நேற்றின் பாடம்….?????
காலையில் அடுக்கக வளாகத்துக்குள்
இணையரோடு நடை பயிற்சி …
புறா ஒன்றை கவ்வித் தின்று கொண்டிருந்தது பூனை
”இவ்வளவு எலிகள் இங்கு சுற்றுகையில்
பூனைக்கு பாவப்பட்ட புறாதானா கிடைத்தது ?”
இணையர் நெஞ்சம் கலங்கக் கேட்டார் …
இரக்கம் சரிதான்
பூனைக்கு தேவை இரைதான்
ஒவ்வொன்றின் உணவுத் தேர்வை
நாம் எப்படித் தீர்மானிக்க முடியும் ?
நாங்கள் அடுக்ககம் வந்த புதிதில்
புறாக்கள் ,கழுகுகள் ,பாம்புகள் ,எலிகள் ,நாரைகள்
எங்கும் வட்டமிட்டன…
ஒர் மருந்து நிறுவனத்தி்ன் சமூக பொறுப்பின்மையால்
காச்சநாய்க்கன் ஹள்ளி ஏரி - பல நூற்றாண்டு பழைய ஏரி
நச்சு இரசாயணம் கலந்து மாசு பட்டது
மீன்கள் செத்து மிதந்தன
சுற்றி இருந்த மரங்கள் பட்டுப்போயின
கழுகுகள் ,புறாக்கள் ,நாரைகள் பெரும் பகுதி காணாமல் போயின….
தன்னார்வ அமைப்புகள் எதிர்குரல் எழுப்பின வழக்குத் தொடுத்தன
வழக்கம் போல் தாமதமாய்த் சற்று தூக்கம் கலைந்தது அரசு
இப்போது மறு கட்டமைப்புக்காக ஏரி வற்ற வைக்கப்பட்டுள்ளது
அடுக்ககம் தண்ணீர் லாரியை எதிர்பார்த்துக் கிடப்பது அன்றாடப் பிழைப்பு..
ஆரம்பத்தில் அடுக்ககத்துள் பாம்புகள் நாலய்ந்து
கொஞ்சம் எலிகள் …
எலித் தொல்லைத் தாங்க முடியவில்லை ..
மின் வயர்களைக் கடித்து வைத்தன
மின் சாதனங்கள் பழுதாயின
பெரும் பாதிப்பு வாஷிங் மெஷின்களுக்கே…
எங்கிருந்தோ ஓர் பூனை வந்தது
இனி எலித் தொல்லை இருக்காது என
எல்லோரும் கொண்டாடினர் …
பாலும் கறியும் மீனும் பூனைக்குக் கிடைத்தன…
பூனை ஜோடி சேர்த்துக் கொண்டது
குட்டிகள் போட்டன வேறு பூனைகளும் வந்தன
இப்போது பூனைகள் சாம்ராஜ்யம் கோலோச்சுகிறது
எலிகளும் மகிழ்ச்சியாய் குடும்பம் நடத்தி குட்டிபோட்டு
பல்கிப் பெருகி வம்சம் தழைக்க வாழ்ந்து கொண்டிருக்கின்றன
பாம்புகளும் தன் இடத்தை மாற்றி மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றன..
பிரச்சனையிலிருந்து தப்ப நினைத்து
பிரச்சனைகளில்ச் சிக்கிக்கொண்டு ..
மேலும் மேலும் மேலும் பிரச்சனைகள் சூழ….
மீள முடியா நம் வாழ்க்கைக்கு
இந்த பூனைகளும் எலிகளும் பாம்புகளும்
பாடம் சொல்லிக் கொண்டிருக்கின்றனவோ ?
நான் இப்படித் தத்துவம் சொன்னால்
இணையருக்கு கோபம் வராதா என்ன ?
நடை பயிற்சியின் போது இனி பேசக்கூடாது ….
நேற்றின் பாடம்… நடக்குமா ?
சுபொஅ.

0 comments :
Post a Comment