விழிப்பு

Posted by அகத்தீ Labels:

 

விழிப்பு 



கண்ணை திறந்து கொண்டுதான் படுத்திருக்கிறேன்

என்னைச் சுற்றிலும் இருளின்ராஜ்யம்தான்

இருட்டு என்பது என்ன குறைந்த ஒளிதானே

மெல்ல மெல்ல ஒவ்வொன்றாக புலனாகிறது

ஆயினும் மனதை அப்பியுள்ள இருட்டு விலகவில்லை

ஆயிரம் பேய்களின் நர்த்தனம் கூக்குரல்

கதிரவன் மெல்ல நகைக்கிறான் கிழக்கில்

இமை சொருகிக் கொண்டு குறட்டை

ஒவ்வொரு நாளும் இதேகதை தொடர்கிறது

விழிப்பு என்பது எப்போது? வெகுதூரமா ?

 

சுபொஅ.

18/08/25.


வெறும் வாக்கு மோசடி மட்டுமல்ல

Posted by அகத்தீ Labels:

 


தமிழ்நாட்டில் வாக்குத் திருட்டு நடக்காதா ? நடக்கும் ? தேர்தல் ஆணையம் நாக்பூர் சாவிக்குத்தானே இயங்குகிறது . இதைத்தானே ’பிரமாண்டக் கூட்டணி’ என்றார் எடப்பாடி . ஆகவே இங்கேயும் இரட்டை விழிப்புணர்வு தேவையே ! கடும் போராட்டம் தேவை .அதற்கேற்ப வியூகமும் பக்குவமான அணுகுறையும் தேவை .

 

வெறும் வாக்கு மோசடி மட்டுமல்ல . ஒப்பீட்டளவில் சமூகநீதி சற்று நிலவும் தமிழ்நாட்டில் அதற்கும் வேட்டுவைக்கும் ’சோஷியல் என்ஜினியரிங்’ வேலை ஆர் எஸ் எஸ் மூலம் பல காலமாக நடந்து வருகிறது . ஆம் இங்கு சாதியமும் பாலின ஒடுக்குமுறையும் முற்றாக ஒழிந்துவிடவில்லைதான் ; ஆயிரம் ஆண்டு நோய் தொற்றை ஒரு நூற்றாண்டில் முற்றாக துடைத்திடல் சவால்தான் . நோய்க்கிரிமிகள் புதிய அவதாரம் எடுப்பதுபோல் சாதியமும் பாலின ஒடுக்குமுறையும் புதிய அவதாரம் எடுப்பது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய சவால்தான். அதில் ஆர் எஸ் எஸ் பங்கு திரைமறைவில் மிகப்பெரும் அளவு உள்ளது என்பது கண்கூடு .

 

சாதிய சங்கங்களில் ஆர் எஸ் எஸ் ஊடுருவி மிகவும் சாதிவெறி தலைகேறிய சிலரை உசுப்பிவிட்டு ஆங்காங்கு பல சாதிய மோதல்களைத் தூண்டிவிட்டு வருகிறது . இந்த சதியாளர்கள் வெளிஉலகின் கண்ணில் படாமல் காரியமாற்றிவதில் வல்லுவரான ’கார்யகர்த்தாக்கள்’.  

 

பார்ப்பணியத்தையும் சனாதனத்தையும்  மூளையில் சுமந்து திரியும் இடைநிலை மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளில் ஒரு சிறு பிரிவினர் , படித்தவர்கள் உட்பட இதில் அங்கமாகி உள்ளனர் . இதில் அந்த கார்யகர்த்தாக்கள் வெற்றிபெறத் தொடங்கி இருப்பதே அதிக ஆபத்தானது .

 

“ ஆண்டவரே ! இவர்கள் அறியாமல் செய்த பிழையை மன்னியும்” என மன்றாட முடியாது ; இது சமூகச் சவாலாகிறது . தற்போது அந்த விஷக்கிருமியால் அந்த சிறுவட்டத்துக்கு வெளியே பரவமுடியவில்லை என்றாலும் சமூக உளவியலில் மெல்ல மெல்ல நஞ்நேறிக்கொண்டிருக்கிறது .ஆகவே நம் பார்வையும் பணியும் போதாது .போதாது .போதாது . ஆகவே மூளையில் படிந்துள்ள இந்த பிற்போக்குத் தனத்துக்கு எதிராக வீரியமான தத்துவப் போராட்டம் தேவை .

 

 

 

சாதியமும் சனாதனமும் தன்னை மறுகட்டமைப்பு செய்து புதுக்குரலில் நயவஞ்சகத்தை மூடி மூலம் பூசி பேசிவருபவற்றை உள்வாங்கிட வேண்டும் ; அவற்றை எதிர்த்த தத்துவப் போராட்டமும் தன்னை மறு கட்டமைப்பு செய்திட வேண்டும் .பழைய மொழியில் பழைய வாதங்களை அப்படியே கிளிப்பிள்ளை போல் ஒப்பிப்பது பயன்தராது . புதிய குரலில் அறிவியல் ரீதியாக சமுதாய மாற்றச் சிந்தனையோடு பேசப்பழக வேண்டும் . விஷவேரில் வெந்நீர் ஊற்ற கற்க வேண்டும் .கற்பிக்க வேண்டும் . பெரியாரிய ,அம்பேத்காரிய ,மார்க்சிய இயக்கங்கள் முன் உள்ள சவால் இது .

 

ஒரு பக்கம் தமிழ் நாட்டின் மீது இப்படி ஓர் வஞ்சக நரித்தன வேலையை ஏவிவிட்டுக் கொண்டே , மறுபக்கம் தமிழ்நாடு இப்போது கல்வியில் அடைந்த சிறு முன்னேற்றத்தையும் தரம்  தாழ்த்தி அவமானப்படுத்தும் வேலையை ஆளுநரி செய்கிறது . வேதகாலத்தில் நோயே கிடையாது என மூளையை கழற்றி வைத்துவிட்டு உளறித் திரியும் அந்த நரிதான் ,தமிழக கல்விமுறை தரமில்லை என சேறு வாரி இறைக்கிறது . கல்வித் தரம் மேம்பட வேண்டும் என்பதில் யாருக்கு இருவேறு கருத்து இருக்கவே முடியாது . ’அடுத்த படியில் ஏறு’ என ஊக்குவிப்பது வேறு ; கேலியும் கிண்டலும் அவமரியாதையும் செய்து முடக்க முனைவது வேறு .நரி செய்ய முனைவது இரண்டாவது வகையைத்தான் .

 

ஆக ,கல்வி ,சமூகநீதி ,பாலின சமத்துவம் ,  இவற்றில் சனாதனமும் சாதியமும் பின்னும் நுட்பமான சதிவலையை பிய்த்து எறிய கூர்த்த பார்வையும் பரந்த அணுகுமுறையும் தொடர்ச்சியான செயல்பாடும் தேவைப்படும் காலத்தில் வாழ்கிறோம் . ஒவ்வொரு நிகழ்வையும் இக்கோணத்தில் பார்த்து எதிர் கொள்ள வேண்டும் . வேறு வழியில்லை.

 

இவை என் தனிப்பட்ட கருத்துகளே .இதனை நான் சார்ந்த கட்சி மீது ஏற்றி குழப்ப வேண்டாம் .

 

சுபொஅ.

17/08/25.


நேற்று எங்கு இருந்தன ?

Posted by அகத்தீ Labels:

 

நேற்று எங்கு இருந்தன ?



நேற்று வாசித்த புத்தகத்தை

இன்று வாசித்தேன்

புதிய சாளரங்கள் திறந்தன

அவை நேற்று எங்கிருந்தன ?

 

நேற்று பழகிய  மனிதனிடம்

இன்று பழகினேன்

ஏதோ குறைபாடுகள் தென்பட்டன

அவை நேற்றும் இருந்தனவா ?

 

நேற்று நடந்த தெருக்களில்

இன்று நடக்கிறேன்

அந்நியனாய்ப் பார்க்கிறார்கள்

அந்தத் தெரு எங்கே போனது ?

 

நேற்றில் தொலைந்துபோன நானும்

இன்று காணும் நானும்

ஒன்றல்ல எனில் நேற்றைய நான்

தொலைந்த இடம் எது ?

 

மாற்றம் ஒன்றே மாறதது

மாற்றத்தின் சூக்குமத்தை

மதத்தில் தேடின் கிடைக்காது

மார்க்சியத்தில் தேடு !

 

சுபொஅ.

16/08/25.


நேற்றைய கள்ள ஓட்டும் ; இன்றைய ஓட்டுத் திருட்டும் …

Posted by அகத்தீ Labels:

 


நேற்றைய கள்ள ஓட்டும் ; இன்றைய ஓட்டுத் திருட்டும் …

 

கள்ள ஓட்டு” புதிதல்ல ; தேர்தல் தோறும் பேசப்படுபவைதான் . செத்தவர் வாக்களிப்பதும் , உயிரோடு இருப்பவர் செத்துப் போவதும் தேர்தல் அதிசயங்கள் .ஆங்காங்கு வலுவான கட்சியோ / சாதியோ /தனிநபரோ வாக்குச் சாவடியைக் கைப்பற்றி தங்களுக்குத் தாங்களே வாக்களித்துக் கொள்வது அது . ஆள் மாறாட்டம் செய்து வாக்களிப்பதும் “ கள்ள ஓட்டே” . இவை எல்லாமே சட்டப்படி குற்றம் . கைதாகலாம் .வழக்கு பாயலாம் . ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்படலாம் . இவை எல்லாம் அங்கொன்று இங்கொன்றாக  நடக்கும் . இதுவே தவறுதான் . தவிர்க்க வேண்டும் . தடுக்க வேண்டும் .

 

இப்போது அம்பலப்படுத்தப்படும் “  ஓட்டு திருட்டு” என்பது தேர்தல் ஆணையமே திட்டமிட்டு மோசடி செய்து பாஜக வென்றதாக அறிவிக்கும் மகா மோசடி .ஜனநாய விரோத செயல் . வேலியே பயிரை மேயும் கொடூரம் . இதனை செய்வதற்காகவே தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவில் இருந்து உச்சநீதி மன்ற நீதிபதியை நீக்கிவிட்டு உள்துறை அமைச்சரை சேர்த்தது மோடி சர்க்கார் . நாக்பூர் கைக்கூலி – ஆர் எஸ் எஸ் அடியாட்களை நியமித்து மோசடியை அரங்கேற்றியது . கொள்ளையடிக்க வசதியாய் தம் கொள்ளைக்கார கூட்டத்தில் ஒருவனையே காவலாளியாக நியமிக்கும் கொடுமை .

 

ஏற்கெனவே நீதிமன்றம் , அமலாக்கத்துறை ,வருமானவரித்துறை ,ஊடகங்கள் ,கல்வி , ,சிபிஐ என ஒவ்வொரு  உறுப்பையும் தன் சாவிக்கு இயங்கும் ரோபட்டாக மாற்றிய நாக்பூர் கண்ட்ரோல் ரூம்  தேர்தல் ஆணையத்தையும் கைப்பற்றிவிட்டது .அதற்கேற்ப சட்டத்தை திருத்தியது மோடி சர்க்கார் . இப்போது தேர்தல் ஆணையம் ’ஓட்டு திருடும் இயந்திரமாகிவிட்டது’ .

 

EVM வாக்கு இயந்திரமும் மோசடிக்கான கைக்கருவி ஆக்கப்பட்டுவிட்டது .

 

“ நான் அளிக்கும் வாக்கு நான் வாக்களித்த கட்சிக்கே போகும் என உத்தரவாதம் தரமுடியுமா தேர்தல் ஆணையமே !” இப்போது மக்களின் கேள்வி இதுவே !

 

நாளை சுதந்திரதினம் .

ஆயின் தேர்தல் ஜனநாயகம் நாக்பூர் நாசசக்திகளிடம்  சிக்கிச் சீரழிவதை எப்படிக் கொண்டாடுவது ?

 

இதை எதிர்த்த போராட்டம் எளிதல்ல ; நெடிய மக்கள் போராட்டத்துக்கு தயாராவோம் ! வெல்வோம் !

 

சுபொஅ.

14/08/25.

 

 


எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையே ….

Posted by அகத்தீ Labels:

 


எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையே ….

 

ஒரு எழுத்தாளர் மனைவியின் வெள்ளந்தியான பேட்டியை காணொளியில் பார்த்தேன். எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் உள்ள இடைவெளி பளிச்சென புலப்பட்டது . இது விதி விலக்கல்ல . படைப்பாளியை ஓரம் தள்ளிவிட்டு படைப்பைப் பார்க்க வேண்டிய சூழலே மிகுந்துள்ளது .

 

’பெரிய மனிதர்கள் ‘ /எழுத்தாரோ / அரசியல் தலைவரோ /கல்வியாளரோ பிரபலமானவரோ யாராயினும் பேச்சுக்கும் செயலுக்கும் இடைவெளி இருக்கத்தான் செய்கிறது . அதனால் எல்லோருமே போலி என சொல்லிவிடமுடியுமா ? ஏன் உங்கள் வீட்டில் என் வீட்டில் நம் இதயத்தை எண்ணத்தை  ஸ்கேன் செய்ய முடியுமானால் ஒவ்வொரு கணவன் மனைவிக்குள் புதைந்து கிடக்கும் உண்மைகள் பூகம்பமாய் வெடிக்கக் கூடும் . ஆகவே அந்த ’பெரிய மனிதர்கள்’ அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட முடியுமா ?சிக்கலான கேள்விதான்.

 

முற்போக்காளராய் / சாதி ,மத மறுப்பாளராய் /பகுத்தறிவாளராய் / கம்யூனிஸ்டாய் /போராளியாய் /புரட்சிக்காரராய் / அறிவியலாளராய் வாழ ஆசைப்படுவதும் ; அதற்காக பேசுவதும் ; எழுதுவதும் ; செயல்படுவதும் ஒரு வகையில் எளிதானது . ஆயின் சொந்த வாழ்வில் தனிப்பட்ட முறையில் சறுக்கலோ / வழுக்கலோ இல்லாமல் வாழ்வது மிகப் பெரிய சவால் .

 

ஏனெனில் உன்னைச் சுற்றி உள்ள உலகின் அழுக்குகளும் கசடுகளும் கிருமிகளும் உனக்குள்ளும் நிறைய இருக்கும் . அதிலிருந்து மீள உனக்குள்ளும் ,உன்னோடு வாழ்பவரோடும் பிறரோடும் நீ நடத்த வேண்டிய போராட்டமும் ; அவர்கள் உன்னோடு மோதிக்கொண்டே இருப்பதும் தொடர்கதை . இந்தப் பயணத்தில் நீ எந்த அளவு உறுதியோடு நிற்க முயல்கிறாய் என்பதே முக்கியம் ; வெற்றி தோல்வி குறிப்பிட்ட அக புற சூழலோடும் சுய முயற்சியோடும் இணைந்தது .

 

நூறுசதம் புனிதமானவரோ புரட்சிகரமானவரோ யாருமில்லை . ஆனால் கால ஓட்டத்தில் முட்டி மோதி மேம்பட்டுக்கொண்டே இருப்பவரைத்தான் நாம் கொண்டாட முடியும் .வாழ்க்கையில் இழுப்பில் தன்னை இழந்து கொண்டே இருப்பவரை அடையாளம் காண வேண்டும் . அடையாளம் காட்டவும் வேண்டும் . இதுவும் தவிர்க்க முடியாததே !

 

நாத்திகர் என்பதாலேயே கோட்சேவை ,சாவர்க்கரை கொண்டாட முடியுமா ? புலால் மறுப்பாளர் என்பதால் ஹிட்லரை ,மோடியை ,அமித்ஷாவை கொண்டாட இயலுமா ? முடியுமா ?

 

’இறந்த தன் மனைவியின் ஆவியுடன் பேசுகிறேன்’ என்று சாகும்வரை சொல்லிக் கொண்டே இருந்த  மூடநம்பிக்கையைச் சுமந்து மறைந்த நீதிபதி கிருஷ்ணய்யரின் அரிய சமூகநீதித் தீர்ப்புகளை சமூக பங்களிப்பை நிராகரிக்க முடியுமா ? கவிஞர் கண்ணதாசனின் தனிப்பட்ட வாழ்வை , அவர் அங்கும் இங்கும் தாவிக்கொண்டே இருந்ததை , நாளைக்கு ஒன்று பேசியதை சுட்டி அவர் பாடல்களின் வலிமையை இனிமையை நிராகரிக்க முடியுமா ? இளைய ராஜாவின் அரசியல் தத்துவச் சறுக்கலை விமர்சிப்பதும் அவர் இசையை ரசிப்பதும் தவிர்க்க முடியாததுதானே !

 

மேற்கத்திய சமூகம் Open society அதாவது திறந்த சமூகம் அங்கே எதையும் மூடி மறைப்பதில்லை , ஒவ்வொருவரும் அவர் செய்கையை மூடிமறைப் பதில்லை .அங்கே எழுத்தாளரோ தலைவரோ வெளிப்படையாகவே வாழ்கின்றனர் . புரிவது எளிது .ஆகவே படைப்போ கருத்தோ மட்டுமே அளவு கோலாகும் .அங்கேயும் தலைவர்கள் சுய சறுக்கல் பொது விமர்சனத்தில் இருந்து தப்புவதில்லை .

 

இங்கு நாம் மூடுண்ட சமூகத்தில் வாழ்கிறோம் . ஹிப்போகிராட் சொசைட்டி Hypocrite Socity .இங்கே முதுக்கு பின்னால் ஒன்று முகத்துக்கு நேராக ஒன்று என்கிற தவறான பண்பாட்டுக்கூறு எங்கும் வியாபித்துள்ளது . ஆகவேதான் படைப்பைபோ படைப்பாளரையோ எடை போடுவது சவாலாக உள்ளது . மேலும் சமூக வரலாற்றுப் பின்புலத்தோடு காலநிரலோடு  எதையும் ஒப்பிட்டுப் பார்க்காமல் எதோ ஒரு துண்டு துக்காணிச் செய்தியையோ அல்லது கத்திரிக்கப்பட்ட துண்டு வார்த்தைகளையோ வைத்து மயிர் பிளக்கும் விவாதம் செய்து கொண்டிருக்கிறோம்.

 

யாராயிருப்பினும் ஒருவரின் தனிப்பட்ட சமூக பங்களிப்பை , தனிப்பட்ட பலவீனங்களை , தவறுகளை எல்லாம் கூட்டிக் கழித்து கொள்வன கொண்டு தள்ளுவன தள்ளி எடைபோடலே இயங்கியல் அணுகுமுறை . இதுவே சமூக விஞ்ஞான அளவுகோல் . இதை புரிந்து ஏற்பது சுலமமல்ல . மேலோட்டமாய் ஏற்பதும் நிராகரிப்பதுமே பொது புத்தியாய் உள்ள சூழலில் யாரொருவரையும் எடை போட புத்தியைத் தீட்ட வேண்டும் .வேறு வழியில்லை .

 

சுபொஅ.

 

 


நரகமா சொர்க்கமா ?

Posted by அகத்தீ Labels:

 




நரகமா சொர்க்கமா ?

 

 

வெறிநாய்களைக் கொல்லாதீர்கள் !

ஜீவகாருண்யம் பேணுங்கள் !

தெருவெல்லாம் வெறிநாய்கள்

பைரவனின் ஆசிர்வாதங்கள்

பச்சைக் குழந்தைக்குத்தான்

பகவானின் ஆசிர்வாதமில்லை

நாய்கடியில் சாதிமத பேதமில்லை

நாள்பார்த்து கோள்பார்த்து நாய்கடிப்பதில்லை

சொல்லுங்கள் ஜீவகருண்யரே !

நாய்கடித்து ரேபிஸில் செத்தால்

போவது சொர்க்கம்மா நரகமா ?

 

சுபொஅ.

12/08/25.

 


ஆன்மீகம் என்ற சொல்லுக்கு பின்னே…….

Posted by அகத்தீ Labels:

 


[ஆகஸ்ட் மாத   “காக்கைச் சிறகினிலே..” இதழில் வெளிவந்துள்ள கட்டுரை இது .]

 

ஆன்மீகம் என்ற சொல்லுக்கு பின்னே…….

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

 

 

 

ஆன்மீகம் என்ற சொல் போல் மிகவும் மலினப்படுத்தப்பட்ட ; மிகவும் கொச்சைப் படுத்தப்பட்ட வெறொரு சொல் இருக்குமா என்பது சந்தேகமே . இதனை நீருபிக்க நாத்திகவாதிகளின் எழுத்துகளோ பேச்சுகளோ தேவை இல்லை . தங்களை ஆன்மீகவாதிகள் என்று பிரகடனப்படுத்திக் கொள்வோர் வாக்கு மூலங்களே போதும் . இதில் எல்லா மதத்தவரும் ஒருப்போல்தான் இருக்கின்றனர் .

 

குறிப்பாக இரண்டு கோணங்களில் இதனை அலசலாம் . ஒன்று , ஆன்மீகவாதிகள் என்று தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் சந்நியாசிகள் ,உபந்யாசிகள் , பிரச்சாரர்கள் பேச்சையும் எழுத்தையும் தொகுக்க ஆரம்பித்தால் அது முரண்பாடுகளின் மூட்டையாக பல்லிளிக்கும் . அவை தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொள்ளும் . மீண்டும் சொல்கிறோம் மதம் எதுவாயினும் நிலைமை இப்படித்தான் . ஆயினும் , “ எங்கள் மனம் காயப்பட்டுவிட்டது” என அவர்களின் சிஷ்யகோடிகள் கூப்பாடு போடக்கூடும் என்பதால்  அவை குறித்து இங்கு பேசப்போவதில்லை .அவை உங்கள் தனிப்பட்ட நம்பிக்கை என விட்டுவிடுகிறோம்.

 

இரண்டாவது , ஆன்மீக இதழ்களாக மாதந்தோறும் அல்லது வாரந்தோறும் வெளிவரும் ஏடுகள் மற்றும் காட்சி ஊடகங்களை ஆய்வு செய்தாலே ஆன்மீகத்தை மிகவும் கேலிக்குரியதாக மாற்றிக் கொண்டிருப்பவர்கள் இவர்களே என்பது வெட்டவெளிச்சமாகும் . பெரும்பாலான ஆன்மீக இதழ்கள்  ”இந்து இதழ்”களாகவே முழுதாய்த் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறது . தங்களை பொதுவானவர்கள் எனக் காட்ட ஓரிரு பக்கங்களில் பிற மதம் குறித்துப் போகிற போக்கில் சில துணுக்குகளை வீசுவதோடு சரி ! ஆக , இவ்வேடுகள் தோற்றத்திலேயே ஆன்மீகம் என்ற முகமூடியைக் கழற்றிவிட்டு மத பிரச்சார ஏடாகவே வெளிப்பட்டுவிடுகிறது . கிறுத்துவ ,இஸ்லாமிய,இதர மத பிரச்சார ஏடுகளிலும் ஆன்ம பலம் மிக்க மானுடரை உருவாக்கும் நோக்கம் இருப்பதில்லை ;  ‘மதம் பிடித்த மனிதனை’ உருவாக்கவே மெனக்கிடுகிறது .

 

ஆன்மீக ஏடுகளை ,காட்சி ஊடகங்களை முன்வைத்து இங்கு நான் சில கேள்விகளை முன்வைக்கிறேன் .அவற்றை முன்வைத்து நீங்களே உங்களுக்கு விருப்பமான மேற்படி ஏடுகளில் அல்லது காட்சி ஊடகங்களில் பதிலைத் தேடுங்கள் ! ஆய்வுக்கு உட்படுத்துங்கள்! நான் கூறுவது சரியா பிழையா என்பது தெளிவாகிவிடும்.

 

1] கஷ்ட நிவர்த்திக்கு பரிகார ஸ்தலங்கள் ,பரிகார பூஜைகள் ,பரிகாரச் சடங்குகள், தொழுகைகள் ,பிரார்த்தனைகள் ,ஜெபங்கள் என வாராவாரம் பல்வேறு யோசனைகளை முன்வைக்காத ஊடகம் ஏதேனும் உண்டா ? இவற்றை பட்டியல் போட்டால் ஒவ்வொரு பிரச்சனைக்கும் பலநூறு யோசனைகள் - தப்பு தப்பு பல ஆயிரம் யோசனைகள் முன் மொழியப்பட்டிருக்கும் அல்லவா ; அவற்றில் எது சரி , எது தவறு , என்பதை ஏதேனும் வழியில் ஆய்வு செய்து பட்டியிலிட முடியுமா ?

 

2] அவற்றைக் கடைபிடித்தும் இன்னும் பக்தர்கள் முழுவதும் ஏதேனும் பிரச்சனைகளில் சிக்கி தடுமாறுவது ஏன் ? குறிப்பாக உடனே வேலைகிடைக்க , கல்யாணம் ஆக , பணக்கஷ்டம் தீர ,கடனில் இருந்து விடுதலை பெற , நோயிலிருந்து விடுபட என அன்றாடம் உலுக்கும் ஆயிரம் பிரச்சனைகளுக்கு இவ்வளவு எளிய பரிகாரங்களும்  நிவாரணங்களும் முன்மொழியப்பட்டும் ;   பக்தியும் இவற்றில் நம்பிக்கையும் கொண்டு பின்பற்றும் கோடிக்கணக்கான மக்கள் தொடர்ந்து பிரச்சனைகளில் உழல்வது ஏன் ? ஒற்றைக் கலாச்சாரம் ஒற்றைப் பண்பாடு ஒற்றை மொழி என உளறுவோர் ”ஒற்றைப் பரிகாரத்தை” முன்மொழியலாமே ! அதைச் செய்யாமல் வாராவாரம் புதுசு புதுசாக குழப்புவது யார் ? ஏன் ?

 

3] ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு கடவுளுக்கும் விஷேச சக்தி இருப்பதாகவும் , அந்த குறிப்பிட்ட சாமியை குறிப்பிட்ட முறையில் வழிபடுவோர் அந்த குறிப்பிட்ட பிரச்சனையிலிருந்து விடுபடுவதாகவும் வாராவாரம் எழுதுகின்றன அவ்வேடுகள் . அவற்றைத் தொகுத்துப் பார்த்தால்  ஒரே பிரச்சனைக்கு நூறு சாமிகளை ஒரே ஏடு எழுதியிருக்கும் ; புரட்டிப்பார்த்தால் பட்டியல் நீளும் . அதில் எது உண்மை,, எது பொய் ,எது சக்தி மிக்கது ,எது டுப்பாக்கூர் என கூற முடியுமா ? அல்லது வெறும் விளம்பரச் செய்திகள்தாமா அவை ? அந்தந்த சாமிக்காவது தனக்கு இப்படிப்பட்ட ’விஷேச பவர்’ இருக்கிறது என்பது தெரியுமா ? ஏன் இந்த கேலிக்கூத்து ?

 

4] புராண கதைகளாக வாராவாரம் வெளியிடுகிற அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் ஒவ்வொன்றைக் குறித்தும் நூறு பொய் இருக்கும் . அவற்றிற்கும் இன்றைய நவீன வாழ்க்கைக்கும் அறிவியல் வளர்ச்சிக்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா ? அவற்றில் எத்தனை ஆபாசக் கதைகள் இருக்கும் ? அதை எல்லாம் கூச்சநாச்சமின்றி எப்படி எழுதவும் பேசவும் முடிகிறது ?

 

5] மகான்கள் வாழ்வில் நடந்ததாக இவ்வேடுகள் எழுதிக் குவித்த செய்திகள் எதற்காவது தக்க ஆதாரம் உண்டா ? ஒரே கதையை வெவ்வேறு மகான்கள் வாழ்வில் நடந்தாக வெவ்வேறு இடங்களில் எழுதி வைத்துள்ளவற்றை மறுக்க முடியுமா ? சரி ! இப்படி எழுதி வைக்கிற செய்திகளில் எத்தனை ஆன்மீக மேம்பாட்டுக்கு உகந்தவை சொல்ல முடியுமா ; அவை பொய்மையையும் போலிபிம்பத்தையும் கட்டமைப்பதைத் தவிர உருப்படியாய்ச் செய்தது என்ன ?

 

6] ஆன்மீகம் என்பது மதம் சார்ந்தததா ? மனித விடுதலை சார்ந்ததா ? இந்த ஏடுகள் எழுத்தும் பார்வையும் மதம் சார்ந்து இருக்கிறதா , மனித விடுதலை சார்ந்ததாக இருக்கிறதா ? ஆன்மீக குருக்களிலும் மனித குலம் முழுவதையும் அன்பால் குளிப்பாட்டிய  மனிதகுல விடுதலைக்காக அர்ப்பணித்த சிலர் உண்டு .அவர்கள் சார்ந்து எழுதும் போதாவது மனிதகுலத்தை வாரி அணைக்கும் வெள்ள அன்பு இவ்வேடுகளில் வெளிப்பட்டது உண்டா ? அவர்களை  வெறும் கருவேப்பிலையாகப் பயன்படுத்தல் அன்றி வேறு நோக்கில் எப்போதேனும் சொன்னது உண்டா ?

 

7] ”இதை இதைச் செய்யலாம் இதை இதைச் செய்யக்கூடாது” என இவ்வேடுகளில் பட்டியல் போட்டு பக்தர்களை குறிப்பாக பெண்களை மிரட்டி எழுதுவதில் ஏதேனும் வரைமுறை உண்டா ? இப்படி ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் போட்ட பட்டியலைத் தொகுத்தால் ஒன்றுக்கொன்று முரணாக அல்லவா இருக்கும் ? இன்றைய அறிவியல் வளர்ச்சி காலத்தில் ,ஆணும் பெண்ணும் உழைத்து வாழும் யுகத்தில் , கல்வி அறிவு மேம்பட்டிருக்கும் காலத்தில் , அறிவியல் அன்றாடம் புதிய சாளரங்களைத் திறந்திருக்கும் சூழலில் , இவ்வேடுகள் போடும் பட்டியலுக்கும் வாழ்க்கை அனுபவத்திற்கும் ஏதேனும் சம்மந்தம் உண்டா ?

 

8] இவ்வேடுகள் சுட்டும் ஆன்மீகம் இதுதான் என ஒரு இலக்கணத்தை வரைந்து காட்ட முடியுமா ? மூடநம்பிக்கைகளை மட்டுமே அவ்வேடுகள் விதைத்தன எனக் கூறுவதில் பிழை இருக்க முடியுமா ? மதம் ,சாதி இவற்றின் பெயரால் மனிதகுலம் அடித்துக் கொண்டு சாவதை தடுத்து நிறுத்த , “எல்லோரும் இறைவனின் பிள்ளைகள் ; எல்லோரும் அன்பு செய்து வாழ்வீர் !” என வலியுறுத்த  இவ்வேடுகள் ஒரு துரும்பையேனும் எப்போதேனும் கிள்ளிப் போட்டது உண்டா ?

 

இப்படி கேள்விகள் நீண்டு கொண்டே போகும் . நீங்களே நூறு இதழ்களை சேகரித்து இவற்றுக்கும் இதுபோல் நீங்கள் எழுப்பும் கேள்விகளுக்கும் விடை காண முயல்வீர் ! ஆய்வு செய்வீர் !

 

அப்போது , ஆன்மீகம் என்ற சொல் போல் மிகவும் மலினப்படுத்தப்பட்ட ; மிகவும் கொச்சைப் படுத்தப்பட்ட வெறொரு சொல் இல்லை என்பதை இந்த ஆன்மீக வியாபாரிகள் வழியே நீங்கள் கண்டடைவீர்கள் ! ஆன்மீக வியாபாரத்தின் வீச்சும் ,செழிப்பும் ,கொள்ளை லாபமும், மோசடியும் , திருட்டும் உங்களைத் திடுக்கிடவைக்கும் . இவை வெறும் வார்த்தை அன்று. .உண்மை .உண்மை . உண்மை .

 

நன்றி : காக்கைச் சிறகினிலே , 2025  ,ஆகஸ்ட் இதழ்