ஒரு புத்தகமும் 11 + 1 பேர்கள் விமர்சனமும் ….

Posted by அகத்தீ Labels:

 





ஒரு புத்தகமும் 11 + 1  பேர்கள் விமர்சனமும்   ….


ஓசூர் புத்தகக் காட்சியில் இம்முறை ஒரு சோதனை முயற்சி செய்யப்பட்டது . தமுஎகச வோடு இணைந்து . புத்தக விமர்சனம் என்பதை ஒரு போட்டியாக்கியது . ஒரு புத்தகத்தை பலர் விமர்சனம் செய்ய வேண்டும் . சிறந்த விமர்சன்ங்களுக்கு பரிசு உண்டு .

 

இம்முறை எடுத்துக் கொள்ளப்பட்டது என்ன தெரியுமா ? “ வானி” எனும் இளையோருக்கான நாவல் . 11 பேர் பங்கேற்றனர் .அதில் இரண்டு மாணவர்கள் . பெண்கள் 6 , ஆண்கள் 5 . முதல் முயற்சி என்பதால் பங்கேற்பு குறைவாக இருப்பினும் முயற்சி நிறைவாக இருந்தது . நான் நடுவராகப் பங்கேற்றேன்.

 

எல்லோரும் புத்தகத்தை வாசித்து வந்திருப்பதை உணர முடிந்தது . அவரவர் அந்நூல் கூறும் செய்தியை தங்கள் வாழ்க்கை அனுபவத்தோடு உரசி ‘ சுற்றுச் சூழலை’ பாதுகாக்க வேண்டும் என்கிற அக்கறையைப் பகிர்ந்தனர் . வெறும் கதைச் சுருக்கமாக இல்லாமல் கருத்துச் செறிவோடு பேசியது மகிழ்ச்சி அளித்தது. பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுகள் .

 

நூலின் பெயர் ’வாணி’ அல்ல ’வானி’ . ஏன் மூன்று சுழி போடாமல் இரண்டு சுழி போடப்பட்டது . வானி என்பது சரியே ஏன் ? எல்லோரும் விளக்கினார்கள் . இங்கே சொன்னால் எப்படி ? நூலை வாசித்து அறிக !

 

பவானி ஆற்றில் விஸ்கோஸ் ஆலை நச்சுக் கழிவு நீர் கலந்ததால்   தண்ணீர் மாசாகியது ,பொது மக்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டு தோல் நோய் ,புற்று நோய்ப் பரவ காரண மாகியது . இதனை எதிர்த்து சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் போராடி நதியை மீட்டதே கதை .

 

கதாநாயகி டாக்டர் சத்திய சுந்தரியும் அவர் பேத்தி நித்திலாவும் தான் கதையின் மைய பாத்திரங்கள் . அவர்களின் உரையாடலே பெரும்பகுதி கதையை நகர்த்தியது . டாக்டர் சத்திய சுந்தரி , டாகடர் ஜீவா ஆகியோர் உண்மையில் அப்போராட்டத்துக்கு முன் நின்றவர்கள் . அமைப்பாக்கியவர்கள் . மக்களுக்கு விழிப்பூட்டியவர்கள் ,

விழிப்புணர்பிரச்சாரம் ,சட்டப் போராட்டம், மக்கள் பங்கேற்பு ,ஊடகக்குரல் எல்லாம் சேர்ந்து வெற்றியை ஈட்டியது .இதனை பேசியவர்களில் பலர் சுட்டிக்காட்டினர் .

 

நான் இங்கு கதைச் சுருக்கம் சொல்லப் போவதில்லை . வாசியுங்கள் ! வாசித்த பின் பேசிய ஒருவர் கிருஷ்ணகிரி மாவட்ட தென்பெண்ணை ஆற்றைப் பற்றி கவலையைப் பகிர்ந்தார் . ஒரு பெண் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தோடு நினைவு கூர்ந்தார் .ஒருவர் காவிரி மாசுபடுவதைச் சொன்னார் . ஒருவர் குடிநீர் சவாலைச் சொன்னார் .

 

நான் முடிவுரையில் பெங்களூரில் 1200 ஏரிகளில் நூறு மட்டுமே மிச்ச மிருப்பதை ; ஒரு மருந்து கம்பெனி கழிவால் என் வீட்டருகே உள்ள காச்சநாய்க்கன் ஹள்ளி ஏரி நாசமானதை . குடிநீர் தட்டிப்பாட்டில் கிராமமே அல்லாடுவதை . இப்போது ஏரியை மறு சீரமைக்க நடக்கும் முயற்சியைச் சொன்னேன் .

 

ஒரு நாவல் மேலும் பல உண்மைகளைப் பார்க்கத் தூண்டியது என்பது அந்நூலுக்கு பெருவெற்றி ஆகும் !

 

கடைசியாக ஒரு வேண்டுகோள் ஓசூர் புத்தகத் திருவிழா அமைப்பாளர்களுக்கும் தமுஎகசவினருக்கும் ! இனி ஒவ்வொரு ஆண்டும் இதனைத் திட்டமிடுவீர் ! பத்து நாட்கள் பத்து புத்தகங்கள் என யோசிக்கலாம் . சுற்றுச்சூழல் ,மனித உரிமை ,பாலின சமத்துவம் , மத நல்லிணக்கம் , விடுதலைப் போராட்ட வரலாறு  இப்படி பல பொருண்மைகளை மையப்படுத்திய நாவல் ,சிறுகதை , கவிதை ,ஆய்வு நூல் , உரைநடை என வகைக்கொண்றாய் எடுக்கலாம் . யோசிப்பீர் அன்பர்களே !


வானி [ இளையோர் நாவல் ]

ஆசிரியர் : ஈரோடு சர்மிளா ,

சூழல் அறிவோம் பதிப்பகம் ,

91-8825857649 / 

suzhalarivom@gmail.com   


சு.பொ.அகத்தியலிங்கம்.

 


 

 

பசு மாட்டோடு சேர்த்து நம்மையும் பாடாய்ப் படுத்தும் புத்தகம்…..

Posted by அகத்தீ Labels:

 


பசு மாட்டோடு சேர்த்து நம்மையும் பாடாய்ப் படுத்தும் புத்தகம்…..

 

 


பேராசிரியர் .பி. ராஜமாணிக்கம் எழுதிய  பசு மாடு படும் பாடு’ என்னும் இச்சிறிய புத்தகம்  [ 32 பக்கங்கள் ] ஒவ்வொரு வரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் .

 

சில கேள்விகள்…

1] பசு மாட்டின் சிறுநீர் புற்று நோயைக் குணப்படுத்துமா ?

2] பசு மாட்டின் சிறுநீரில்  தங்கம் இருப்பது உண்மையா ?

3] பசு மாடு ஆக்சிஸனை சுவாசித்து ஆக்சிஸனை வெளியிடுகிறதா ?

4 ] பசுஞ்சாணம் கதிர்வீச்சைத் தடுக்குமா ?

5] பசு மாட்டின் பூர்வீகம் எது ? அது எங்கே பிறந்தது ? மூதாதையர் யார் ?

 

இப்படி சில அடிப்படையான கேள்விகளுக்கு அறிவியல் ரீதியாக ஆணித்தரமான பதில்களைத் தருகிறது இந்நூல் .ஆகவே ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டுகிறேன்.

 

தமிழ்நாடு அறிவியல் இயத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான பேரா.பி. ராஜமாணிக்கம்  தேவையான நேரத்தில் , மிக அவசியமான இந்நூலை எழுதி இருக்கிறார்  . மாட்டுக்கறி வெறுப்பு அரசியலுக்குள் நுழையாமல் வேறு தளத்தில் நின்று அறிவியல் பூர்வமான நான்கைந்து கேள்விகளுக்கு மட்டும் தக்க ஆதாரத்துடன் பதில் சொல்லி இருக்கிறார். படங்கள் ,கார்ட்டூன் , சிந்திக்கத் தூண்டும் அட்டை என புத்தகம் நன்கு தயாரிக்கப்பட்டுள்ளது .

 

புரளிகளை அறிவியல் என விற்கும் புழுகுணிப் பிரச்சாரங்களில் சிக்கிக் கொண்ட மக்களை விடுவிக்க ஒவ்வொருவருக்கும் இந்நூலைப் பரிசளியுங்கள் !  அறிவியல் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் ஈடுபடுவோர் இதனைக் கருத்தில்க் கொள்க !

 

பசு மாடு படும் பாடு , ஆசிரியர் : பேரா.பி. ராஜமாணிக்கம் , வாசல் வெளியீடு , 40 D / 3 – முதல் தெரு ,வசந்தா நகர் , மதுரை 625 003 , vasalviji@gmail.com + 91 98421 02133 . பக்கங்கள்: 32 , விலை : ரூ.42 /

 

சுபொஅ.

நகரென்று எதைச் சொல்கிறீர்கள் ?

Posted by அகத்தீ Labels:

 நகரென்று எதைச் சொல்கிறீர்கள் ?

 

 


நகரென்று எதைச் சொல்கிறீர்கள் ?

ஓங்கி உயர்ந்த கட்டிடங்களையா ?

விளம்பரத்தில் மினுக்கும் வர்த்தக நிலையங்களையா ?

கார்ப்பரேட் கொளையை பொதிந்த பெரும் நிறுவனங்களையா ?

பளபளப்பான கல்வி ஏலக் கடைகளையா ?

மரண வியாபாரத்தில் கல்லா கட்டும் மருத்துவ மனைகளையா ?

பகட்டும் போலித்தனமும் நிரம்பி வழியும் மெகா திருமண மஹால்களா ?

பாலம் ,சாலை ,ரயில் ,பஸ் ,கார் ,ஆட்டோ ,டூ வீலர் நெரிசல் நெரிசல் இதுதான் அடையாளமா ?

நின்று பேச நேரமின்றி ஓடிக்கொண்டே இருக்கும் மனிதர்களா ?

நுனி நாக்கு ஆங்கிலமும் நவநாகரீக உடையும் காதோடும் கண்ணோடும் ஒட்டிக்கொண்ட அலைபேசியுமாய் திரியும் இளைஞர்கள் இளைஞிகளையா ?

நகரென்று எதைச் சொல்கிறீர்கள் ?

நவீனத்தோடு கைகுலுக்கினும் சாதி ,மத ,பாலின வன்மத்தை சுமந்து திரியும் மானுடம் கொன்ற மனித உருவங்களையா ?

அம்பேதர் சாதி ,மத ஒடுக்குமுறையின் கொடூர உறைவிடமாய்  ; ஆதிக்கம் , ஏற்ற தாழ்வு மிக்க கிராமங்களைக் கண்டு கொதித்தார்

கிராமங்களின் நகலாய் திரியும் மனித மந்தை உலவும் சந்தையை நகரம் என்று எப்படி அழைப்பது ?

 

சுபொஅ.

 

 

Posted by அகத்தீ Labels:

 



கணணுக்கெடிய தூரம் வரை ஒளிக்கீற்றுத் தெரியவில்லை .

இருட்டு என்பதும் குறைந்த ஒளிதான் ; கொஞ்சம் கொஞ்சமாய் ஒவ்வொன்றாய் புலப்படும் .

தேவை ; கொஞ்சம் நம்பிக்கை ,கொஞ்சம் தைரியம் , நிறைய ஞானம் .

இதுவரை கடந்ததைவிட , பல மடங்கு கொடிய பாதையே நம்முன் விரிகிறது.

முடங்க முடியாது .அடிபணிய முடியாது . முட்டி மோதி நடந்து கொண்டே இரு !

முடிந்தவரை கூட்டம் சேர்த்துக் கொள் ! எல்லோரும் கடைசிவரை வருவார்கள் என எதிர்பார்க்கதே !

அவரவர் சக்திக்கு ஏற்ப , புரிதலுக்கு ஏற்ப வருவதுவரை வரட்டும் !

மயக்கம் தெளியாவிட்டால் மரணம் . மயக்கம் தெளிந்துவிட்டால் விழிப்பு...

நட ... பேசு ... ஓடு ... கத்து .... இன்னும் ... இன்னும் ... இன்னும் ... இன்னும் ....


சுபொஅ.

Posted by அகத்தீ Labels:

 




கீழ்வானில் சூரியன் உதிக்கும் நொடியில்

மெல்ல ஜன்னலில் வந்தமர்ந்து

கொஞ்சிக் கொண்டிருக்கும் ஜோடிப்புறாக்கள்

இரவு சரியாகத் தூங்கி இருக்குமோ ?

 

நேற்று இரவு முழுவதும் தூக்கத்திலும்

விழித்து விழித்து குரைத்த நாய்கள்

விடியும் முன்பே ஓடத்  துவங்கிவிட்டன

என்ன அவசர வேலையோ ? யாரறிவார் ?

 

நிற்காமல் ஊர்ந்து கொண்டே இருந்தன

வரிசை மாறா எறும்புகள்

ஒரு வேளை வானிலை அறிக்கையைக் கேட்டு

தூங்காமல் இடம் பெயர்கிறதோ ?

 

இரவிலும் தூங்கி பகலிலும் தூங்கி

வாழ்வையும் நாட்டையும்

கோட்டை விட்டுக்கொண்டிருக்கிறானே

இந்த பாழும் மனிதன் ....

 

சுபொஅ.

 

 

 

 

Posted by அகத்தீ Labels:

 



’கமலாலயன் : இலக்கிய பெரினா விருது 2016 – சிறப்பு வெளியீடு’ வாசித்தேன் . 133 பக்கங்களில் கமலாலயன் பற்றி ஓர் பருந்துப் பார்வை அறிமுகம் எனில் மிகையல்ல .

 

சிறுகதை ,நாவல் ,மொழிபெயர்ப்பு ,கட்டுரை என பல முனைகளின் அவர் அளித்தப் பங்களிப்பை இந்நூல் பட்டியலிடுகிறது . பாவண்ணன் , உதயஷங்கர் இருவரின் கட்டுரைகளும் கமலாலயனின் காத்திரமானப் பங்களிப்பைச் சொல்கிறது .

 

கமலாலயனின் ‘ நகரப் பருந்துகள்’ எனும் குறுநாவல் இந்நூலுக்கு அழகு சேர்ப்பதோடு கமலாலயனின் சமூக அக்கறையையும் கூர்த்த பார்வையையும் பறை சாற்றுகின்றன . வேலூர் திருவண்ணாமலை மாவட்டங்களில் தனியார் பேருந்துகள் செய்யும் அட்டகாசம் ; அதற்கு துணைபோய் அரசு பேருந்துகளை பழிவாங்கும் காவல்துறையும் நிர்வாகமும் இன்றும் தொடர் கதை . வேலூரில் இது தொடர்பாக நடந்த போராட்டத்தை ரத்தமும் சதையுமாய் பதிவு செய்கிறது இந்நாவல் . மனித உயிரைவிட லாபம்தான் உயிர்நாடியாகிப்போன சமூக அவலத்தின் சாட்சி . இன்னும் சொல்லப் போனால் 1990 களில் நடந்த ஓர் நிகழ்வை உள்ளது உள்ளபடி துல்லியமாய் பதிவு செய்துள்ளது .இதுவும் வரலாறு அன்றி வேறென்ன ?

 

முதுமையின் வலியைச் சொல்லும் ‘ ஓய்ந்தவர்கள்’ சிறுகதையும் , வாழ்க்கை துயரையும் கடவுள் நம்பிக்கையும் சேர்த்து பகடி செய்யும் ஓர் நுட்பமான சிறுகதையும் இதில் இடம் பெற்றுள்ளன .

 

இக்கதைகள் ஏற்கெனவே வெளிவந்தவைதான் . இங்கு இவரின் ஆற்றலை படம்பிடித்துக் காட்ட தரப்பட்டுள்ளது .

 

இத்துடன் இவரின் பன்முகத்தைக் காட்டும் நான்கு கட்டுரைகளும் ஓர் நேர்முகமும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன .இவையாவும்  இவர் விருதுக்கு முற்றிலும் பொருத்தமானவர் என்பதற்கு சாட்சியாகிறது .

 

வாலிபர் சங்கத்தில் தொடங்கிய எங்கள் தோழமை இன்றுவரை அதே உயிர்ப்புடன் தொடர்கிறது . தோழரை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன்.

 

தேநீர் பதிப்பக வெளியீடு .விலை : ரூ140 / தொடர்புக்கு 9080909600.

 

சுபொஅ. 

இரங்கற் குறிப்புகளில்

Posted by அகத்தீ Labels:

 

இரங்கற் குறிப்புகளில்

சொல்லப்படுபவை  எல்லாம்

உண்மைதானேன்று

இறந்தவரா சாட்சி சொல்லுவார்

 

அஞ்சலி உரைகளில்

உள்ளொன்று வைத்து

புறமொன்று பேசப்படவில்லை என

மரித்தவரா மறுமொழி சொல்லப்போகிறார்

 

நினைவுகூரும் சடங்குகளில்

வரலாறு திரிக்கப்படவில்லை என

வாக்குமூலம் தந்திட இறந்தவர்

மீண்டும் வரவா போகிறார் ?

 

மேடைகளில் சொல்லப்படும்

இறந்தவர் பெருமைகள்

பெரும்பாலும் கட்டுக்கதைகளாய்

சிறுத்துப் போனது எப்படி ?

 

நான் கேட்டுக்கொண்டிருந்த போது

இடைமறித்த இறந்தவர்,

 வாழும் போது மட்டும் புகழ்கையில்

உண்மையா பொங்கி வழிகிறது?” 

 

இருப்பவரோ இறந்தவரோ

அவரவர் தேவைக்கு

கூட்டியும் குறைத்தும்

கதை கட்டவேண்டியதுதான் .

 

ஆனாலும் 

அடுத்தவரால் நெய்யப்படும்

வாழ்க்கைக் கதையைவிட

சுயவரலாற்றில் பொய் குறைந்து

உண்மை கொஞ்சம் நெருங்குமல்லவா ?

 

[ சமூக வலைதளங்களில் பட்டி மன்ற பேச்சாளர்களும் ரீல்ஸ் பிரியர்களும் அவிழ்ந்துவிடுகிற பொய் மூட்டைகளுக்கு எதிர்வினையே இது . ]

 

சுபொஅ.