சொல் .83

Posted by அகத்தீ Labels:

தினம் ஒரு சொல் .83 [ 28 /11/2018 ] “அவன் கிடக்கிறான் குடிகாரன் ,எனக்கு இரண்டு மொந்தை ஊற்று” என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல நாட்டு நடப்பும்கூட .மதுவை வாழ்வில் தொட்டதே இல்லை என்போர் அபூர்வம் . எப்போதேனும் கொண்டாட்டத்தில் கொஞ்சம் போதை ஏற்றுவோர் ஒரு ரகம் .வேலைச் சூழலிலின் கடுமை காரணமாக கொஞ்சம் மதுவை நாடுவோர் இன்னொரு ரகம் . குடிப்பதற்காகவே நட்பு வட்டம் உருவாக்கிக் கொள்வோர் இன்னொரு ரகம் .சோகம் ,மகிழ்ச்சி என காரணம் சொல்லி குடிப்போர் இன்னொரு ரகம் . குடியில் மூழ்கி வீழந்து கிடப்போர் இன்னொரு ரகம் . எல்லோரையும் ஒற்றைச் சொல்லாய் குடிகாரர் என ஒதுக்குதல் தகாது .அது தீர்வுக்கும் உதவாது . மது வாசமே இல்லா சமூகம் என கனவு காணலாம் .பேசலாம் . ஆயின் அது வெறும் கனவாக பேச்சாகவே இன்றல்ல என்றும் இருக்கும் . ஆக மதுவுக்கு எதிராய் விழிப்புணர்வை விடாது உயர்த்திப் பிடித்தல் மட்டுமே சாத்தியம் . அதே சமயம் மதுவுக்கு அடிமையானோரை மதுநோயராய்ப் பிரித்து அறியவும் உரிய சிகிட்சை அளிக்கவும் நாம் பயில வேண்டும் . ஒருவர் குடிக்கிறார் என்பதாலேயே அவரைக் கெட்டவராகச் சித்தரித்து அவரை குடும்பத்திலும் இதர இடங்களிலும் புறக்கணிப்பதும் ; அவருக்கு உரிய நியாயங்களைக்கூட கொஞ்சமும் உறுத்தலின்றி நிராகரிப்பதும் அவரை மீட்டெடுக்க ஒரு போதும் பயன்படாது . கடும் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை எப்படி அணுகுவோமொ அப்படி குடிநோயில் வீழ்ந்தோரை அணுகிட குடும்பத்தாருக்கே பயிற்சி தேவை . “இனி குடித்தால் வீட்டுப்படி ஏறாதே!” என மிரட்டுவது அவரை மதுக்கடையையோ அல்லது தெரு முனைகளையோ சரணடையவே உந்தித்தள்ளும் . தூங்கும் போது ஒரு பெக் குடித்துவீட்டு தூங்க வீட்டில் பிரச்சனை இல்லை எனில் தேவையற்ற அவப்பெயரை அவர் தேட வேண்டி இருக்காது .மேட்டுக்குடியிலும் இப்பிரச்சன்னையை அமுக்கமாகக் கையாண்டு விடுவர் .அடித்தட்டிலும் இதனை சமாளித்துவிடுவர் .இந்த இரண்டுக் கெட்டான் நிலையில் உள்ளோரே பெரிதும் சிக்கலாக்கி விடுகின்றனர் . எல்லோரும் குடியுங்கள் என்பதல்ல எம் வாதம் .குடிநோயில் வீழாமல் ஒவ்வொருவரையும் காக்க சமூகப் பார்வை சற்று விசாலப்பட வேண்டும் என்பதே எம் வேண்டுகோள். குடிநோய்க்கு யாரையும் தள்ளிவிடாதீர் ! Su Po Agathiyalingam

0 comments :

Post a Comment