பிரச்சனைகளை டி கோடிங் decoding செய்து பார்த்தால்......

Posted by அகத்தீ Labels:

 




பிரச்சனைகளை டி கோடிங் decoding செய்து பார்த்தால்......

 

மனச்சோர்வு விடைபெற…. : ஓர் உரையாடல்.” என ஒரு கட்டுரையை இங்கு பதிந்திருந்தேன் . அதனை வாசித்த பலர் பாராட்டினர் .சிலர் கேள்வி எழுப்பினர் . கேள்விகள் எப்போதும் எனக்குப் பிடித்தமானவை . அதில் ஒரு கேள்வியை முன்வைத்து இன்றைக்குப் பேசலாம் எனக் கருதுகிறேன் .

 

“நாம் என்னதான் யோசித்துத் திட்டமிட்டுச் செய்தாலும் எதிர்பாராமல் ஏதேனும் நடந்து நம் முயற்சிகள் எல்லாம் வீணாகிவிடுகின்றனவே , இதனை விதி என்றோ தலையெழுத்து என்றோ  சொல்லாமல் வேறெப்படி புரிந்து கொள்வது ?”

 

யதார்த்தமான நியாயமான கேள்வி . ஒவ்வொருவரும் தம் வாழ்வில் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களை நிறையவே எதிர்கொண்டிருப்பீர்கள் . இன்னும் சொல்லப்போனால் சிறிதாகவோ பெரிதாகவோ இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களை எதிர்கொள்ளாதவர்களே இருக்க மாட்டார்கள் .

 

கடன் வாங்காமல் பட்ஜெட் பத்மநாபன் போல் மிகமிகச் சிக்கனமாக வாழ்பவர் . அவருக்கு கஞ்சன் என்றே வீட்டில் கெட்ட பெயர் . மனைவி பிள்ளைகளுக்கு எல்லாம்கூட அவர் மேல் கோபம் . சினிமாவுக்கு போகும் போதுகூட பட்ஜெட்டுக்குள் அடக்குபவர் . அவர் வீட்டில் அப்பாவுக்கு திடீரென ஓர் விபத்து . மருத்துவச் செலவு எகிறுகிறது . கடன் வாங்க நேர்கிறது .

 

இது விதியா ? தலை எழுத்தா ? இல்லை நம் குடும்ப பட்ஜெட்டில் எதிர்பாரா மருத்துவச் செலவு , கல்விச் செலவு ,வருங்காலத்துக்கான சேமிப்பு இவற்றுக்கான ஒதுக்கீடு செய்யும் அளவு வருமானம் இல்லை என்பதுதானே உண்மை . மருத்துவம் இலவசம் என்கிற அரசியல் சூழலும் இல்லை .நம் வருமானம் வாய்க்கும் வயிற்றுக்குமே சரியாய் போகையில் எதிர்காலத் திட்டமிடல் சாத்தியமாகுமா ? விலைவாசி ஏறிக்கொண்டே இருக்க வருவாய் அதற்கொப்பக் கூடாமல்த் தேங்கும் சூழலில் ,வருவாயில் முப்பது சதம்  குறைந்தது இருபது சதம் சேமியுங்கள் என்று சொல்லலாம் ஆனால் நடைமுறையில் சாத்தியமா ? சமூக அரசியல் சூழலிலின் நெருக்கடியைப் பற்றி யோசிக்காமல் விதி ,தலையெழுத்து என பேசி தப்பிக்க இயலுமா ?

 

ஒரு வேலைக்கான இண்டர்வியூவுக்குப் போக ரயிலில் டிக்கெட் போட்டிருந்தான் . திடீரென ஏற்பட்ட ரயில் விபத்தால் போக்குவரத்து முடங்கிப் போய்விட்டது . அவனால் போக முடியவில்லை . தன் தலை எழுத்து என நொந்து கொள்கிறான் . உண்மையில் இது ஒரு தற்செயல் நிகழ்வு . பஸ் ,விமானம் ,கார் என மாற்று பயண ஏற்பாட்டை முயற்சி செய்ய அவன் முயலாமல் இருந்திருக்கலாம் . அல்லது அதற்கான பண ஏற்பாடு முடங்கி இருக்கலாம் .அதற்கான நேரம் கடந்திருக்கலாம் .வாய்ப்பு இல்லாமல் இருக்கலாம் . சம்மந்தப்பட்ட நிறுவனத்தோடு தொடர்பு கொண்டு சூழலை விளக்கி மறுவாய்ப்பு பெற முயற்சித்திருக்கலாம் . ஒரு வேளை எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டிருக்கலாம் . இது எதிர்பாரா நெருக்கடி . தற்காலிகப் பின்னடைவு . அடுத்து முயன்று முன்னேறுவதுதான் தீர்வு .விதி ,தலையெழுத்து ,நம்ம நேரம் சரியில்லை என முடங்கிவிட முடியாது .

 

Breadwinner என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் , தன் ஒற்றைச் சம்பாத்தியத்தால் குடும்பத்தையே காப்பாற்றுகிறவர் என்று சொல்லப்படுகிற குடும்பத் தலைவர் எதிர்பாரா விபத்தில் மரணித்துவிடுக்கிறார் . பேரிழப்பு . ஈடு செய்வது மிகச் சிரமம் .

 

 நம்ம விதி அப்படி ,நம்ம தலயில அப்படி எழுதியிருக்கு ,நம்ம பொறந்தநேரம் அப்படி போன்ற சொற்கள் கண்ணீருக்கும் அழுகைக்கும் சொல்லப்படுகிற தற்காலிக சமாதானங்களே தவிர தீர்வல்ல . வாழ்க்கை முட்டுச் சந்தில் சிக்கிக் கொண்டதுபோல் ஆகலாம் .அதற்காக அங்கேயே தேங்கிவிட முடியுமா ?வாழ்க்கை என்பது முட்டுசந்தல்ல ; முடங்கி நிற்க ; பயணப் பாதையை மாற்றி நடக்கும் நேரம் . அவ்வளவுதான்.

 

இப்படிச் சொல்லிக் கொண்டே போக முடியும் விபத்துகளும் தற்செயல் நிகழ்வுகளும் வாழ்க்கை நெடுக குறுக்கிட்டுக்கொண்டே இருக்கும் . அப்போது வலியில் துடிப்போம் . அந்நேரம் வலி நிவாரணி போல் ஒரு சில சொற்கள் பயன்படலாம் .ஆயின் அது முடிவல்ல .தீர்வல்ல.அங்கேயே வாழ்க்கை தேங்கிவிடாது .

 

தனக்கு மட்டுமே இப்படி நிகழ்வதாக நினைத்து வருந்தலாம் . ஆனால் ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு சந்தர்ப்பத்தில் அல்லது இன்னொரு சந்தர்ப்பத்தில் இதுபோல் நிகழ்ந்திருக்கும் . ஆக , உலக ஞானம்தான் இந்த அறியாமையிலிருந்து விடுதலை தரும் .

 

ஒரு பழைய பாடல் நினைவிற்கு வந்தது

 

 “ஆ ஈன மழை பொழிய இல்லம் வீழ

    அகமுடையாள் மெய் நோவ அடிமை சாக

     மாஈரம் போகுதென்று விதை கொண்டு ஓட

     வழியிலே கடன்காரர் மறித்துக்கொள்ள

      சாவோலை கொண்டொருவன் எதிரே வர

      தள்ளவொணா விருந்து வர சர்ப்பம் தீண்ட

      கோவேந்தர் உழுதுண்ட கடனைக் கேட்க

     குருக்களோ தட்சணைகள் கொடு என்றாரே” 

 

பாடலின் பொருள் நம்மை அதிரவைக்கும் . மிகவும் சோகம் ததும்பும் கதையைச் சொல்லும் . ஒருவன் வீட்டில் பசுமாடு கன்று போட்டிருந்ததாம். அது மகிழ்ச்சிதான் எனினும் மாடு வைத்திருப்பவர்களுக்கு இந்த அவஸ்தை உடனே புரியும். ஏனெனில் அப்போது வீடே நச நச என இருக்கும். வெள்ளம் புகுந்த வீடு மாதிரி இருக்கும். அப்போது மழையும் விடாமல் பெய்து கொண்டிருந்தால் நிலை கேட்கவே வேண்டாம் .அந்நேரம் பார்த்து மனைவிக்கு உடம்பு சரியில்லை எனில் வீடே நாறிப்போய்விடும். சட்டென்று வீடும் இடிந்து விழுந்து விட்டால் கேட்கவும் வேண்டுமா துயரம் . வீட்டு வேலைக்காரும் வரவில்லை , விசாரித்தால் அவரும் செத்துவிட்டாராம் ..  கிடப்பது கிடக்கட்டும் நமது வயலுக்கு இப்போது தண்ணீர் / ஈரம் உள்ள நேரம் ஆதலால் விதைப்போம் என்று வயல்வெளிக்கு ஓடியபோது ;  வழியில் கடன்காரர் மறித்துக்கொண்டால் எப்படி இருக்கும் ? அந்தநேரம் பார்த்து. நெருங்கிய உறவினர் இறந்துவிட்டார் என்று சாவோலை  வந்தால் அழுவதற்கும் நேரம் இருக்குமா . இப்படி நிலை இருக்க மறுக்கவே முடியாத சொந்தக்காரர் ஒருவர் திடீரென விருந்துக்கு வந்துவிட்டாராம். வீட்டில் ஒருவரை பாம்பும் தீண்டிவிட்டதாம். எதைப்பற்றியும் யோசிக்காமல் விவசாயத்துக்கு வாங்கிய கடனைத் திருப்பிக் கேட்டு வாசலில் நின்றனர் ஆட்சியாளர்கள். நேரம் காலம் தெரியாமல்  குருக்கள் எனக்கு சேரவேண்டிய தட்சணை கொடு என்று அடம் பிடித்தாராம் !

 

சும்மா கற்பனைதான் எனினும் இப்படி அடுக்கடுக்காகத் துன்பம் படை எடுப்பது வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் விவகாரம்தானே ! இது மனித குலத்துக்கான பொது விதி . ஆயிண் இப்பாடலைக் கூர்ந்து கவனித்தால் புரியும் ;  ஓர் ஆட்சி மக்கள் நலனைப் பற்றி கவலைப்படுகிற ஆட்சியாக இருப்பின் இதில் சொல்லப்பட்ட பல பிரச்சனைகளே அல்ல .இன்றைய பாணியில் சொல்வதாயின் டி கோடிங் decoding செய்து பார்த்தால் பிரச்சனைகளை எளிதாய் புரிந்து கொள்ளலாம் ; தீர்வின் நுனி கையில் அகப்படும் . 

 

எனவே விதியென்றோ தலையெழுத்தென்றோ எதையும் எண்ணி முடங்க வேண்டியதில்லை .சிலவற்றின் காரணம் பளிச்செனப் புலப்படும் .சிலவற்றின் காரணம் உடனே புலப்படாது . தற்செயலாகவோ விபத்தாகவோ இருக்கலாம் ; அல்லது நாம் யோசிக்கத் தவறிய புதிய கோணமாக இருக்கலாம் .புதிய சவாலாக இருக்கக்கூடும் . 

 

விதி ,தலையெழுத்து என சோர்ந்து கிடந்தால் பிரச்சனையிலிருந்து வெளியேறவே முடியாது .கவலையே கொன்றழித்து தின்றுவிடும் . மனதை தைரியமாக்கிக் கொண்டு இதிலிருந்து மீள்வது எப்படி என யோசிக்கத் தொடங்கினால் , முயற்சியைத் தொடங்கினால் தொலைதூரத்திலேனும் வெளிச்சம் புலப்படும் . விடாப்பிடியாக நகர்ந்து நெருங்கலாம் .பிரச்சனைகளைக் கண்டு பயந்து ஓடாமல் ; மனோதைரியத்துடன் எதிர்கொள்வதுதான் நம்முன் உள்ள ஆகச் சிறந்த வழி .

 

 

Natarajan Narayanaswamy என்பவர் என் பதிவொன்றில் சொல்லி இருக்கிறார் ,” கம்யுனிசம் ஒரு கானல் நீர். அதை ரசிக்கலாம். நடைமுறை வாழ்க்கைக்கு ஒவ்வாதது.” இதற்கு விரைவில் பதில் சொல்ல முயல்வேன்….

 

சு.பொ.அகத்தியலிங்கம்

01 /06 /26 .

 

 

 

 

 

 

l

 

 

 

சொடலி ...சொடலி...

Posted by அகத்தீ Labels:

 

சொடலி ...சொடலி...




இந்நூலைப் பற்றி ‘ அருவாள் தேசத்திலிருந்து…’ என்ற தன்னுரையில்  வசந்தி முனீஸ் சரியாகச் சொல்கிறார் ; “ எங்கள் ஊர் இருட்டுக்கடை அல்வாவை எல்லோரும் சப்புக் கொட்டிச் சுவைத்திருப்பீர்கள் .ஆனால் , எங்கள் அருவாள் தேசத்தின் அட்டூழியங்களையும் அக்கிரமங்களையும் அநியாயங்களையும் அத்துமீறல்களையும் தோலுரித்துக் காட்டுவாள் என் ‘சொடலி’. “ 

 

இப்படி தன் பிறந்த மாவட்டத்தை சுயவிமர்சனமாய்ச் சொல்ல -அதுவும் ‘அருவாள் தேசமென..’ தலைப்பிலேயே சொல்ல ; மனோ தைரியம் ரொம்ப வேண்டும் . ஆழமான சமூகக் கோபம் இருக்க வேண்டும்.  வசந்தி முனீஸூக்கு இவை அதிகமாக உள்ளது. நூலை வாசித்தால் புரியும்.

 

“ ‘சொடலி’ கதை வெறும் பழிவாங்கல் கதையல்ல ; அது ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் கூட்டு மனசாட்சியின்வெடிப்பு.” என்கிறார் அணிந்துரையில் பிறைமதி குப்புசாமி . இது கவனத்தில் கொள்ள வேண்டிய அவதானிப்பு .

 

எட்டு கதைகள் . எட்டு கொடுமைகளை தோலுரிக்கிறது .எதுவும் வெறும் கற்பனையின் படைப்பல்ல . நாட்டில் நடக்கும் அநீதிகளுக்கு கதாசிரியர் ஓர் கதை வடிவம் கொடுத்து ஒரு கோவப் பார்வையை வீசி இருக்கிறார் .

 

ஆணவக்கொலை ,சாதிவெறி .ஆணாதிக்கம் இவற்றையும்   மதநல்லிணக்கம் , மனிதம் ,பேரன்பு இவைகளையும்  உரக்க வெளிப்படுத்துகிற கதைகள் இவை .சொடலி , வரிப்பணம் , முனியாண்டிக்கு ஸ்தோத்திரம் போன்ற கதைகள் என்னை பெரிதும் ஈர்த்தன . நாட்டார் தெய்வங்களின் வரலாற்றுக் கதை நூலாசிரியருக்கு மிகவும் பிடித்த ஒன்று என நினைக்கிறேன் . சொடலி அதன் வெளிப்பாடுதானோ !

 

சமூகக் கோபம் நியாயம் . கிராமத்து மொழி நன்று . தொடர்ந்து எழுத்துப் பணியில் ஈடுபட்டுவருபவர்  வசந்தி முனீஸ் . 'விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை ‘ என்கிற பாரதிதாசன் வரிகளையும் உள்வாங்கி ,  சிறந்த கதை சொல்லியாய்  காலவெளியில் பரிணமிப்பார் என்பதில் ஐயமில்லை .

 

சொடலி [ சிறுகதைத் தொகுப்பு , ஆசிரியர் : வசந்தி முனீஸ் , கேலக்ஸி நூல் பதிப்பகம் & விற்பனையகம் , தொடர்புக்கு :  galaxybs2022@gmail.com , 99944 34432 , பக்கங்கள் : 125 , விலை : ரூ.165 /

 

 

சுபொஅ.

28 /06 /26.

மனச்சோர்வு விடைபெற ... : ஓர் உரையாடல் .

Posted by அகத்தீ Labels:

 





மனச்சோர்வு விடைபெற ... : ஓர் உரையாடல் .

 

மார்க்சிய தொகுப்பு நூல்களை  வாசிக்கத் தொடங்கியதும் என் மனச் சோர்வு விடை பெற்றதாக  25 /05 /26 பதிவிட்டேன் . அலைபேசியில் ஓர் அன்பர் அழைத்தார் .

 

“ பொய் சொல்லாதீங்க தோழர் ! மார்க்சிய நூல்களைப் படித்தால் மண்டைதான் காயும் . வறட்டு்ப் புரட்சி கோஷங்கள் முழங்கலாம் ! அது ஓர் அரசியல் சித்தாந்தம் அவ்வளவுதான் .மன அமைதிக்கு பகவத்கீதை படியுங்கள் ! குரான் படியுங்கள் ! பைபிள் படியுங்கள் ! கிரந்த சாஹிப் படியுங்கள் ! தம்ம பதம் படியுங்கள் ! தேவாரம் ,திருவாசகம் ,திவ்ய பிரபந்தம் . திருமந்திரம் ,திருஅருட்பா ஏதேனும் படியுங்கள் !....” என நீண்ட பட்டியல் வாசித்தார் . “ கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம்’  நூலை வாசிக்கச் சொல்லி முடித்தார். 

 

 

அத்தோடு நில்லாமல் , “ வேண்டுமானால் உளவியல் வல்லுநரை கலந்து அறிவுரை பெறலாம் ... மார்க்சியம் ஓர் வறட்டு பொருளாதார , வறட்டு அறிவியல் சித்தாந்தம் அவ்வளவுதான்...” என்று பொரிந்தார் .

 

நெடுநாள் நண்பர் , என்னிலும் வயது மூத்தவர் எனவே நான் அவர் சொல்வதற்குப் பொறுமையாக  முழுவதுமாகக் காதுகொடுத்துவிட்டு என் கருத்தைச் சொல்ல ஆரம்பித்தேன் . இடைமறித்து அவரே பேசினார் ,

 

“ தோழரே ! உங்கள் கம்யூனிச விளக்கங்களைக் கேட்டுக்கேட்டு காது புளித்துவிட்டது ... வயதான காலத்திலாவது அமைதியாக இருக்கட்டும் என்கிற நல்லெண்ணத்தால் உங்களுக்கு சில ஆலோசனைகளைச் சொன்னேன் கேட்டால் கேளுங்கள் இல்லாவிட்டால் எப்படியும் நாசமாய்ப் போங்கள்...”

 

ஆனமீகவாதிகள் எப்போதும் அடுத்தவன் என்ன சொல்ல வருகிறான் என்பதைக்கூட அறிந்துகொள்ளும் பொறுமை அறவே இல்லாதவர்கள் . இதனை பலமுறை அனுபவித்துள்ளேன்.

 

சரி ! போகட்டும் ! நான் உங்களிடம் கொஞ்சம் பேசலாம் அல்லவா ?

 

ஒருவர் சிரமத்தில் சிக்கலில் இருக்கும் போது அவருக்கு ஆன்மீகவாதிகள் சொல்லும் ஆறுதல்களைக் கொஞ்சம் அசைபோடுங்கள் .

 

 “ நீங்க புழுபூச்சிக்குகூட தீங்கு நினைக்காத ஆளு ... உங்களுக்கா இப்படி ஒரு நிலை .... உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் ... கவலைப் படாதீங்க .... வாழ்க்கை ஒரு சக்கரம்தான் மேல இருக்கிறவன் ஒருநாள் கீழே வந்திடுவான் ... கீழே இருக்கிறவன் நிச்சயம் மேல போவான் .... நம்பிக்கையோடு பகவான இறுகப் பிடிச்சுக்கோங்க ... நமக்கெல்லாம் அவன்தான் துணை...”

 

தொழுகை , பிரார்த்தனை ,ஜெபம் ,துவா என அவரவர் மதநம்பிக்கைகளுக்கு ஏற்ப சொற்கள் மாறும் ; உபதேசங்கள் கொஞ்சம் வேறுபடும் . பைபிள் அல்லது குரானை வாசித்தும் காட்டக்கூடும்.

 

“ நீங்க கும்பிடுற தெய்வம் உங்களைக் கைவிட்டுவிடாது...”

 

“ ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான் . கெட்டவங்களுக்கு கொடுப்பான் கைவிட்டுவிடுவான்...” என  ரஜினி ஸ்டைலில் சொல்லுவோர் உண்டு .

 

“ விதி வலியது அதனை யாராலும் வெல்ல முடியாது பாண்டவாளப் பார்க்கலையோ சீத்தாராமனைத்தான் பிரிக்கலையோ...” கண்ணதாசன் பாட்டை நினைவூட்டுவோர் உண்டு .

 

“ உங்களுக்கு மட்டும் ஏன் தொடர்ந்து ஏதாவது ஒண்ணுக்கு மேல ஒண்ணா கஷ்டம் வந்துகிட்டே இருக்கு ... நேரம் சரியில்ல போல ... எதுக்கும் திருநள்ளாறுக்கு ஒரு எட்டு போய்ட்டு வந்துருங்க...”

 

“ ஏதோ ஒரு தோஷம் உங்களப் போட்டு வாட்டி வதைக்குது ... மனுஷாள நம்ப முடியாது தெய்வத்தை நம்புங்க ... எதுக்கும் 48 நாட்கள் அம்மன் சன்னதியில் நெய்தீபம் ஏற்றுங்க ...கூடவே குலதெய்வம் கோயிலுக்கும் போய் வந்துருங்க...”

 

 “ வேறொண்ணுமில்ல குருபெயர்ச்சி உங்களுக்கு சாதகமா இல்லை ... கொஞ்சம் கஷ்டத்தைக் கொடுக்கத்தான் செய்யும் ... ஆனால் அது நல்லதுக்குத்தான் ... வட்டியும் முதலுமாய் சந்தோஷமான செய்தி சித்திரைக்குப் பிறகு நிச்சயம் வரும் ... எதுக்கும் திருப்பதிக்குப் போய் மொட்டை போட்டு அங்கபிரதட்சணம் செய்திட்டு வந்திடுங்க...”

 

அப்பப்பா ! எத்தனை யோசனைகள் ? எத்தனை சிபாரிசுகள் ?

எல்லாம் அப்போது சற்று ஆசுவாசமாய் இருக்கலாம் . ஒத்தடம் கொடுத்தது போல் இதமாய் இருக்கலாம் . கொஞ்சம் போதை அடித்ததுபோல் மனசு லேசாகலாம் . ஆனால் எல்லாம் கொஞ்ச நேரம்தான் .பரிகாரம் ,சடங்கு ,பூஜை , யாத்திரை ,ஜோதிடம் என மேலும் காசு கரையலாம் .கடனாளி ஆகலாம்.ஜோதிடம் என்பதும் பரிகாரம் என்பதும் ஒரு விதமான ஏமாற்றே . மன வலிமை அற்றவர்களை எளிதில் வீழ்த்திவிடும் . இதனால் வாழ்வைத் தொலைத்தவர்களே அதிகம்.

 

 

 

கடைசியில் , “ அந்த ஆண்டவனுக்கும் கண்ணில்லை” என மனம் நொந்து புலம்பலாம் . இதற்கிடையில் காலம் கடந்து போவதால் அந்த கஷ்டம் பழகிப் போயிருக்கும் . அதைவிட பெரிய இன்னொரு கஷ்டம் வந்திருக்கும் . கவனம் முழுக்க அந்தப் பக்கம் திரும்பி இருக்கும் .

 

இப்படித்தான் வாழ்க்கையை கடத்திக் கொண்டிருக்கிறான் சாதாரண மனுஷன்.

 

ஆன்மீகம் வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவனுக்கு இளைப்பாறுதல் தருமே ஒழிய விடுதலையை ஒரு போதும் தராது .

 

மத ஆன்மீக போதனைகள் ஒரு கற்பனை மயக்கத்தை போதிக்குமே தவிர மண்ணில் காலூன்றி விருட்சமாக வளர ஒரு போதும் வழிகாட்டுவதில்லை .

 

 “ இதெல்லாம் ரொம்ப மேலோட்டமானவை . அவர் உங்களுக்கு சிபாரிசு செய்த நூல்கள் தத்துவ வழிகாட்டல் அல்லவா ? அதற்கென்ன பதில் ?”என நீங்கள் கேட்கக்கூடும் . 

 

“ நான் அவர் குறிப்பிட்ட நூல்களை பலமுறை வாசித்துள்ளேன் . பகவத் கீதை குறித்து ‘ கீதை தரும் மயக்கம்’ன்னு நூலே எழுதி இருக்கேன் . பைபிள் ,குரான்,தம்மபதம் வாசித்துள்ளேன் . கிரந்த சாஹிப் வாசித்ததில்லை . பக்தி இலக்கியங்கள் வாசித்துள்ளேன் . மனனம் செய்த பாடல்களும் உண்டு . மற்றபடி “ போதை ஏறிய தத்துவ விசாரமே   எனக் கருத்துமுதல்வாதிகள் பற்றி மார்க்ஸ் கூறிய சொற்றொடர்தான் நினைவுக்கு வருகிறது

 

சரி ! கஷ்டப் படுகிறவனுக்கு மார்க்சியம் என்ன வழிகாட்டும் ?

 

ஒரு மார்க்சிஸ்ட் ஒருவனின் துயரம் கண்டு மெய்யாகவே மனவருத்தம் கொள்வார் .அதனை அவரோடு பகிர்ந்து கொள்வார் . தோள் அணைப்பார் .

 

“ கவலைப்படாதே ! நாங்களெல்லாம் இருக்கோமில்ல பார்த்துக்கலாம் ...” என தோள் கொடுப்பார் . அவர் பிரச்சனைகளை பொறுமையாகக் காதுகொடுத்துக் கேட்டறிவார் .மனம் திறந்து அவரோடு உரையாடுவார் . தன்னால் முடிந்தவரை அவருடன் நின்று பிரச்சனைகளை எதிர்கொள்ள உதவுவார் . அதே சமயம் ஒவ்வொருவரும் அவரவர் பிரச்சனையை அவரவர்தானே துணிவுடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ள வேண்டுமென உணர்த்துவார் .

 

சிக்கலில் சிக்கிக் கொண்டவரை மீட்பது எப்படி ? உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன ? தொலை நோக்கில் செய்ய வேண்டியது என்ன ? சுயவிமர்சனமாய் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டியவை எவை ? கொஞ்சம் கறாராய் கண்டித்து விமர்சித்து திருத்த வேண்டியவை எவை ? இப்படி எல்லா கோணத்திலும் அலசி ஆய்ந்து தீர்வை நோக்கி நெருங்க முயலுவதும் ; அதற்குப் போராட நம்பிக்கை ஊட்டுவதுதான் மார்க்சிஸ்டுகள் வழி .

 

 “ அரசியல் நடத்தவும் குடும்பம் நட்த்தவும் அறிவியல் தேவை” என்ற சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அடியொற்றி நிறைய பேசப்பட வேண்டும் .எழுதப்பட வேண்டும் .

 

இங்கே நான் பதிவிட்டிருப்பதை அந்த அன்பர் நிச்சயம் வாசிப்பார் . ஆயினும் அவர் என் கருத்தோடு உடன்பட மாட்டார் .நான் அவரோடு உடன்பட இயலாது .அவருக்கு நானோ எனக்கு அவரோ எதிரிகளல்ல ; ஏனெனில் அவர் நடைமுறையில்  மதவெறிக்கு எதிரானவர் . அந்த ஒற்றைப் புள்ளியில் இணைந்திருக்கிறோம். உரையாடுவோம் தொடர்ந்து ....

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

26 /05 /26 .

 

 

 

Posted by அகத்தீ Labels:

 




ஒட்டடை அடித்துக் கொண்டே இருக்கிறோம்

ஒட்டடை சேர்ந்து கொண்டே இருக்கிறது

ஒவ்வொருமுறை வீட்டை சுத்தம் செய்யும் போதும்

வேண்டாத பொருட்கள் மூட்டையாகக் கிடைக்கிறது

வீட்டைக் காலையில்தான் பெருக்கினோம்

மாலையில் குப்பையாக் கிடக்கிறது

உடையோ உடலோ உள்ளமோ மீண்டும் மீண்டும்

அழுக்காகிக் கொண்டே இருக்கிறது

சாக்கடையும் சந்தணமும் கலந்ததுதான் வாழ்க்கை

சுத்தம் செய்துகொண்டே இருந்தால்தான்

சந்தணத்தின் வாசத்தை நுகர முடியும் ! தோழா !

 

சுபொஅ.