அறிவியல் அறிவோம் . அறிவியலால் இணைவோம்.

Posted by அகத்தீ Labels:

 


அறிவியல் அறிவோம் . அறிவியலால் இணைவோம்.

 

 

[ 11 /01 /25 ஞாயிற்றுக் கிழமை ஓசூரில் நடை பெற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்க கிருஷ்ணகிரி மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு ‘ அறிவியல் அறிவோம் ; அறிவியலால் இணைவோம்’ எனும் தலைப்பில் ஆற்றிய உரை .]

 

1]

நண்பர்களே ! அறிவியல் இயக்க செயல்வீரர்களே ! உங்கள் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள் .

 

[ “ குடும்பம் நடத்தவும் அரசியல் நடத்தவும் அறிவியல் தேவை” என தொடர்ந்து நமக்கு அறிவுறுத்திய சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரை நினைவு கூர்ந்து உரையைத் துவக்கினார் . 1930 களில் தள்ளாத வயதில்  முழுக்க முழுக்க அறிவியலுக்காக ‘ புது உலகம்’ எனும் ஏடு தொடங்கிய சிங்காரவேலரை சுட்டிக்காட்டிப் பேச்சை ஆரம்பித்தார் .]

 

“ அறிவியல் அறிவோம்.அறிவியலால் இணைவோம்” என்பது எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு . தலைப்பைப் பார்த்ததும் மிரண்டுவிடாதீங்க ! நான் சயின்ஸ் வாத்தியாரும் அல்ல . நான் சயின்ஸ் பாடம் நடத்தவும் வரவில்லை .

 

அறிவியல் துணையின்றி நம் வாழ்க்கையின் ஒரு நொடியேனும் நகர்கிறதா ? உங்களில் எத்தனை பேர் கையில் அலைபேசி [ mobile ] இருக்கிறது ? பார்த்தீர்களா அனைவரும் அறிவியலோடுதான் நக்ர்கிறோம் .ஆனால் அறிவியலாய் வாழ்கிறோமா ? இதுதான் கேள்வி .

 

என்ன சார் ! விசு மாதிரி குழப்ப ஆரம்பிச்சிட்டீங்க !

 

அறிவியல் என்பது நெட்டுருப் போட்ட சூத்திரங்களோ , மெத்தப் படித்த மேதாவித்தனமோ அல்ல ; வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் நம் கையைப் பிடித்து வழி நடத்துவதாகும் . இன்றைய காலகட்டத்தில் அறிவியலின் துணையின்றி ஒரு நிமிடம்கூட நாம் நகரவில்லை . உங்கள் கைபேசி உங்களைக் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது உங்களுக்குத் தெரியுமா ? பிறகு பார்ப்போம் .

2]

முதலில் ,ஒரு கவிதை சொல்கிறேன் . புனிதா ஆறுமுகம் எழுதியது .

 

“ அக்னி மூலையில்

அழகான விறகடுப்பு

அம்மாச்சிக்கு…

 

அடுத்துவந்தது

 பாட்டிலை

நடுவில் வைத்த

மரத்தூளால்

அச்சமைக்கப்பட்ட

பொடி அடுப்பு …

 

அம்மா காலம்

சீமை எண்ணை

ஸ்டவ் அடுப்பு

 

பம்ப் ஸ்டவ்

அக்கா காலம்….

 

இண்டேன் பார்த்ததும்

இலவசங்களும்

இன்றே விநியோகமாச்சு

சிலிண்டரில்

எரிவாயு அடுப்பாக …

 

அடுப்புகள் மாறின

அடுக்களை நவீனமாச்சு

ஆனால்

சமைக்கிற ஆள் மட்டும்

அதே அம்மா…”

 

இந்தக் கவிதையில் கடைசி பத்தி தவிர மற்றவை அறிவியல் வளர்ச்சியின் தகவல்கள் . ஆம் அறிவியல் நம் அடுக்களையில் எரிவாயு அடுப்பாக , குக்கராக ,மிக்ஸியாக ,கிரைண்டராக ,குளிர் சாதனப் பெட்டியாக நுழைந்து கொண்டே இருக்கிறது. வீட்டின் மூலையில் இருண்ட சமையல் அறை இல்லை . நல்ல வெளிச்சமான மாடுலர் கிட்சன் வந்துவிட்டது .ஆனால் நம் மூளையில் பாலின சமத்துவத்தை வேர்விடச் செய்திருக்கிறதா ? வீட்டு வேலையை ஆணும் பெண்ணும் பகிரச் செய்திருக்கிறதா ? அது வரும் போதுதானே அறிவியலின் பலன் வந்து சேரும் . இதுதானே அறிவியல் பார்வை .

3]

சரி இப்போது அலைபேசி [ மொபைல் ]க்கு வருகிறேன் .

 

தினசரி நாலு சாவுச் செய்தியாவது கண்ணில் படாமல் விடியாது . நாலு பிறந்த நாள் வாழ்த்து சொல்லாமல் பொழுது அடையாது . சரி ! உங்கள் கொள்ளுத் தாத்தா காலத்தில் சாவுச் செய்தியை எப்படிச் சொன்னார்கள் ? யாரோ ஒருவர் ஓடி ஓடி பல மைல் கடந்து பலநாடுகளுக்குப் பிறகுதான் சாவு செய்தியே தெரியும் .

 

ஊருக்கு நல்லது கெட்டது எப்படித் தெரியும் பறையடித்து செய்தி சொல்லுவார்கள் .

 

இதற்கென ஒரு சாதியையே உருவாக்கி இழிவு படுத்தி அடிமைப் படுத்தி அவமானப்படுத்தி வைத்திருந்தோமே நியாயமா ?

 

பின்னர் தபால் அட்டை வந்தது. 1836 இல் தந்தி வந்தது .

 

இன்று ஒவ்வொருவரும் சாவுச் செய்தியை பரிமாறுகிறோம் வாட்ஸ் அப்பில் . ஆனாலும் பழைய சாதி இழிவை தூக்கி எறிந்துவிட்டோமா ?

4]

அலைபேசி நமக்கு நல்லது செய்கிறதா தீமை செய்கிறதா ?

“இடும்பைகூர் அலைபேசி..” தலைப்பில் 2011 செப்டம்பரில் நான் எழுதிய கவிதை .

 

 “அலைபேசி,கைபேசி

செல்.மொபைல் - உன்

பெயர் எதுவானால் என்ன?

பிரச்சனை பிரச்சனைதான்

 

உன்னோடு

வாழவும் முடியவில்லை

நீ இன்றி

வாழவும் முடியவில்லை..

 

அரக்கப் பரக்கவேலைசெய்து

கொண்டிருக்கும்போதும்...

அவசரமாக கழிப்பறையில்

ஒதுங்கும்போதும்...

பசி பொறுக்காமல்

உணவுக் கவளத்தை

விழுங்கும்போதும்..

ஒலி எழுப்பி

நிம்மதி கெடுக்கிறாய்..

 

உரையாடலை முறிக்கிறது

உன் டயல் டோண்..

தொடர்புஎல்லைக்கு வெளியே

இருப்பதாய்க் கூறி

உறவையே முறிக்கிறாய்

 

நீ இன்றி

எந்த ரகசியமும் இல்லை

உன்னிடம்

எதுவும்

ரகசியமாய் இல்லை..

 

கடன்காரன்

அழைக்கும்போது

சட்டென இணைக்கிற நீ

தேவையான நேரத்தில்

கிட்டாமலே வெட்டியும் விடுகிறாய்..

 

படம் பிடிக்கிறாய்

பாட்டும் படிக்கிறாய்

போட்டும் கொடுக்கிறாய்

 

நீ கூட இருந்தால்

கூட்வே ஒரு ஆள்

துணை இருப்பதாய்

ஒரு ஐதீகம்..

ஆனால்

கூடவே ஒரு

ஒற்றன் இருப்பதை

அனுபவம் சொல்லும்

 

இடும்பை கூர்

அலைபேசி

உன்னோடு வாழ்வதரிது

நீஇன்றியும்

வாழ்க்கை அரிது..

என் செய்வேன்

நோக்கியோனே!”

 

இந்த அலைபேசியால் நொந்துபோனவர்கள் மேலைநாடுகளில்  ’ 0 போஸ்டிங்’ என ஒரு இயக்கம் தொடங்கிகின்றனர் . முகநூலில் ,இன்ஸ்ட்டா கிராமில் , வாட்ஸ் அப்பில் எதையும் பகிராத நாள் ,வாரம் ,மாதம் என கடைப்பிடிக்கத் தொடங்குகின்றனர் .

 

இப்போதெல்லாம் அலைபேசி பணம் பரிவர்த்தனைக்கு மட்டுமா பயன்படுகிறது ; பணம் பறிக்கவும் ; ஏமாற்றவும் , மிரட்டவும் , பின் தொடரவும் பயன் படுகிறது . வாட்ஸ் அப்பில் வருவதெல்லாம் உண்மையா ? அறிவியலா ? சரியா ? எதையும் நம்பாதே . கேள்வி கேள் . வாட்ஸ் அப் யூனிவர்சிட்டியில் படிச்சு மேதையாக முடியாது . சொடக்குப் போடும் நேரத்தில் தகவல்கள் கொட்டும் ஆனால் அவற்றை கேள்விக்கு உட்படுத்தி உண்மையை சோதித்து அறிவதுதான் அறிவியல் பார்வை ஆகும் .

 

இது உணர்ச்சி வேக முடிவாக இருக்கலாம் . ஒரு போதும் தீர்வாகாது . அறிவியல் கருவியை எதற்கு பயன்படுத்துகிறோம் என்பதுதான் கேள்வியே தவிர .கருவியே பிழை அல்ல . சமூக வலைதளமோ அலைபேசியோ பிழை அல்ல . பயன்படுத்தும் நம்மிடம்தான் கோளாறு உள்ளது .கத்தியே கூடாது என முடிவெடுக்க முடியுமா ?கத்தி வேண்டும் .அதன் பயன்பாட்டை நாம்தான் தீர்மானிக்க வேண்டும் .அறிவியலும் அப்படித்தான் .

 

“ விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை” என்று புரசிக் கவிஞர் பாரதிதாசன் சொன்னாரே!  அந்த விசாலப் பார்வையை உன்னில் விதைக்கத்தானே அறிவியல் !

5]

என் பெயரன் இப்போது ஐந்தாவது படிக்கிறான் .அடிக்கடி என்னிடம் வானவியல் பற்றி கேள்வி கேட்பான் . பெரும்பாலும் தெரியாது .முழிப்பேன் .அவன் சொல்லுவான். அந்தக் கிரகத்துக்கு எத்தனை நிலா, இந்தக் கிரகத்துக்கு எத்தனை நிலா, அந்தக் கிரகம் என்ன நிறம் ,இந்தக் கிரகம் என்ன நிறம் ; எல்லாம் அவனுக்கு அத்துப்படி . துளிர் விநாடிவினாவில் பங்கேற்போருக்கும் இவை தெரியும் . இது அறிவியல் தகவல் ஞானம் . இதுவே அறிவியல் பார்வையாகாது .

 

செவ்வாய் [ mars] ஓர் அழகான கிரகம் . சூரியக் குடும்பத்தில் உள்ள ஓர் கிரகம் .சூரியனுக்கு நான்காவது உள்ள கிரகம் . இதன் மேல்பரப்பில் இரும்புத் தாது இருப்பதால் செந்நிறமாக இருக்கும் . சூரியனைச் சுற்றிவர கிட்டத்தட்ட 780 நாட்கள் ஆகும் . நீள்வட்டப் பாதையில் சுற்றும் செவ்வாய் பூமிக்கு அருகில் வரும் போது மூன்றரைக் கோடி மைல் தூரத்தில் இருக்கும் . விலகிப் போகும் போது 23.5 கோடி மைல் தூரத்தில் இருக்கும் .அது அதன் போக்கில்ச் சுற்றிக்கொண்டிருக்கிறது . நம்ம வீட்டில் கல்யாணம் ஆகாமல் ஒரு பெண் இருந்தால் , பழி செவ்வாய் மேலே . செவ்வாய் தோஷம் எனச் சொல்லிவிடுவோம் . சாதி ,மதம் , வரதட்சணை , ஆணாதிக்கம் , குடும்ப கவுரம் என்கிற வறட்டுத்தனம் ,விருப்பமின்மை , பொருளாதார நெருக்கடி இப்படி நம்மிடம் ஆயிரம் போலிக் காரணங்களை வைத்துக் கொண்டு பழியை செவ்வாய் மீது போடுவது என்ன நியாயம் ?இந்த செவ்வாய் தோஷம் சீனனை ,ஜப்பானியரை , ஐரோப்பியரை ஏன் பிடிப்பதில்லை ?

6]

சனி அழகான கிரகம் . சுற்றி ஓர் வட்ட வளையத்திற்குள் நடுவில் சுழலும் பந்துபோல் ரம்மியமாக இருக்கும் . பந்து மஞ்சள் நிறமாகவும் வளையம் வெள்ளையும் ஜொலிப்பும் கொண்டதாக இருக்கும் . பூமியைவிட ஒன்பது மடங்கு பெருசு . பூமியிலிருந்து சுமார் 144 கோடி கிலோ மீட்டர் தள்ளி இருக்கிறது . சூரியனுக்கு ஏழாவதாக இருக்கும் . சூரியனை ஒரு முறை சுற்றிவர 29.5 வருடமாகும் . சனியைச் சுற்றி 61 நிலாக்கள் இருக்கும் மேலும் 200க்கும் மேற்பட்ட குட்டி நிலாக்களும் இருக்கும் .அது யார் வாழ்க்கையையும் எப்போதும் பாதிக்காது .

 

ஏழரைச் சனி ,அஷ்டமத்து சனி , பொங்கு சனி ,மங்கு சனி ,விரையச் சனி ,பாதச் சனி ,ஜென்மச் சனி இப்படி விதவிதமாய்  நாமம் இட்டு பயந்து சாகிறோம் . எந்தச் சனியும் நமக்கு கெட்டதும் செய்யாது . நல்லதும் செய்யாது .அது அதன் வேலையே அல்ல

 

வானில் கிரகங்கள் நகர்ந்து கொண்டே இருக்கும் .இயங்கிக் கொண்டே இருக்கும் . அதன் விண்வெளி வானவியல்  அறிவியலை அறிந்ததால்தான் . விமானம் இயக்குகிறோம் . ராக்கெட் விடுகிறோம் . பல அறிவியல் முயற்சிகளைச் செய்கிறோம் .

 சோதிடக் குடுவைக்குள் அடைத்தால் நம் முன்னேற்றம்தான் தடை படும் .செய்யலாமோ சொல்லுங்கள் !

7]

 “விடைகளைக் கண்டு பிடிப்பது மட்டுமல்ல ; வினாக்களை எழுப்புவதும் அறிவியல் பணியே !” என்றார் அறிவியல் அறிஞர் ஜன்ஸ்டின் .

 

அண்மையில் முட்டை சாப்பிட்டால் புற்று நோய் வரும் .  உணவு ஆராய்ச்சிக் கழகம் அதிர்ச்சித் தகவல் என சன் டிவியில் பரபரப்பு செய்தி ஓடியது .

 

உண்மை என்ன ? ஒரு பிராண்ட் கம்பெனி ”தாங்கள் விற்கும் முட்டை , “ முழுக்க முழுக்க இயற்கை உணவைக் கொடுத்து வளர்த்த கோழி முட்டை” என விளம்பரம் செய்தது .

 

அதை ஆராய்ந்த பின் அவர்கள் சொல்வது பொய் கோழித்தீவனம் போட்டிருக்கிறார்கள் . அதில் இன்னென்ன ரசாயணம் உள்ளது . புற்று நோயை உருவாக்கும் ரசயாணம் மிக மிகக் குறைந்த அளவு உள்ளது .அதுவும் எந்தப் பாதிப்பையும் உருவாக்காது . நாம் சாப்பிடும் பல உணவுகளில் இருப்பதுதான் . இந்த கம்பெனி முழுக்க முழுக்க இயற்கை உணவு ஊட்ட்டப்பட கோழியின் முட்டை என்று விளம்பரம் செய்ததுதான் பொய் . அந்த முட்டை தடை செய்யப்படவே இல்லை . மரச் செக்கு எண்ணை எனச் சொல்லி விற்கும்  மோசடி போல.

 

கோழி ,ஆடு ,மாடு , பன்றி ,முட்டை எல்லாம் மனிதர் சாப்பிடும் உணவே . தாவர உணவோ புலால் உணவோ எதைச் சாப்பிடுவது என்பது அவரவர் உரிமை .தேர்வு . இதில் மதப் புனிதம் காட்டி பழிப்பது அறிவியலற்றது .இந்தப் புனித கோஷ்டிதான் கோழிமுட்டைக்கு எதிராய் கூப்பாடு போட்ட கோஷ்டி .

 

தினசரி வாட்ஸ் அப்பில் அறிவியல் என்கிற பெயரில் வரும் போலி அறிவியல் செய்திகள் நம்மை மலைக்க வைக்கிறது . இதைச் சாப்பிடாதே! அதைச் சாப்பிடாதே! இப்படிச் செய் !அப்படிச் செய் !மருந்தே வேண்டாம் !இப்படி வாட்ஸ் அப்பில் வரும் செய்திகளை எல்லாம் நம்ப வேண்டாம் . எல்லாவற்றையும் சந்தேகி . கேள்விக்கு உட்படுத்து ! அறிவியல் வழி அது ஒன்றுதான்.

8]

ரிச்சர்ட் டாவ்கின்ஸ் என்கிற மேலை தேசத்து மரபணு விஞ்ஞானி தம் பத்து வயது மகளுக்கு எழுதிய கடிதம் உலகப் புகழ் பெற்றது .கோடிக்கணக்கானோர் வாசித்துவிட்டனர் . இன்றும் கூகுளில் போய்

Richard Dawkins letter to his 10 years old daughter on Science and Faith என டைப் செய்தால்  எட்டு பக்கக் கடிதம் வாசிக்கக் கிடைக்கும் .தேடி வாசியுங்கள் .

 

அதில் அவர் சொல்கிறார் ,

” The way scientist use evidence to learn about the world is mauch cleverer and  more complicated than I can say in short letter . But now I want to move on from evidence , which is good reason for believing anything and warn you against three bad reasons for believing anything. They called ‘tradition’, ‘authority’,’revelation’.”

 “அறிவியலாளர்  இந்த உலகத்தைப் உரிந்து கொள்ள ஆதாரங்களைப் பற்றி நிற்பர் .  அது கடினமானதும் மிகவும் சிக்கலானதும் கூட . ஆதாரம் கோருவது என்பதிலிருந்து விலகி ஏதாவது ஒன்றை நம்புவதற்கு மூன்று தவறான காரணங்களை ஏற்கக்கூடாது என எச்சரிக்கிறேன் . அவையாவன ,’பாரம்பரியம்’ ,’ அதிகாரபீடம்’,’அருள்வாக்கு’.

9]

1 ]எதையும் சோதித்து அறியலாம் …

அதற்கு எப்போதும் எங்கும் போதிய வாய்ப்பு இல்லாத போது 

2 ]ஆதாரங்களைக் கேட்கலாம் .தேடலாம்.

அதற்கும் வாய்ப்பு அமையாத போது

3] திரும்பத் திரும்பச் செய்யச் சொன்னால் . அதன் உண்மை வெளிப்பட்டுவிடும் .

அதற்கும் தயங்குகிற போது ,

4 ] நேர்மறை என நிரூபிக்க முயலுவது போல் எதிர் மறையாகத் தவறென நிரூபிக்க கேள்விகள் கேட்டு முயலலாம் .

ஆனால்

அடிப்படை இரண்டு நிபந்தனைகள்

அ]நேர்மையாக எதையும் அணுக வேண்டும்

ஆ] திறந்த மனதோடு [ open mind ] இருக்க வேண்டும் .

 

விடை கிடைக்காத போது

May be or May not be

‘இருக்கலாம் ; இல்லாமலும் இருக்கலாம்’ என்று கூறவும் தயங்கக் கூடாது .

10]

அண்மையில் கூட நியூயார்க் டைமஸில் வந்த ஓர் அறிவியல் கட்டுரையில் இப்படிச் சொல்லப்பட்டுள்ளது .

 

 “So when should we trust science? The view that seems to emerge from Popper, Oreskes and other writers in the field is we have good, but fallible, reason to trust what scientists say when, despite their own best efforts to disprove an idea, there remains a consensus that it is true.”

 

”ஆக ,நாம் எப்போது அறிவியலை நம்புவது ? பாப்பர் ,ஒரஸ்கேஸ் போன்ற அறிவியல் அறிஞர்கள் சொல்வது என்ன ? அறிவியலில் சரியும் இருக்கும் பிழையும் இருக்கும் ; அது தவறானது என நிரூபிக்க முயன்று  முடியாது  போன பின்னும் உயர்ந்து நிற்கும் உண்மையே அறிவியல் .”

 

’அறிவியலை அறிவோம் . அறிவியலாய் இணைவோம்’ என நாம் உரக்கச் சொல்வோம் .அதன் வழி செல்வோம் .

 

11]

பண்டிட் ஜவஹர்லால் நேரு தன் அருமை மகள் இந்திரா காந்திக்கு பிரியதர்ஷினி என அழைத்து எழுதிய கடிதங்களின் தொகுப்பாய் இருக்கும் ‘உலக சரித்திரம்’ எனும் ஆழமான வரலாற்று நூலில் சொல்வதைச் சொல்லி முடிக்கிறேன்.

 

 “…. அறிவியல் தவறிழைக்காது என்று அர்த்தமில்லை .அடிக்கடி அது தவறிழைக்கிறது . அடிக்கடி அது சொன்னதை மாற்றிக் கொள்கிறது. ஆயினும் ஓர் பிரச்சனையை அணுக ‘அறிவியல் முறையே’ தகுந்தது என்று தோன்றுகிறது . தனக்குத் தெரியாதது ஒன்றுமில்லை என்று 19 ஆம் நூற்றாண்டில் அறிவியல் கொண்டிருந்த இறுமாப்பு போய்விட்டது .அது தன் சாதனைகளைப் பற்றிப் பெருமை கொள்கிறது .ஆனால் ,’ கற்றது கைமண் அளவு ; கல்லாதது உலக அளவு’ என்றறிந்து ‘ஆன்றவிந்து அடங்கி’ நிற்கிறது.அறிவுடையவன் அறிவின் போதாமையை உணர்கிறான் . அறிவில்லாதவனோ முற்றும் உணர்ந்த ஞானி என சுயதப்பட்டம் அடித்துக் கொள்கிறான் .’நிறைகுடம்’ தழும்புவதில்லை ; ’அரைகுடமே’ தளும்புகிறது .அறிவியலும் அப்படியே .

 

[ இதனிடயே சொல்லப்பட்ட இரு கதைகள் இங்கு தரப்படவில்லை ]

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

19 /01 /26.


“ சும்மா வாங்கண்ணுதான் கூப்பிடுறேன்… அதுவும் வெளியூருக்கு…”

Posted by அகத்தீ Labels:

 



ஒரு நிகழ்வில் பங்கேற்று நான் உரையாற்றிய பின்  சகோதரி ஒருவர் தனிப்பட்ட முறையில் கேள்விகள் எழுப்ப நானும் மகிழ்வுடன் உரையாடினேன் . அப்போது பேசியவை வழக்கமானதுதான் . இருப்பினும் மீண்டும் மீண்டும் தெளிவு படுத்தவேண்டியவை என்பதால் இங்கு அது சார்ந்து எழுதுகிறேன் .

 

உங்கள் பேச்சில் ஒரு மதத்தை மட்டுமே விமர்சிப்பது ஏன் என்கிற வழக்கமான கேள்வியோடுதான் அந்த உரையாடல் தொடங்கியது .

 

நீங்கள் சொல்வது சரிதான் . கீழே பட்டியலில் தரப்பட்ட புத்தகங்களை வாசித்திருக்கிறீர்களா ? அவை எல்லாமேப் பகுத்தறிவு பேசுகிறவை. ஆனால் ஓர் ஒற்றுமை இருக்கும் .அதை எழுதியவர்கள் தான் பிறந்த மதத்தைச் சார்ந்தே விமர்சித்திருப்பார்கள் . அடுத்தவர் மதத்தை வம்புக்கு இழுத்திருக்க மாட்டார்கள் .

 

ஏன் எனில் தான் சார்ந்த மதத்தை குறைகூறுவது என்பது சுயவிமர்சனம் . அடுத்தவர் மதத்தை குறை கூறும் போது அது அத்துமீறலாக ; அவதூறாக  கருதப்பட்டுவிடும் . ஆகவே இயன்றவரை அடுத்தவர் மதத்தில் தலையிட மாட்டார்கள் பகுத்தறிவாளர்கள் . இது ஜனநாயக அணுகுமுறை .[ தவிர்க்க இயலாமல் சில வேளை பிற மதம் சார்ந்து ஒன்றிரண்டு மென்மையான விமர்சனங்கள் செய்வது உண்டு.ஆனால் பொதுவாகத் தன் மதம் சார்ந்தே உரக்கப் பேசுவார்கள் ]

 

ஆனால் , மதவாதிகளோ / மதப் பிரச்சாரகர்களோ அடுத்தவர் மதத்தை அதிகம் இழிவு செய்வார்கள் . தன் மதம் உயர்வென்று நிரூபிக்க அடுத்தவர் மதத்தில் மூக்கை நுழைத்து கலவரம் செய்வார்கள் . எல்லா மதவெறியர்களும் இதில் ஒன்றுதான் .அந்த மதம் இந்த மதம் வேறுபாடெல்லாம் இல்லை .

 

பகுத்தறிவாளர்களுக்கும் மதவாதிகளுக்கும் இதுதான் அடிப்படை வேறுபாடு.  இங்கே நான் மதவாதிகள் மேல்தான் குற்றம் சாட்டுகிறேன் ; மத நம்பிக்கை கொண்டோர்கள் மேல் அல்ல .

 

நான் பட்டியலிடும் நூல்கள் …

 

1 ]நான் ஏன் கிறிஸ்த்துவன் அல்லன் (பெர்ட்ரண்ட் ரசல்)

2 ]மரண சாசனம் (ஜீன் மெஸ்லியர்)

3 ]பேய் பூதம் பிசாசு அல்லது ஆவி (இங்கர்சால் )

 4 ]நான் ஏன் நாத்திகன் ஆனேன் – பகத்சிங்

 5 ] நான் ஏன் இந்து இல்லை – காஞ்சா அய்லய்யா

 6 ]நான் ஏன் முஸ்லீம் அல்ல – இபின்வராக்

7] கடவுள் உண்டா ? இல்லையா ? – ஏ.பாலசுப்பிரமணியம்

8 ] கடவுள் உண்டா ? - ஸ்டீபன் ஹாக்கீங்

பட்டியல் நீளும்… இங்கு இதோடு நிறுத்திக் கொள்கிறேன். சிந்தனைச் சிற்பி தோழர் ம.சிங்காரவேலர் , பெரியார் ,குத்தூசி குருசாமி இன்னும் பலர் எழுதிக் குவித்தவை ஏராளம் இங்கு இருக்கின்றது . மொழி பெயர்ப்பு நூல்களும் நிறைய உண்டு .

 

சகோதரியோடு உரையாடலில் மேலும் சொன்னோன் ;

 

 “இன்னொன்று , கணவர் பகுத்தறிவாளராக இருக்கும் போது மனைவியின் இறை நம்பிக்கைக்குத் தடை இருக்காது . இருபக்கமும் கருத்துரிமை மதிக்கப்படும் ஜனநாயகம் அங்கு இருக்கும் . ஆயின் கணவர் ஆன்மீகவாதியாய் இருக்கும் போது மனைவி  பகுத்தறிவாளராக இருக்க அனுமதி கிடைக்காது .ஆணாதிக்கமும் சர்வாதிகாரமும் நிலவும் .”

 

ஒரு சகோதரி கேட்டார் , “  அது சரி !என் கருத்தை மதித்து அவர் கோயிலுக்கு வருவதில்லை . இது சரியா ?”

“ அவர் உங்களை கோயிலுக்கு போகாதே என்று தடுக்கிறாரா ?”

“ இல்லை .”

“ அப்புறம் அவரை கோயிலுக்கு வா என நீங்கள் கட்டாயப் படுத்துவது எந்தவிதத்தில் நியாயம் ? உங்களைப் போகாதே என அவர் கட்டாயப் படுத்தாத போது ; அவர் வரவேண்டும் என நீங்கள் கட்டாயப் படுத்தாமல் இருப்பதுதானே ஜனநாயகம் ….”

 

“ சும்மா வாங்கண்ணுதான் கூப்பிடுறேன்… அதுவும் வெளியூருக்கு…”

 

“ கோயிலுக்கு போகிறவர்கள் எல்லாம் சாமி கும்பிட வேண்டுமென்றோ , பக்தர்களாக இருக்க வேண்டுமென்றோ கட்டாயமில்லை . சுற்றுலாவாக , கலையை ரசிக்க , இடங்களைப் பார்வையிட , பொழுது போக்காக ,சும்மா துணைக்காக  ; மாறுபட்ட கருத்துள்ள போதும் கணவனும் மனைவியும் இணைந்து செல்லலாம் . இது இருவரும் விரும்பிச் செல்வதாக இருக்க வேண்டும் ; அதுவும் அவரவர் எல்லையை அங்கீகரித்துச் செல்வதாக இருக்க வேண்டும் .கட்டாயப்படுத்தியோ அடம்பிடித்தோ இழுத்துச் செல்வது முரண்பாட்டைத்தான் உருவாக்கும் .

 

[ கோயிலுக்கு மனைவியை அழைத்துச் சென்று ; அவர் வழிபட்டு வரும் வரை கோயில் வாசலிலேயே காத்திருந்து கூட்டிவரும் பகுத்தறிவாளர்கள் உண்டு ; அது குடும்ப ஜனநாயகத்தை மதிக்கும் பெருந்தன்மை . ஆனால் இதனை பயன்படுத்தி அவர் கொள்கைக்கு ஊறு செய்யும் விதத்தில் நடந்து கொள்வது சரியாக இருக்காது . அவரவர் கருத்தின் வழி அவரவர் சுதந்திரமாகச் செயல்படுவதே நன்று. இதற்காக ஒவ்வொருவரும் வீட்டிற்குள் கடும் கருத்துப் போராட்டம் நடத்த வேண்டி இருக்கிறது. ]

 

ஒத்த கருத்து எனச் சொல்லி தலையாட்டிப் பொம்மைகளாக வாழ்வதைவிட ; மாறுபட்ட கருத்தோடு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இணைந்து வாழ்வதே உயர்ந்த காதலாகும் .

 

இன்னும் சில கேள்விகள் இருக்கு. பின்னர் …

 

சுபொஅ.

12 /01 /26 .


”அறம்” , ”ஒழுக்கம்” ,” பழக்கம்”, வழக்கம்”:

Posted by அகத்தீ

 

  


          

  அறம் , ”ஒழுக்கம் ,” பழக்கம், வழக்கம்:

எதுவெனக் கேட்பின் 

சு.பொ.அகத்தியலிங்கம்.    

 

அறம் , ஒழுக்கம் ,பழக்கம் ,வழக்கம் போன்ற சொற்கள்  நம் வாழ்க்கை நெடுக ஏதோ ஒரு வகையில் நம்மில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவை   குறித்து கேள்வி கேட்பவரை சமூகம் எதிர்மறையாகவேப்  பார்க்கிறது. ஒவ்வொரு சொல்லும் பொருள் உடைத்தனவே ; அதன் பொருள் யாது என்பது குறித்த பதவுரை ,பொழிப்புரை ,விளக்கம் , வியாக்கியானம்  என உரையாசிரியர்கள் ஆளுக்கொரு பக்கம் இழுத்துச் செல்வார்கள் .காலம் ,இடம் சார்ந்து சொல்லின் பொருளும் மாறுபடும். ’மெய்ப்பொருள் காண்பதறிவுஎன்றே வள்ளுவரும் சொல்லிச் சென்றிருக்கிறார் . ஆயினும் மெய்ப்பொருள் யாது என்பதுதான் மிகப்பெரிய கேள்வி .

 

அதே நேரம் இவை காலந்தோறும் மாறிக்கொண்டே வந்திருக்கிறது என்ற உண்மையை சமூக பொதுபுத்தி வசதியாக மறந்துவிடுகிறது. இவற்றில் எது சரி, எது பிழை ,எது தேவை, எது சுமை, எது தடை , எது வழி  என்றெல்லாம் பகுத்துப் பார்க்க   நாம் முனைவதில்லை. அப்படி முயற்சி செய்வது தப்பு என்று கூட நம்மில் பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். எனினும் இவைகளைக் கேள்விக்குள்ளாக்கி  எதிர்த்துத்தான் சமூக சீர்திருத்த  முயற்சிகள் வினையாற்றியுள்ளன. சமூகத்தை மாற்ற விழைகிற யாரும் இவை குறித்து அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்வது தவிர்க்க முடியாதது, தவிர்க்கக் கூடாது.

 

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கைஎன்று சொன்ன வள்ளுவர்அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்றுஎன முடித்துவிடுகிறார் .  இங்கு சொல்லப்படும் அறம் எது ? பிறன் பழிக்கா வாழ்க்கை எங்ஙனம் ? கேள்வி எழுகிறது . ‘ அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைஎன அமைந்தால் அதுவே வாழ்வின்பண்பும் பயனும்என்கிறார் .அது சரி ? எது அறம் ? ‘ மனத்துக்கண் மாசிலன் ஆதல் ‘ , உள்ளத்தில் களங்கம் இல்லாதவனாக இருத்தல் ; அவ்வளவுதான் அறம் . அந்த அறத்தைஒல்லும் வகையெல்லாம்முடிந்த வழியில் எல்லாம் செய்க என்கிறார் . இப்படி வளைத்து வளைத்து வள்ளுவர் சொல்லும் அறம் எது ? மொத்தமாகக் குறள் வழி நடப்பது எனக் கொள்ளலாமா ? அப்படியாயின் எல்லா குறளும் இன்றைக்கும் அப்படியே பொருந்துமா ? உரையாசிரியர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குறளுக்கும் மாறுபட்ட கோணங்களில் விளக்கம் தந்தது கொண்டே இருக்கின்றனரே ! அறத்துப் பாலில்  அமைந்துள்ள 380 குறள்களில் சொல்லப்பட்ட அனைத்தையும் அறம் என இன்றைக்கு அப்படியே வரித்துக் கொள்ள இயலுமா ?   புலால் மறுத்தலை பொது விதியாக்க முடியுமா ? ’ஆகு ஊழ் [ அதிர்ஷ்டம்] , ’போகு ஊழ் [துரதிர்ஷ்டம் ] இரண்டையும் இன்றைக்கு அப்படியே கொள்ளவோ தள்ளவோ முடியுமா ? ‘ஊழில் பெருவலி யாவுளஎன ஊழ்வலியைக் காட்டி மிரட்டியவனும்  , ‘முயற்சி திருவினையாக்கும் ‘ ‘ஊழையும் உப்பக்கம் காண்பர்  என்றெல்லாம் நம்பிக்கை ஊட்டியவனும் வள்ளுவனே ! இதில் எதை அறமெனக் கொள்வது ?சுருக்கிச் சொல்வதாயின் வள்ளுவன் சொன்ன அறமும் இன்று பேசப்படும் அறமும் ஒன்றா ?  எது எது இன்றைக்கு மாறிய  சூழலுக்கு அப்படியே பொருந்தும் , எது எது பொருந்தாது என மீளாய்தல் பிழையாகுமோ ?  பேசுவோம்.          

 

ஒழுக்கம் ’,’ஒழுக்கம்என ஓயாது உபதேசிக்கப்படுகிறதே அந்த ஒழுக்கம் யாது? “ ஒழுக்கம் விழுப்பம் [ மேன்மை] தருவதால்அந்தஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் [ போற்றப்படும்]” சரி ! எது ஒழுக்கம் ?  உலகத்தோடு ஒட்ட ஒழுகல்அப்படியானால் ஊரே சாதி வெறியோடு தீப்பந்தம் ஏந்தும் போது நீயும் ஏந்த வேண்டுமா ? அப்படி ஒட்ட ஒழுகாவிடில் ,’பல கற்றும் கல்லார் அறிவிலாதார்  என உன்னை முட்டாளாக்கிவிடலாமோ ? அப்படிப் பொருள் கொள்ள முடியாது . அதன் முன் குறளில் , ’தீய வழுக்கியும் வாயால் சொலல்என்கிறார் ; அதாவது தீயசொற்களை  தன் வாயால் தவறியும்  சொல்லக்கூட மாட்டார்களாம்  ஒழுக்க முடையவர்கள் .அப்படிப் பேசுவதைக்கூட தவிர்க்கும்  ஒருவரிடம் அப்படித் தீங்கு செய்யச் சொல்லுவாரா வள்ளுவர் ? கேள்வி கேள் ,அறிவியலாய் இயங்கு என்பதல்லவா உலகோடு ஒட்ட ஒழுகல் ; அறிவியல் கைக்கொளல் யாவரும் பழக வேண்டிய ஒன்றல்லவா ? எதை வள்ளுவர் சொன்னார் ? குழப்பமாக இருக்கிறதே !  வள்ளுவர் காலத்து ஒழுக்கமும் இன்றைய ஒழுக்கமும் ஒன்றா ? ஒட்டு மொத்தத்தின் சாரமாகத்தானே வள்ளுவத்தையும் உள்வாங்க முடியும் ? வள்ளுவத்திலும் இன்றைக்குப் பொருந்தாக் கருத்துகள் அங்கொன்று இங்கொன்றாய் சில இருக்கத்தான் செய்கிறது . அது வள்ளுவன் குற்றமன்று ; காலத்தின் வளர்ச்சி ; தேவை . ஆகவே  மிகை நாடி மிக்க கொள்ளும்போது வள்ளுவம் வாழ்நெறி ஆகிறது .                            

 

ஆக , வள்ளுவத்தை விசாரிப்பதல்ல இங்கு எம் நோக்கம் ; தமிழர் வாழ்க்கையை விசாரிக்கப் புகின் வள்ளுவத்தை தவிர்த்து பேச இயலுமா ? இயலாது .அந்த வள்ளுவம் குறித்தே அறிவியல் ஒளியில் மறு ஆய்வு செய்யத் தயங்காத பகுத்தறிவு சமூகம்  சனாதனம்குறித்து மவுனம் காக்க முடியுமா ?சனாதனம்மாறாதது என்பது எவ்வளவு பெரிய பித்தலாட்டம் ? மனிதத்தை மறுதலிக்கிற ; வர்ண அமைப்பையும் சாதிப் படிக்கட்டுகளையும் அப்படியே பாதுகாக்கும் ; பாலின சமத்துவத்தில் நேர் எதிரான அணுகுமுறை கொண்ட, சனாதனத்தை இன்றைய ஒழுக்கமாய் ஏற்க முடியுமோ? கொஞ்சமேனும் யோசிக்கும் திறனுடை யாரேனும் ஏற்பரோ ?

 

கண்ணுக்கு கண் பல்லுக்கு பல்என்பது பழைய ஏற்பாடு; ’ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டுஎன்பது புதிய ஏற்பாடு. ’விசுவாசிக்கிறவன் சொர்க்கத்திற்குச் செல்வான்என்கிறது பைபிள்.  சந்தேகிக்கிறவன் அழிவான்என்கிறது இந்து சாத்திரங்கள். ஆனால்எல்லாவற்றையும் சந்தேகிக்கச் சொன்னார் மாமேதை தோழர் மார்க்ஸ். எல்லாவற்றையும் கேள்வி கேட்கச் சொல்கிறது  நவீன அறிவியல்.  கேள்வி கேட்பவன் அந்த நிமிடம் மட்டுமே முட்டாளாக இருக்கிறான்; ஆனால் , கேள்விகேட்காதவன் வாழ்நாள் முழுவதும் முட்டாளாக இருக்கிறான்என்பது சீனப்பழமொழி.  துஷ்டனைக் கண்டால் தூரவிலகிப்போஎன்பது பழமொழி.  பாதகம் செய்வாரைக் கண்டால் மோதி மிதிஎன்பது பாரதி மொழி.  ஙப்போல் வளைஎன்பது ஔவையாரின் ஆத்திச்சூடி.  குன்றென நிமிர்ந்து நில்என்பது பாரதியின் ஆத்திச்சூடி.

 

தையல் சொல் கேளேல்என்றார் ஔவை. ஆனால் பாலின சமத்துவத்திற்கு எதிரான இச்சொல்லை இன்று ஏற்க முடியுமா? ’முறுக்கி வளர்க்காத மீசையும் முறித்து வளர்க்காத முருங்கையும் அடித்து வளர்க்காத பிள்ளையும் உருப்பட மாட்டாஎன்பது சொலவடை. ஆனால் பிள்ளைகளை அடித்து இம்சை செய்வதை நவீன சிந்தனை             ஏற்குமா? மனித உரிமை ஆகுமா ? ஆக, நம் சிந்தனையில் செயலில் வாழ்க்கையில் பல மாறுதல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. தொடர்ந்து மாறும். ஆயினும் அறம் , ஒழுக்கம்  ,பழக்கம் ,வழக்கம் என பொத்தாம் பொதுவாகப் பேசுவதும்  எழுதுவதும் தவறான கருத்தோட்டங்களை தொடர்ந்து நியாப்படுத்துவதும் சரியாமோ ! 

 

புலால் மறுப்புஎனத் திருக்குறளில் ஒரு அத்தியாயமே உண்டு.  புலால் பழக்கம்  நல்லதா கெட்டதா? இது மதம் சார்ந்தும் சாதி சார்ந்தும் ஒரு விதமான கெட்டித்தட்டிப்போன கருத்தோட்டமாக உள்ளது. சைவம், அசைவம் என உணவு பழக்கத்தை சமயம் சார்ந்து இருகூறாக வைத்துள்ளனர். அது எப்படி சரியாக இருக்க முடியும் ? ஆதி மனிதன் பச்சைக் கறியைத்தான் சாப்பிட்டான். நெருப்பில் சுட்டுச்சாப்பிடுவதற்கு பல ஆயிரம் வருடங்கள் காத்திருந்தான். பச்சைக் காய்கறிகளைத் தான் சாப்பிட்டான். வேக வைத்து சாப்பிட அறிந்ததே வெகுகாலத்திற்குப் பின்னர்தான். மசாலாவின் சுவையை  அறிந்தது சில ஆயிரம் ஆண்டுகள் முன் தான். இதை இதைச் சாப்பிடலாம் இதை இதை சாப்பிடக் கூடாது என அந்தந்தப் புவிச் சூழலில் முடிவு செய்ய ; எவ்வளவு காலம் பலதை சோதித்து   சோதித்து  தன் சக மானுட உயிர்கள் பலவற்றை இழந்து இழந்து முடிவுக்கு வந்திருப்பான். புலாலுக்கு மட்டுமல்ல , தாவர உணவுக்கும் அது பொருந்தும் . தாவர உணவு போல்  புலால் சாப்பிடுவதும் அதாவது மாமிசம் சாப்பிடுவதும் மனிதனின் இயல்பே.  புலால் மறுப்புதான் அதற்கு மாறானது. சைவம் அசைவம் என்ற சொல்லாடலே தவறு.  அச்சொல்லே சமயம் சார்ந்த சொல்லே தவிர வேறல்ல .’புலால் உண்போர் ,’ புலால் மறுப்போர்என்றோ – ’புலால் பழக்கம் , ’மரக்கறி உணவு பழக்கம்என்றோதான் சொல்ல வேண்டும்.  புலால் வேண்டுமா வேண்டாமா என்பதை சமயமோ சாதியோ  எதோ பண்பாட்டு போலிஸ் கெடுபிடியோ முடிவு செய்யக்கூடாது  ; அவரவர் சுயவிருப்பமும் உடல் நலனும் சார்ந்து அவரவருக்கு எது தேவை என்பதை அவரவர் வாழ்வியல்  சார்ந்து  முடிவு செய்வது தான் அறிவியல் பூர்வமான பழக்கமாகும். இதற்கு மாறான எல்லாம் சமூக அராஜகமே. ஏற்க இயலாததே .           

 

பழக்கம் என்பதை எடுத்து கொள்வோம். எங்கள் ஊர்ப்பழக்கம், அல்லது எங்கள் சாதிப்பழக்கம் என்கிற பெயரால்  பிறப்பின் போதும் அல்லது   மரணத்தின் போதும்  வாழ்க்கை நெடுகிலும் பல சடங்குகள் தீர்மானிக்கப்படுகின்றன. அவை அறிவியல் பூர்வமாக இன்றைக்குப்

 

 பொருந்துமா என்று நாம் யோசித்துப் பார்ப்பதில்லை. உதாரணமாக பெண் பூப்படைவதை ஒட்டி செய்யப்படுகிற சடங்குகளும் அதைத்  தொடர்ந்து அந்தப் பெண்ணுக்குச் சொல்லப்படுகிற அறிவுரைகளும் பெண்  அடிமைத்தனத்தின் வெளிப்பாடுகளாகவே இன்றும் உள்ளன. ஆனாலும் அதை எந்த கேள்வியும் கேட்காமல்  கடன் வாங்கியாவது செய்கிற பழக்கம் தொடரத்தான் செய்கிறது.

 

பழக்கம், வழக்கம் இந்த இரண்டு சொல்லிற்கும் தெளிவான வரையறை செய்வது இயலாத காரியம். நடைமுறையில் இரண்டும் குழம்பியே இருக்கிறது. அக்கா மகளை திருமணம் செய்து கொள்வது எங்கள் குலவழக்கம்தான் என்று பல இடங்களில் நியாயப்படுத்தப்படுகிறது.  மிக நெருங்கிய இரத்த உறவுகளுக்குள் திருமணம் செய்து கொள்வது பல உடல் சிக்கல்களை உருவாக்கும். பிறக்கிற குழந்தை  ஏதோ ஒரு வகையில் ஊனமுற்றவர்களாக பிறக்க வாய்ப்பு அதிகம் என்கிறது மருத்துவ அறிவியல். ஆயினும் அத்தை மகள், அக்காள் மகள் இவர்களைத் திருமணம் செய்வது இன்னும்  தொடரத்தான் செய்கிறது.

 

அதே சமயம் சில பிரிவினரிடையே சகோதர உறவில் திருமணம் செய்கிற பழக்கமும் உண்டு. இதில் எது சரி, எது தப்பு என்று மிகப் பெரிய விவாதம் சமூகத்தில் நடைபெறுகிறது. சகோதர முறையில் திருமணம் செய்வதை மிகவும் ஒழுக்ககேடாகக்  கருதுகிற விமர்சிக்கிற ஒரு கூட்டம் இருக்கிறது.  உண்மையில் அத்தை மகள் அல்லது சித்தி மகள் என்பதில் மிகப்பெரிய வேறுபாடு எல்லாம் அறிவியல் ரீதியாக இல்லை.  அப்பா ,அம்மா இருவரின் சகோதரியோ சகோதரரோ ஒரே குடும்பத்தின் அங்கம்தானே ! இரண்டும்  குடும்ப மரத்தின் இருவேறு கிளைகளன்றி வேறென்ன?இரண்டு வழித் திருமணங்களும் அறிவியல் பூர்வமாக ஏற்கத்தக்கது அல்ல. தவிர்க்க வேண்டும் .

 

ஆக பழக்கம், வழக்கம் என்ற பெயரால் உறவுமுறைக்குள் கெட்டியாக நின்று கொண்டு இப்படி திருமணம் செய்து கொள்வது  மிகப் பெரிய சமூக சவாலாக வருங்காலத்தில் உருவெடுக்கும்.குறிப்பாக அகமண உறவுமுறை இந்திய சமூகத்தில் வலுவாக இன்னும் நீடிப்பதும்; அதிலும் நெருங்கிய உறவுமுறைக்குள் திருமணங்கள் நடைபெறுவதும் வருங்காலத்தில் உடல்ஊனமுற்றோர், மனவளர்ச்சி குன்றியோர் எண்ணிக்கையை மிகப்பெரிய அளவில் அதிகரித்து விடும் என மரபியல் அறிஞர்கள் எச்சரிக்கின்றனர். சாதியம் எனும் பெருநோய் கெட்டிப்பட அகமண முறை வேராகிறது . பழக்கம், வழக்கம், சம்பிரதாயம், சாஸ்திரம், சாதிப்பெருமை, மதப் பெருமிதம் என்கிற பெயரால் இந்த தவறான பழக்க வழக்கம் இன்னும் தொடரலாமோ ?

                                                                     

காதல் நம் பண்பாட்டின் கூறு என்று பெருமை பேசிக் கொண்டே காதலர்களுக்கு கொள்ளிவைப்பது ஏன்? சாதி, மத, வெறியன்றி வேறு என்ன? காதல் திருமணம்      என்பது ஒழுக்ககேடு அல்ல. உயரிய பண்பாடு என்று உரக்கச் சொல்ல வேண்டாமா?

 

இதுபோல் நாம் வாழ்க்கை நெடுக கருவறை தொடங்கி கல்லறை வரை எண்ணற்ற  சடங்குகளும் பழக்கங்களும், வழக்கங்களும் நம்கை பீடித்துள்ளன. அவை குறித்து ஓர் அறிவியல் பூர்வமான ஆய்வுக்கு நம் சமூகம் தயாராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.   

                                                                                             

ஒழுக்கம் குறித்து பேசாத மதங்களோ, நீதிநெறி இலக்கியங்களோ, சமூக சிந்தனையாளர்களோ இருக்கவே முடியாது. அதே சமயம் எது ஒழுக்கம் , எது ஒழுக்கமின்மை என்பது குறித்த பார்வையில் சமூகத்தில் குழப்பமும், பிற்போக்குத்தனமும், ஆதிக்க வெறியும், சாதியும், பெண்ணடிமைத்தனமும் கோலோச்சவே செய்கின்றன. பொய்சொல்லக்கூடாது, திருடக்கூடாது,  குடிக்கக்கூடாது, கொலைசெய்யக்கூடாது, ஏமாற்றக்கூடாது, வஞ்சகம் செய்யக்கூடாது, புறம்பேசக்கூடாது , பிறன் மனை விழையக்கூடாது , விபச்சாரம் கூடாது இது போன்ற பொதுவான கட்டளைகளை காலம் காலமாக கேட்டு வருகிறோம். இனியும் அவை தொடரும். இவற்றைப் பொதுவாக சொல்லுகிற போது நியாயமாக தோன்றுகிறது. ஆனால் கொஞ்சம்  ஒவ்வொன்றாய் அலசத்துவங்கினால் அது பெரும் விவாதப்பொருளாகிவிடுகிறது.

 

பொய் சொல்லக்கூடாது என்பது சரியே. ஆனால் மத நூல்கள் சொல்வது எல்லாம் பொய்தானே. சொர்க்கம், நரகம் என்பது பொய்தானே. கடவுள் என்பது பொய்தானே. பாவம் புண்ணியம் என்பது வெறும் கற்பிதம் தானே. பொய் சொல்லக்கூடாது என்று சொல்லி விட்டு மதநம்பிக்கையை கைவிடக்கூடாது என்று சொல்வது முரண்பாடானது அல்லவா?

                                                                                                                                                              

திருடக்கூடாது மிகச்சரி. நாகரிக சமூகத்தில் திருட்டு என்பது எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல. ஆனால் சொத்துடமையின் வேர்கள் எங்கே என்று அலசினால் அது  பிறர் சொத்தைபிறர் உழைப்பைபிறர் சேமிப்பைத் திருடியது என்கிற பேருண்மை பளிச்சிடும். இது சுரண்டலின் கூறாக உள்ளது. அப்படியானால் இந்த திருட்டை சொத்துடைமை எனக் கொண்டாடுவது சரியா ?எதிர்ப்பது சரியா ? பிறர் பொருளுக்கு ஆசைப்படாதே என  இழப்பதற்கு எதுவும் இல்லாத உழைப்பாளகளைப் பார்த்து ஒழுக்க உபதேசம் செய்பவர்கள்; சுரண்டலின் அடிப்படையே அடுத்தவருக்கு உரியதை அபகரிப்பது என்பதை உணர்வார்களா? அப்படியானால் இந்த சுரண்டலை எதிர்க்க வேண்டாமா?   

                                                                                            

கணவனுக்கு அடங்கியவளாகவே மனைவி இருக்க வேண்டும் அதுவே பெண்ணுக்குரிய ஒழுக்கம் என்று இன்றும் நடைமுறையில் சமூக பொது புத்தியில் வலுவான கருத்து உள்ளது. ஆனால் இது பெண்ணடிமைத்தனத்தின் குரல் அல்லவா? ஒழுக்கம் என்பது மனைவிக்கு கணவன் அடங்குவதோ அல்லது கணவனுக்கு மனைவி அடங்குவதோ அல்ல இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு; குறை நிறைகளை அங்கீகரித்துஅவரவர் தனித்துவத்தை ஏற்று - விட்டுக் கொடுத்தும் இணைந்தும்  வாழ்வதே ஆகும். ஆனால் எந்த ஒழுக்க உபதேசிகளும் இதனை வலியுறுத்துவதில்லையே ஏன்?

 

தீண்டாமை உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லையே ஆனால் இந்தியாவில் மட்டும் இந்த பழக்கம் ஏன்? அது மட்டுமல்ல சாதிய ரீதியாக ஒழுக்கக் கோட்பாடுகள் திணிக்கப்படுவது ஏன். உதாரணமாக பிராமணர்கள் பூணுல் அணிகிறார்கள். அவர்கள் இருபிறப்பாளர்கள் என்று வியாக்கியானம் செய்யப்படுகிறது.  ஆனால் பிராமணப் பெண்கள் ஏன் பூணுல் அணிவதில்லை? மற்ற சாதிகளுக்குப் பூணுல் அணியும் உரிமை ஏன் இல்லை? திருமணத்தின் போது மணமகனுக்குப் பூணுல் அணிவித்து திருமணம் செய்யப்படுகிறது. இதன் பொருள் என்ன? சூத்திரர்களுக்குத் திருமணம் செய்ய மநு உரிமை வழங்கவில்லை , எனவே பூணுல் அணிவித்து அந்த கொஞ்ச நேரம் மட்டும் அவனை பிராமணன் ஆக்கித் திருமணம் செய்வதும் , முடிந்ததும் பழையபடி சூத்திரனாக்குவதும் தொடர்கிறது. ஆனால் கேள்வி எழுப்பாமலே இந்தப் பழக்க வழக்கத்திற்கு பணிந்து போகிறார்கள். ஆனால் இதை மீறி  பதிவுத் திருமணமோ, சுயமரியாதைத் திருமணமோ செய்பவரை ஒழுக்கம் குறைந்தவராகவோ அல்லது வித்தியாசமான பிறவியாகவோ பார்க்கிற போக்கே சமூகத்தில் இன்னும் தொடர்கிறது. இனியும் மநுவின் ஒழுக்க அநீதிகள் தொடரலாமா?

 

பொதுவாக பழக்க வழக்கம் என்பது பண்பாட்டின் ஒரு கூறாகவும்; ஒழுக்கம் , அறம் என்பவை பண்பாட்டின் கருத்து நீரோட்டமாகவும் கருதப்படுகிறது. ஆனால்  சமூகம் அடிமைச் சமூகமாக இருக்கிற போது அடிமை எஜமானன் என்கிற சமூக பிரிவினையை நியாயப்படுத்தவே பழக்கம், வழக்கம், ஒழுக்கம் , அறம் அனைத்தும் பின்னப்பட்டன.

 

அந்த சமூகம் நிலப்பிரபுத்துவ சமூகமாக மாறியபோது அதற்கொப்ப நிலப்பிரபு, பண்னையடிமை என்கிற சுரண்டலை நியாயப்படுத்த இவை வலுப்படுத்தப்பட்டன. அதற்கொப்ப தர்ம நியாயங்கள் வரையறுக்கப்பட்டன .மற்ற நாடுகளில் நிலப்பிரபுத்துவ சிந்தனை உற்பத்தி கருவி சார்ந்த உழைப்புப் பிரிவினை உருவானது - செயல்பட்டது. ஆனால் இந்தியாவில் அது சாதி என்கிற கொடூரமான    பிரிவினையாய் சமூகத்தை மேல்கிழாய் - படிநிலையாய் குதறிப்போட்டு விட்டது. அது இன்னும் தொடர்கிறது.  முதலாளித்துவ சமூகம் பிற நாடுகளில் பழக்கம், வழக்கம்,  ஒழுக்கம் இவற்றில் காலத்திற்கு ஒப்ப பல மாறுதல்களை கொண்டு வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் இந்திய சமூகத்தில் முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்தோடு கைகுலுக்கிக் கொண்டு பழைய ஏற்பாடுகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு தொங்குவது  தொடர்கிறது. ஆகவே இந்திய சமூகத்தில் - தமிழ்ச்சமூகத்தில் நாம் இன்று பின்பற்றுகிற - உபதேசம் செய்கிற  பழக்கம், வழக்கம், ஒழுக்கம் ,அறம்  பெரும்பாலும் நிலப்பிரபுத்துவ காலக்கட்டத்தைச் சார்ந்தவையே. அவை சாதியத்தை தூக்கிப்பிடிப்பவையே. பாலின சமத்துவத்துக்கு எதிரானவையே !நீதிநூல்கள் ஒழுக்க உபதேசங்கள் இவை அனைத்தும் இந்த அடித்தளத்தில் இயங்குபவையே. எனவே கண்மூடித்தனமாக  இவற்றை பின்பற்றுவது ஆபத்தானது. இவற்றையே அறமென அப்படியே மாற்றமின்றிக் கொண்டாடுவதும் ஏற்புடையது அல்ல.

 

இதன் பொருள் பொய்சொல் என்பது அல்ல. திருடு என்பது அல்ல. பிறன்மனை விழை  என்பது அல்ல. மாறாக சமத்துவம், சகோதரத்துவம், தோழமை மிகுந்த; குடும்ப ஜனநாயகம் சார்ந்த புதிய பார்வை தேவை என்பது தான். எந்த ஒரு பழக்கம், வழக்கம், ஒழுக்கம் , அறம் எதுவாக ஆனாலும் அது சாதிய ஆதிக்கத்தை எதிர்க்கிறதா அல்லது மறைமுகமாகவோ, நேரடியாகவோ கெட்டிப்படுத்துகிறதா? என்ற அளவுகோலால் மதிப்பீடு செய்ய வேண்டும். அதேபோல பாலின சமத்துவத்திற்கு உகந்ததா எதிரானதா என்கிற தராசில் எடைபோட வேண்டும். மனித உரிமைகள் காக்கப்படுகிறதா மீறப்படுகிறதா என கணித்து பின்பற்ற வேண்டும் .சாதி ஆதிக்கத்தை உடைக்க - பாலின அடிமைத்தனத்தை நொறுக்க  நம்மிடம் உள்ள பல பழக்க வழக்கங்களை ஒழுக்க நியதிகளைத் தலைகீழாக  மாற்றியாக வேண்டும். இதை செய்கிற போது உன் மீது கலகக்காரன் அடங்காதவன் வில்லங்கமான பேர்வழி என சனாதன பேர்வழிகளும் பழமை விரும்பிகளும் வசைமாரி பொழியலாம்.  அதனை எதிர் கொண்டு தான் இந்த சமூகத்தை மாற்றத்துக்குப் போரிட முடியும்.                                   

 

அடி ! உடை ! நிர்மாணிஎன்றார் மார்க்ஸிம் கார்க்கி . தமிழ்ச் சமூகம் முதல் இரண்டில் காட்டிய அக்கறை போதுமான அளவுநிர்மாணிஎன்பதில் காட்டவில்லை. அதன் காரணம் நிலபிரபுத்தவத்தோடு இருந்த பாசப்பிணைப்புதான் . சனாதனத்தை எதிர்க்க வெடித்துப் பேசும் பலர் , மூவேந்தர் ஆட்சியின் பொற்கால கனவு மயக்கத்தில் மூழ்கிவிடுகின்றனர் .இப்போக்கு மாறியாக வேண்டும். சனாதனமும் பழமைப் பித்தும் நம்மைவிட்டுத் தொலைய வேண்டும் .”அரசியல் நடத்துவதற்கு மட்டுமல்ல குடும்பம் நடத்தவும் அறிவியல் தேவைஎன தன் வாழ்நாளெல்லாம் பேசி ,எழுதி பாடுபட்ட சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரை மீண்டும் மீண்டும் தூக்கிப் பிடிப்பது மாற்றத்தின் தொடக்கமாகட்டும் . “  அறிவை விரிவு செய் ! அகண்டமாக்கு ! விசாலப்பார்வையால் விழுங்கு மக்களைஎன்ற புரட்சிக் கவி பாரதிதாசன் கட்டளை நம் வாழ் நெறியாகட்டும் !