உப்பைக் காசு கொடுத்து வாங்கு!

Posted by அகத்தீ Labels:

உப்பைக் காசு கொடுத்து வாங்கு!

சு.பொ.அகத்தியலிங்கம்

சென்னை புத்தகக் காட்சியின் நிறைவு நாளன்று கடைசியாக ஒரு முறை சுற்றி வந்து விடுவோம் என சென்று கொண்டி ருந்த போது, “ தோழரே ! இந்தப் புத்தகங் களை கொஞ்சம் பாக்கிறீங்களா? ” என அறிமுகமான ஒரு இளைஞர் அணுகி னார். அவர் தோள் பை நிறைய பழைய புத்தகங்கள் இருந்தன. தற்போது அச் சில் இல்லாத பல அரிய இலக்கிய புத்த கங்களை சுமந்து கொண்டு தெரிந்தவர்க ளிடம் கடந்த பத்து நாட்களாக விற்று வருவதாக கூறினார். சினிமாவில் பிளாக் கில் டிக்கெட் விற்பது போல் அவருடைய அணுகுமுறையிருந்தது. அவர் காட்டிய என். ஆர். தாசனின் புத்தகம் நான் முன்பு படித்தது. என்னிடம் நீண்ட நாள் இருந் தது. யாரோ ஒரு நண்பர் இரவலாக பெற்று அவர் உடைமையாக்கிக் கொண்டது. மீண்டும் அந்தப் புத்தகத்தை படிக்க நினைத்த போது கிடைக்கவில்லை. இப் போது ஒரு பழைய பிரதி ஒன்று விற் பனைக்கு வந்தால் சந்தோஷத்துக்கு கேட்கவா வேண்டும்? புத்தகக் காட்சி யில் வாங்கிய புதுப்புத்தகங்கள் ஒரு வித மன மகிழ்வை தந்தாலும்; அவற்றைப் படித்த பின் தான் அதன் மதிப்பு துல்லிய மாகும். ஆனால் முன்பே படித்த இந்தப் புத்தகம் அரிய புதையலைப்போல் எனக்கு மனநிறைவு கொடுத்தது.நான் அதற் காக செலவிட்டது வெறும் 15 ரூபாய் தான்.

அந்தப் புத்தகம் முழுவதும் மொழி பெயர்ப்புக் கவிதைகள். வழக்கமாக மொழிபெயர்ப்புக் கவிதைகள் மொழி பெயர்ப்பு நாவல்களைப்போல் - கட்டுரை களைப் போல் படிக்க சுவாரசியமானவை அல்ல. கொஞ்சம் அலுப்பூட்டுபவை தான். ஆனால் என். ஆர். தாசனின் சொற் கோலங் களில் அவை உயிர்ப்புடன் இருக்கும். அதுதான் அதன் சிறப்பு.
“கடலால் அலைக்கழிக்கப் பட்ட / பாறை கேட்டது; / ‘ உன்னுடன் எத்தனை யோ காலம் வாழ்ந்து விட்டேன் / ஆயி னும் ‘நான்’ என்றால் என்ன / என்பதை நீ எனக்குக் / கற்றுத் தரவே இல்லையே ’ / பாய்ந்து வந்த கடல் அலை சொல்லியது: / ‘இயங்கினால் நான் வாழ்கிறேன் / நின்றால் செத்து விடுகிறேன்’ ”
இப்படி உருது மொழியில் கவிஞர் இக்பால் சொன்னதை ‘வாழ்வும் போராட் டமும்’ என்ற தலைப்பில் படித்த போது இயங்கிக் கொண்டே இருக்க வேண்டிய தன் கட்டாயம் உறைத்தது.
“வரலாறு என்பது ஊர்வலம் / தனித்து நிற்காதே / மற்றவர்களுடன் கலந்து கொள் / ஊர்வலத்தில் சேர்ந்து போ / ஒரு வேளை உனக்குப் பக்கத்தி லேயே / ஒரு அவதார புருஷன் நடந்து வரலாம் ” இவ்வாறு சிந்திக் கவிஞர் டி. எல். வாஸ்வானி மொழிந்திருப்பதை மறு தலிக்க இயலுமா?
“ வெளவாலுக்குப் பகலாய் இருப்பது / காக்கைக்கு இரவாகும் / பணக்காரன் பிரியாணியைச் சுவைப்பது போல் / பசு புல்லைச் சுவைக்கிறது / எவரின் பார்வை துல்லியமானது? / யாருடைய கருத்து மேலானது/ ஒருவனின் ஈத் பண்டிகை விருந்து / மற்றவனுக்கு அமாவாசை விரதமாகிறது” இவ்வாறு காஷ்மீரிக் கவிஞர் குலாம் ஹாஸன் பேக் அரீஃப் போகிற போக்கில் வேற்றுமையில் ஒற் றுமை காண்பது இன்றைக்கும் தேசம் புரிந்து கொள்ள வேண்டிய எதார்த்தம் அல்லவா?

இன்றைக்கு செய்தி ஊடகங்களைப் பற்றி ஏராளமான விமர்சனங்கள் வரு கின்றன.ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் அவ்வளவு மோசமென்று சொல்ல முடியாது அல்லவா ? ஆயினும் அப்போதும் ஊடகங்கள் எப்படி இருந் தன. சுதிர் கோலட்கர் என்ற மாராத்தியக் கவிஞர் பாடுகிறார் “ செய்தி, நிர்வாண மானது. / நாக்குகள் எல்லாம் துண்டிக் கப்பட்டு, / ஒன்றோ டொன்று இணைக்கப் பட்டால் / அதன் மூலம் பூமியையே சுற் றிக் கட்டி விடலாம். / ஆனால் ஒரே ஒரு நாக்கு மட்டும் / தனித்துக் கிடக்கும் / அது .... / செய்தியாளனின் நாக்கே. ”

வெள்ளைக்காரன் நம்மை அடிமைப் படுத்தினானா ? நாம் அடிமையானோமா ? இக்பால் பதிலளிக்கிறார், “ பரிதாபத்திற் குரிய இந்தியாவே, / உனது துயரங்கள் சொல்லக் கூடியன அல்ல. / எப்பொழு தும் மற்றவர் மகுடத்திலேயே / மாணிக் கமாகி ஜொலிக்கிறாய் / புதைகுழி துப்பிய பிணங்களாகவே / உனது விவ சாயிகள் இருக்கிறார்கள். / அவர்களின் சவப்பெட்டிகள் நொறுங்கி / மண்ணோடு மண்ணாகிக் கொண்டிருக்கின்றன. / அவர்களின் உடலும், ஆத்மாவும் / அந் நியனுக்கு அடகு வைக்கப்பட்டு விட்டன. / வாழ்ந்த இடமும் மறைந்தது. / பரி தாபத்திற்குரிய இந்தியாவே. / வெள்ளையனுக்கு நீ அடிமையானாய் / நான் குற்றம் சாட்டுவது / அவனை அல்ல; / உன்னைத்தான்.” இன்று மட்டும் நிலைமை மாறியா விட்டது?

நிறைய காதல் கவிதைகள் இத் தொகுப்பில் உள்ளன. எதைச் சொல்லா மல் விடுவது ஹரீந்திர சட்டோபாத்தி யாயா எழுதிய ஒரு கவிதை , “ நான் ஒரு மண் பானையைப் போல் இருக்கிறேன் / காலச்சக்கரத்தில் நான் உருவாக்கப் பட் டேன். / இப்பொழுது கண்ணீரில் நனைந்து கொண்டிருக்கிறேன் / மண் பானையாக சிருஷ்டி பெறுவதற்கு முன்... / பயங்கர மாகச் சுழற்றப் பட்டேன். / வெயிலில் கிடந்து காய்ந்தேன் / நெருப்பில் கிடந்து வெந்தேன் / மண் பானையாவது தியாகத் தைத் தவிர வேறல்ல. / அன்பே, உன் கைகளில் நான் / மண் பானையாகக் கிடக் கிறேன் / இதை நிரப்புவதும், நிரப்பாது விடுவதும் உன்னிஷ்டம்.

” இப்படியே பஞ்சாபி கவிதைகள், வங்க மொழி கவிதைகள், ஜப்பானிய கவி தைகள், அரபு கவிதைகள், இந்தி கவிதை கள் , மலையாள கவிதைகள் என பல ரத்தினங்களை தமிழுக்கு அப்போதே அள்ளித்தந்திருக்கிறார் என். ஆர். தாசன். ‘அங்கேயும் இங்கேயும் ஆகா யங்கள்’ என்கிற அந்தக் கவிதைத் தொகுப்பை இப்போது படித்தாலும் இலக்கிய மதுவைக் குடித்த போதை ஏறும். அதே சமயம் புதிய வீரியம் நம் முள் ஊற்றெடுக்கும். என்னார்தா, பத்மன், யக்ஞன் ஆகிய புனைப் பெயர்க ளில் கண்ணதாசன், சோலை, கவிதாசரண் போன்ற இலக்கிய இதழ்களில் பிரசுரமான வற்றின் தொகுப்பு இது. 240 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தை யாராவது மறுபதிப்பு செய்தால் எவ்வளவு பயனுள் ளதாக இருக்கும்?

என். ஆர். தாசன் தமுஎகசவின் தொடக்ககால முன்னணிப் படை(ப்பு) வீரர் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

கவிதை மட்டுமல்ல கவிதை நடை யில் சில குட்டிக் கதைகளும் இடம் பெற் றுள்ளன. அவை வெறும் கதையல்ல, மானுடத்தின் மனச்சாட்சியை சவுக்கால் அடித்து தட்டியெழுப்பும் . எடுத்துக்காட் டாக சா அதியின் பாரசீகக் குட்டிக்கதை ஒன்றை பார்ப்போம். தலைப்பு: அடிச்சுவட் டில் “ வேட்டையாடிய மிருகங்களையும், பறவைகளையும் / சமைக்க உப்பு தேவைப்பட்டது. / பக்கத்து கிராமத் திற்குச் சென்று / உப்பு வாங்கி வரச் சொன்னான் அரசன். / உப்பு வாங்கச் செல்பவனிடம் / அரசன் முன்னெச்சரிக் கையுடன் சொன்னான்:/ ‘உப்பிற்கான காசைக் கொடுத்து விடு. / இல்லை, அதுவே பழக்கமாகி விடும்.’ / அரச னுடன் இருந்தவர்கள் கேட்டார்கள்: / ‘இது அற்பமான விஷயம் / இதற்கு இவ் வளவு எச்சரிக்கை தேவையா?’ / அரசன் சொன்னான் / ‘உலகில் கொடுமைகள் சிறிய அளவிலேயே / இருந்தன துவக் கத்தில். / பின்னால் வந்த ஒவ்வொருவ ரும் தான்/ அவற்றை இந்த அளவிற்கு / வளர்த்து விட்டதற்குப் பொறுப்பாவர். / அரசன் இலவசமாக ஒரு ஆப்பிளை எடுத்தால், / அவனது ஆட்கள் / ஒரு மரத் தையே சாய்த்து விடுவார்கள்... ” சரிதானே !

பாரசீகம் உயர்ந்த கலாச் சாரத்திற்கு சொந்தமானது. இப்போது ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளை யாய் பிறந்து காலப்போக்கில் பயங்கர வாதிகளாய் மாறிவிட்ட சிலரைக்கொண்டு மொத்த அரபையும் அல்லது இஸ்லாமி யர்களையும் கொடுமையா னவர்களாய் சித்தரிக்கும் மதவெறியர்களுக்கு இது போன்ற பாரசீக கதைகள் அவர்களின் விழுமியத்தை பறைசாற்றும்.

ஜப்பானிய கவிதை ஒன்றில் பேச்சு பற்றி வருகிறது, “ என் இதயத்தில் இருப் பவற்றை / நான் வெளிப்படுத்தவே செய் வேன். / பேசுவதை என்னால் எப்படி நிறுத்த முடியும் ?/ அஃறிணைப் பொருள்களான / இந்தப் புற்களும் மரங்களும் கூட / ஒலி எழுப்பி காற்றுடன் சம்பாஷிக்கின்றன.” ஆமாம் நீங்கள் மட்டும் எல்லா அழகை யும் அநியாயங்களையும் பார்த்துக் கொண்டு எப்படி மௌனமாக இருக்கிறீர் கள் என்று நம் கன்னத்தில் அறைந்து கேட்பது போல் அல்லவா இருக்கிறது?

கவிதைகள் என்பது , “ என் கவிதை கள்... / எனது உயிர்; எனது கண்ணீர்; / எனது ரத்தம்; எனது மூச்சு; / எனது நம்பிக்கைகள்; எனது அச்சங்கள்.” - இது ஜப்பானியர்களுக்கு மட்டுமானதா? தமிழர்களுக்கும் தானே பொருந்தும்.

நன்றி :தீக்கதிர் ,இலக்கியச்சோலை 03-02-2014

0 comments :

Post a Comment