மதம் பிடிக்காத மனிதர்களைச் செதுக்க வாரீர் !

Posted by அகத்தீ Labels:



 "மதம்பிடிக்காத" மனிதர்களை செதுக்க வாரீர் !

சு.பொ.அகத்தியலிங்கம் .


“மும்மதத்தினர் முக்கிய கவனத் திற்கு” என்கிற தலைப்பில் நண்பர் திருப்பூர் கிருஷ்ணன் தினமணி (11-07-2014 ) இதழில் ஒரு கட்டுரை தீட்டி இருக்கிறார். திருப்பூர் கிருஷ்ணன் இந்துமத நம்பிக்கையாளர்; ஆயினும் பகைமையை விதைப்பவ ரல்ல என்பதை அறிவேன். அவர் இக்கட்டு ரையில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் நற்கூறுகள், தீமைகளை பட்டிய லிட்டு; முத்தாய்ப்பாகச் சொல்வது என்ன தெரியுமா?

“இந்துக்கள் சிலரிடையே தென்படும்தீண்டாமை, கிறிஸ்துவர்கள் சிலரி டையே தென்படும் மதமாற்றப் போக்கு, இஸ் லாமியர்கள் சிலரிடையே தென்படும் தீவிர வாதம் - இந்த மூன்றில் முதலில் அழிக்கப்பட வேண்டியது எது?"

இப்படி அவர் கேட்ப தின் பொருள் பட்டவர்த்தனமானது. தீவிரவாதமே உடனடியாகக் களைய வேண்டியது என்கிறார்; அதிலும் தெளிவாக இஸ்லாமிய தீவிரவாதமே ஆகப் பெரும் ஆபத்து என்கிறார்.

தீவிரவாதம் ஒரு மதத்துக்கே உரியஅடையாளமாகப் பார்ப்பது ஊனப்பார்வையே! ஒருதலைப் பார்வையே! இந்தியாவில் இந்து தீவிரவாதமும் பேயாட்டம் தானே போடுகிறது. மகாத்மாவை பலி கொண்டது.ஆஸ்திரேலியப் பாதிரியார் ஸ்டெயினையும் அவரது குழந்தைகளையும் உயிரோடு எரித்தது. இரத்த யாத்திரை நடத்தியது. பாபர் மசூதியை இடித்தது. மதக்கலவரங்களுக்கு விதை தூவியது எல்லாம் எது? சுவாமி அசிமானந்தாவின் வாக்கு மூலம்இந்து பயங்கரவாதத்தின் முகமூடி யைக் கழற்றிக்காட்டுமே! இதையெல்லாம் திருப்பூர் கிருஷ்ணன் அறியமாட்டாரா? அறிவார். ஆயினும் ஏன் கவனத்தில் கொள்ளவில்லை?

இஸ்லாமிய தீவிரவாதம் உலகில் போடும் வன்முறை ஆட்டத்தை யாரும் அங்கீ கரிக்க முடியாது. இஸ்லாம் தீவிரவாதம் ஆனாலும் இந்து தீவிரவாதம் ஆனாலும் எல் லாம் கொடும் விஷமே! ஆபத்தானதே! ஒன்றையொன்று கொம்பு சீவிவிடுபவையே. ஆகஎந்த மத தீவிர வாதமானாலும் எதிர்ப்ப தென்பது அல்லவா நல்லிணக்கம் விரும்பு வோர் செயலாக இருக்கவேண்டும். நண்பர் திருப்பூர் கிருஷ்ணன் யோசிப்பாராக! தீவிரவாதத்தை ஒரு மதத்தோடு மட்டும் பிணைத் துப் பார்க்கும் பழுதுபட்ட பார்வையைத் தவிர்ப்பாராக!

இக்கட்டுரையில் திருப்பூர் கிருஷ்ணன் இந்துமதத்தின் தீங்காக தீண்டாமையை அடையாளம் காட்டி யிருப்பது நல்லது. சாதியத்தையும் இந்துமதத்தையும் பிரித்துப் பார்க்க இயலுமா? என்பதே எம் கேள்வி .“இந்து மதத்தின் பலம் என்பதுஎதையும் பரந்த கண்ணோட்டத்தில் ஏற்கும் அதன் விசாலத் தன்மை” என்கிறார் அவர்; ஆனால் நம் கேள்வி என்னவெனில் தன் சொந்த மதத்தில் சாதிரீதியாக பாகுபாடு காட்டுவது விசாலத் தன்மையா? தீண்டாமையைவிட மோச மான சகிப்புத்தன்மையற்ற போக்கு வேறு என்னவாக இருக்க முடியும்? சாதிப் படிநிலை என்பதும் அதற்கு கடவுளின் ஆசீர்வாதத்தை நல்கு வதும் எப்படி விசாலப் பார்வையாகும்.

“தீண்டாமை என்கிற கொடுமை முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டால், கணிசமான அளவு மதமாற்றமும் கூடக்குறைந்துவிடும். ஒரே கல்லில் மூன்று மாங்காயை வீழ்த்துவது கடினம். ஆனால்முயற்சி செய்தால் ஒரே கல்லில் இரண்டுமாங்காயை வீழ்த்தி விடலாம். தீண்டாமை யை எதிர்த்துக் கல்லெறிந்தால் மதமாற்றப் போக்கும் தானே உதிர்ந்துவிடும் அல்லது குறையத் தொடங்கும்” எனத் திருப்பூர் கிருஷ்ணன் கூறுவதை பொத்தாம் பொதுவாக நிராகரிக்க முடியாது.

“எல்லா மதங்களும் கடவுள் என்கிற கடலில் சென்று சேரும் நதிகள் போன்ற வையே. எல்லா மத நெறிகளும் அதனதன் அளவில் முக்கியமானவையே. சம அந்தஸ்து உள்ளவையே.எல்லா மதநெறிகளாலும் இறைவனை அடையலாம் என்பது ராமகிருஷ்ணரின் சித்தாந்தம். இந்தப் பேருண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்” என ராமகிருஷ்ணர் உபதேசத்தை கட்டுரையின் ஓரிடத்தில் மேற்கோளாகக் காட்டும் திருப்பூர் கிருஷ்ண னிடம் ஒரு கேள்வி; ராமகிருஷ்ணர் விளக்கத் தை ஏற்றபின் ஒருவர் எந்த மதத்திற்கு யார் போனால் என்ன? ஏன் கவலைப்பட வேண்டும்? எங்கு போனாலும் முடிவில் கடலில் தானே சங்கமமாகிறார்கள்!

முதலில் மத மாற்றம் ஏன் எனப் பார்ப் போம்? தத்துவ ரீதியில் ஒரு மதத்தைவிட இன்னொரு மதம் மேலானது என விவா தங்கள் மூலம் அறிந்து மதம் மாறுவது. இது ஆரம்ப காலத்தில் இருந்திருக்கும். இப்போது அவ்வாறு நடப்பது சுலபமல்ல. விதிவிலக்காக நடக்கலாம். அதே சமயம் மனம் திறந்த விவாதம் அறிவியல் வழியில்தான் கொண்டு சேர்க்கும். மதத்தை இறுதி யில் நிராகரிக்கவே இட்டுச்செல்லும்.

இரண்டாவதாக, சலுகைகள், பதவி,பணம் இவற்றுக்காக மதமாற்றம்நடக்கலாம். பிரிட்டிஷார் இருநூறாண்டுகள் இந்தியாவை ஆண்ட போதிலும் இந்தியர்கள் எல்லோரையும் மதமாற்றம் செய்துவிடமுடியவில்லை என்பதும்; கடும் தீண்டா மைக் கொடுமைகளில் உழன்ற போதும் பெரும்பான்மை தலித்துகளை மதம்மாற்றி விட முடியவில்லை என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி.இஸ்லாமிய சாம்ராஜ்யம் நீடித்துநின்றபோதும் இந்தியா இஸ்லாமிய நாடாக வில்லை. இந்தியர்கள் எல்லோரும் இஸ் லாமியர் ஆகிவிடவில்லை. மதம் நாம் விரும் பாவிடிலும் கலாச்சாரக் கூறாக உள்ளதால் தீடீர் ஆசைகாட்டி மாற்றுவது எளிதல்ல .

மூன்றாவதாக, கலக நடவடிக்கையாக, எதிர்ப்பு நடவடிக்கையாக மதம்மாறுவது எங்கும் நடக்கும். அமெரிக்காவில் கிறித்துவத்திலிருந்து முஸ்லீமாக மாறிய மால்கம்எக்ஸ் வாழ்க்கை வரலாறு அதைஉணர்த்தும். குத்துச்சண்டை வீரர் முகமது அலி கிறித்துவத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறியதும் அதனைப்படம் பிடிக்கும். இந்தியாவில் சில கிராமங்கள் கூட்டாக இந்துமதத்திலிருந்து வேறுமதங்களுக்கு மாறுவதும் அத்தகையதே! அம்பேத்கரின் மதமாற்றமும் அத்தகையதே! அங்கே பணம், பதவி எல்லாவற்றையும்விட சுயமரியாதையே மிகமுக்கியம். இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதையை கேலிக்குள்ளாக்கும் தீண்டாமை உள்ளிட்ட சாதியக்கொடுமைகள் மதமாற்றத்திற்கு இட்டுச் செல்லும்.ஆனால் எங்கேபோயினும் இந்த இழிவுதொலையவில்லை என்பது நமக்கு பெரும் தலை குனிவு. திருப்பூர் கிருஷ்ணன் இதனையெல்லாம் அறிவார்; தீண்டாமைக்கு எதிராக செயல்படுவோர் யாரெனவும் அறிவார் எனவே இன்னும் கொஞ்சம் பகிரங்கமாய் பேசவேண்டும். தீண்டாமைக்கு எதிராக உரக்கப் பேச வேண்டும். ஆனால் தீண்டாமை பற்றி பேசும்போது சாதிய படிநிலை பற்றி பேசாமல் இருக்க முடியுமா ? அதனை காத்து நிற்கும் தத்துவ அரண் இந்து மதம் அல்லவா? அதனை விமர்சிக்காமல் தீண்டாமையை ஒழிப்பது சாத்தியமா ?

திருமூலர், வள்ளலார், சித்தர்கள், பசவப்பா, நாராயணகுரு, சொக்கமேளா எனஎண்ணற்ற ஆன்மீகவாதிகள் கல்லும் கசிந்துருக எடுத்தோதியும் இந்தத் தீண் டாமை பெரு நோயிலிருந்து இந்துமதம் வெளிவரவில்லையே! போத னைகளால் புண்ணு ஆறவில்லையே! திருப்பூர் கிருஷ்ணன் போன்ற நலம் விரும்பிகள் இதனை ஆழமாக யோசிக்க வேண்டும்.கோளாறு எங்கே எனத் தேடவேண்டும்.

மதத்தை வெறுமே தனிநபர் உரிமை என்பதோடு விட்டுவிட்டு சமூகத்தை அறிவியல் ரீதியாக பயிற்றுவிக்க முனைவதுதான் புத்திசாலித்தனம். எம்மதத்துக்கும் அதுவேபொருந்தும். இரண்டு உலகப்போர்களால் இறந்தவர் களைவிட மதக்கலவரங்களால் இறந்தவர்களே அதிகம். எனவே “மதம்பிடிக்காத” மனிதர்களைச் செதுக்க திருப்பூர் கிருஷ்ணன் போன்றோரின் பேனா ஆயுதமாகட்டுமே!

நன்றி : தீக்கதிர் 13 ஜூலை 2014

0 comments :

Post a Comment