மே தினம் கொண்டாட உங்களுக்கு அருகதை இருக்கிறதா ?

Posted by அகத்தீ Labels:

 

மே தினம் கொண்டாட உங்களுக்கு அருகதை இருக்கிறதா ?

 

[ மேதினத் தியாகிகளும் மேதினம் கொண்டாடும் இன்றைய உழைப்பாளர்களுக்கும் இடையே ஓர் தோழமை மிக்க உரையாடல் ]

 

மே தினம் கொண்டாட உங்களுக்கு அருகதை இருக்கிறதா ? மென்மையான குரலில் காதைத் திருகினார் மேதினத் தியாகிகள் .

 

நாங்கள் உழைக்கும் வர்க்கம் ; அந்த ஒரு தகுதி போதாதா மே தினம் கொண்டாட ? கொஞ்சம் உரக்கவே பதில் சொன்னோம்.

 

ஓ ! அப்படியா ? மே தினத்தின் பெருமையை ஆற்றலை உணர்ந்தோர் எத்தனைபேர் ? மேதினத்தை இன்னொரு விடும்முறை நாளாய்க் கருதி பொழுதைக் கொல்லுவோர் எத்தனை பேர் ?

 

மே தினத் தியாகிகளே ! உங்கள் கோபம் நியாயந்தான் .. விழிப்புணர்வை  ஊட்டுவதில் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது .செல்வோம் ! ஆயினும் கொண்டாடும் எங்களை கோபவிழியால் பார்க்காதீர் !

 

ஜெர்மனியில் ,பிரான்ஸில் , பிரிட்டனில் இன்னபிற நாடுகளில்  உழைப்பாளிகள் லட்சம் லட்சமாய் வீதியில் திரளுகிறார்களே அவர்களுக்கு ஒருமைப்பாட்டை தெரிவிக்க நீங்கள் செய்தது என்ன ?

 

மேதின தியாகிகளே ! உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்தோம் ; மவுனமானோம்.

 

உங்கள் வீடுகளில் பணிக்கு வரும் பெண் உழைப்பாளிகளுக்கு எட்டு மணி நேர வேலை உண்டா ? வார விடுமுறை உண்டா ? சட்டச் சலுகைகள் உண்டா ? என்றைக்கேனும் இதை யோசித்ததுண்டா ?

 

சத்தியமாக அதை எல்லாம் ஒரு நிமிடம்கூட யோசித்ததே இல்லை . தப்பு செய்துவிட்டோம் ! மீண்டும் ஒப்புதல் வாக்குமூலம் தந்தோம்.

 

மலக்குழி மரணங்களும், தீண்டாமை இழிவுகளும், சாதி ஆணவப் படு கொலைகளும் உழைக்கும் வர்க்கத்திற்குள்ளாகவே எனில் வெட்கித் தலைகுனிய வேண்டாமா ? இதனை எதிர்க்காமல் மேதினம் கொண்டாட உங்களுக்கு அருகதை இருக்கிறதா ?

 

கேள்வியின் நியாயச் சூட்டில் நெளிகிறோம் விடைதேடி . தலைமுறை தலைமுறையாய் மரத்துப்போன இதயத்தை உசுப்பிவிட இப்படிப்பட்ட கேள்விச் சவுக்குகள் அவசியம்தான். நேர்மையோடு கேள்வியை எதிர்கொள்கிறோம்.

 

பெண்ணடிமை நீங்கி பாலின சமத்துவம் ஓங்க பேசுகிறீர் ! மறுக்க வில்லை . ஆயினும் உங்கள் வீட்டில் - உங்கள் உறவில்- உங்கள் பணி இடத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது தட்டிக் கேட்க உங்கள் குரல் உயர்ந்ததுண்டா ?

 

முயற்சிக்கிறோம் . போக வேண்டியது வெகுதூரம் .பழமைவாதம் எம் மூளையில் பாறாங்கல்லாய் அழுத்திக் கொண்டே இருக்கிறது ! தூக்கி எறியமாட்டாமல் மதம் ,சாதி ,பண்பாடென சமாதானம் சொல்லி ஓய்கிறோம் ! எங்கள் முயற்சி தொடரும் !!

 

முயற்சியைக்  கைவிடாதீர்கள் ! தொடருங்கள் ! உள்ளூரில் முறைசாரத் தொழிலாளிகள் கோடிக்கணக்கில் வேலை நேரமும் இன்றி உரிய சட்ட சலுகைகளும் இன்றி வறுபடுகிறார்களே அவர்களுக்காய் நீங்கள் எத்தனை முறை வீதிக்கு வந்தீர்கள் ?

 

வந்தோம் ,ஆனால் வெறும் சடங்காகத்தான் இருக்கிறதோ ? முறைசாராத் தொழிலாளர் துயரம் நீள்கதை ஆகிறதே ! பேசிக் கொண்டே இருக்கிறோம்.

 

சரி ! அது போகட்டும்! விவசாயிகள் கோபம் கொப்பளிக்க ஓராண்டாய் வீதியில் நின்றார்களே ! அரசு இயந்திரத்தின் கோரப் பற்சக்கரங்களை தடுத்து நிறுத்தும் தடையரண் ஆனீர்களா ?

 

சும்மா சுருண்டு கிடக்கவில்லை .குரல் கொடுத்தோம் ஆயினும் கேளாக் காதினரான அரசின் செவிப்பறை கிழிய உரத்து முழங்கவில்லை .

 

உண்மையை ஒப்புக் கொண்டதே முதல்படி . சரி! வேலையின்மை வாட்டி வதைக்கிறதே அதற்கெதிராய் கிளர்ந்தெழுந்தீர்களா? வேலையில்லா இளைஞர்களை உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராக கொம்பு சீவுமே ஆளும் வர்க்கம் ? இதனை உணர்ந்தீர்களா ?

 

உணர்ந்தோம் அரசியல் உணர்வு பெற்ற சிறுபகுதியினர் . தொழிலாளி வர்க்க உணர்வாய் இதனை பதியம் செய்யத் தவறிவிட்டோம் !

 

மெல்ல சரியான தடம் நோக்கி நகர்கிறீர்கள் !கொரானா கொடுந் தொற்று உலகையே புரட்டிப்போட்டதே ! சக உழைப்பாளிகள் சொந்த ஊருக்கு மைல் கணக்கில் பாதம் நோக நடந்தார்களே நீங்கள் செய்தது என்ன ?

 

சில இடங்களில் உணவும் நீரும் அளித்தோம் ; ஆனால் அரசின் கன்னத்தில் நாலு அறைவிட்டு இக்கொடுமையைத் தடுக்கத் தவறிவிட்டோம் !

 

பெரும்பாலோர் ஊதியமும் வருவாயும் இன்றி முடங்கிக் கிடக்கையில் அரசு ஊதியம் பெற்றோர் சக உழைப்பாளிக்கு செய்த கைமாறென்ன ? அண்டை வீட்டு அன்றாடங் காய்ச்சி கல்வி கற்க துணை நின்றீர்களா ?

 

வர்க்க உணர்வு பெற்ற சிலர் தன்னார்வ தொண்டில் இறங்கினர் ; பாடம் சொல்லிக் கொடுத்தனர் .ஆனால் அது மிகமிக சொற்பம். பெரும் பாலோர் தூங்கினர் . பொறுப்பற்று இருந்தனர் .

 

போராடிப் பெற்ற உரிமைகளை ஒவ்வொன்றாய் ஆளும்வர்க்க கடித்து ருசித்து சாப்பிடுகிறது ;ஜனநாயகம் முடமாக்கப்படுகிறது ; உங்கள் எதிர்வினை அவர்களை நடுங்கச் செய்ய வேண்டாமா ?

 

வெறுமே சடங்குத்தனமாய் சில கண்டனங்களோடு ஓய்ந்துவிடுகிறோம் ; தன் மனைவி தன் பிள்ளை தன் வீடு தன் சுற்றம் என சுருங்கி விடுகிறோம் .சுருண்டு விடுகிறோம் ; அலைபேசியில் அமிழ்ந்து தூங்கிவிடுகிறோம்.

 

தூங்குகிறவன் தொடையில்தானே கயிறு திரிக்க முடியும் .12 மணி நேர வேலை மூக்கை நுழைத்தது அப்படித்தானே ! கொஞ்சம் நிமிர்ந்தபோதே இரண்டடி பின்னால் போனது எனில்  நீங்கள் வர்க்கப்படையாய் திரண்டால் … கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்! வர்க்க உணர்வு பெற யார் தடை ? எது தடை ? போதிக்க வேண்டியவர் தவறா ? கற்க மறுத்த நீங்களா ?

 

பதில் தேட வேண்டும் . குற்றம் இரு பக்கமும் இருக்கும் போல்தான் தெரிகிறது …

 

 

சாதி ,மத வெறியில் ஆயுதம் ஏந்துவதும், கொலையுண்டு வீழ்வதும் உங்கள் சகோதர சகோதரிகள்தானே … தடுக்கவும் - சரியான பாதைக்கு வென்றெடுக்கவும் நீங்கள் செய்தது யாது ? பேராபத்தை எதிர்கொள்ள என்ன வியூகம் உள்ளது உங்களிடம் ?

 

சில ஆர்ப்பாட்டங்கள் … கொஞ்சம் துண்டுப் பிரசுரங்கள் … யானைப் பசிக்கு சோளப்பொரியாய் சில … அவ்வளவே …

 

ஆம் . சுயவிமர்சனம் சரியாகத்தான் செய்கிறீர்கள் ! இந்நிலை மாற்ற என்ன செய்தீர்கள் ? கார்ப்பரேட் காவிக் கூட்டணியில் பாசிசம் இரத்தக் காட்டேரியாய் எங்கும் உயிர் குடித்து அலைகிறது … என்ன செய்யப் போகிறீர்கள் ?

 

தேர்தலில் தோற்கடிக்க ஒற்றுமை தேவைப் படுகிறதே ?

 

பார் ! பார்! மீண்டும் மீண்டும் ! தேர்தல் சக்கரத்துக்குள் அரைபடவே யோசிக்கிறீர்கள் ? தேர்தல் ஒரு தற்காலிக தடுப்பு .அவ்வளவுதான் .தொழிலாளி வர்க்க அரசியலை முதலாளித்துவ கூட்டணியில் எதிர்பார்த்து எத்தனை முறை ஏமாறுவீர்கள் ?

 

வேறென்ன வழி ?அதிகாரம் அவர்கள் கையில் அல்லவா ?

 

தப்பு ! தப்பு ! தேர்தலும் கூட்டணியும் பாசிச எதிர்ப்புப் போரில் தவிர்க்க முடியாததே ! சேர்ந்தீர்கள் ! இனியும் சேர வேண்டும் ! பிழை இல்லை அதில் ; வர்க்கப் போராட்ட கனல் அணைய  விடலாமோ ? தேர்தல் மாயை கண்ணை மறைக்காமல் காத்திடல் வேண்டாமோ ?

 

எல்லாமே எம் தவறுதானா ? ஆளும் வர்க்க லாபவெறிக்கும் நாங்கள்தான் பலி ! சாதி மத வெறிக்கும் நாங்கள்தான் பலி ! அதை எதிர்க்கத் தவறியதற்கும் நாங்கள்தான் குற்றவாளியா ? வெடித்து கேட்கிறோம் .

 

வருத்தமாகத்தான் இருக்கிறது .வர்க்கமாகவும் வர்ணமாகவும் பிளவுண்டு மிதியுண்டு கிடக்கிற நீங்கள் விட்டில் பூச்சியல்ல விளக்கில் விழுந்து மடிய ! நீங்கள் கோடிக்கால் பூதம் !விழித்தால் குவலயம் நடுங்கும் ! எழுக ! ஏன் இன்னும் கும்பகர்ண தூக்கம் என்பதுதான் கேள்வி !

மெய்தான்…மெய்தான்.. இந்த விழிப்புணர்வை வரவைக்க இன்னும் வலுவாய் இன்னும் கூர்மையாய் இன்னும் பரவலாய் இன்னும் தெளிவாய் இன்னும் எளிமையாய்  …. சொல்லிக்கொண்டே போகலாம் செய்ய முனைவோம்…

 

தோழர்களே !மே தினம் கொண்டாட உங்களுக்கு அருகதை இருக்கிறதா ? மென்மையான குரலில் மீண்டும் இதயத்தோடு உரையாடினர் மேதினத் தியாகிகள் .

 

தோழா !நாம் உழைக்கும் வர்க்கம் ; அந்த ஒரு தகுதி போதாதா மே தினம் கொண்டாட ? உழைக்கும் வர்க்கம் நாங்கள் தவறு செய்வோம் ! தடுமாறி விழுவோம் ! சதிக்கு ஆளாவோம் ! நம்பி ஏமாறுவோம் ! எத்தனை முறை விழுந்தாலும் எழுவோம் ! இறுதி வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்!

 

மேதினத் தியாகிகள் புன்னகைத்தனர் . அதில் ஆயிரம் பொருள் மிளிர்ந்தது !

 

அவர்கள் தொடங்கிய போராட்டம் இப்போது எம் தோள்களில் ; தொடர்வோம் ! வெல்வோம் !

 

மேதினம் வாழ்க ! உழைக்கும் வர்க்கம் வெல்க !

 

 

சுபொஅ.

30/4/2023.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


0 comments :

Post a Comment