புற்று முத்து

Posted by அகத்தீ Labels:

 


எந்தப் புற்றில்

எந்தப் பாம்பு இருக்கிறதோ

என்கிற அவநம்பிக்கையோடும்…

எந்தச் சிப்பியில்

எந்த முத்து இருக்கிறதோ

என்கிற நம்பிக்கையோடும் …

தேடலில்

கடந்து போகிறது வாழ்க்கை.

 

சுபொஅ.


Posted by அகத்தீ Labels:

 



பாதிக் கிணற்றைத்

தாண்டுவது சுலபம்

கடப்பாரை நீச்சல்

கற்பது சுலபம்

மூஞ்சியில் துப்பிய எச்சிலை

துடைப்பது சுலபம்

காலில் விழுந்து

காலம் தள்ளுவது சுலபம்

காக்காய் பிடித்து

பிழைப்பது சுலபம்

வாழ்வது என்பது

இதுவல்ல மனிதா !

போராடித் தோற்பினும்

வாழ்க்கை இனிக்கும் !!!

 

சுபொஅ.

09/11/25.


“ வந்தே மாதரம்” பாடலும் சும்மா ஒரு சவாலும் …

Posted by அகத்தீ Labels:

 


வந்தே மாதரம்பாடலும் சும்மா ஒரு சவாலும்
[ சில வரலாற்றுச் செய்திகளோடு ]

சு.பொ.அகத்தியலிங்கம்.


இந்திய விடுதலைப் போருக்கு துளியும் சம்பந்தம் இல்லாத ஆர் எஸ் எஸ்பாஜக சங் பரிவார் கூட்டம்வந்தே மாதரம்பாடலின் 150 வது விழாவைக் கொண்டாடி தேசபக்தியைப் பிழிவது வேடிக்கையாக உள்ளது .


சங்கிகளே !

குருமூர்த்தி ,தமிழிசை ,அண்ணாமலை , பாண்டே ,ஹெச் ராசா உள்ளிட்ட மூளைவீங்கி சங்கிகள்தமிழ்த்தாய் வாழ்த்துபாடலை முழுவதும் பாட வேண்டும் .கலைஞர் கருணாநிதி ஏதோ பெரிய தப்பு செய்து அப்பாடலை திருத்திவிட்டதாக கூப்பாடு போட்டனர் அல்லவா ? குருமூர்த்தி மேலே ஒரு படி போய் முழுப்பாடலையும் துக்ளக் விழாவில் பாடச் செய்தார் அல்லவா ? அவர்கள் நோக்கம் குரூரமானது . பிறமொழியை தாழ்த்திப் பேசும் வரிகளை சேர்த்துப் பாடினால் அதைக் காரணம் காட்டி அப்பாடலையே ஒழித்துக் கட்டிவிடலாம் என்பதுதான் . பிற மொழி பழிப்பு கூடாது என்றுதான் கலைஞர் அதனை எடிட் செய்து பாடச் செய்திருந்தார் .அவர் செய்தது 100 % சரி ! சரி !சரி ! இதற்கும் வந்தே மாதரம் பாடலுக்கும் என்ன சம்மந்தம் ? முழுதாய் தெரிந்து கொள்ள வேண்டாமா ?


இப்போது சவால் ; ஓன்றல்ல இரண்டு சவால்


1 ] சங்கிகளே 150 வது ஆண்டைக் கொண்டாடும் நீங்கள் அந்தப் பாடல் முழுவதையும் பாடத் தயாரா ? அல்லது அந்தநெடிய பாடலைமுழுமையாக வெளியிடத் தயாரா ?அந்தப் பாடலின் உண்மையான வரலாற்றை உரக்கச் சொல்ல முடியுமா ? இது முதல் சவால் .

2 ] இந்தப் பாடலை எந்த மாணவனும் பாடக்கூடாது என பிரிட்டிஷ் அரசு சுற்றறிக்கை வெளியிட்டதை அறிவீர்களா ? அதை மீற முடிவெடுத்த மாணவர்கள் , “ சுற்றறிக்கையை மீறும் கழகம்என ஒன்றினை 1905 இல் மேற்கு வங்கத்தில் தொடங்கியதையும் அதில் சுசீந்திர பிரசாத் பாபு செயலாளராக இருந்தார் என்பதையும் அறிவீர்களா ? லீஹத் ஹூசைன் என்கிற முஸ்லீம் மாணவர் இதர மாணவர்களைத் திரட்டி தடையை மீறிப் பாடச் செய்தார் என்பதை அறிவீர்களா ? அதுமட்டுமல்ல சித்தரஞ்சன் குகா தாகூர் எனும் மாணவன் தடியடியைத் தாங்கி மயக்கம் அடையும் வரை இப்பாடலைப் பாடினான் என்பதை அறிவீர்களா ? பல மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பதை அறிவீர்களா ?

இப்போதுதான் சாவல் கேள்வி ; ஏதேனும் ஒரு ஆர் எஸ் எஸ் காரன் இப்பாடலைப் பாடி அடிவாங்கியதாகவோ சிறை சென்றதாகவோ உங்களால் சொல்ல முடியுமா ? குறைந்த பட்சம்வந்தே மாதரம்என முழக்கமிட்ட ஒரு ஒரு ஆர் எஸ் எஸ் க்காரனைக் காட்ட முடியுமா ?

வரலாற்றுக் குறிப்புகள்


1875 நவம்பர் 7 அன்று வங்க இலக்கிய ஏடானபங்க தர்ஷன்இல் இப்பாடல் முதல் முதல் வெளிவந்தது .1876 ஆம் ஆண்டே துவாரகநாத் கங்கோபாத்யா தொகுத்து வெளியிட்ட தேசபக்தப் பாடல்கள் எனும் தொகுப்பில் இப்பாடல் இடம் பெற்றிருந்தது . அதிலும் இப்பாடல் வரிகள் முழுமையாக அல்ல ஒரு பகுதியே இடம் பெற்றிருந்தது அடிக்கோடிட்டு கவனிக்கத்தக்கது .


இப்பாடல் அப்போது பிரபலம் ஆகவில்லை . அதன் பின் 1882 ல் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா எழுதி வங்க மொழி நாவலானஆனந்த மடத்தில்இப்பாடல் முழுமையாகவும் விரித்தும் எழுதப்பட்ட நெடும்பாடலாக இடம் பெற்ற பின்பே பரவலான கவனத்தைப் பெற்றது . இந்நாவலின் வீச்சும் ஓர் காரணமானது .


1772 – 1775 காலகட்டத்தில் நடைபெற்ற சந்நியாசிகளின் கலவரத்தை மையமாக வைத்து புனையப்பட்ட நாவல் அது .இந்து சந்நியாசிகள் முஸ்லீம் மன்னர்களுக்கு எதிரான போராட்டத்தில் முஸ்லீம்கள் மீது வெறுப்பை உமிழ்ந்து பாடிய நெடிய பாடலாகவே அது இடம் பெற்றது . இந்நாவலின் முக்கிய கதாபாத்திரமான சத்யானந்தா எனும் இளம் இந்து சந்நியாசி தேசத்தை பாரத அன்னையெனும் தெயவமாக உருவகித்துப் பாடும் நெடிய பாடல் இது. கிட்டத்தட்ட காளியை அதாவது துர்க்காவை உருவகித்து பாடியது. அன்றையச் சூழலில் அந்நிய ஆட்சிக்கு எதிரான உணர்வைக் கொம்பு சீவ இந்த நாவலும் பாடலும் பயன் பட்டன என்பது உண்மைதான் .


1896 ஆண்டு இப்பாடலை இரவீந்திரநாத் தாகூர் எடிட் செய்தார் .அப்பாடலில் சில வரிகளை நீக்கியும் சில வரிகளை மட்டும் கோர்த்தும் இன்றைய வடிவத்துக்கு கொண்டுவந்தார் . [ நீராரும் கடலுடுத்த பாடலை கலைஞர் கருணாநிதி எடிட் செய்தது போலவே ]. தாகூரே இசையும் அமைத்தார் .1896 காங்கிரஸ் மாநாட்டில் பாடினார் . அதன் பின்னரே தேசபக்தப் போரில் இப்பாடல் பெரும் பங்கு வகிக்கலாயிற்று .


வங்கமொழியும் சமஸ்கிருதமும் கலந்த மணிபிரளாவ நடையில் எழுதப்பட்டது இப்பாடல் . உண்மையில்வந்தே மாதரம்அல்லபந்தே மாதரம்தான் .ஏனெனில் வங்க மொழியில்என்ற உச்சரிப்பு கிடையாது . ‘தான் உண்டு .பங்க மொழிதான் .பந்தே மாதரம்தான் . எனினும் பிற மொழிகளில் அதுஉச்சரிப்போடு தொடர்கிறது .


இப்பாடல் தேசத்தை பெண் தெய்வமாக உருவகிப்பதால்அல்லாவுக்கு இணையாக இன்னொரு தெய்வத்தை முன்வைப்பதில்லை என்கிற இஸ்லாமியஒரிரறைக்கோட்பாட்டுக்கு எதிராக இருப்பதாகக்கூறி முஸ்லீம்கள் பாட மறுத்தனர் . மேலும் பங்கிம் சந்திரர் நாவல் இஸ்லாமிய எதிர்ப்பை உமிழ்ந்ததாலும் இப்பாடல் எதிர்ப்பைச் சந்தித்தது .


முஸ்லீம்களின் அதிருப்தியைக் களையஅல்லா ஹூம் அக்பர்முழக்கமும்வந்தே மாதரம் , முழக்கத்துடன் சேர்ந்தே காங்கிரஸ் மேடைகளில் முழக்கப்பட்டது . ஆயினும் இருதரப்பும் சமாதானம் ஆகவில்லை. நெருடல் தொடரவே செய்தது .


இச்சூழலில் மகாத்மாவும் அவரது பஜனைகளில்ரகுபதி ராகவராஜாராம்…” பாடலையே இசைத்தார் . எனினும்வந்தே மாதரம்எனும் சொல் விடுதலைப் போரில் காந்த ஈர்ப்பு கொண்டதாக மாறியது . அத்துடன் ,விடுதலைப் போரில் பகத்சிங்கின்இன்குலாப் ஜிந்தாபாத்முழக்கமும் , அம்பேத்கரின்ஜெய்பீம்முழக்கமும் கலந்தே ஒலித்தன என்பதுதான் வரலாறு .


ஆனந்த மடம்நாவல் முன்வைத்த கருத்தை தாகூர் ஏற்கவில்லை . மறுதலித்தார்.1916 இல்வீடும் உலகமும்’ "The Home and the World" , எனும் நாவலை 1916 இல் படைத்தார் இரவீந்திரநாத் தாகூர் .அதன் வங்கத் தலைப்பு கோரே பைரே [ Ghôre Baire ] என்பதாகும் .இந்நாவலின் மைய கதாபாத்திரமான நிகில் மற்றும் விமலா இருவரும் மதங்களை மீறிய மனித ஒற்றுமையை அன்றைய தேசபக்த முற்போக்கு அரசியலைப் பேசினார்கள் .


வந்தே மாதரம் பாடலை பாரதியார் இருமுறை தமிழாக்கம் செய்தார் . “ இனிய நீர் பெருக்கினை” , என தொடங்கும் பாடல் முதல் மொழியாக்கம் . “ நளிர் மணி நீரும் நயம்படும் கனிகளும்பின்னர் மொழிபெயர்க்கப்பட்டது . ரகுமான் கான் அண்மையில் இசை அமைத்த பாடலையே இன்றைய இளைஞர்கள் அறிவார்கள் .


இந்த இடத்தில் பாரதியார் பாடல்களில் இடம் பெற்றசிவாஜி தன் சைதன்யத்திற்கு உரைத்ததுஎன்ற பாடலையும் நினைவுகூரலாம் . இஸ்லாமிய எதிர்ப்பை விசிறிவிடும் பாடலே அது .திலகர் தம்கேசரிஇதழில் வெளியிட்டதை மொழியாக்கம் செய்து வெளியிட்டார் பாரதி . அப்போதும் சில வரிகளை தவிர்த்துவிட்டதாகக் கூறியதோடு தாம் இந்து முஸ்லீம் சகோதர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று கருதுவதாக குறிப்பும் எழுதினார் . இருந்த போதிலும் அதில் அந்த வெறுப்பு நெருப்பு இருக்கத்தான் செய்தது .


இந்திய விடுதலைக்குப் பிறகு ,அரசியல் சட்டம் வகுக்கும் அவையில்எது தேசிய கீதம்என்கிற விவாதம் முன்னுக்கு வந்தது . வந்தே மாதரம் பாடலின் வரலாற்றுப் பின்னணியில் அது ஏற்கப்படாமல் இரவீந்திரந்தாத் தாகூரின்ஜனகண மன…” தேசிய கீதமாக [national anthem ]ஏற்கப்பட்டது . வந்தே மாதரம் பாடல் ஆதரவாளர்களை சமாதானம் செய்யவந்தே மாதரம்பாடல் [national song ] தேசியப் பாடலாக ஏற்கப்பட்டது. தேசிய கீதம் இசைப்பது கட்டாயமாக்கப்பட்டது .


சங் பரிவாரும் மோடி சர்க்காரும் இன்றைக்கு இப்பாடலைக் கொண்டாடும் உள்நோக்கம் அறிய முடியாத ஒன்றா என்ன ?


மீண்டு அந்த இரண்டு சாவால்களையும் நினைவூட்டுகிறோம்.


பொது அடுக்களை

Posted by அகத்தீ Labels:

 

பொது அடுக்களை

 “ஒரு கிராமம் முழுவதும் பொது அடுக்களைஅமைத்து உண்பது நல்ல செய்திதானே ! அது எந்த ஊராக இருப்பினும் உரக்க சொல்லுவதில் பிழையில்லைதானே !.....”

 

என் தம்பி சு.பொ.ஐயப்பன் தன் இணையரோடு சென்னையிலிருந்து வந்திருந்தான் . அவன் நெடுங்காலம் பிழைப்பு நிமித்தம் குஜராத்தில் வாழ்ந்தவன் . ஓய்வு காலத்தில் சென்னைக்கு வந்துவிட்டான் .

இருநாட்கள் அரசியல் ,சமூகம் ,குடும்பம் ,புத்தகம் எல்லாம் பேசித் தீர்த்தோம். குஜராத்திகள் எப்போதும் ‘பிஸினெஸ் மயிண்டோடு’தான் இருப்பார்கள் எனபதோடு ’சுபம் லாபம்’ என்பதுதான் அவர்கள் ஒரே நோக்கம் .லாபம் ஈட்ட எதையும் துணிந்து செய்வார்கள் . அதில் பாவ புண்ணியம் பார்க்க மாட்டார்கள் . இப்படி அவன் சொல்லச் சொல்ல உரையாடல் நீண்டது .

 

இடையில் சாப்பாடு அடுக்களை என பேச்சு திரும்பியதும் ; குஜராத்திலுள்ள ஓர் கிராமத்தில் பொது அடுக்களை அமைத்து கிராமமே உண்டு உயிர்த்து வாழ்வதைச் சொன்னான் . அசந்துவிட்டேன் .

 

இங்கு முதியோர் கிராமங்கள் என வசதி படைத்தவர்களுக்காக உருவாக்கப்படுகிறது . பெங்களூர் ,சென்னை எங்கும் இப்போது இதைக் காணலாம் . அடிக்கடி விளம்பரங்களையும் காணலாம் .

 

ஆனால் ஒரு கிராமம் முழுவதும் பொது அடுக்களை அமைத்து உண்பது நல்ல செய்திதானே ! அது எந்த ஊராக இருப்பினும் உரக்க சொல்லுவதில் பிழையில்லைதானே !

 

குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்திலிருந்து 89 கி.மீ தொலைவிலுள்ள கிராமம் சந்தான்கி [Chandanki ] . இந்த கிராமம் கிட்டத்தட்ட முதியோர் கிராமமாகி விட்டது .

ஆம் .

இங்குள்ள இளைஞர்களும் நடுத்தர வயதினரும் தொழில் நிமித்தம் வியாபார நிமித்தம் வெளிநாட்டுக்கோ வெளி மாநிலத்துக்கோ புலம் பெயர்ந்து விட்டனர் . செத்தாலும் இந்த மண்ணில்தான் சாவோம் என வைராக்கியத்தோடு முதியோர்கள் அங்கேயே தங்கிவிட்டனர் . அதனால் முதியோர் கிராமமாக ஆகிவிட்டது சந்தான்கி.  

முதியோர்களுக்கு தினசரி உணவு சமைப்பது ஒவ்வொரு வீட்டிலும் பெரும் சிரமமான காரியம் .பணப் பிரச்சனை அல்ல . உடல் ஒத்துழைக்கவில்லை .வேலைக்கு ஆள் கிடைப்பதும் பிரச்சனை .

 

நெடுங்காலம் வெளிநாட்டில் தங்கிவிட்டு ஊர் திரும்பிய ஒருவர் முன்கை எடுக்க , கிராமத்துக்கு பொது அடுக்களை சாப்பாட்டுக்கூடம் உருவானது .

 

அங்கு வந்து மூன்று வேளையும் உணவு அருந்துவோரும் உண்டு .

இயலாதவர்களுக்கு மூன்று வேளையும் டிபன் கேரியரில் உணவு வீடுதேடிச் வென்றுவிடும் . விருந்தினர்கள் வந்தால் அவர்களுக்கும் அங்கேதான் உணவு .

 

செலவை உரிய முறையில் பங்கிட்டுக் கொள்கின்றனர் . [மொத்தபேரும் ஒரே சாதிப்பிரிவு என்பது இங்கு கவனிக்கத்தக்கது .]

 

இந்தச் செய்தியை என் தம்பி சொன்னான் . தானே நேரடியாக அந்த கிராமத்துக்கு போய் பார்த்து வந்ததாகவும் சாட்சி சொன்னான் .

 

ஒரு வீடியோ கிளிப்பிங்கையும் பகிர்ந்தான் . அது கீழே !

 

நல்ல முன்னெடுப்புத்தான் .

இங்கும் முயற்சிக்கலாமே !

சாதி ,மதம் மீறியதாக இங்கு முயற்சிக்கலாமே !!!!

 

சுபொஅ.

6/11/25

 

https://youtu.be/22dpDRN38YM?si=s1KZ5BkWs_TKxz-4


கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையில் உரையாடல் …

Posted by அகத்தீ Labels:

 



கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையில் உரையாடல் …

 

சாத்தானின் வெடிச் சிரிப்பில் கடுப்பான கடவுள் கோபத்தோடு கத்தினார் ;    “ அங்கென்ன சிரிப்பு வேண்டிக் கிடக்கு ; இங்க ஒருத்தன் அவதிப்படுறது வேடிக்கையா போச்சா உங்களுக்கு…”

 

“ இல்லை ஆண்டவரே ! எங்களுக்காக சொல்லப்பட்ட அனைத்தையும் உங்கள் செல்லப் பிள்ளைகள் செய்து கொண்டிருக்கிறார்கள் ; அதை யோசித்ததும் சிரிப்பு வந்துவிட்டது..” என சாத்தான் புன்முறுவலோடு சொன்னார்.

 

“ எதையும் நான் செய்வதுமில்லை ; செய்விப்பதும் இல்லை . நல்லதோ கெட்டத்தோ எதற்கும் நான் பொறுப்பல்ல ஆனாலும் என் தலையைத்தான் பக்தர்கள் உருட்டுகிறார்கள் . என்ன செய்து தொலைக்க.” கடவுள் தன் கவலையைப் பிழிந்தார் .

 

“ சரி ! அப்பன் செய்த பாவம் பிள்ளைக்கு விடியும் என்றால் ; பிள்ளை செய்யும் பாவத்துக்கு அப்பன்தானே பொறுப்பேற்க வேண்டும் . மோடி ,அமித்ஷா , யோகி ,டிரம்ப் , நெதன்யாஹு , கார்ப்பரேட் சாமியார்கள் இப்படி எங்கும் ’தெய்வப் பிறவி’ என தம்மைச் சொல்லித் தெரியும் பிள்ளைகள் செய்வதற்கெல்லாம் நீங்கள்தானே பொறுப்பு ? இப்போது எம் கண்களுக்கு பாவமூட்டையாக அல்லவா நீங்கள் தெரிகிறீர்கள் ?” சொல்லிவிட்டு சாத்தான் மீண்டும் சிரித்தார் .

 

“ சரியாகத்தான் சொல்கிறாய் ! நீயும் கற்பிதம் .நானும் கற்பிதம் . உன் மீது சுமத்தப்பட்ட அனைத்தையும் என் பெயரலாயே செய்து கொண்டிருக்கிறார்கள் ; என் பெயரால்தான் அனைத்து அட்டூழியங்களையும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள் . உன் பிள்ளைகளோ உழைத்து நேர்மையாக வாழ முயற்சிக்கிறார்கள் ஆனால் அவர்கள் தான் பாரம் சுமக்கிறார்கள் …” கடவுள் கண்கலங்கி நின்றார் .

 

“ ஆம் ! ஆண்டவரே ! நீயும் நானும் மட்டுமல்ல ; பாவம் ,புண்ணியம் ,சொர்க்கம் ,நரகம் ,தீட்டு ,புனிதம் எல்லாம் அவனவன் அடுத்தவனை மிதிக்க ஏமாற்ற உருவாக்கிய கற்பிதங்களே !” சாத்தான் சொல்ல கடவுள் வேகமாக “ ஆம் .ஆம்.” என தலையாட்டினார்.

 

“ வரம் ,சாபம் எதையும் நாம் வழங்குவதில்லை .நம் பெயரால் அவர்களே ஒருவருக்கொருவர் தீங்கு செய்து கொள்கிறார்கள் ! மனிதர்கள் செய்கிற அனைத்துக்கும் நாம் வெறும் முகமூடி ; முகம் அல்ல .” இருவரும் கோரஸாக சொல்லிக் கொண்டிருக்கும் போது “ ஸ்ரீ ஜெய் ராம்”  கோஷம் கேட்க தங்களைக் காப்பாற்ற கடவுளும் சாத்தானும் தலமறைவானார்கள் .

 

தங்களை  காப்பாற்றிக் கொள்ளக்கூட முடியாத கடவுள்களையும் சாத்தான்களையும் ; தன்னைக் காப்பாற்றும் தண்டிக்கும் என நம்பி துக்கிச் சுமக்கும் மனிதனை என்ன சொல்லி அழைப்பது ?

 

 

சுபொஅ.

06/11/25

 


அர்ப்பணிப்பின் அளவீடு

Posted by அகத்தீ Labels:

 




என் மகள் பானு நவீன் கனடாவில் இருந்து அவ்வப்போது கவிதைகள் எழுதி அனுப்புவாள் . அகம் சார்ந்து புறம் சார்ந்து சமூக கோபம் சார்ந்து பல கவிதைகள் தெறித்து விழும் . அவற்றை புத்தகமாக்க வேண்டும் என்பது அவளது ஆர்வம் . அண்மையில்  ஒரு கவிதை அனுப்பி இருந்தாள் . இங்கு பகிர்கிறேன் .

 

சுபொஅ. 2/11/25.

 

அர்ப்பணிப்பின் அளவீடு

நேசத்தை சோதிப்பது  போல் 

அர்ப்பணிப்பைக்கூட  அளவீடு கொண்டு அளக்கிறார்கள் ....

 

100 க்கும் 99 க்கும்   இடையே குறைந்த இடைவெளி

என்று எண்ணியிருக்கையில்

10-ஐயும்  100-ஐயும் ஒரே சமகூட்டில் நிறுத்துகிறார்கள்..

 

கிள்ளியெடுக்கையில் கணக்குச் சொல்ல முடியும்

அள்ளுவது என்றான பின் எதைக் கொண்டு

அதை நிறுத்துவது (அளவிடுவது)?

 

தூறுவதோ

பொழிவதோ

மேகத்தின் முடிவு

 

விழும் அத்தனையும் மீண்டும்  வந்து சேராது

என்று மேகத்திற்கு எப்போதோ தெரியும் ...

 

எறும்பும்

ஆமையும்

ஒன்றென  கருதும் உங்களிடம் 

வேகம் குறித்து விவாதிப்பது  வீண் .

 

பெயரிடப்பட்ட அத்தனை தெய்வங்களுக்கு

பின்னும் பெயர் தெரியா

சிற்பியும், உளியும்  உண்டு ....

 

எல்லா அர்ப்பணிப்பின் எதிர் வினையில்

ஏமாற்றமும், இகழ்ச்சியும் உண்டு

என்பது அறிவோம் ..

 

அறியாமல் போனது

இதை பற்றிய விளக்கங்களும், விவாதங்களும்

நிகழ்த்துவது நம் நேசத்திரிக்குரியவர்கள் என்பது ....

 

பானு நவீன் .

 

 


நவ்ஜவான் பாரத் சபாவின் நூற்றாண்டு இது .

Posted by அகத்தீ Labels: ,

 





இதோ இங்கே ஒரு அரிய புகைப்படம் .

உற்றுப்பாருங்கள் .மாவீரன் தோழர் பகத்சிங்கும் தோழர்களும்.

நவ்ஜவான் பாரத் சபாவின் நூற்றாண்டு இது .

 நூற்றாண்டில் அக்னிக் குஞ்சுகள் .

இன்னும் புரட்சி நெருப்பை விசிறிக்கொண்டே இருக்கிறது.

 

1926 மார்ச் 1 அன்று பகத்சிங்கும் அவரது தோழர்களும் அதிகாரபூர்வமாய் நவஜவான் பாரத் சபா என்ற அமைப்பை முதல் அமைப்பு மாநாட்டில் அறிவித்தனர் .

’நவ் ஜவான் பாரத் சபா’ [Naujawan bharath sabha  என்ற சொல் ஹிந்தியும் உருதும் கலந்த ஒரு சொல் . தாருண் பாரத் சங் , [ tarun bharath sangh ] ,அஞ்சுமன் நவ் ஜவானி ஹிந்த் [anjuman nau jawanee hind ] போன்ற பெயர்களை பரிசீலத்த போதும் இறுதியில் பகத் சிங் முன்மொழிந்த ’நவ் ஜவான் பாரத் சபா’ என்றே பெயரே ஏற்புடையதாயிற்று .

 

முதலில் லெட்டர் பேட் [ letter pad ] அச்சிட்ட போது நவ் ஜவான் பாரத் சபா என்ற பெயரோடு அடைப்புக் குறிக்குள் INDIAN YOUTH ASSOCIATION என ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருந்தார் பகத்சிங் . மேலும் Service , Sacrifice ,Suffering [தொண்டுசெய் , அர்ப்பணி, பாடுபடு ] என மூன்று முழக்கங்கள் பொறிக்கப்பட்டிருந்தன .

 

அமைப்பை உருவாக்குவதில் பகத் சிங்குடன் , சோகன் சிங் ஜோஸ் , கரம் சிங் மான் ,ராம் சந்தர் ,எம். ஏ.மஜீத் ,எஹ்சான் அல்லாஹி ,பேராசிரியர் சாபில்தாஸ்.கோபால் சிங் குமாய் ,ஹரி சிங்  உள்ளிட்டோர் இருந்தனர் . இந்த சோகன் சிங் ஏற்கெனவே மீரட் சதிவழக்கில் சம்மந்தப்பட்டவர் ,பின்னர் கிர்தி கிஷான் கட்சி என்றொரு கட்சியையும் வழிநடத்தினார் .

 

கரம் சிங் லண்டனில் பார் அட் லா படித்தவர் .கம்யூனிசத்தால் ஈர்க்கப்பட்டவர் . இவர் கிராமப்புறங்களில் தேசபக்த கனலை விசிறிவிட உழைத்தார் .கேதர் நாத் சைகால்  நவ் ஜவான் பாரத் சபாவில் தானே வந்து இணைகிறார் . வயது மூத்தவர் என சிலர் அதை ஆட்சேபிக்க , சபாவில் சேர  வயது வரம்பென்ன என்று கேட்கிறார் . கேள்விக்கு 16 – 35 என பகத் சிங் பதில் சொன்னதும் ;  தன் வயது 34 தான் ஆகவே நானும் சேரலாம் என இணைகிறார் .

 

லாகூர் [Lahore ], அமிர்தசரஸ் [Amritsar] , லூதியானா [Ludhiana] ,[ ஜலந்தர்] [Jalandhar], மண்டகோமரி [Montgomery] மற்றும் குஜ்ரன்வாலா [ Gujranwala ] ஆகிய இடங்களில் நவ்ஜவான் பாரத் சபா செயல்பட்டது .

 

1922 செளரி செளரி போராட்டத்தை மகாத்மாகாந்தி திரும்பப் பெற்ற பின்னால் இளைஞர்களிடையே உருவான அதிருப்தியும் கோபமும் பல்வேறு தீவிரவாத இளைஞர் அமைப்புகள் தோன்ற  செயல்பட சமூக அரசியல் காரணியாயின . அந்த காலகட்டம் நெருப்பு பொறிகள் பறந்த காலம் .  நவ்ஜவான் பாரத் சபாவுக்கும் இது பொருந்தும் .

 

இளம் தோழர்களே ! என அழைக்கும் அதன் முதல் அறைகூவல் பகத்சிங் ,பகவதி சரண் வோரா இருவர் பெயரால் வெளியான போது அதன் முதல் பத்தியே இதனை தெளிவு படுத்தும் ;

 

இளம் தோழர்களே !

நம் நாடு மிகவும் குழப்பமான சூழலை எதிர்கொண்டிருக்கிறது . விரக்தியும் அவநம்பிக்கையும் எங்கும் சூழ்ந்துள்ளது . மிகப் பெரும் தலைவர்களும் நம்பிக்கை இழந்து நிற்கிறார்கள் . மக்களும் தலைவர்கள் மீதான நம்பிக்கையை இழந்து வருகிறார்கள் .  நாட்டு விடுதலைக்காக உருப்படியான திட்டமோ , உற்சாகமோ , போராட்டமோ இல்லை . எங்கும் பெரும் குழப்பமே நிலவுகிறது . ஒரு நாட்டை தட்டி எழுப்பும் போராட்ட வரலாறுகளில் குழப்பமும் தவிர்க்க முடியாததே !இந்த சிக்கலான காலகட்டத்தில்  ஊழியர்களின் மன உறுதி சோதனைக்குள்ளாகிறது ! விழுமியங்கள் மறுகட்டமைக்கப்படுகிறது ! சரியான செயல்திட்டம் கருக்கொள்கிறது ! புதிய எழுச்சி முளைவிடுகிறது ! போராட்டம் தொடங்கிவிட்டால் புதிய எழுச்சி ! புதிய நம்பிக்கை ! மேலும் புதிய எழுச்சி ! மேலும் புதிய நம்பிக்கை !”

 

அந்த அறிக்கை ஒரிடத்தில் மிகத் தெளிவாகச் சொல்லும் , ” மதப் பித்து , மூடநம்பிக்கை  ,பாகுபாடு இவை எல்லாம் முன்னேற்றத்தின் முட்டுக்கட்டைகள்  . அவை நம் பாதையிலுள்ள தடையரண்கள் என்பது நிரூபனமாகிவிட்டவை ; உடைத்தெறிய வேண்டும் .சுதந்திரமான சிந்தனைக்கு எதிரான அனைத்தும் புதைந்து போகட்டும் !  இந்து பழமைவாதம் ,இஸ்லாமிய குறுகிய வாதம் , இதர சின்னத்தனமான மத வாதங்கள் எல்லாவற்றையும் உடைத்தெறிந்துவிட்டு ;  நம்மை சுரண்டுகிற ஒடுக்குகிற அந்நியருக்கு எதிராகப் போராடும் வேளை இது . இதனை சாதிக்க எல்லா சமூகப் பிரிவிலிருந்தும் புரட்சிகர எண்ணங்கொண்ட இளைஞர்கள் திரள வேண்டும் .”

 

அந்த அறிக்கை ஒடுக்குமுறை ,பொருளாதாரச் சுரண்டல் , விவசாயி தொழிலாளர் வாழ்க்கை படும்பாடு இவற்றை துடைத்தெறிய அந்நியர் ஆட்சி ஒழிய வேண்டும் என வலியுறுத்தி இறுதியில் ,

 

“நேர்மையுடனும் உறுதியுடனும்  தொண்டு செய் ! பாடுபாடு! அர்ப்பணி!  !  என்ற மும்முழக்கம்  உங்களுக்கு ஒரே வழிகாட்டியாக ஆகட்டும்.” என முடியும் .

 

 

விழிப்புணர்வு கருத்தரங்குகள் ,விவாத மேடைகள் ,பொதுக்கூட்டம் , வெளியீடுகள் .போராட்டங்கள் , அணிவகுப்புகள் என செயல்படத்துவங்கினார்கள் .

 

தங்கள் மாநாட்டில் கத்தார் கட்சி [ புரட்சிக் கட்சி] யின் மாபெரும் வீரத்தியாகி கத்தார் சிங் சரபா வின் திரு உருவப்படத்தை வைத்து வீரவணக்கம் செலுத்தினர் . அது கண்டு வெகுண்ட  பிரிட்டிஸ் போலீஸ் எச்சரித்தது . கண்காணித்தது . உருவப்படத்தை பறிமுதல் செய்தது .

 

போலீஸ் அதிகாரி சாண்டர்ஸை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பகத்சிங் கைது செய்யப்பட்ட பின் நவ் ஜவான் பாரத் சபா இளைஞர்கள் மத்தியில் பிரபலமானது . சந்திர சேகர் ஆசாத் ,பகவதி சரண் போன்ற தீவிரவாதிகள் இந்த அமைப்போடு இருந்தனர்.

 

1926 மார்ச் 1 ஆம் தேதி நவ்ஜவான் பாரத் சபா அதிகாரபூர்வமாகத் துவக்கப்பட்டாலும் இதன் ஆரம்ப கட்டப் பணிகள் 1923 ன் இறுதியிலே துவங்கி விட்டதென தோழர் ராம் சந்திரா எழுதிய ‘ History of Naujawan Jawan Bharath Sabha’ எனும் ஆங்கில நூலில் தெரிவிக்கிறார் . வாய்ப்புள்ளோர் அந்நூலைத் தேடிப் படிக்கவும் . [கூகிளில் கிடைக்கிறது . ]

 

 

உண்மையில் ’இந்துஸ்தாஸ் சோஷலிஸ்ட் குடியரசுக் கழகம்’ என்கிற புரட்சிகர அரசியல் இயக்கத்தின் வெகுஜன முகமாகவே நவ் ஜவான் பாரத் சபா இருந்தது எனில் மிகை அல்ல . வாயிருந்தும் பேசமுடியாத ஊமைகளாய் ஆமைகளாய் அடங்கி ஒடுங்கிக் கிடந்த இளைய சமூகத்தை எழவைத்து உரிமை முழக்கமிட வைத்த மாபெரும் எழுச்சியின் தொடக்கமே நவ் ஜவான் பாரத் சபா.

 

மார்க்சியம் ,சோசலிசம் ஆகிய கருத்துகள் முழுமையாக பரவாத நிலையிலும் அதன் மீதான ஈர்ப்பை வெளிப்படுத்தினர் . அதனையே தங்கள் இலக்காககவும் கொண்டனர் . ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு என்பதில் சோஷலிசம் இணைந்தே இருந்தது .

 

இந்த அமைப்பில் இருந்த பலர் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி முகமாயினர் . தொடங்கி மூன்றே ஆண்டுகளில்   1929 இல் நவ்ஜவான் பாரத் சபா தடை செய்யப்பட்டது . பின்னர் பல்வேறு முகங்களோடு இடதுசாரி இளைஞர்கள் செயல்பட்டனர் . பகத்சிங் ,ராஜ்குரு , சுகதேவ் மூவரும் மார்ச் 23 ,1931 இல் பிரிட்டிஷாரால் தூக்கிலிடப்பட்டனர் . இந்திய விடுதலைப் போரின் மாபெரும் தியாகத்தின் உருவமானார்கள் . இளைஞர்களின் நம்பிக்கை ஒளி ஆனார்கள்.

 

போராட்டம் எங்களால் தொடங்கப்படவும் இல்லை ; எங்களோடு முடிவதுமில்லை என்பதுதானே புரட்சியாளர்கள் நமக்குச் சொல்வது .

 

1936 இல் அனைத்திந்திய மாணவர் சம்மேளனம் துவக்கப்பட்டது . நவ் ஜவான் பாரத் சபாவின் தொடர்ச்சிதான் இதுவும் . இளைஞர்களும் இதில் அங்கமாயிருந்தனர் . 1959 இல் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் துவக்கப்பட்டது . நவ்ஜவான் பாரத் சபா செயல்பட்ட பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 1980 இல் DYFI இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்  தன் அமைப்பு மாநாட்டை நடத்தியது . இந்த 1926 இல் உருவாக்கப்பட்ட நவ் ஜவான் பாரத் சபாவின் தொடர்ச்சிதான் வாரிசுதான்  AISF ,AIYF ,1980 இல் கிளைத்த DYFI யும் அதன் தொடர்ச்சியே ஐயமில்லை . பகத்சிங்கின் வாரிசுகளே இடதுசாரிகள் !

 

45 வது அமைப்பு தினத்தைக் கொண்டாடும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தம் தொப்புள்கொடி உறவான நவ்ஜவான் பாரத் சபாவின் நூற்றாண்டை பகத்சிங் பிறந்த  பங்கா கிராமத்தில் [ பஞ்சாபில் லாயல்பூர் மாவட்டத்தில் உள்ளது பங்கா கிராமம் [ Banga in the Lyallpur district of the Punjab ] நவம்பர் 3 ஆம் தேதி கொண்டாடுகிறது .

 

ஆயிரம் ஆயிரம் பக்த்சிங்குகள் ராஜகுருக்கள் சுகதேவ்கள் அணி வகுக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் தேசம் இருக்கும் வேளையில் …

 

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கொண்டாடும் நவ்ஜவான் பாரத் சபாவின் நூற்றாண்டு விழா மிகமிக முக்கியமான தேசபக்த அரசியல் எழுச்சியாகட்டும் ! என் தோழமை மிக்க வாழ்த்துகள் !!!

 

[ நவ் ஜவான் பாரத் சபா படம்   Sikh Encyclopedia  விலிருந்து எடுக்கப்பட்டது ]

 

முன்னாள் வாலிபர்

சு.பொ.அகத்தியலிங்கம்.

31/10/25.