கவிதைக் குழப்பம் – நான் - கவிமணி …..

Posted by அகத்தீ Labels:

 


கவிதைக் குழப்பம் – நான் - கவிமணி  …..

 

 

அட போப்பா! இந்த கவித பஞ்சாயத்து பெரும் பஞ்சாயத்தா இருக்கு ? பட்டிமன்றம் ,வழக்காடு மன்றம் , பகடி ,அவதூறு ,விமர்சனம் ,எள்ளல் ,எகத்தாளம் எல்லாம் கலந்துகட்டி ஆடுறாங்க.

 

புரிஞ்சாத்தான் கவிதை , புரியவிட்டால்தான் கவிதை , அதைப் பற்றி எழுதினால்தான் கவிதை , இதைப் பற்றி எழுதினால்தான் கவிதை, இப்படி எழுதினால்தான் கவிதை , அப்படி எழுதினால்தான் கவிதை ; முடியலைடா சாமி ! ஆளைவிடுங்கோ ! நல்ல வேளை நான் கிறுக்கியவைகளை கவித புத்தகம்னு போட்டுத் தொலைக்கல …

 

நீ என்ன சொல்லுகிறாய் எனக் கேட்போருக்காக நான் ஏற்கனவே எழுதிய இரண்டு கவிதைகளைக் கோர்க்கிறேன் .

 

[ அதைக் கவிதைன்னு யாரு சர்ட்டிபிகெட் கொடுத்ததுன்னு பஞ்சாயத்துக்கு வராதீங்க ..நானே சொல்லிக் கொண்டது .ஆளை விடுங்க ]

 

“ரசனை இல்லாமல்

கவிதை பூக்காது

 

அன்பில் நனையாமல்

கவிதை முளைக்காது

 

காதலில் தோயாமல்

கவிதை துளிர்க்காது

 

கோபம் தகிக்காமல்

கவிதை வெடிக்காது

 

அனுபவம் செதுக்காமல்

கவிதை பிறக்காது -ஆயின்,”

 

மனிதம் கொன்றபின்

கவிதைதான் ஏது ??”

 

சுபொஅ. [2021 டிசம்பரில் எழுதியது]

 

 

புதிய சொல் நெய்வோம்

 

 “பாவம் புண்ணியம்

புனிதம் தீட்டு

இன்னும் இன்னும்...

 

சொற்களுக்குப் பின்னாலே

பதுங்கி இருக்கிறது வஞ்சகம்,

இப்போது கண்டுகொண்டோம்

 

ஏன் கண்ணை உருட்டுகிறாய் ?

வானுக்கும் பூமிக்கும் குதிக்கிறாய் ?

உன் வேஷம் கலைந்து விட்டதென்றா ?

 

நாங்கள் தூக்கி எறிய நினைப்பது,

வார்த்தைகளை மட்டுமல்ல,

வர்ணநீதியின் சகலகேடுகளையும் தான்.

 

மனிதனை மனிதன் சமமாய்ப் பார்க்கும்;

புதுநெறியை மானுடப் போரில் நெய்வோம் ;

அதனுடன் அதற்கான சொற்களையும்தான்.”

 

சுபொஅ.[ 2016 ஜூலையில் எழுதியது]

 

அதெல்லாம் இருக்கட்டும் கவிதை என்றால் என்ன சொல்லுக என நீட்டி முழக்குவோருக்காக ….

 

எங்கள் ஊர் கவிஞர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை கவிதையைப் பற்றி “ கவிதை” என்ற தலைப்பிலேயே எழுதியதைச் சொல்லட்டுமா ? உரக்கச் சொல்லட்டுமா ? அதைவிட தெளிவாய் வலுவாய் அழகாய் ஆழமாய் யார் சொல்லிவிட முடியும் ?

 

 “வண்டி அற்புதப் பொருளாம் – வண்டி

மாடும் அற்புதப் பொருளாம் ;

வண்டி பூட்டும் கயிறும் – எந்தன்

மனதுக்[கு] அற்புதப் பொருளாம் .

 

வண்டல் கிண்டி உழுவோன் – கையில்

வரிவில் ஏந்தி நின்ற

பண்டை விசயன் போல – இந்தப்

பாரில் அற்புதப் பொருளாம்.

 

பறக்கும் குருவியோடு என் – உள்ளம்

பறந்து பறந்து திரியும்;

கறக்கும் பசுவைச் சுற்றி – அதன்

கன்று போலத் துள்ளும்.

 

ஈயும் எனக்குத் தோழன் – ஊரும்

எறும்பும் எனக்கு நண்பன்;

நாயும் எனக்குத் தோழன் – குள்ள

நரியும் எனக்கு நண்பன் .

 

கல்லின் கதைகள் எல்லாம் – இரு

காது குளிரக் கேட்பேன்;

புல்லின் பேச்சும் அறிவேன் –அதைப்

புராண மாக விரிப்பேன்.

 

அலகில் சோதியான – ஈசன்

அருளினாலே அமையும்

உலகில் எந்தப் பொருளும் – கவிக்கு

உரிய பொருளாம் .ஐயா !

 

உள்ளத்து உள்ளது கவிதை – இன்பம்

உருவெடுப்பது கவிதை ;

தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை

தெரிந்துரைப்பது கவிதை .”

 

கவிமணியின் அளவுகோலை மிஞ்சிய அளவுகோல் என் கண்ணில் தட்டுப்படவில்லை .

 

கவித பஞ்சாயத்து முடிஞ்சது … கிளம்புங்க கிளம்புங்க கவிதை எழுத .. கவிதை வாசிக்க … ரசிக்க…

 

 “உள்ளத்து உள்ளது கவிதை – இன்பம்

உருவெடுப்பது கவிதை ;

தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை

தெரிந்துரைப்பது கவிதை .”

 

நாளையும் கவிமணியின் பாடல்களுடனும் பார்வையுடனும் சந்திக்கிறேன்… சரிதானே …

 

 

 

 

சுபொஅ.

28/7/2022.

 

0 comments :

Post a Comment