Posted by அகத்தீ Labels:

 




கீழ்வானில் சூரியன் உதிக்கும் நொடியில்

மெல்ல ஜன்னலில் வந்தமர்ந்து

கொஞ்சிக் கொண்டிருக்கும் ஜோடிப்புறாக்கள்

இரவு சரியாகத் தூங்கி இருக்குமோ ?

 

நேற்று இரவு முழுவதும் தூக்கத்திலும்

விழித்து விழித்து குரைத்த நாய்கள்

விடியும் முன்பே ஓடத்  துவங்கிவிட்டன

என்ன அவசர வேலையோ ? யாரறிவார் ?

 

நிற்காமல் ஊர்ந்து கொண்டே இருந்தன

வரிசை மாறா எறும்புகள்

ஒரு வேளை வானிலை அறிக்கையைக் கேட்டு

தூங்காமல் இடம் பெயர்கிறதோ ?

 

இரவிலும் தூங்கி பகலிலும் தூங்கி

வாழ்வையும் நாட்டையும்

கோட்டை விட்டுக்கொண்டிருக்கிறானே

இந்த பாழும் மனிதன் ....

 

சுபொஅ.

 

 

 

 

Posted by அகத்தீ Labels:

 



’கமலாலயன் : இலக்கிய பெரினா விருது 2016 – சிறப்பு வெளியீடு’ வாசித்தேன் . 133 பக்கங்களில் கமலாலயன் பற்றி ஓர் பருந்துப் பார்வை அறிமுகம் எனில் மிகையல்ல .

 

சிறுகதை ,நாவல் ,மொழிபெயர்ப்பு ,கட்டுரை என பல முனைகளின் அவர் அளித்தப் பங்களிப்பை இந்நூல் பட்டியலிடுகிறது . பாவண்ணன் , உதயஷங்கர் இருவரின் கட்டுரைகளும் கமலாலயனின் காத்திரமானப் பங்களிப்பைச் சொல்கிறது .

 

கமலாலயனின் ‘ நகரப் பருந்துகள்’ எனும் குறுநாவல் இந்நூலுக்கு அழகு சேர்ப்பதோடு கமலாலயனின் சமூக அக்கறையையும் கூர்த்த பார்வையையும் பறை சாற்றுகின்றன . வேலூர் திருவண்ணாமலை மாவட்டங்களில் தனியார் பேருந்துகள் செய்யும் அட்டகாசம் ; அதற்கு துணைபோய் அரசு பேருந்துகளை பழிவாங்கும் காவல்துறையும் நிர்வாகமும் இன்றும் தொடர் கதை . வேலூரில் இது தொடர்பாக நடந்த போராட்டத்தை ரத்தமும் சதையுமாய் பதிவு செய்கிறது இந்நாவல் . மனித உயிரைவிட லாபம்தான் உயிர்நாடியாகிப்போன சமூக அவலத்தின் சாட்சி . இன்னும் சொல்லப் போனால் 1990 களில் நடந்த ஓர் நிகழ்வை உள்ளது உள்ளபடி துல்லியமாய் பதிவு செய்துள்ளது .இதுவும் வரலாறு அன்றி வேறென்ன ?

 

முதுமையின் வலியைச் சொல்லும் ‘ ஓய்ந்தவர்கள்’ சிறுகதையும் , வாழ்க்கை துயரையும் கடவுள் நம்பிக்கையும் சேர்த்து பகடி செய்யும் ஓர் நுட்பமான சிறுகதையும் இதில் இடம் பெற்றுள்ளன .

 

இக்கதைகள் ஏற்கெனவே வெளிவந்தவைதான் . இங்கு இவரின் ஆற்றலை படம்பிடித்துக் காட்ட தரப்பட்டுள்ளது .

 

இத்துடன் இவரின் பன்முகத்தைக் காட்டும் நான்கு கட்டுரைகளும் ஓர் நேர்முகமும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன .இவையாவும்  இவர் விருதுக்கு முற்றிலும் பொருத்தமானவர் என்பதற்கு சாட்சியாகிறது .

 

வாலிபர் சங்கத்தில் தொடங்கிய எங்கள் தோழமை இன்றுவரை அதே உயிர்ப்புடன் தொடர்கிறது . தோழரை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன்.

 

தேநீர் பதிப்பக வெளியீடு .விலை : ரூ140 / தொடர்புக்கு 9080909600.

 

சுபொஅ. 

இரங்கற் குறிப்புகளில்

Posted by அகத்தீ Labels:

 

இரங்கற் குறிப்புகளில்

சொல்லப்படுபவை  எல்லாம்

உண்மைதானேன்று

இறந்தவரா சாட்சி சொல்லுவார்

 

அஞ்சலி உரைகளில்

உள்ளொன்று வைத்து

புறமொன்று பேசப்படவில்லை என

மரித்தவரா மறுமொழி சொல்லப்போகிறார்

 

நினைவுகூரும் சடங்குகளில்

வரலாறு திரிக்கப்படவில்லை என

வாக்குமூலம் தந்திட இறந்தவர்

மீண்டும் வரவா போகிறார் ?

 

மேடைகளில் சொல்லப்படும்

இறந்தவர் பெருமைகள்

பெரும்பாலும் கட்டுக்கதைகளாய்

சிறுத்துப் போனது எப்படி ?

 

நான் கேட்டுக்கொண்டிருந்த போது

இடைமறித்த இறந்தவர்,

 வாழும் போது மட்டும் புகழ்கையில்

உண்மையா பொங்கி வழிகிறது?” 

 

இருப்பவரோ இறந்தவரோ

அவரவர் தேவைக்கு

கூட்டியும் குறைத்தும்

கதை கட்டவேண்டியதுதான் .

 

ஆனாலும் 

அடுத்தவரால் நெய்யப்படும்

வாழ்க்கைக் கதையைவிட

சுயவரலாற்றில் பொய் குறைந்து

உண்மை கொஞ்சம் நெருங்குமல்லவா ?

 

[ சமூக வலைதளங்களில் பட்டி மன்ற பேச்சாளர்களும் ரீல்ஸ் பிரியர்களும் அவிழ்ந்துவிடுகிற பொய் மூட்டைகளுக்கு எதிர்வினையே இது . ]

 

சுபொஅ.

 

விஷ வேர் சமூகம் நெடுக விஷப் பார்த்தீனியமாய்…

Posted by அகத்தீ Labels:

 



பாலியல் வன்கொடுமை :

விஷ வேர் சமூகம் நெடுக விஷப் பார்த்தீனியமாய்…

 

’தப்பு’ நாவலைத் தாமதமாகவே படிக்க வாய்ப்பு கிடைத்தது ஆயின் சரியானதைப் படித்தேன் என உறுதியாகச் சொல்லலாம் . கதை நேர்கோட்டுப் பாதையில் எளிமையாய்ச் செல்கிறது . திருப்பங்களும் இயல்பு போக்கிலேயே நடக்கிறது. தப்பு ஓரிடத்தில் மட்டுமே இல்லை திரும்பகிற இடமெல்லாம் தப்பு ,தப்பு ,தப்பு ,தப்பு ,தப்பு …..

 

ஒரு மகளிர் காவல் நிலையத்துக்கு வரும் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு . முதலில் குழந்தை மீதான பாலியல் வன்முறை என்ற வகையில் தொடங்குகிறது . பின் 28 வயதுப் பெண் என நகர்கிறது .பெண்ணின் பெயர் சின்னப் பொண்ணு   அவள் மனநிலைப் பிறந்தவள் என காணப்பட்டு , அதன் பின் அவள் வயிற்றில் ஏழுமாதக் கர்ப்பமோடு இருப்பதைச் சொல்லி , அப்புறம் அக்குழந்தை வயிற்றில் செத்து இருப்பதை கண்டுபிடித்து … இப்படி நாவல் சிக்கல் மேல் சிக்கலாக நகருகிறது . குற்றவாளி யார் என்பதுதான் சஸ்பென்ஸ் . இது கிரைம் நாவல் அல்ல .சமூக நாவல் . சமூகத்தை ஸ்கேன் செய்து காட்டும் நாவல் .

 

கிட்டத்தட்ட நாவல் முழுவதும் ஆய்வாளர் மனோன்மணியம் பார்வையில் நகர்கிறது . நாவல் நெடுக மனிதர்களுக்குள் இருக்கும் வன்மமும் போலித்தனமும் தோலுரிக்கப்பட்டுக்கொண்டே கதை நகர்கிறது .

 

காவல்துறை ,அரசு மருத்துவமனை இவற்றின் செயல்பாடு அன்றாடம் சமூக வாழ்வோடு நெருங்கி இருப்பதால் . இவற்றின் மீது எல்லோருக்கும் எரிச்சலும் கோபமும் இருக்கும் . அதற்கான நியாயமும் உண்டு . பணம் ,அதிகாரம் ,சாதி ,மதம் , அரசியல் செல்வாக்கு இவற்றின் கோரப்பிடி இங்கு வலுவாகவே உண்டு .

 

இங்கேயும் மனித இதயமும் , நீதி நேர்மைமீது பசிதாகமும் கொண்டவர்கள் இருக்கிறார்கள் . இங்குள்ள ஊழியர்கள் ,டாக்டர்கள் ,காவல்துறையினர்  படும்பாட்டை இந்நாவல் காட்டுகிறது .கிராமமோ நகரமோ தோற்றத்தைக் கண்டோ , பேச்சைக் கேட்டோ ஒருத்தரை எடை போட்டுவிட முடிவதில்லை .ஒவ்வொரு மனிதருக்குள்ளும் புதைந்து கிடக்கும் ரகசியங்களும் உண்மைகளும் மிகவும் ஆழமானவை . குரூரமானவை .அருவருப்பனவைகூட .கசப்பானவைம்தான் .

 

பாலியல் குற்றவாளி யார் ? அவர் தண்டிக்கப்பட்டாரா ? நாவலை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள் . ‘ தப்பு’ என உன் ஒற்றை விரல் பிறரை நோக்கி நீளும் போது ஏனைய நான்கு விரல்களும் உன்னை நோக்கி நீள்கிறது . பாலியல் வன்கொடுமை பெரும் அநீதி . அயோக்கியத்தனம் . ஆயின் அதன் விஷ வேர் சமூகம் நெடுக விஷப் பார்த்தீனியமாய் விரவிக் கிடப்பதை இந்நாவல் அழுத்தமாய்ப் பதிவு செய்கிறது . 24 வது அத்தியாயத்தின் மனோத்த்துவ மருத்துவரோட உரையாடல் நாவல் வாசிக்கிறவர்களையும் குற்றவாளிக் கூண்டிலேற்றிவிடுகிறது . மனச்சாட்சியை உலுக்கிவிடுகிறது .

 

நாவலை வாசித்து விடுங்கள். நாவலிருந்து ஒரு சில வரிகளை மேற்கோள் காட்டுவதுகூட முழுவாசிப்புக்குத் தடையாகிவிடக்கூடாது என்பதால் தவிர்க்கிறேன் .கட்டாயம் வாசியுங்கள் !

 

தப்பு [ நாவல் ], நாராயணி கண்ணகி , எழுத்து பிரசுரம் , zerodegreepublishing@gmail.com , 89250 61999 , பக் : 284 , விலை : ரூ. 340 /

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

 

 

 

பிரச்சனைகளை டி கோடிங் decoding செய்து பார்த்தால்......

Posted by அகத்தீ Labels:

 




பிரச்சனைகளை டி கோடிங் decoding செய்து பார்த்தால்......

 

மனச்சோர்வு விடைபெற…. : ஓர் உரையாடல்.” என ஒரு கட்டுரையை இங்கு பதிந்திருந்தேன் . அதனை வாசித்த பலர் பாராட்டினர் .சிலர் கேள்வி எழுப்பினர் . கேள்விகள் எப்போதும் எனக்குப் பிடித்தமானவை . அதில் ஒரு கேள்வியை முன்வைத்து இன்றைக்குப் பேசலாம் எனக் கருதுகிறேன் .

 

“நாம் என்னதான் யோசித்துத் திட்டமிட்டுச் செய்தாலும் எதிர்பாராமல் ஏதேனும் நடந்து நம் முயற்சிகள் எல்லாம் வீணாகிவிடுகின்றனவே , இதனை விதி என்றோ தலையெழுத்து என்றோ  சொல்லாமல் வேறெப்படி புரிந்து கொள்வது ?”

 

யதார்த்தமான நியாயமான கேள்வி . ஒவ்வொருவரும் தம் வாழ்வில் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களை நிறையவே எதிர்கொண்டிருப்பீர்கள் . இன்னும் சொல்லப்போனால் சிறிதாகவோ பெரிதாகவோ இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களை எதிர்கொள்ளாதவர்களே இருக்க மாட்டார்கள் .

 

கடன் வாங்காமல் பட்ஜெட் பத்மநாபன் போல் மிகமிகச் சிக்கனமாக வாழ்பவர் . அவருக்கு கஞ்சன் என்றே வீட்டில் கெட்ட பெயர் . மனைவி பிள்ளைகளுக்கு எல்லாம்கூட அவர் மேல் கோபம் . சினிமாவுக்கு போகும் போதுகூட பட்ஜெட்டுக்குள் அடக்குபவர் . அவர் வீட்டில் அப்பாவுக்கு திடீரென ஓர் விபத்து . மருத்துவச் செலவு எகிறுகிறது . கடன் வாங்க நேர்கிறது .

 

இது விதியா ? தலை எழுத்தா ? இல்லை நம் குடும்ப பட்ஜெட்டில் எதிர்பாரா மருத்துவச் செலவு , கல்விச் செலவு ,வருங்காலத்துக்கான சேமிப்பு இவற்றுக்கான ஒதுக்கீடு செய்யும் அளவு வருமானம் இல்லை என்பதுதானே உண்மை . மருத்துவம் இலவசம் என்கிற அரசியல் சூழலும் இல்லை .நம் வருமானம் வாய்க்கும் வயிற்றுக்குமே சரியாய் போகையில் எதிர்காலத் திட்டமிடல் சாத்தியமாகுமா ? விலைவாசி ஏறிக்கொண்டே இருக்க வருவாய் அதற்கொப்பக் கூடாமல்த் தேங்கும் சூழலில் ,வருவாயில் முப்பது சதம்  குறைந்தது இருபது சதம் சேமியுங்கள் என்று சொல்லலாம் ஆனால் நடைமுறையில் சாத்தியமா ? சமூக அரசியல் சூழலிலின் நெருக்கடியைப் பற்றி யோசிக்காமல் விதி ,தலையெழுத்து என பேசி தப்பிக்க இயலுமா ?

 

ஒரு வேலைக்கான இண்டர்வியூவுக்குப் போக ரயிலில் டிக்கெட் போட்டிருந்தான் . திடீரென ஏற்பட்ட ரயில் விபத்தால் போக்குவரத்து முடங்கிப் போய்விட்டது . அவனால் போக முடியவில்லை . தன் தலை எழுத்து என நொந்து கொள்கிறான் . உண்மையில் இது ஒரு தற்செயல் நிகழ்வு . பஸ் ,விமானம் ,கார் என மாற்று பயண ஏற்பாட்டை முயற்சி செய்ய அவன் முயலாமல் இருந்திருக்கலாம் . அல்லது அதற்கான பண ஏற்பாடு முடங்கி இருக்கலாம் .அதற்கான நேரம் கடந்திருக்கலாம் .வாய்ப்பு இல்லாமல் இருக்கலாம் . சம்மந்தப்பட்ட நிறுவனத்தோடு தொடர்பு கொண்டு சூழலை விளக்கி மறுவாய்ப்பு பெற முயற்சித்திருக்கலாம் . ஒரு வேளை எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டிருக்கலாம் . இது எதிர்பாரா நெருக்கடி . தற்காலிகப் பின்னடைவு . அடுத்து முயன்று முன்னேறுவதுதான் தீர்வு .விதி ,தலையெழுத்து ,நம்ம நேரம் சரியில்லை என முடங்கிவிட முடியாது .

 

Breadwinner என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் , தன் ஒற்றைச் சம்பாத்தியத்தால் குடும்பத்தையே காப்பாற்றுகிறவர் என்று சொல்லப்படுகிற குடும்பத் தலைவர் எதிர்பாரா விபத்தில் மரணித்துவிடுக்கிறார் . பேரிழப்பு . ஈடு செய்வது மிகச் சிரமம் .

 

 நம்ம விதி அப்படி ,நம்ம தலயில அப்படி எழுதியிருக்கு ,நம்ம பொறந்தநேரம் அப்படி போன்ற சொற்கள் கண்ணீருக்கும் அழுகைக்கும் சொல்லப்படுகிற தற்காலிக சமாதானங்களே தவிர தீர்வல்ல . வாழ்க்கை முட்டுச் சந்தில் சிக்கிக் கொண்டதுபோல் ஆகலாம் .அதற்காக அங்கேயே தேங்கிவிட முடியுமா ?வாழ்க்கை என்பது முட்டுசந்தல்ல ; முடங்கி நிற்க ; பயணப் பாதையை மாற்றி நடக்கும் நேரம் . அவ்வளவுதான்.

 

இப்படிச் சொல்லிக் கொண்டே போக முடியும் விபத்துகளும் தற்செயல் நிகழ்வுகளும் வாழ்க்கை நெடுக குறுக்கிட்டுக்கொண்டே இருக்கும் . அப்போது வலியில் துடிப்போம் . அந்நேரம் வலி நிவாரணி போல் ஒரு சில சொற்கள் பயன்படலாம் .ஆயின் அது முடிவல்ல .தீர்வல்ல.அங்கேயே வாழ்க்கை தேங்கிவிடாது .

 

தனக்கு மட்டுமே இப்படி நிகழ்வதாக நினைத்து வருந்தலாம் . ஆனால் ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு சந்தர்ப்பத்தில் அல்லது இன்னொரு சந்தர்ப்பத்தில் இதுபோல் நிகழ்ந்திருக்கும் . ஆக , உலக ஞானம்தான் இந்த அறியாமையிலிருந்து விடுதலை தரும் .

 

ஒரு பழைய பாடல் நினைவிற்கு வந்தது

 

 “ஆ ஈன மழை பொழிய இல்லம் வீழ

    அகமுடையாள் மெய் நோவ அடிமை சாக

     மாஈரம் போகுதென்று விதை கொண்டு ஓட

     வழியிலே கடன்காரர் மறித்துக்கொள்ள

      சாவோலை கொண்டொருவன் எதிரே வர

      தள்ளவொணா விருந்து வர சர்ப்பம் தீண்ட

      கோவேந்தர் உழுதுண்ட கடனைக் கேட்க

     குருக்களோ தட்சணைகள் கொடு என்றாரே” 

 

பாடலின் பொருள் நம்மை அதிரவைக்கும் . மிகவும் சோகம் ததும்பும் கதையைச் சொல்லும் . ஒருவன் வீட்டில் பசுமாடு கன்று போட்டிருந்ததாம். அது மகிழ்ச்சிதான் எனினும் மாடு வைத்திருப்பவர்களுக்கு இந்த அவஸ்தை உடனே புரியும். ஏனெனில் அப்போது வீடே நச நச என இருக்கும். வெள்ளம் புகுந்த வீடு மாதிரி இருக்கும். அப்போது மழையும் விடாமல் பெய்து கொண்டிருந்தால் நிலை கேட்கவே வேண்டாம் .அந்நேரம் பார்த்து மனைவிக்கு உடம்பு சரியில்லை எனில் வீடே நாறிப்போய்விடும். சட்டென்று வீடும் இடிந்து விழுந்து விட்டால் கேட்கவும் வேண்டுமா துயரம் . வீட்டு வேலைக்காரும் வரவில்லை , விசாரித்தால் அவரும் செத்துவிட்டாராம் ..  கிடப்பது கிடக்கட்டும் நமது வயலுக்கு இப்போது தண்ணீர் / ஈரம் உள்ள நேரம் ஆதலால் விதைப்போம் என்று வயல்வெளிக்கு ஓடியபோது ;  வழியில் கடன்காரர் மறித்துக்கொண்டால் எப்படி இருக்கும் ? அந்தநேரம் பார்த்து. நெருங்கிய உறவினர் இறந்துவிட்டார் என்று சாவோலை  வந்தால் அழுவதற்கும் நேரம் இருக்குமா . இப்படி நிலை இருக்க மறுக்கவே முடியாத சொந்தக்காரர் ஒருவர் திடீரென விருந்துக்கு வந்துவிட்டாராம். வீட்டில் ஒருவரை பாம்பும் தீண்டிவிட்டதாம். எதைப்பற்றியும் யோசிக்காமல் விவசாயத்துக்கு வாங்கிய கடனைத் திருப்பிக் கேட்டு வாசலில் நின்றனர் ஆட்சியாளர்கள். நேரம் காலம் தெரியாமல்  குருக்கள் எனக்கு சேரவேண்டிய தட்சணை கொடு என்று அடம் பிடித்தாராம் !

 

சும்மா கற்பனைதான் எனினும் இப்படி அடுக்கடுக்காகத் துன்பம் படை எடுப்பது வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் விவகாரம்தானே ! இது மனித குலத்துக்கான பொது விதி . ஆயிண் இப்பாடலைக் கூர்ந்து கவனித்தால் புரியும் ;  ஓர் ஆட்சி மக்கள் நலனைப் பற்றி கவலைப்படுகிற ஆட்சியாக இருப்பின் இதில் சொல்லப்பட்ட பல பிரச்சனைகளே அல்ல .இன்றைய பாணியில் சொல்வதாயின் டி கோடிங் decoding செய்து பார்த்தால் பிரச்சனைகளை எளிதாய் புரிந்து கொள்ளலாம் ; தீர்வின் நுனி கையில் அகப்படும் . 

 

எனவே விதியென்றோ தலையெழுத்தென்றோ எதையும் எண்ணி முடங்க வேண்டியதில்லை .சிலவற்றின் காரணம் பளிச்செனப் புலப்படும் .சிலவற்றின் காரணம் உடனே புலப்படாது . தற்செயலாகவோ விபத்தாகவோ இருக்கலாம் ; அல்லது நாம் யோசிக்கத் தவறிய புதிய கோணமாக இருக்கலாம் .புதிய சவாலாக இருக்கக்கூடும் . 

 

விதி ,தலையெழுத்து என சோர்ந்து கிடந்தால் பிரச்சனையிலிருந்து வெளியேறவே முடியாது .கவலையே கொன்றழித்து தின்றுவிடும் . மனதை தைரியமாக்கிக் கொண்டு இதிலிருந்து மீள்வது எப்படி என யோசிக்கத் தொடங்கினால் , முயற்சியைத் தொடங்கினால் தொலைதூரத்திலேனும் வெளிச்சம் புலப்படும் . விடாப்பிடியாக நகர்ந்து நெருங்கலாம் .பிரச்சனைகளைக் கண்டு பயந்து ஓடாமல் ; மனோதைரியத்துடன் எதிர்கொள்வதுதான் நம்முன் உள்ள ஆகச் சிறந்த வழி .

 

 

Natarajan Narayanaswamy என்பவர் என் பதிவொன்றில் சொல்லி இருக்கிறார் ,” கம்யுனிசம் ஒரு கானல் நீர். அதை ரசிக்கலாம். நடைமுறை வாழ்க்கைக்கு ஒவ்வாதது.” இதற்கு விரைவில் பதில் சொல்ல முயல்வேன்….

 

சு.பொ.அகத்தியலிங்கம்

01 /06 /26 .

 

 

 

 

 

 

l

 

 

 

சொடலி ...சொடலி...

Posted by அகத்தீ Labels:

 

சொடலி ...சொடலி...




இந்நூலைப் பற்றி ‘ அருவாள் தேசத்திலிருந்து…’ என்ற தன்னுரையில்  வசந்தி முனீஸ் சரியாகச் சொல்கிறார் ; “ எங்கள் ஊர் இருட்டுக்கடை அல்வாவை எல்லோரும் சப்புக் கொட்டிச் சுவைத்திருப்பீர்கள் .ஆனால் , எங்கள் அருவாள் தேசத்தின் அட்டூழியங்களையும் அக்கிரமங்களையும் அநியாயங்களையும் அத்துமீறல்களையும் தோலுரித்துக் காட்டுவாள் என் ‘சொடலி’. “ 

 

இப்படி தன் பிறந்த மாவட்டத்தை சுயவிமர்சனமாய்ச் சொல்ல -அதுவும் ‘அருவாள் தேசமென..’ தலைப்பிலேயே சொல்ல ; மனோ தைரியம் ரொம்ப வேண்டும் . ஆழமான சமூகக் கோபம் இருக்க வேண்டும்.  வசந்தி முனீஸூக்கு இவை அதிகமாக உள்ளது. நூலை வாசித்தால் புரியும்.

 

“ ‘சொடலி’ கதை வெறும் பழிவாங்கல் கதையல்ல ; அது ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் கூட்டு மனசாட்சியின்வெடிப்பு.” என்கிறார் அணிந்துரையில் பிறைமதி குப்புசாமி . இது கவனத்தில் கொள்ள வேண்டிய அவதானிப்பு .

 

எட்டு கதைகள் . எட்டு கொடுமைகளை தோலுரிக்கிறது .எதுவும் வெறும் கற்பனையின் படைப்பல்ல . நாட்டில் நடக்கும் அநீதிகளுக்கு கதாசிரியர் ஓர் கதை வடிவம் கொடுத்து ஒரு கோவப் பார்வையை வீசி இருக்கிறார் .

 

ஆணவக்கொலை ,சாதிவெறி .ஆணாதிக்கம் இவற்றையும்   மதநல்லிணக்கம் , மனிதம் ,பேரன்பு இவைகளையும்  உரக்க வெளிப்படுத்துகிற கதைகள் இவை .சொடலி , வரிப்பணம் , முனியாண்டிக்கு ஸ்தோத்திரம் போன்ற கதைகள் என்னை பெரிதும் ஈர்த்தன . நாட்டார் தெய்வங்களின் வரலாற்றுக் கதை நூலாசிரியருக்கு மிகவும் பிடித்த ஒன்று என நினைக்கிறேன் . சொடலி அதன் வெளிப்பாடுதானோ !

 

சமூகக் கோபம் நியாயம் . கிராமத்து மொழி நன்று . தொடர்ந்து எழுத்துப் பணியில் ஈடுபட்டுவருபவர்  வசந்தி முனீஸ் . 'விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை ‘ என்கிற பாரதிதாசன் வரிகளையும் உள்வாங்கி ,  சிறந்த கதை சொல்லியாய்  காலவெளியில் பரிணமிப்பார் என்பதில் ஐயமில்லை .

 

சொடலி [ சிறுகதைத் தொகுப்பு , ஆசிரியர் : வசந்தி முனீஸ் , கேலக்ஸி நூல் பதிப்பகம் & விற்பனையகம் , தொடர்புக்கு :  galaxybs2022@gmail.com , 99944 34432 , பக்கங்கள் : 125 , விலை : ரூ.165 /

 

 

சுபொஅ.

28 /06 /26.