நான் பிறந்த ஊரு …

Posted by அகத்தீ Labels:

 



நான் பிறந்த ஊரு …

 

 ஆற்றங் கரையுண்டு

அழகான சோலையுண்டு

நந்தவனம் உண்டு

நன்செயல்கள் சூழவுண்டு

சத்திரங்கள் உண்டு

தமிழ்க் கல்வி சாலையுண்டு

தெப்பக் குளம் உண்டு

தேரோடும் வீதி உண்டு

நான்கு மதில்கள் உண்டு

நடுவில் ஒரு கோவில் உண்டு

கோபுர வாசல் உண்டு

கொடிமரம் இரண்டுண்டு

சித்திரையும் மார்கழியும்

திருவிழாக் காட்சி உண்டு

பார்த்திடக் கண்கள்

பதினாயிரம் வேண்டும்

தொன்னகரம் ஆன

சுசிந்தைச் சிறப்பெல்லாம்

என்னொரு நாவால்

எடுத்துரைக்க ஏலாதே !”

 

மேலே உள்ளது “சுசீந்திரம்”எனும் தலைப்பில் கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை எழுதிய கவிதை ..

 

கவிதை என் நினைவுகளைக் கிழற , நான் பிறந்த ஊரும் சுசீந்திரம் என்பதால் “ நான் பிறந்த ஊரு..” என புதிய தலைப்பிட்டு இங்கு நான் அதனைப் பகிர்ந்தேன். இது என் தாயின் ஊர் ஆகும். நான் பிறந்து வளர்ந்த்தெல்லாம் இங்குதான்.

 

பத்தாம் வகுப்பு படித்து முடிக்கும் வரை புழுதியில் உருண்டு விளையாடிய ஊர் சுசீந்திரம் ஆகும் .பதினோராம் வகுப்பு முதல்தான் சென்னை வாசம்.

 

சுசீந்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட தேரூர் எனும் சிற்றூரில் பிறந்தவர்தாம் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை .

 

அவர் மணம் முடித்தது புத்தேரி .இவ்வூர் நாகர்கோவிலில் இருந்து தோழர் ப.ஜீவானந்தம் பிறந்த பூதப்பாண்டிக்கு போகும் வழியில் உள்ள ஊர் .

 

புத்தேரி என் தந்தை ஊர் . என் தந்தை கவிமணியோடு நன்கு பழகியவர் .

 

என்னிடமிருந்த எனக்குப் பிடித்த  “ கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பாடல்கள் ” தொகுப்பு எப்போதோ [ சிலவருடங்கள் முன்பே ] தொலைந்துவிட்டது . படிக்க வாங்கிச் சென்றவர் பதுக்கிவிட்டார் .நான் செய்யாததையா அவர் செய்தார் ?

 

அண்மையில் 11வது ஓசூர் புத்தகக் காட்சியில்  ‘மீனா எண்டர்பிரைசஸ்’ ஆவுடையப்பன் அன்போடு தாம் வெளியிட்ட “கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பாடல்கள்” நூலைக் கொடுத்தார் .மீண்டும் அப்புத்தகம் என அலமாரிக்கு வந்ததால் ஆசையோடு புரட்டினேன் . சுசீந்திரம் கண்ணில் பட்டது .இங்கே பதிந்துவிட்டேன். ஒன்று தொடக்கத்தில், இன்னொன்று கீழே !

 

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை .பக்தி இல்லை .ஆயினும் தேசிய விநாயகம் பிள்ளை எங்கள் ஊர் சுசீந்திரம் தாணு மாலயனைப் பாடிய பக்திப் பாடலின் சொல்நயமும் ஊர்பாசமும் என்னை ஈர்த்துவிட்டது . பாடல் கீழே !

[ நாலாவது வரியில் உள்ள கடு எனும் சொல்லை நச்சு /விஷம் எனப் புரிக]

 

“திங்கள் கருணை காட்டும்;

தீக்கண் உன் வெகுளி காட்டும்;

கங்கையுன் பெருமை காட்டும்;

கடுவும்உன் ஆண்மை காட்டும்;

சிங்கம்நுண் இடையைக் காட்டும்;

சிறையனம் நடையைக் காட்டும்;

மங்கையோர் பாகா ! தாணு

மாலயா !சுசிந்தை வாழ்கவே !”

 

தேசிய விநாயகம் பிள்ளை பாடல்களை இன்னும் கொஞ்சம் பேசலாம் என எண்ணுகிறேன். நாளை சந்திப்போம்.

 

 

[ தேசிய விநாயகம் பிள்ளை மீசையோடு இருக்கும் படம் அபூர்வம் .அவர் தன் இணையரோடு இருக்கும் அரிய படம் ஒன்று என் கண்ணில் பட்டது பதிந்துவிட்டேன்.]

 

சுபொஅ.

27/7/2022.



0 comments :

Post a Comment