நிறங்களின் பின்னால்…

Posted by அகத்தீ Labels:

 

நிறங்களின் பின்னால்…

 

எழுபதுகளில் எண்பதுகளில் நிறங்களைப் பற்றிய பிம்பம் வேறுமாதிரியாக கட்டமைக்கப்பட்டிருந்தது .

 

எங்க அப்பா எப்போதும் எங்களுக்கு பச்சை வண்ண சட்டை ,டவுசர் , எங்க அக்காவுக்கு பாவாடை எல்லாம் வாங்குவார் . அவருக்கு வெள்ளை ஜிப்பா ,பச்சை கரை வேட்டி ,அம்மாவுக்கு பச்சை நிற புடவை ,பச்சை இல்லாமல் அவர் வாங்கும் உடை அமையாது . அவர் தனக்கு பச்சை வண்ணம் ராசி என்பார் .எம் நண்பர்கள் இந்த பச்சையைக் காட்டியே கேலி செய்வார்கள் .

 

சிவப்பு ,கறுப்பு ,கருநீலம் போன்ற அடர் வண்ணங்கள் கண்ணை உறுத்தும் நிறங்களாகப் பார்க்கப்பட்டன. ஆனால் ,அடித்தட்டு மக்கள் உழைக்கும் மக்கள் கொண்டாடிய நிறங்களாக இருந்தன.

 

என்னடா  உன் டேஸ்ட்டு கிராமத்தான் மாதிரி என கேலி செய்வார்கள் .

 

இண்டர்வியூ , பெரிய சந்திப்புகளுக்கு அடர்நிறங்கள் ஏற்றதாக கருதப்படவில்லை . மென்னிற உடைகள் அதற்கென இருக்கும் .

 

சந்தணம் நிறம் ,வெள்ளை ,மேக வண்ணம் என கண்ணை உறுத்தாத வண்ணங்களே உபதேசிக்கப்பட்டது .

 

பெரும்பாலும் இவை நகரம் சார்ந்த , நடுத்தரவர்க்கம் ,மேட்டுக்குடி சார்ந்த நிறங்களாகக் கொண்டாடப்பட்டன .

 

காணும் பொங்கலன்று சென்னையில் பொருட்காட்சி ,மெரினா கடற்கரை எங்கும் கூட்டம் பிதுக்கித் தள்ளும் அப்போது அங்கு உழைக்கும் மக்களும் அடித்தட்டு மக்களுமே மொய்த்துகிடப்பர் . அதை கேமிராவில் கிளிக்கினால் அடர் வண்ணங்களின் சங்கமமாக இருக்கும் .

 

இதையே சுட்டி அடர் நிறங்களை கேலி செய்வதும் உண்டு .

 

ஆயின் பெண்களின் உடைத் தேர்வில் இந்த நிறச் சேர்மானம் வேறுமாதிரி செயலாற்றும் .அங்கு சிவப்பு ,நீலம் , பச்சை ,மஞ்சள் ஓங்கி நிற்கும் .கறுப்பும் ,வெள்ளையும் பெண்களுக்கு உகந்த நிறமல்ல என ஒதுக்கப்படும் . துக்கம் ,விதவை இவற்றின் குறியீடாக்கப்படும்.

 

பள்ளிகளில் வெள்ளைத் தாவணியை மாணவிகளுக்கு சீருடை ஆக்கிய போது கடும் எதிர்ப்பும் விமர்சனமும் எழுந்தன .

 

அன்றைக்கு நீ விரும்பும் நிறத்தைக் கொண்டு உன் குணநலம் ,இயல்பை கணித்துச் சொல்லும் சோதிடர் ,உளவியல் நிபுணர் எல்ல்லாம் உண்டு . இன்றைக்கு அந்த கணிப்புகள் தலைகீழாகிவிட்டன.

 

கணினி யுகத்தில் கறுப்பு ,சிவப்பு ,நீலம் எல்லாம் பளிச்பளிச்சென மின்ன அலுவலகங்கள் ,உயர் மட்டங்கள் . அடர் வண்ணங்கள் எங்கும் வந்துவிட்டன . போட்டோ ஷூட்டுக்கு இவை தேவைப்படுகிறதோ ? செல்பி மோகத்திற்கும் இந்த நிற மாற்றதிற்கும் தொடர்பு இருக்குமோ ?

 

வண்ணங்களின் பார்வை .இன்றைக்கு மாறிவிட்டன .

 அடர் வண்ணங்கள் இன்றைக்கு எங்கும் கோலோச்சுகின்றன .

வண்ணங்களின் சமூக உளவியல் மாறிவிட்டது .

நவீன தொழில் நுட்பம் எண்ண முடியா வண்ணக்கலவைகளைப் பெற்றுப் போட்டுக்கொண்டே இருக்கின்றது .

சிவப்பும் ,கறுப்பும் ,நீலமும் இன்று மரியாதைக் குரியதாகிவிட்டன .

இனி இவைதான் மானுடத்தை ஆளும் .

 

வீட்டுச் சுவற்றில் வெள்ளையடித்த காலம் போய் ஒவ்வொரு சுவரும் ஒவ்வொரு வண்ணத்தில் பளிச்சிடுகின்றன .

 

காவி புனிதமானதாக துறவின் குறியீடாக அன்றைக்கு இருந்தது .இன்றைக்கோ கலவர நிறமாக வெறுக்கத்தக்க நிறமாக – மனித விரோத சிந்தனையின் நிறமாக அரசியல் நிறமாகிவிட்டது . வெறுப்பு அரசியலின் குறியீடாக்கப்படவில்லை எனில் காவி மீதும் நமக்கு கசப்பு இல்லை .பச்சை காவி நிறங்கள் எதிர் எதிராக நிறுத்தப்படுவதிலும் உடன்பாடில்லை .

 

சிவப்பு ,மஞ்சள் , நீலம் தான் அடிப்படை வண்ணமென்றும் ஏனையவை எல்லாம் இவற்றின் கூட்டணிதாம் என்றும் இன்றைய புரிதல் மேம்பட்டிருக்கிறது . வானவில்கூட .

ஆம்.

சிவப்பும் ,கறுப்பும் ,நீலமும்  இன்று மரியாதைக் குரியதாகிவிட்டன . இனி இவைதான் மானுடத்தை ஆளும் . பச்சை ,மஞ்சள் உள்ளிட்ட எண்ணற்ற வண்ணக் கலவைகளும் எங்கும் கொண்டாடப்படும் .

 

சுபொஅ.

13/06/2023.


0 comments :

Post a Comment