முன்னேறிவிட்டோம் !

Posted by அகத்தீ Labels:

 


 

முன்னேறிவிட்டோம் !

 

 

சோள வயல்கள் வீடுகளாகிவிட்டன

ஏரி தண்ணீர் ரசாயணக் கழிவு நீராகிவிட்டது

பட்ட மரங்கள் எலும்பு தெரிய நிர்வாணமாய்

புறாக்கள் ,குருவிகள் ,நாரைகள் ,கழுகுகள் ,

எல்லாம் எங்கே போய்த் தொலைந்தன

குற்ற உணர்ச்சி ஏதும் இன்றி

வெயிலைச் சபித்துக் கொண்டிருந்தான்

AI செயற்கை அறிவை விரலால் தடவி

கண்களால் மேய்ந்து கொண்டிருந்தான்.

தொண்டை வறண்டு கொண்டிருந்தது

இன்னும் தண்ணீர் லாரி வந்து சேரவில்லை .

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

25/4/2024.

 

 


அணையா பெரும் அடுப்பு

Posted by அகத்தீ Labels:




அணையா பெரும் அடுப்பு

 

 


வெப்ப அலை அணல் காற்று

வெறும் சொற்களாகவா இருக்கிறது ?

இல்லை.இல்லை.இல்லவே இல்லை.

பிரளயத்தின் முன்னறிவிப்பாக அல்லவா இருக்கிறது.

 

தோட்ட நகரம் பெங்களூரு

காங்கிரீட் காடாகிவிட்டது

தப்பிப் பிழைத்த மரங்கள்

மூச்சுவிடவும் காற்று இல்லை .

நீரைத் தேடித் தேடி நீண்ட வேர்கள்

சோர்ந்து வறண்டுவிட்டன .

 

பெங்களூரில் வீடுகளுக்கு

ஜன்னல் என்பதே அநாவசியம்

அப்படி ஒரு காலம் இருந்தது .

ஏசி குளிரூட்டி இல்லாமல்

குடியிருக்கவே முடியாதென்கிற

கொடுங்காலமும் வந்துவிட்டது .

 

ஓடும் வாகனங்களில் தண்ணீர் லாரியே

அதிக எண்ணிக்கை என்பது வெறும்

புள்ளிவிவரமல்ல ! பேரிடரின் குறியீடு !

காவிரித் தண்ணீர் குழாய்களில்

வெப்பக் காற்று மட்டுமே வருகிறது !

வேதனையின் உச்சமல்லவா இது ?

 

மரங்களை வெட்டும் போது

காடுகளை அழிக்கும் போது

நீர்நிலைகளை தூர்க்கும் போது

இலக்கின்றி அடுக்குமாடிகளை எழுப்பும் போது

யோசிக்கவும் இல்லை

எச்சரித்தோர் குரலுக்கு செவி சாய்க்கவும் இல்லை

இப்போது அழுது புலம்பி என்ன பயன் ?

 

பெங்களூர் மட்டுமா ?

வெற்றி எக்காளமிடும் ஒவ்வொரு நகரமும்

அணையா பெரும் அடுப்பு ஒன்றை

மறைத்து வைத்திருக்கிறது !

இப்போதும் காலம் கடந்துவிடவில்லை

விழித்துக் கொள்ள….

 

 


சு.பொ.அகத்தியலிங்கம் .

24/4/2024.


வாலிபர் சங்கத்தை அழுத்தமாக ஆவணப்படுத்தும் நாவல் …

Posted by அகத்தீ Labels:

 



ஏப்ரல் 23 : உலக புத்தக தினத்தை நோக்கி…

 

வாலிபர் சங்கத்தை அழுத்தமாக

ஆவணப்படுத்தும் நாவல் …

 

 

 “…. குறிப்பாக கடந்த பத்து ஆண்டுகளில் சாதியப் பெருமிதம் தலை தூக்கி வருவதும் ,சாதியின் பின்னால் உழைக்கும் மக்களை அணிதிரட்டலும் வேகமெடுக்கும் சூழலில் சக்தி சூர்யா ‘நரவேட்டை’ என்ற நாவலை முன் வைக்கிறார் . விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டத்தில் தொண்ணூறுகளில் கதை நடக்கிறது.” என்கிறார் அ.கரீம் முன்னுரையில் .

 

 “ ….. மற்றபடி ,எனது பால்ய காலம் தொட்டு ,என் உள்ளத்தில் உருண்டு கிடந்த சம்பவங்களைத்தான் ,புனைவு கொண்டு வரைந்துள்ளேன்.” என்கிறார் முன்னுரையில் சக்தி சூர்யா. அது உண்மையே !

 

முயல் வேட்டையில் தொடங்கி தொன்மக் கதையாடல்கள் , வாழ்நிலை ,காதல் என தொடர்ந்து மனித நரவேட்டையில் ஆணவக் கொலையாக முடிகிறது நாவல் . இடையில் ஊரில் நடக்கும் சாதிக் கலவரமும் , அதைத் தொடர்ந்து இடது சாரிகளின் காத்திரமான தலையீடும் , குறிப்பாக இந்திய ஜனநாயக  வாலிபர் சங்கத்தின் முன்னெடுப்பும் மிக கவனமாக அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது .

 

“ கஞ்சிக்கு கஷ்டம்னா கடவுளைக் கடிச்சு திங்க முடியுமா ?” எனக் கேட்கிற ஒகிலித் தாத்தா வழி தொன்மக் கதைகளும் வாழ்க்கைப் பாடுகளும் நூல் நெடுக விரிகிறது .

 

முயல் வேட்டையில் அறிமுகமாகும் முருகன் பள்ளிக்கூடம் படிக்கும் போதே இடது சாரி இயக்கங்கள் தொடர்பில் மெல்ல மெல்ல எழுந்து நிமிர்வது நாவலின் ஒரு முடிச்சு . கண்ணன் பொன்னி சாதிகடந்த காதலும் கல்யாணமும் ஆணவக் கொலையும் இன்னொரு முடிச்சு . இதில் கண்ணன் பொன்னி காதல் கூட வலியோடுதான் தயங்கி தயங்கித்தான் சொல்லப்படுகிறது . சாதி வெறி ஆணவக் கொலைக்கு தள்ளுவதை  நெஞ்சம் பதைக்கச் சொல்லுகிறார் சக்தி சூர்யா.

 

இவற்றுக்கிடையே   ஊரின் சில நிகழ்வுகள் மூலம் கிராமத்தில் இறுகிப்போயிருக்கும் சாதிய முரண்கள் , தற்கொலையாகிப் போகும் கொலைகள் ,ஆணாதிக்கக் கொலைகள் , மூடத்தனங்கள் ,கிராமிய பெண் தெய்வங்களின் கதைகள்  என தான் வாழ்ந்த ஊரின் செய்திகளை அள்ளிக்கொட்டுகிறார் சக்தி சூர்யா . முதல் நாவல் என்பதால் அனைத்தையும் சொல்லிவிட எண்ணுவது இயல்புதானே !

 

இந்நாவலில் ஓர் அத்தியாயத்தில் கமுதி விலக்கருகே முத்துமாரியம்மன் கோயிலில் ஓர் அதிசம் நடப்பதாக வருகிறது . “…….. வெள்ளாமைகூடச் செய்ய முடியாமல் கண்ணுக்கெட்டிய தூரம் தரிசாகக் கிடக்கும் செவல் காட்டில் கைமண் தோண்டினால் தண்ணீர் வருகிறது அந்தத் தண்ணீரும் இனிக்கிறது..” என்ற செய்தி நம்ப முடியாமல் சிரமப்பட்டாலும் கூடிய ஜனம் நேரில் பார்த்து முத்துமாரியின் சித்து விளையாட்டு  என்று கொண்டாடுகிறது .அந்தக் காடே பரப்பாகி கடை ,கண்ணி என விழாக்கோலம் பூண்டு விடுகிறது .

 

சில அத்தியாயங்களுக்குப் பின் இந்த புதிர் அவிழ்க்கப்படுகிறது , ஆராய்ச்சியாளர்கள் அது கடலைப் பாறை என்பதால் மேல்மட்டத்தில் தேங்கிய நீர்தான் எனச் சொல்கின்றனர் .விரைவில் அதுவும் வற்றிவிடுகிறது .ஊரும் கோயிலும் களை இழந்து விடுகிறது என்பதை சொல்லிச் செல்கிறார் நாவலாசிரியர் .ஆனால் அத்தோடு நிற்காமல் ஒகிலித் தாத்தா மூலம் சொல்கிறார் ,”…சில சாமிகளுக்கும் ஆயுசு கொஞ்ச காலம்தான் போலிருக்கு.” இதுதான் கிராமத்து உளவியல் .

 

அத்தியாயங்களின் தலைப்பை இலக்கியங்களில் இருந்து எடுத்த நயம் மிக்க வரிகள் அலங்கரிக்கின்றன . இதனை ரசிப்போரும் இருப்பர் ,முரணென ஒதுக்குவோரும் இருப்பர் .

 

“எத்தனை நூற்றாண்டுகள் இந்த சாதி இழிவை சுமக்கிறது ? நமது முன்னோர்கள் நேர்த்திக் கடனுக்கு வேண்டி இருக்க மாட்டார்களா ? இந்த துடியான சாமிகள் நினைத்திருந்தால் பெரிய சாதிக்காரர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுத்து இருக்காதா ?”

 

இப்படி ஆங்காங்கு சிந்தனை பொறிகள் இந்நாவலின் நல்ல கூறு .

 

 “தென் மாவட்டங்களில் ஆதிக்க சாதியினரால் உண்டாக்கப்பட்ட கலவரத்தில் ,இடதுசாரி இயக்கத்தின் வாலிபர் சங்கம் எவ்விதம் களம் இறங்கி அமைதிக்கு வழி வகுத்தது என்பதை இதுவரை யாரும் இவ்வளவு அழுத்தமாக ஆவணப்படுத்தியது இல்லை.” என்கிற புலியூர் முருகேசன் வாக்குமூலம் மெய்யே .அதுவே இந்நாவலின் சிறப்பு .

 

நாவலை வாங்கி வாசியுங்கள் !

 

நரவேட்டை , [ புதினம்]  ஆசிரியர் : சக்தி சூர்யா ,

வெளியீடு : பாரதி புத்தகாலயம் , தொடர்புக்கு : 044 24332924 / 8778073949,

E mail : bharathiputhakalayam@gmail.com  / www.thamizhbooks.com

பக்கங்கள் : 280  , விலை : ரூ.280 /

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

22/4/2024.

 

 

 

 

 


மிருதங்கத்தின் வலியும் ரணமும் ………….

Posted by அகத்தீ Labels:

 





ஏப்ரல் 23 : உலக புத்தக தினத்தை நோக்கி,

 

மிருதங்கத்தின் வலியும் ரணமும் ………….

 

 

மிருதங்கத்தில் மாட்டுத் தோல் குறிப்பாக பசுத்தோல் பயன்படுத்தப் படுகிறது எனினும் பார்ப்பனர்கள் இதனை இசைக்கத் தயங்குவதில்லை .பிற தோல் கருவிகள் மீது காட்டும் ஒவ்வாமை இதன் மீது இல்லை . ஏன் ?இதன் சமூக வரலாற்றை அறிய வாசலைத் திறக்கிறது டி.எம் .கிருஷ்ணா எழுதிய “மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள் :செபாஸ்டியன் குடும்பக் கலை” எனும் நூல்

 

“மானு தோலு உண்டு மஞ்ச கடம்பு உண்டு
மானு தோலு உண்டு மஞ்ச கடம்பு உண்டு
மனுஷன் கண்டு தந்த கொட்டு மேளம் ஹே ஹே ஹே ஹே..”

 

2001ல் வெளிவந்த விக்ரம் நடித்த “காசி” திரைப்படத்தில்  இளையராஜா இசையில் புலமைப்பித்தன் பாடலைக் கேட்டு ரசித்தோம்  ;  அப்போது மாட்டுத் தோலா ? மான் தோலா என விவாதம் நடந்ததும் என் நினைவிலாடுகிறது .

 

சென்ஸாருக்குத் தப்பவும் ,மதவெறியர் மிரட்டல் வருமென பயந்தும் மாட்டுத் தோலை  மான் தோலென மாற்றிப் பாடியதாக இருக்கக்கூடும் என அன்றைக்கு சமாதனம் செய்து கொண்டோம். [ உண்மையும் அதுதான் என உள்வட்டாரத்தவர் சொன்னார்கள் ]

 

பாட்டை கேட்பதைத் தவிர இசைஞானம்  எதுவும் எனக்குக் கிடையாது .ஆகவே டி.எம் .கிருஷ்ணா நூல் வந்தபோது  சூட்டோடு படிக்க தோன்றவில்லை .தற்சமயம்  டி.எம் .கிருஷ்ணாவுக்கு எதிராக சனாதன சிறு கும்பல்  ஒன்று கச்சை கட்டி கனைத்தபோது இந்நூல் மீது ஆர்வம் பிறந்தது . ஏன் எனில் கர்நாடக சங்கீதத்தை குறிப்பிட்ட சாதியின் பிடியிலிருந்து விடுவிக்கப் போராடும் டி.எம். கிருஷ்ணாவின் ஜனநாயகப் போராட்டத்தை ஆதரிப்பது நம் கடமை அல்லவா ? இந்த நேரத்தில் என் சொந்த அனுபவம் ஒன்றைச் சொல்லி விடுகிறேன்.

 

 “சங்கராபரணம்” எனும் திரைப்படம் வந்த பொழுது நடந்த ஓர் நிகழ்வு இங்கு நினைவுக்கு வருகிறது . நான் அப்போது ஒரு சினிமா விடாது பார்க்கும் டைப் . தோழர் சின்னையாவும் நானும் படம் பார்க்க கிளம்பிவிடுவோம். அதே போல் அப்படத்தையும் பார்த்துவிட்டோம் . மறுநாள் தீக்கதிரில் வந்த விமர்சனத்தைப்  படித்ததும் கடுப்பாகி நானும் சின்னையாவும் பேசிக்கொண்டிருந்தோம் .அப்போது பெரம்பூர் கட்சி அலுவலகத்தில்தான் சிபிஎம் மாநிலக்குழுவும் தற்காலிகமாக இயங்கி வந்தது .எங்கள் பேச்சினூடே தோழர் ஆர். ராமராஜ்  வந்தார் . நாங்கள் சொல்வதைக் கேட்டார் . அங்கே வந்த மாநிலச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியத்தை அழைத்து விஷயத்தைச் சொல்லி கோர்த்துவிட்டார் தோழர் ஆர் .ராமராஜ்.

 

 

 

உடனே ஏபி சொன்னார் , “ இண்ணைக்கு இரவுக் காட்சியில் அந்தப்படத்தை நாம் நாலுபேரும் பார்க்கிறோம் . சின்னையா !  டிக்கெட் புக் பண்ணு !” எனச் சொல்லி காசை எடுத்துக் கொடுத்தார் .இரவு படம் பார்த்தோம்.

 

 

 மறுநாள் சொன்னார் , “ ஒடுக்கப்பட்ட ஓர் சாதியில் பிறந்த ஒரு சிறுவன் கர்நாடக இசையில் மேலெழுந்து வருவது ஓர் பாராட்ட வேண்டிய ஜனநாயகச் செய்தியே ! சினிமா மசாலாவில் நாம் எதிர்பார்க்கிற எல்லாமுமா கிடைக்கும் ? உங்க விமர்சனம் சரியே !” என்றவர் தீக்கதிருக்கு போண் செய்து பேசி இரண்டொரு நாளில் இன்னொரு தோழர் [ எஸ் பி  என நினைவு ] எழுதிய விமர்சனம் வரச் செய்தார் . சாதியத்தை எதிர்க்கிற அல்லது மீறுகிற எதுவாயினும் ஆதரிக்க வேண்டும் என்பதில் தோழர் .பாலசுப்பிரமணியம் உறுதியாக இருந்தார் . அது தெளிவான வழிகாட்டல் அல்லவா ?

 

இந்த நிகழ்வை அசைபோடக் காரணம் டி.எம்.கிருஷ்ணாவின் முயற்சியில் விமர்சனங்கள்  இருக்கக்கூடும் ,ஆயினும் நோக்கம் ஜனநாயகத் தன்மை கொண்டது அல்லவா ?அவருக்கு தோள் கொடுப்போம். அதன் ஒரு பகுதியே இந்நூலைப் படிக்க என்னைத் தூண்டியது. நீங்களும் வாசியுங்கள்.

 

 

மிருதங்கமும் மத்தளமும் ஒன்றா வெவ்வேறா ? நானறியேன்.ஆயினும் ஒன்று என்றே நான் கருதுகிறேன் . கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் மிருதங்கத்திற்கு மிகுந்த முக்கியத்துவமான இடம் உண்டு . இன்னும் சொல்லப் போனால் கர்நாடக சங்கீதத்தையும் மிருதங்கத்தையும் பிரித்துப் பார்க்கவே இயலாது . அப்படிப்பட்ட மிருதங்கத்தின் உருவாக்கத்தில்  சிந்திய வியர்வையை ஒருவர் ஆவணப்படுத்துவது என்பதே மிகப்பெரிய விஷயம் .

 

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு மேல் உழைத்து அலைந்து திரிந்து விவரங்களை அக்கறையோடு சேகரித்து , அவர்களோடு இரண்டறக் கலந்து உயிர் நாடியை கிரகித்து இந்நூலை எழுதி இருக்கிறார் டி.எம் .கிருஷ்ணா . சாதியத்தின் கோரக் கரங்கள் எப்படி எல்லாம் இயக்கி இருக்கின்றன என்பதை தன்னால் இயன்றவரை உள்வாங்கி சொல்ல முயன்றிருக்கிறார் .

 

“ மிருதங்கம் பற்றிய இந்நூல் ,சமூக அரசியல் , அழகியல் , வேதியல் , உயிரியல் , ஒலியியல் ,பொறியியல் , இயற்பியல் ஆகியவற்றை உள்ளடக்கியது.” என நன்றி சொல்லும் போது டி.எம்.கிருஷ்ணா சொல்வது மிகை அல்ல.

 

மிருதங்கம் ஆட்டுத் தோல் ,எருமைத் தோல் ,பசுத்தோல் ஆகிய மூன்றும் சேர்த்து செய்யப்படுவதை ,அதன் பின்னால் உள்ள சாதிய தீண்டாமையை இந்நூல் உரக்கவே பேசுகிறது . மிருதங்க வித்துவான்கள் பெரும்பாலும் பார்ப்பனராக இருக்கும் போது [விதி விலக்குகளும் உண்டு] , இந்த மிருதங்கத்தை உருவாக்கும் கைவினைஞர்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சாதியினராக இருப்பது தற்செயலானதா ? இதன் வரலாற்று வேர் எது ? இந்நூல் தேடுகிறது .

 

மிருதங்க உருவாக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் ,மேம்படுத்தல்கள் இவற்றின் பின்னால் மிருதங்க உலகில் புகழ்கொடி நாட்டிய மணி ஐயரே இருந்ததாகச் சொல்லப்படும் கூற்றை நூலாசிரியர் மறுக்கிறார் . மிருதங்க உற்பத்தியில் ஈடுபட்ட  கைவினைஞர்கள் ,பணியாளர்கள்  பங்களிப்பை எப்படி நிராகரிக்க முடியும் என டி எம் கிருஷ்ணா கோபப்படுகிறார் . அதனையொட்டி மணி ஐயர் குறித்த ஓர் விமர்சனத்தை முன் வைக்கிறார் , “மிருதங்கத்த்தின் வடிவமைப்பிலும் தன்மையிலும் ஏற்பட்ட வளர்சிக்கான பெருமையையும் வரித்துக் கொள்ளும் ஆணவம் இதில் தெரிகிறது.இந்த ஆணவத்தை மீறி புனித முகம் காட்டவும் அவரால் முடிகிறது .”

 

தஞ்சாவூர் பாணி ,சென்னை பாணி ,ஆந்திர பாணி ,கர்நாடக பாணி  என வெவ்வேறு மிருதங்க உற்பத்தி மையங்கள் உருவான பின்னணி ,அதில் சம்மந்தப்பட்ட குடும்பங்கள் , சாதியத்தின் பங்கு , வாழ்க்கை முறை ,மிருதங்கம் உருவாக தேவைப்படும் கூட்டு உழைப்பு ,அதில் தோல் தொழிலாளர் ,ஆசாரி , மிருதங்கம் செய்யும் கைவினைஞர்கள்  எனஒவ்வொருவரின் வரையறுக்கப்பட்ட இடம் , நவீன உலகில் ஏற்பட்டு வரும் தொழில் நுட்ப மாற்றங்கள் என எல்லாவற்றையும் ஆவணபடுத்தும் முயற்சியே இந்நூல் .

 

இந்நூல் ஒவ்வொரு கட்டத்திலுமான தொழில் நுட்பக் கூறுகளையும் அதற்கு தேவைப்படும் கைவினைஞர்களின் உழைப்பையும் அனுபவத்தையும் மிக காத்திரமாகப் படம் பிடிக்கிறது .அது குறித்து விரிவாகப் பேச எனக்கு ஞானம் போதாது . ஆகவே இங்கு பேசவில்லை .வாசகர்கள் படித்து உள்வாங்க அன்புடன் வேண்டுகிறேன்

 

மிருதங்க வித்துவான்களுக்கும் மிருதங்கம் செய்யும்  கைவினைஞர்களுக்கும் இடையிலான உறவின் தன்மை மிகவும் சிக்கலானது . பெரும்பாலும் உயர் சாதியினரான வித்துவான்கள் பெரும்பாலும் தீண்டத்தகாதவர் என ஒதுக்கப்பட்ட மிருதங்க கைவினைஞர்களோடு நெருக்கமாக இணைந்து தம் தேவையை பெற வேண்டிய சூழலில் ஏற்படும் சமூக முரண்கள் இந்நுல் நெடுக ஊடும் பாவுமாய் வந்துள்ளது .

 

“மேல் நிலையில் இருப்பவர்கள் கீழே இருப்பவர்களை பெருந்தன்மையோடு நடத்தும் போக்கு சமூகத்தின் அதிகார அடுக்குகளை மறு உற்பத்தி செய்கிறது “ எனவும் , “ இந்த பாசாங்கில் எல்லோரும் பங்கு கொண்டனர்” என்றும் சொல்லிச் செல்கிறார் டி.எம் .கிருஷ்ணா . இது நுட்பமான அவதானிப்பு .இப்படி நிறைய தருணங்களில் இந்நூலில் டி.எம்.கிருஷ்ணா பேசியுள்ளார் .

 

11 அத்தியாயங்களின்  தலைப்பைப் பாருங்கள் ! எவ்வளவு நுட்பமாக ஆழமாக இந்நூலில் டி.எம் .கிருஷ்ணா பயணித்திருக்கிறார் என புலனாகும். 1] தஞ்சாவூரில் வேர் கொண்ட மரபு , 2. சென்னை நோக்கி ,3.சென்னை மிருதங்கச் சிற்பிகள் , 4.உருவம் தந்த மரச் சிற்பிகள் ,5. தோலின் ஆழம் , 6. தோலில் பிறக்கும் தாளம் ,7.சுண்ணாம்பும் கல்லும் , 8.குச்சி-கம்பி : மாபெரும் விவாதம் ,9.தமிழகத்திற்கு அப்பால் , 10. பெண்களின் பங்களிப்பு , 11. மிருதங்கச் சக்கரவர்த்தி .

 

ஒரு மிருதங்கத்தின் பின்னால் இவ்வளவு உழைப்பா ? இவ்வளவு வலியா ?

 

தோல் தொழில் இழிவானதாக  மநு சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது .இத்தொழில் ஈடுபடுபவர்கள்  தீண்டத்தகாதவர்களாக மநு வரையறுத்திருக்கிறது .பறை ,தவில் உட்பட எல்லா தோல் கருவிகளும் ஆலயங்களில் வெகு தொலைவில் நிறுத்தப்படும் போது பசுத்தோலால் செய்தாலும் மிருதங்கம் நெருங்க முடிகிறதே எப்படி ?

 

ஒரு முறை தோழர் டி.கே.ரங்கராஜன் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார் , “ மிருதங்க கலையில் பல பிராமணர்கள் ஜொலிக்கிறார்கள் ,ஆனால் தவில் இசைப்பதில் எந்த பிராமணனாவது ஈடுபட்டிருக்கிறானா ? ஏன் ஈடுபடுவதில்லை ?” இக்கேள்வியும் விசாரிக்கப்பட வேண்டியதே . இப்படி எண்ணற்ற கேள்விகளை இந்நுல் என்னுள் எழுப்புகிறது .

 

மாதம்மாள் ,அஸ்வத்தம்மாள் போன்ற சில பெண்கள் சமூக எதிர்ப்பையும் மீறி மிருதங்க கைவினைஞர்களாக மாறிய கதை ஒரு காத்திரமான பதிவு . மிருதங்கம் செய்யும் கைவினைஞர்களின் மனைவிமார்களே இடையீடுகள் ,கிசுகிசுக்கள் மூலம் பல சமூக அவலங்களை வெளிப்படுத்துகின்றனர் என்கிறார் டி .எம்.கிருஷ்ணா ஓரிடத்தில் .

 

இன்னொரு இடத்தில் சொல்கிறார் ,” ‘சர்வம் தாள மயம்’ என்னும் தமிழ்த் திரைப்படத்தின் கதை இதுதான் .மிருதங்கம் செய்பவரின் மகன் மிருதங்கம் வாசிக்கக் கற்றுக்கொள்வதில் உள்ள சவால்களை இந்தப் படம் பேசுகிறது .கலைஞருக்கும் கைவினைஞருக்கும் இடையிலான உறவு ,சமூக நுட்பங்கள் ஆகியவற்றை ஆழமாகக் கையாள இந்தப் படம் தவறிவிட்டது .இருண்ட பகுதிக்குள் பயணிக்கவும் சொல்லப்படாத வார்த்தைகளைக் கேட்பதற்கும் படம் தயாராக இல்லை . சாதியை அது காங்கிரீட் சுவர் போல் அது சித்தரித்தது .ஆனால் உண்மையில் சாதி கொல்லைப்புற கதவுபோல் செயல்படுகிறது.” டி.எம்.கிருஷ்ணாவின் நுட்பமான இந்த அவதானிப்பை இந்நூல் முழுக்கக் காண முடிகிறது .

 

“ஒரு பக்கம் உயர் சாதியினரின் கலை வெளிப்பாடும் கற்கும் சூழலும் ,மறுபக்கம் விளிம்பு நிலையில் உள்ள மிருதங்கக் கைவினைஞர்கள் என்று இரு மாறுபட்ட உலகங்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம் என்பது எனக்கு உறைத்தது . இந்த இரு உலகங்களும் நடைமுறை வசதிகளுக்காக மட்டுமே சந்தித்துக் கொள்கின்றன. சாதி என்பது தொழில் அடிப்படையிலான அல்லது அவரவர் திறமை அடிப்படையிலான சமூக ஏற்பாடு என்றும் , பிறப்பின் அடிப்படையிலான சமூக ஏற்பாடு அல்ல என்றும் பிராமணர்கள்  தரப்பில்  ஒரு பொய் தொடர்ந்து சொல்லப்படுகிறது . கலைஞர்கள் கைவினைஞர்கள் இடையே இருக்கும் ஊடாட்டமும் இடைவெளிகளும் இந்தப் பொய்யை மறு உற்பத்தி செய்கின்றன .இதன் விளைவாகப் பண்பாட்டு ரீதியாகப் ‘பிறர்’ என்னும் பிரிவு உருவாகிறது .” இப்படி வாக்குமூலம் தருகிற டி. எம்.கிருஷ்ணாவும் பிறப்பால் ஒரு பிராமணரே .ஆயினும் உள்ளிருந்து வரும் இக்கலக்குரல் நன்று. தேவையானது .

 

நூலைத் தமிழில் தந்த  அரவிந்தனுக்கும் வாழ்த்துகள் .

 

இந்நூலை எல்லோரும் வாசிப்பீர் !

சனாதன எதிர்ப்பை முறியடிக்க

டி.எம்.கிருஷ்ணாவின் பக்கம் துணை நிற்பீர் !

 

 

மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள் :செபாஸ்டியன் குடும்பக் கலை

ஆசிரியர் : டி.எம்.கிருஷ்ணா , தமிழில் : அரவிந்தன்,

வெளியீடு : காலச்சுவடு பப்பிளிகேஷன்ஸ் [பி]லிட்., 669 ,கே.பி.சாலை , நாகர்கோவில் 629001. E mail : publications@kalachuvadu.com  / 91-4652 /278525 .

பக்கங்கள் : 328 , விலை : ரூ.195/

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

21/4/2024.

 

 

 

 

 

 

 

 


சும்மா…. சிரிக்க மட்டுமே !

Posted by அகத்தீ Labels:

 





சும்மா…. சிரிக்க மட்டுமே !

 

என் பெயர் வடை

இட்லிக்கு முன் பிறந்தவன்

சந்தேகம் இருந்தால்

மருத்துவர் கு. சிவராமனைக் கேளுங்கள்

 

டீ ,காபி, இட்லி, பொங்கல்,

கேசரி, உப்புமா, தோசை

இப்படி என் சிநேகிதர்கள் அதிகம்.

என்னை வெறுப்போர் குறைவு

 

ஆமவடை ,உழுந்த வடை ,பருப்பு வடை

மெதுவடை ,மசால்வடை ,தவலைவடை ,

கீரைவடை , தட்டுவடை, அனுமார் வடை

தயிர்வடை ,ரசவடை ,சாம்பார்வடை

எத்தனை பெரிய குடும்பம் எனக்கு

எல்லா மதத்தவரும் சாதியினரும்

என் ஆசை உறவுகளே!

 

 

நான் எண்ணை குடித்தால்

தந்தி பேப்பரில்  பிழிந்து

தின்று விடுவார்கள் ஒரு போதும்

குப்பையில் போடமாட்டார்கள் !

 

ஒருத்தர் தினசரி

மாவும் எண்ணையும்

அடுப்பும் இல்லாமலே

வாயால் சுடுகிறார் வடை

எம் வம்சத்துக்கு நீங்கா

பழியை சுமத்தி மகிழ்கிறார் .

 

ச்சீ ! ச்சீ !

வாயால் சுடுவது வடையல்ல

வயிற்றை நிறைப்பதே வடையாகும் !

வடையின் வலியை புரிந்திடுங்கள்!

அந்த ’ச்சீ’ யின் வாயை தைத்திடுங்கள்!

 

சுபொஅ.

04/03/24


சோற்றுப் பானை பொய்சொல்லுமோ ?.

Posted by அகத்தீ Labels:

 

புள்ளிவிவரங்கள்

பொய்சொல்லலாம்

சோற்றுப் பானை

பொய்சொல்லுமோ ?.

 

பொருளாதாரப் புலிகள்

புளுகித் தள்ளலாம்

பசிக்கும் வயிற்றுக்கு

புளுகத் தெரியுமோ ?

 

ஊடக அடியாட்கள்

ஊதிப்பெரிதாக்கலாம்

கனவுக் கத்திரிக்காய்

கறிக்கு உதவுமோ ?

 

மதபோதை அதிகார போதை

வெறியாட்டம் போடலாம்

மானிட மென்பது புல்லோ? – அன்றி

மரக்கட்டை யைக்குறித் திடவந்த சொல்லோ?

 

[ கடைசி இரு வரிகள் புரட்சிக்கவி பாரதிதாசனிடம் உரிமையோடு எடுத்தாண்டது ]

 

சுபொஅ.

26/02/2024.

 

ஒரு ராஜாவுக்கு அறிவியல் துறை....

Posted by அகத்தீ Labels:

 

[ நேற்று ஒரு கதையை மீண்டும் கேட்டேன் . தெரிந்த கதைதான் . ஆயினும் இன்று அவசியம் சொல்லப்பட வேண்டிய கதை . கதை சொன்னவர் தாமஸ் பிராங்கோ . சொன்ன இடம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 22 வது மாநில மாநாடு .பி எம் சி தொழில்நுட்ப கல்லூரி .ஓசூர். ]

 

ஒரு ராஜாவுக்கு அறிவியல் துறைக்கு தனி அமைச்சரை நியமிக்க ஆசை உண்டானது . தகுதியானவரை தேர்வு செய்ய போவதாய் தண்டோரா போட்டார் . பெருங்கூட்டம் திரண்டது . ராஜா சொன்னார் நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் .சரியாகச் சொல்வோருக்கு பதவி .

 

ராஜா கேட்டார் ;

 

நான் ஒரு கண்ணாடித் தொட்டியில் விழிம்புவரை தண்ணீர் நிரப்பினேன் . அதில் உயிருள்ள மீனை விட்டேன் .நீர் ஒரு சொட்டு வெளியேறவில்லை .அந்த மீனை சாகடித்து தொட்டிநிரம்பிய தண்ணீரில் போட்டேன் .நீர் கொட்டியது . ஏன் ?

 

யாராலும் பதில் சொல்ல முடியவில்லை .

 

ராஜா 24 மணி நேர அவகாசம் கொடுத்து சபையைக் கலைத்தார் .

 

மறு நாள் வேடிக்கை பார்க்க கூட்டம் திரண்டதே தவிர பதில் சொல்ல ஆளில்லை .

 

ஆனால் ,ஒரு இளைஞன் மேடை ஏறினான் . “ ராஜா ! நான் பதில் சொல்லத் தயார் .நீங்கள் கோபப்படக்கூடாது…” என கேட்டான் .

 

ராஜா சொன்னார் , “ நான் கோபப்பட மாட்டேன் .தண்டிக்க மாட்டேன்” என உறுதியாய்ச் சொன்னார் .

 

இளைஞன் சொன்னான் , “ ராஜா ! நீங்கள் பொய் சொன்னீர்கள் ! நான் நேற்று பலமுறை நீங்கள் சொன்ன சோதனையைச் செய்து பார்த்தேன் . உயிருடன் மீனைப் போட்டாலும் கொஞ்சம் தண்ணீர் வெளியேறியது . செத்த மீனைப் போட்டாலும் வெளியேறியது . இதுவே ஆர்க்கிமிடீஸ் அறிவியல் விதியும் கூட .”

 

ராஜா மகிழ்ந்தார் . அவனையே அறிவியல் துறைக்கு அமைச்சராக தேர்வு செய்தார் .

 

இக்கதையைச் சொல்லிவிட்டு பிராங்கோ சொன்னார் , யார் சொன்னாலும் எவ்வளவு பெரியவர் சொன்னாலும் தப்பை தப்பு என்று சொல்லும் மன உறுதியே அறிவியலின் முதல் நிபந்தனை .

 

திரும்பத் திரும்ப சோதித்தறி என்பது இரண்டாவது நிபந்தனை .

 

[ நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன் . இங்கே டிமோவின் அத்தனை புராணப் புளுகையும் அறிவியல் என்று சான்றளிப்பதுதானே அறிவியலார் அறமாகிப் போனது . நீதி மன்ற நீதியாகிப் போனது . அதிகார ஆணையாகிப் போனது . எங்கே போகிறோம் ?]

 

வாழ்த்துரை வழங்கிய ஆதவன் தீட்சண்யா நன்கு தத்துவ உரை நிகழ்ந்தினார் . “ தன்னை பொருள்முதல் வாதியாய் அறிவித்துக் கொள்வதே அறிவியலாளர் கடமை என்றார் . நாட்டு நடப்பை நன்கு பகடி செய்தார் .

 

இராணுவ ஆய்வறிஞர் டில்லிபாபு துவக்க உரை நிகழ்த்தினார் . அறிவியலை மக்களிடம் கொண்டு சேர்க்க மக்களுக்கான அறிவியலை அனுபவ கல்லில் உரைத்து விளக்கினார் .

 

அறிவார்ந்த துவக்க நிகழ்வுதான் . பங்கேற்றோர் எண்ணிக்கைதான் கவலைக்குரியது .

 

ஓசூரில் தொழிலாளி வர்க்கத்தில் இடதுசாரி இயக்கத்தில் முற்போக்கு சிந்தனையாளர்களுக்கு பெரும் பஞ்சமோ ? இல்லையே ! எங்கோ ஒருங்கிணைப்பில் பிழை நேர்ந்துள்ளது .அவ்வளவே !

 

சுபொஅ.

24/02/24.