சொல்.64

Posted by அகத்தீ Labels:




தினம் ஒரு சொல் .64 [ 6 /11/2018 ]

ஒவ்வொருவர் வீட்டிலும் அலமாரியில் பலவிதமான மாத்திரைகள் குவிந்திருக்கும் .அவற்றுள் காலாவதியானது நிறையவே இருக்கும் . அவற்றின் விலையைக் கணக்கிட்டுப் பார்த்தால் நாம் எவ்வளவு காசை விரயம் செய்திருப்போம் என்பதை உணர முடியும் .

உடல் நிலை பாதிக்கப்பட்டதும் மருத்துவமனைக்கு ஓடுகிறோம் .டாக்டர் மூன்று அல்லது ஐந்து நாட்களுக்கு மருந்து எழுதுகிறார் .நாமும் அப்படியே வாங்கிவிடுகிறோம் .மறுநாளே குணமாக வேண்டும் என எதிர்பார்க்கிறோம் . பொறுமை இல்லை .மீண்டும் டாக்டரிடம் ஓடுகிறோம் .அவர் வேறு மாத்திரை எழுதித் தருகிறார் .அதையும் மொத்தமாக வாங்குகிறோம் . முதலில் எழுதிய அதே மாத்திரைதான் வேறு கம்பெனி மாத்திரை அவ்வளவே .மறுநாள் உடல் நலம் தேறிவிடுகிறது . மாத்திரையை நிறுத்தி விடுகிறோம் .

டாக்டர் எழுதினாலும் ஒவ்வொரு நாளுக்கு உரியதை மட்டும் வாங்கினால் போதாதா ? எல்லா ஊரிலும் மருந்துக் கடை உண்டு . அதே கம்பெனி மாத்திரை கிடைக்காவிடிலும் வேறு கம்பெனி மாத்திரை கிடைக்கும் .மருந்தின் வேதியல் பெயர் எழுதினால் இப்படி மாற்றி வாங்குவதில் பிரச்சனை இருக்காது . அப்படி வேதியல் பெயர்தான் எழுத வேண்டும் என்கிற அரசாணை உண்டு .அமலாவதுவே பிரச்சனை .ஒரு வேளை இப்படி வேதியல் பெயர் எழுதினால் டாக்டர் இரண்டாம் நாள் எழுதியதும் பழைய மாத்திரையே என்பது அறிவோம்.

நிரந்தரமாகச் சாப்பிட வேண்டிய மாத்திரை எனிலும் மொத்தமாக வாங்க வேண்டாம் .வாரந்தோறும் வாங்கினால் போதுமே .சில வேளை திடீரென நிலைமை மாறி வேறு மாத்திரை தேவைப்படலாம் அல்லவா ? ஆகவே வாங்கிக் குவிக்க வேண்டாம். 


சுவிட்சு போட்டா லைட் எரிவதோ அணைவதோ போல் காய்ச்சலுலோ வலியோ உடனடியாக நிற்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் பெரும் தவறே .படிப்படியாய் குறைவதே மிகச்சரி !

டேவிட் வெர்னர் எழுதிய “டாக்டர் இல்லா இடத்தில்…” நூல் வாசித்தறிவதும் மிக நன்று .எளிய கைவைத்தியம் , நாட்டு மருந்துகள் தெரிந்து வைத்திருப்பதும் நல்லது .நாட்டு மருந்து , பாராசெக்டமல் போன்ற அடிப்படை மருந்துகள் கைவசம் இருப்பதும் நல்லது .

தேவையற்ற மருந்துக் குப்பைகள் வீட்டில் சேர்வது நல்லதல்ல . முயன்றால் தவிர்க்கலாம் .அதையும் மீறிச் சேருவதை அவ்வப்போது சாக்கடையில் வீசுவீர் !
Su Po Agathiyalingam




























































































0 comments :

Post a Comment