புதுநாற்றா முளைக்கோணும் …

Posted by அகத்தீ Labels:




புதுநாற்றா முளைக்கோணும் …


ஆண்டுக் கொரு இழவென்றால்
அழுது அழுது தொலச்சிடுவேன் !
அன்றாடம் இழவென்றால்
தொண்டக் குழியிலும் ஈரமில்ல..

[ஆண்டுக் கொரு இழவென்றால் ]


சாதிவெஷம் தலக்கேறி
ஆணவக் கொலையாகும்
நாதியற்ற ஜீவனுக்கு
நாள்தோறும் அழுவேனோ ?

[ஆண்டுக் கொரு இழவென்றால் ]


மதம்பிடிச்  சலைகின்ற
அதிகார திமிராலே
சதியாலே சாவோருக்கு
அழுதழுது ஓய்வேனோ?

[ஆண்டுக் கொரு இழவென்றால் ]


இயற்கையும் பழிவாங்க
புயலுக்கும் மழைக்கும்
பொசுக்கென போனோருக்காய்
அழுது தொலைப்பேனோ ?

[ஆண்டுக் கொரு இழவென்றால் ]


விழுந்த தென்னைக்கா
அழிந்த நெல்லுக்கா
இடிந்த குடிசைக்கா
எத்தனைக்கு நானும் அழ …

[ஆண்டுக் கொரு இழவென்றால் ]


நெஞ்சில் மிதிக்கிற வெலவாசிக்கும்
படிச்ச பிள்ள வேலயின்றி
பித்துபிடிச்சு நிப்பதுக்கும்
அழுதபடி வாழ்வேனோ ?

[ஆண்டுக் கொரு இழவென்றால் ]


சக்கரையா பேசும் சர்க்காரு
சாமனியன் அடிமடிய புடுங்குது !
உடுத்திருக்கும் கோவணதையும்
உருவ அல்லோ பார்க்குது !

[ஆண்டுக் கொரு இழவென்றால் ]

மத்தியில ஆளுகிற
மந்திரிங்க மொத்தபேரும்
அம்பானி அதானி
பங்காளியாப் போனாங்க …

[ஆண்டுக் கொரு இழவென்றால் ]

பொணத்தையும் நக்கித் தின்னும்
புத்திகெட்ட அடிமைக
சென்னக் கோட்டயில
ஜடமாய் இருக்காங்க …

[ஆண்டுக் கொரு இழவென்றால் ]

ஏழ பாளங்க என்ன பண்ணித் தொலைக்கிறது
பூச்சி மருந்த குடிக்கணுமோ
நாண்டுகிட்டு சாகணுமோ
நாடாள்வோரா நாக்கழுக சொல்லுங்க …

[ஆண்டுக் கொரு இழவென்றால் ]

வம்பா பொணமாகி வாழ்வ முடிக்காம
கம்பா நிமிரோணும் கையரிவா துக்கோணும்
நாதியற்று செத்து நாறிக் கிடக்காம
போராடி விழுந்து புதுநாற்றா முளைக்கோணும் !!

[ஆண்டுக் கொரு இழவென்றால் ]

சு.பொ.அகத்தியலிங்கம்.











0 comments :

Post a Comment