள்ளிவிபரப் பொய்

 

சட்டமன்றப் பொய் நாடாளுமன்றப் பொய்

சட்டப்பொய் நீதிமன்றப் பொய் வியாபாரப் பொய்

காதல்ப் பொய் குடும்பப் பொய்

பள்ளிக்கூடப் பொய் கல்லூரிப் பொய்

 

ஊடகப் பொய் மருத்துவப் பொய்

கால்ப்பொய் அரைப்பொய் முக்கால்ப் பொய்

முழுப்பொய் அண்டப் பொய் ஆகாசப் பொய்

 

இது பொய்களின் காலம்

பொய்களின் கூட்டம் மிகப்பெரியது

பொய்களின் கூட்ட நெரிசலில் மிதிபட்டு நசுங்கி

குத்துயிரும் குலையுயிருமாய் உண்மை

 

அதன் அபயக் குரல்கூட வெளியே கேட்காத அளவு

பொய்களின் பெருங்கூச்சல் ! வாழ்க ஜனநாயகம் !

 

சுபொஅ.

 

 

நியாயத் தீர்ப்பு நாளில் ……..

Posted by அகத்தீ Labels:

 



 

நியாயத் தீர்ப்பு நாளில் ……..

 

 நீ! அர்பன் நக்சல் ! திமாகி நக்சல் !

குற்றச்சாட்டை மறுக்கிறேன்…”

 

நீ கம்யூனிஸ்ட் தானே !

இல்லை…. இல்லை…..”

 

எதனடிப்படையில் மறுக்கிறாய் ?”

நான் கோவில்கோவிலாகச் சுற்றுபவன்ஆகவே நான் நக்சலும் அல்லகம்யூனிஸ்டும் அல்ல

 

இதைக் கொண்டு முடிவு செய்ய முடியாது

நான் எல்லா பூஜை புனாஸ்காரம் ,சடங்கு,சம்பிரதாயமும் பார்ப்பவன்ஆகவே நான் நக்சலும் அல்லகம்யூனிஸ்டும் அல்ல

 

 சரி ! இந்தக் காரணம் போதுமானதல்ல…. ”

நான் எல்லாவித மூடநம்பிக்கையும் உடையவன்ஆகவே நான் நக்சலும் அல்லகம்யூனிஸ்டும் அல்ல

 

 கொஞ்சம் ஏற்கலாம் ஆனாலும் போதாது

நான் சாதி மத வெறி உச்சத்திற்கொண்டவன் ஆகவே நான் நக்சலும் அல்லகம்யூனிஸ்டும் அல்ல

 

 ஏற்கத்தக்கதுதான் …. இன்னும்….??”

நான் அநீதி அராஜகம் அக்கிரமம் ஏற்றதாழ்வு தீண்டாமை வெறுப்பு அரசியல் அனைத்துக்கும் துணைபோகிறவன் ஆகவே நான் நக்சலும் அல்லகம்யூனிஸ்டும் அல்ல

 

 வலுவான காரணம்தான் இன்னும்…??”

ரீல்ஸிலும் பொய்களிலுமே ஜெயிக்கிறவன் … உண்மை எனக்கு ஒரு போதும் ஆகாது ஆகவே நான் நக்சலும் அல்லகம்யூனிஸ்டும் அல்ல

 

மெய்தான் இன்னும் கொஞ்சம் சொல்லலாமே…. !

இரக்கம் எனும் ஒரு பொருள் இல்லாதவன் ; மனச்சாட்சியைக் கொன்றவன் வன்மத்தை விதைப்பவன்ஆகவே நான் நக்சலும் அல்லகம்யூனிஸ்டும் அல்ல

 

 இன்னும் ஏதேனும் சேர்க்க வேண்டி  இருந்தால் சொல்லுக

மனிதமே இல்லாத நான் திமாகி நக்சலாக கம்யூனிஸ்டாக  எப்படி இருக்க முடியும் ?”

 

மிகச்சரி…. மனிதம் மிக்கவர்கள் மட்டுமே கம்யூனிஸ்டாக முடியும் என்பதால் நீர் சொன்னதைக் கொண்டு பார்த்தால் நீவிர் சங்கி !உம்மை விடுதலை செய்கிறேன்….. தோழர்கள் கண்ணில் பட்டால் காட்டிக்கொடுங்கள் !

 

நிச்சயமாக …. அதுதான் இனி என் முழு வேலை…  

 

நீதி மன்றம் கலைந்தது….

 

சுபொஅ.

திமாகி …. திமாகி …. வெல்லும்….

Posted by அகத்தீ Labels:

 







திமாகி …. திமாகி …. வெல்லும்….

 

காலில் விலங்கு

கையில் விலங்கு

வாயில் விலங்கு

போட்ட ராஜக்கண்ணு

மூளைக்கு விலங்கு

போட முடியாமல்

முழிக்கிறார்  !

 

ஆளைப் பிடித்து

சிறையில் போடலாம்

ஆயுள் முழுமைக்கும்

அடைத்து வைக்கலாம்

சோறு தின்னவும்

கைகால் கழுகவும் மட்டும்

விலங்கைக் கழற்றலாம்

சிந்தனையை அடைத்துவைக்க

சிறைக் கம்பிக்கும் வலுவில்லையே !

 

திமாகி வெல்லும் ! திமாகி வெல்லும் !

சித்தாந்தம் தோற்ற வரலாறு இல்லை !!

 

சு.பொ.அ.

 

நேற்றின் பாடம்….?????

Posted by அகத்தீ Labels:







நேற்றின் பாடம்….?????  

 

காலையில் அடுக்கக வளாகத்துக்குள்

இணையரோடு நடை பயிற்சி …

புறா ஒன்றை கவ்வித் தின்று கொண்டிருந்தது பூனை

”இவ்வளவு எலிகள் இங்கு சுற்றுகையில்

பூனைக்கு பாவப்பட்ட புறாதானா கிடைத்தது ?”

இணையர் நெஞ்சம் கலங்கக் கேட்டார் …

 

இரக்கம் சரிதான்

பூனைக்கு தேவை இரைதான்

 ஒவ்வொன்றின் உணவுத் தேர்வை

நாம் எப்படித் தீர்மானிக்க முடியும் ?

 

நாங்கள் அடுக்ககம் வந்த புதிதில்

புறாக்கள் ,கழுகுகள் ,பாம்புகள் ,எலிகள் ,நாரைகள்

எங்கும் வட்டமிட்டன…

ஒர் மருந்து நிறுவனத்தின் சமூக பொறுப்பின்மையால்

காச்சநாய்க்கன் ஹள்ளி ஏரி - பல நூற்றாண்டு பழைய ஏரி

நச்சு இரசாயணம் கலந்து மாசு பட்டது

மீன்கள் செத்து மிதந்தன

சுற்றி இருந்த மரங்கள் பட்டுப்போயின

கழுகுகள் ,புறாக்கள் ,நாரைகள் பெரும் பகுதி காணாமல் போயின….

 

தன்னார்வ அமைப்புகள் எதிர்குரல் எழுப்பின வழக்குத் தொடுத்தன

வழக்கம் போல் தாமதமாய்த் சற்று தூக்கம் கலைந்தது அரசு

இப்போது மறு கட்டமைப்புக்காக ஏரி வற்ற வைக்கப்பட்டுள்ளது

அடுக்ககம் தண்ணீர் லாரியை எதிர்பார்த்துக் கிடப்பது அன்றாடப் பிழைப்பு..

 

 

ஆரம்பத்தில் அடுக்ககத்துள் பாம்புகள் நாலய்ந்து

கொஞ்சம் எலிகள் …

எலித் தொல்லைத் தாங்க முடியவில்லை ..

மின் வயர்களைக் கடித்து வைத்தன

மின் சாதனங்கள் பழுதாயின

பெரும் பாதிப்பு வாஷிங் மெஷின்களுக்கே

 

எங்கிருந்தோ ஓர் பூனை வந்தது

இனி எலித் தொல்லை இருக்காது என

எல்லோரும் கொண்டாடினர் …

பாலும் கறியும் மீனும் பூனைக்குக் கிடைத்தன…

பூனை ஜோடி சேர்த்துக் கொண்டது

குட்டிகள் போட்டன வேறு பூனைகளும் வந்தன

இப்போது பூனைகள் சாம்ராஜ்யம் கோலோச்சுகிறது

எலிகளும் மகிழ்ச்சியாய் குடும்பம் நடத்தி குட்டிபோட்டு

பல்கிப் பெருகி வம்சம் தழைக்க வாழ்ந்து கொண்டிருக்கின்றன

பாம்புகளும் தன் இடத்தை மாற்றி மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றன..

 

பிரச்சனையிலிருந்து தப்ப நினைத்து

பிரச்சனைகளில்ச் சிக்கிக்கொண்டு ..

மேலும் மேலும் மேலும் பிரச்சனைகள் சூழ….

மீள முடியா நம் வாழ்க்கைக்கு

இந்த பூனைகளும் எலிகளும் பாம்புகளும்

பாடம் சொல்லிக் கொண்டிருக்கின்றனவோ ?

 

நான் இப்படித் தத்துவம் சொன்னால்

இணையருக்கு கோபம் வராதா என்ன ?

 

நடை பயிற்சியின் போது இனி பேசக்கூடாது ….

நேற்றின் பாடம்… நடக்குமா ?

 

சுபொஅ.