பிள்ளையாரப்பா !

Posted by அகத்தீ Labels:

 


பிள்ளையாரப்பா !



குட்டி குட்டி மண்பிள்ளையாரை

டிரம் தண்ணீரில் போட்டு

மூடிவைத்து கரைந்ததும்

வெளியே கொட்டும்

அடுக்கக பக்தர்களை

பிள்ளையாரப்பா ! நீ

பாராட்டி இருக்கவேண்டாமா

சுற்றுச் சூழலை மாசுபடுத்தாதற்காக ?

 

 

குத்துப்பாட்டும்

மூச்சுமுட்டும் மதுநெடியும்

வசூல் வேட்டையும்

வாரிச் சுருட்டலும்

மனதைக் குமட்டுவதால்தான்

தூக்கி வீசும் போது

“அப்பாடா ! தப்பித்தோம்

இந்த ஆண்டு கலவரத்திலிருந்து” என

நிம்மதிப் பெருமூச்சு விடுகிறாரா ?

பாவம் ! அந்தப் பிள்ளையாரப்பா !

 

 

மராமத்துப் பணிக்காக

நீர் முழுவதும் வெளியேற்றப்பட்ட

ஏரியின் ஓரத்தில்

வழிந்தோடிய சாக்கடையில்

வீசிஎறியப்பட்ட பிள்ளையாரப்பா

என்ன நினைத்துக்கொண்டிருப்பார் !

 

 

இரண்டு மூன்று நாட்களாய்

ஒவ்வொரு தெருவிலும்

சுண்டல் ,வடை , இனிப்பு

கொழுக்கட்டை , புலவு என

தன் வாடிக்கையாளர்கள்

வயிற்றை பிள்ளையாரப்பா நிரப்பிட

ஐந்து நாட்களாய்

போண்டா பஜ்ஜி கடையை

மூடிவைத்திருந்த பாட்டி

இன்று கடை திறந்து

சாமியைக் கும்பிடும் நொடியில்

என்ன வேண்டி இருப்பார்

”அடுத்த ஆண்டாவது மூன்று நாளில்

முடித்துக் கொள்ளப்பா பிள்ளையாரப்பா!” என்றா ?

 

சுபொஅ.

06/09/25.


பொம்மலாட்ட ஸ்கிருப்ட்

Posted by அகத்தீ Labels:

 


தலையைத் தடவு
கட்டியணை
சிறையில் போடு
மகுடம் சூட்டு
தர்ம யுத்தம் செய் !
சபதம் எடு
தனி ஆவர்த்தனம் வாசி
முட்டி மோது
பிரிந்து போ
தனிக்கடை போடு
கூட்டுச் சேர்
நட்டாற்றில் விடு
அவரைத் தூக்கு
இவரை மிதி
இவரை அவரை
விடாதே துரத்து கைவிலங்கோடு
ஆட்டுவி ! உன் விரல் அசைவில்
வாய் அவனுடையது பேச்சு உன்னுடையது
ஒற்றுமை உதடு சொல்க
சுக்கல் சுக்கலாய் உடைத்தெறி
இனி இவர்களை நம்புவதைவிட
சாணி நக்கியிடம்
சரணடைந்து விடுவதே மேலென
புத்தி பேதலிக்க விடு !
இது அரசியல் இல்லப்பா
நவீன பொம்மலாட்ட ஸ்கிருப்ட் !
'நாக்பூர் ஸ்டைல் கபளீகரம்' !

சுபொஅ.
05/09/25.

சொல்லித் தீராத உண்மைகள் .

Posted by அகத்தீ Labels:

 





 

சொல்லித் தீராத உண்மைகள் .

 

 

இன்றைய ஊடகங்கள் மீதான கோவமும் விமர்சனமும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் . அவை எல்லாம் ஒரே கோணத்தில் இருக்காது , அவரவர் அரசியல் பார்வைக்கு ஏற்ப இருக்கும் . ஆயினும் உண்மை எது ? தேடுக தொடர்ந்து .

 

களப்பணியாளர்களும் ,ஊடகப் பார்வையாளர்களும் ஊடகத்தில் பணியாற்றுகிறவர்களும் அறிய வேண்டிய உண்மைகளை ‘ விலக மறுக்கும் உண்மைகள்’ என்ற பெயரில் ஒரு கட்டுரைத் தொகுப்பு நூலாக தந்துள்ளார் அ.ப.அருண்கண்ணன் . தாமதமாகத்தான் படித்தேன் . சொல்கிறேன்.

 

இந்நூல் ஐந்து கட்டுரைகளின் தொகுப்பு .இதில் நான்கு கட்டுரைகள் ‘வளரி’என்கிற குறைவான வாசகர் பரப்பைக் கொண்ட ஏட்டில் வெளிவந்தவை .ஒன்று ’தமிழ் இந்து’ நாளேட்டில் வெளிவந்தது .   

 

 சினிமாவை முன்வைத்து பேசுகிறது கட்டுரை ஒன்று .  ஆவணப்படங்களை முன்வைத்து இரண்டு கட்டுரைகள் . புகைப்பட கலைஞனை முன்வைத்து பேசுகிறது இன்னொன்று . கார்ப்பரேட் ஊடக வியாபார அரசியல் பற்றி பேசுகிறது ஒன்று .இப்படி ஐந்தும் தனித்தனியே முகம் காட்டினாலும் இதன் ஊடும் பாவுமாக இருப்பது பாசிச அரசியல் மீதான விமர்சனப் பார்வையே ! பாசிசம் எப்படி ’பொய் பொதிந்த கருத்துத் திணிப்பில்’ மிகவும் நுட்பமாக வினையாற்றுகிறது என்பதை அறிய இக்கட்டுரைகள் நிச்சயம் பயன்படும் .

 

இந்தோநேசியாவில் ஒரு லட்சம் கம்யூனிஸ்டுகளை கொடுங்கோலன் சுகர்னோ படுகொலை செய்ததை நியாயப்படுத்தி  கம்யூனிஸ்டுகளை தேசவிரோதிகளாகச்  சித்தரிக்கும் ‘பெங்கியானன் ஜி30எஸ்/பி.கே.ஐ’ [ pengkhianatan G30S/PKI ]என்றொரு பிரச்சாரப் படத்தை இந்தோநேசிய இராணுவ ஆட்சி தயாரித்து இளைஞர்களை கட்டாயம் பார்க்க வைத்து , அதை ‘ உண்மைவரலாறு ‘ போல் நம்பவைக்க முயன்றது .இதனை முன்னுரையில் சிந்தன் குறிப்பிடுவதை கவனத்தில் வைத்துக்கொண்டே முதல் கட்டுரையை வாசிக்க வேண்டும் .

 

“ வரலாற்று உண்மையை சொல்ல மறுக்கும்’ தி காஷ்மீர் ஃபைல்ஸ்” என்ற படம் விவேக் அக்னி ஹோத்திரி என்பவரால் இயக்கப்பட்டது .1990 ஆம் ஆண்டு காஷ்மீரில் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட செய்தியை ’கொடூர உண்மை வரலாறு போல்’ சித்தரித்து இஸ்லாமிய எதிர்ப்பை விசிறிவிட உருவாக்கப்பட்ட திரைப்படமே அது .  மோடியும் சங்பரிவார்களும் இதனைத்தூக்கிச் சுமந்ததில் இருந்தே அது ’புராணப் புளுகு’ போன்ற ’வரலாற்றுப் புளுகு’ என்பது வெளிச்சமாகவில்லையா ? இதனை காஷ்மீர் வரலாற்றுடனும் சங்பரிவாரின் தீய நோக்கத்தை அம்பலப்படுத்தியும் கட்டுரைக்கு நியாயம் வழங்கியுள்ளார் அருண் கண்ணன் .

 

இதனைப் படிக்கும் போது ‘கேரள ஃபைல்ஸ்’ மற்றும் மராட்டிய திரைப்படம் ‘சாவா’ ஆகிவை எப்படி சிறுபான்மை மக்களை எதிரிகளாக்கியது என்பது நினைவுக்கு வராமல் போகாது . தமிழ்நாட்டிலும் சில திரைப்படங்கள் சாதி ஆதிக்கத்தை நியாயப்படுத்தியும் இஸ்லாமியர்களை துரோகிகளாக சித்தரித்தும்  வருவது கவனத்துக்கு உரியது .ஆக ,திரைப்படத்துறையில் மதவெறி சாதிவெறி அரசியல் தொழில்படத்துவங்கி உள்ளதை மிகவும் கவலையோடும் எச்சரிக்கையோடும் பார்க்க வேண்டிய அவசியத்தை இக்கட்டுரை நம்மிடம் சொல்லுகிறது .

 

 “தந்துரா : உண்மையைப் பிரதிபலிக்கும் ஆவணப்படமா ?” இது பாலஸ்தீனத்தின் கதையைப் பேசும் ஆவணப்படம் . 1948 ஆம் ஆண்டு தந்துரா என்ற கடற்கரை கிராமத்தில் 250 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர் . இது செய்தி .இதனை இஸ்ரேல் ராணுவம் மறுக்கிறது . இரதரப்பையும் அலசுவது போல் இந்த ஆவணப்படம் தோற்றம் காட்டினும் படுகொலை நடந்தது என்பதை வலுவாகவே முன்வைக்கத் தவறவும் இல்லை .ஆயினும்  ,’” ஆஸ்திரியாவிலும் அமெரிக்காவிலும் பூர்வகுடிகளை கொன்றதை ஒத்துக்கொண்டதுபோல் நாமும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறார் .  படத்தில் இறுதியில் நினைவுச் சின்னம் அமைப்படுவதுடன் முடிகிறது ,அதில் ’சுதந்திரப்போர் நினைவுச் சின்னம்’ என்றே பொறிக்கப்படுவது இஸ்ரேலின் பக்கத்தில் பார்வையாளரைப் பிடித்துத் தள்ளுகிறது .இப்படத்தை இயக்கியவர் அலோன் ஸ்வாரஸ் .இவர் இஸ்ரேலைச் சார்ந்தவர் .இவர் இடதுசாரி முகாமைச் சார்ந்தவர் எனச் சொல்வதுதான் அதிர்ச்சி . இது உண்மையைப் பிரதிபலிக்கும் ஆவணப்படமா என்பதுதான் கேள்வி . விடை . ஒவ்வொருவரிடமும் மாறுபடும் .

 

இன்னொரு ஆவணப்படம் சார்ந்து எழுதப்பட்ட கட்டுரை ’பாலஸ்தீனத்தின் நெல்சன் மண்டேலா’   சோபியா ஸ்காட் மற்றும் ஜார்ஜியா ஸ்காட் இயக்கிய ‘டுமாரோஸ் ஃபிரீடம்’ எனும் ஆவணப்படத்தை முன்வைத்து பாலஸ்தீனப் போராளி ’மர்வான் பர்குதி’யின் வாழ்க்கையையும் பாலஸ்தீனப் போராட்டத்தின் ஓர் முக்கிய கண்ணியையும் நமக்கு அறிமுகம் செய்கிறது இக்கட்டுரை .

 

“ அதிகாரத்திற்கு எதிராக உண்மையைப் பேசிய புகைப்படக் கலைஞன்’ டேனிஷ் சித்திக் ஆப்கானிஸ்தான் போரின் போது தாலிபான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார் .உலகமே கண்ணீர் விட்டது . ஆனால் அந்த மாபெரும் இந்திய புகைப்படக் கலைஞனுக்காய் மோடி இரங்கல்கூட தெரிவிக்கவில்லை . இது போதாதா அவர் யார் என்று சொல்ல ? அவரின் புகைப்படக் கருவி எப்போதும் அதிகாரத்திற்கு எதிராகவும் ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவாகவுமே படம் பிடித்தது .அவரது புகைப்படங்கள் உண்மையை உரக்கச் சொல்லின . ஊடகங்கள்  மீது ‘இன்னும் நம்பிக்கை இருக்கிறது’ எனச் சொல்ல இத்தகையவர்கள் சாட்சியாகிறார்கள் . ஊடகத்துறையில் செயல்படும் சமூக அக்கறை மிக்க ஊடகக்காரர்களுக்கு இவர் ஓர் முன்னுதாரணம் . வாசியுங்கள் நண்பர்களே !

 

எண்டிடிவி என்கிற தனியார் கார்ப்பரேட் ஊடகம் எப்படி அம்பானியால் விழுங்கப்பட்டது என்பதைச் சொல்லும் கட்டுரை ; ” ஊடக உலகில் பெருமுதலாளிகளின் ஊடுருவல்’.  ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படுகிற ஊடகங்கள் ஆட்சி அதிகாரத்தால் எப்படி எல்லாம் சிதைக்கப்படுகிறது ஆட்டுவிக்கப்படுகிறது என்பதன் சாட்சி .

 

இந்நூலை எழுதிய அருண்கண்ணனுக்கு வாழ்த்துகள் !

 

ஊடகம்  சினிமா தொடர்பான நம் பார்வையையைக் கூர்மைப் படுத்த இதுபோன்ற நூல்களை வாசிப்பது களப்பணியாளர்கள் கடமையாகும் . ஊடகங்கள் குறித்தும் ’பொய் பொதிந்த கருத்தித் திணிப்பு’ முயற்சிகள் குறித்தும் எத்தனை நூல்கள் வந்தாலும் சொல்லித் தீராத உண்மைகள் நிறைய இருக்கும் .

 

விலக மறுக்கும் உண்மைகள்  : சினிமா ,ஊடகம் தொடர்பான கட்டுரைகள் ,அ.ப.அருண்கண்ணன்,  பாரதி புத்தகாலயம் ,  www.thamizhbooks.com    / 8778073949  ,

பக்கங்கள் : 72 , விலை  :ரூ. 70 /  

 

சுபொஅ.

05/09/25.

 

 

 

 

 

 


நம்மை சுற்றி சுற்றி………………….

Posted by அகத்தீ Labels:

 


நம்மை சுற்றி சுற்றி………………….

 

குறுக்குசால் ஓட்டுவது” என்றொரு சொற்றொடர் உண்டு . அதாவது நீ ஒன்றை பேசும் போது திசை மாற்றி வேறொன்றாக திரிப்பது . பொதுவாக இதனை எதிரிகள்தான் செய்வார் . ஆனால் சில நேரம் நண்பர்கள் இப்படிச் செய்யும் போது மிகவும் வருத்தம் மேலிடும் .ஏனெனில் நாமும் அதே தொணியில் பதில் சொல்ல முடியாது அல்லவா ? அப்படி ஒரு சங்கடம் அண்மையில் நேர்ந்தது .

 

பொதுவாக தோழர்  சுபவி யோ அவரது குழுவினரோ பேசுவதை பலநேரங்களில் பகிர்ந்து இருக்கிறோம் . பாசிச எதிர்ப்பு போரில் ஆயுதமாக்கி இருக்கிறோம் . தற்போது சிபிஎம் செயலாளர் ப.சண்முகம் ஆணவக்கொலைக்கு எதிராக பேசும் போது , காதல் திருமணம் சாதிமறுப்பு செய்வோரை ஆணவக்கொலை செய்யும் சூழலில் அப்படி செய்வோர் எங்கள் அலுவலகத்தைப் பயன்படுத்தலாம் என்று சொன்னார் . அவர் பேசுகிறபோது அதற்கு இப்போது ஏற்பாடு இல்லை என்று சொன்னது ஆணவக் கொலைக்கு எதிரான சட்டத்தைத்தான் . அவர் எங்கேயும் ‘ சுயமரியாதைத் திருமணம்’ என்று சொல்லவே இல்லை .அப்படி இருக்க தமிழகத்தில் சுயமரியாதைத் திருமணச் சட்டம் இருப்பது சண்முகத்துக்கு தெரியாதா என நீட்டி முழக்கி ஒரு சகோதரி வீடியோ வெளியிட்டுள்ளார் . சொல்லாத ஒன்றை சொன்னதாகச் சொல்லி பதில் சொல்வது முறையல்ல . சகோதரியின் மாமா கம்யூனிஸ்ட் என்றும் அவர் காதல் திருமணத்திற்கு எதிராக இருந்தாரென்று பதிவிட்டிருக்கிறார் . உண்மையாக இருக்கலாம் . சிபிஎம் கட்சியில் இப்படிபட்ட சம்பவங்கள் எங்கேனும் நிகழ்ந்தால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள் . நானும் என் அண்மைப் பதிவொன்றில் இதனைச் சுட்டியுள்ளேன் . திமுக ,தி.க கட்சிகளும் இப்படி சில தர்ம சங்கடங்களை சந்தித்திருக்கும் . நம் சமூக அமைப்பில் சாதி உணர்வை ஒழிப்பதென்பது இடைவிடா தொடர் போராட்டமே ! அதை சகோதரியும் ஒப்புக் கொள்கிறார் .ஆயினும் சண்முகத்தையும் சிபிஎம் யும் தனிமைப்படுத்தி தாக்க முயல்வது தோழமைக்கு அழகா ? நட்போடுதான் இப்போதும்  கேட்கிறோம்.

 

இப்போது நீயா நானாவின் நாய் விவாதம் பேசுபொருளாகி இருக்கிறது . அது ஒரு ரிக்கார்டட் அண்ட் எடிட் ஷோ தான் . நெடுங்காலமாகவே இப்படித்தான் நடந்து வருகிறது . மொழிப் பிரச்சனை குறித்த ஓர் விவாதத்தை வெளியே வரவிடாமலே சங்கிகள் தடுத்தனர் என்பது அண்மைச் செய்தி .மறக்க முடியுமா?  நீயா நானா தலைப்பும் விவாதமும் எப்போதும் பட்டிமன்ற பாணி  ஒரு வெகுஜன ஊடகத்தின் சமரச வழியே ! அதில் கொஞ்சம் முற்போக்கு சாய்மானம் சில வேளை தென்படலாம் . அதற்கு மேல் செல்ல முடியாது ஏனெனில் அந்த நிகழ்ச்சி விளம்பரதாரரை சார்ந்து வாழ்வதே . நாய் விவாதத்திலும் அதுவே . அரசின் அலட்சியப் போக்கு தொண்டு நிறுவன ஊழல் போன்ற பலவற்றை விட்டுவிட்டு பாதிக்கப்பட்டோர் மீது அனுதாபத்தோடு மட்டுமே அணுகியது . வெறிநாய் ரேபிஸ் நாய்க்கு எதிரான கோபமாக குவிமையமாக்காமல் பொதுவான நாய் எதிர்ப்போர் ஆதரிப்போர் என மாற்றியது இதெல்லாம் கார்ப்பரேட் மீடியா ஸ்டைலே . ஆனால் நாய்கடியால் பாதிக்கப்பட்டோரின் கோபம் ஆக்ரோஷமாக வெளிப்பட்டுவிட்டது நல்ல அம்சம். இப்போது விலங்கபிமானிகளான தொண்டு நிறுவனப் புள்ளிகள் தங்கள் பேச்சு எடிட் செய்யப்பட்டுவிட்டது முழுவீடியோ போடுக என கூக்குரல் போடுவதும் , நீதிமன்றம் போவதும் அவர்களின் தோல்வியைப் பறை சாற்றுகிறது . அந்த ஷோ ’எப்போதுமே எடிட்டட் ஷோதான்’ என தெரியாமலா வந்தார்கள் ? அவ்வளவு அப்பிராணிகளா அவர்கள் ? நம்பமுடியவில்லை … நம்பமுடிய வில்லை…

 

யூ டியூப்பர்களின் ,டிவிக்களின் அரசியல் பரபரப்பு பேச்சுகளின் தரம் கவலை அளிக்கிறது .ஒற்றைவரி , ஒற்றைச் சொல் , அங்கும் இங்கும் வெட்டி ஒட்டிய துண்டுப் படங்கள் இவைதான் நம்மை பரபரப்பாக அரசியல் சமுதாய பிரச்சனைகளை பேசவைக்கும் எனில் சமூகத்தின் மீதான் அக்கறை அல்ல அது ; முழுக்க முழுக்க நாம் எதை பார்க்க வேண்டும் எதைப் பேச வேண்டும் எப்படி சிந்திக்க வேண்டும் என நமக்கு கடிவாளம் போடும் கார்ப்பரேட் யுக ஆளும் வர்க்க கருத்துத் திணிப்பு நாடகமே ! எங்கும் இப்போது நடப்பது அதுவே !

 

ஆக , உண்மையை ஊடகங்களில் தேடுவது தரையில் மணலில் விழுந்த ஊசியைத் தேடுவதே !

 

சுபொஅ.

03/08/25.

 


தண்ணீர்… தண்ணீர் …

Posted by அகத்தீ Labels:

 


தண்ணீர்… தண்ணீர் …

 

”காலை எட்டு மணி சுகர் லெவல் குறையும் நேரம்  பல் தேய்க்காமல்” டீ பிஸ்கெட் சாப்பிட்டாச்சு …

அப்படியே ஒரு மணி நேரம் கழித்து டிபன்  ஹோட்டலில் ஆர்டர் பண்ணி வரவழைத்து சாப்பிட்டாசு ..

காலைக்கடன் முடிக்காமல் பாட்டில் குடிநீரில் முகம் கழுவி புறப்பட்டாச்சு ..”

இப்படி ஒரு செய்தியை பதிவிட்டாலே ‘ என்னாச்சு இவருக்கு ?’ என கேள்வி எழும் .

 

எங்கள் அடுக்ககத்தில் சனிக்கிழமை காலை எல்லோரும் சந்தித்த பிரச்சனையை என் பாணியில் சொன்னேன் அவ்வளவுதான்.

 

எங்கள் அடுக்ககத்தில் முதல் நாள் வெள்ளிக்கிழமை இரவே தண்ணீர் பிரச்சனை … காலைக்குள் சரியாகிவிடும் என்கிற நம்பிக்கை… காலையில் கடும் நெருக்கடி சொட்டுத்தண்ணி இல்லை .. நான்கு கேன் தண்ணீர் விலைக்கு வாங்கித்தான் சனிக்கிழமை பொழுது ஓடியது … தண்ணீர் வாங்காவிடில் மேலே விவரித்த நிலைதான  ஏற்பட்டிருக்கும்.

 

அந்த அடுக்ககத்தில் வீடு வாங்கும் போது 2017 ல் பின்னால் ஏரி , சுற்றி சோளவயல் காற்றும் நீரும் சுற்றுச்சூழலும் ஈர்த்தன . பொதுவாய் பெங்களூரில் பல இடங்களில் அப்போதே தண்ணீர் பஞ்சம் . பின்னால் உள்ள ஏரி பெங்களூரின் மிகப் பழமையான ஏரிகளில் ஒன்று . இங்கு தண்ணீருக்கு தட்டுப்பாடு இருக்காது என நம்பினோம்.

 

இங்கு வந்த பிறகு ஒரு நாள் ஏரியிலிருந்து துர்நாற்றம் … மெல்ல விசாரித்த போது அருகிலுள்ள ஒரு மருந்து தொழிற்சாலை தன் ரசாயணக் கழிவுகளை ஏரிக்கு திருப்பிவிட்டுவிட்டது . அதன் பின் அது தொடர்கதை ஆனது .அதிகார வர்க்கம் வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு குறட்டை விட்டது . விளைவு ஏரிக்கரை ஓரம் செழிதோங்கி நின்ற மரங்கள் பட்டுப் போயின ; கருப்பு நிறமானது .பசுமை தொலைந்தது .மீன்கள் செத்து மடிந்தன . குப்பைக் கழிவுகளின் தேக்கமாக ஏரி சிதிலமடைந்தது.

 

 

ஏரியைத் தூய்மைப்படுத்த கோரிக்கை எழுந்தது .தன்னார்வ அமைப்புகள் வழக்கு தொடுத்தன .அவர்கள் வழியில் போராடின . அவர்களின் கையெழுத்து இயக்கங்களில் நான் கொஞ்சம் பங்கேற்றேன் . ஒருவழியாக நீதிமன்றம் தலையிட , அரசு மற்றும்  தனியார் கூட்டுறவுடன்  ஏரியை மீட்டு புனரமைத்து  படகுத்துறையுடன் பூங்காவாக மாற்றுவதாக அறிவித்தது .

 

அந்தப் பகுதி சோளவயல்கள் காணாமல் போயின , சுற்றி அடுக்குமாடி வீடுகள் முளைத்தன . எங்கள் அடுக்ககத்தில் 450 அடி யில் நான்கு ஆழ்துளைக் கிணறு உண்டு .இப்போது சுற்றி சுற்றி 800 அடி / ஆயிரம் அடி பலர் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டிவிட்டனர்

 .  ஆழ்துளாய் கிணறுகளை இருபதடிக்கு ஒன்று போட்டால் பூமி தாங்குமா ? இதனைக் கட்டுப்படுத்த சட்ட வழிகாட்டல் உண்டா ? கண்காணிப்பு உண்டா ? டேங்கரில் தண்ணீர் விற்கும் கம்பெனிகள் நான்கு வந்தன 1500 அடி ஆழ்குழாய் போட்டு உறிஞ்சினர் . கட்டுப்படுத்துவது யார் ? எங்கள் அடுக்கக தண்ணீர் மட்டம் குறைய ஆரம்பித்தது .

 

ஏரி மீட்பு பணி துவங்கி விட்டது .மகிழ்ச்சி . ரசாயண கழிவு கலந்த நீர் வடிக்கப்பட்டுவிட்டது … பணிகள் துவங்கி விட்டன . ஏரி இப்போது மைதானமாக காட்சி அளிக்கிறது .. பணி முடிய ஓராண்டாகும் என்கின்றனர் ..மேலும் நீளலாம்…ஏரியை மீட்டால் போதும்….

 

ஏரி தண்ணீர் வற்றியதும் எங்கள் அடுக்கக குழாய் கண்ணீர் சிந்தத் துவங்கிவிட்டன . சுமார் நூறு குடித்தனங்களுக்கு டேங்கரில் தண்ணீர் எனில் என்ன ஆகும் ?  இன்னும் நூறு வீடுகள் காலியாக உள்ளன .அவற்றிலும் குடிவந்தால் என்ன ஆகும் ?நீர் நிபுணர்கள் ஆலோசனை ஆய்வு என தொடங்கி உள்ளனர் .. தற்காலிகமாக டேங்கரே கதி . மெயிண்டனன்ஸ் சார்ஜ் அதிகரிக்கலாம் . இது வளர்ச்சியின் சவால்தான் . ஆனால் எச்சரிக்கை .

 

நாங்கள் இங்கு வந்ததுதான் 2017 ஆனால் 2010 லேயே இங்கு பணி துவங்கி விட்டது . ஆழ்துளை கிணறுகள் கட்டுமானம் தொடங்கி இன்றுவரை தண்ணீர் தந்துள்ளன. இப்போது அவை சோர்ந்துவிட்டதோ !

 

இது ஓர் அடுக்ககப் பிரச்சனை மட்டுமல்ல ; போதிய திட்டமிடல் இன்றி வீங்கிப் பெருக்கும் புறநகர்கள் எல்லாம் சந்திக்கும் சவால் . வெள்ளமும் வறட்சியும் இயற்கையானவை .அதில் திட்டமிடலின்றி சிக்கிக் கொள்ளும் வீக்கம் வளர்ச்சியா ? அரசுகள் யோசித்து முறைப்படுத்த வேண்டாமா ?

 

பெங்களூர் இப்போதே போக்குவரத்து நெரிசல் மேலும் பலபகுதிகளின் தண்ணீர் தட்டுப்பாடு டேங்கர் லாரியே கதி  மழை வந்தால் திணறல் … வருங்காலம் மிகவும் சவாலாக இருக்கும் என எச்சரிக்கின்றனர் வல்லுநர்கள் . என்ன செய்யப் போகிறார்கள் ஆட்சியாளர்கள் ?

 

சுபொஅ.

02/08/25.


நியாயமா ? நாயமா?

Posted by அகத்தீ Labels:

 


நியாயமா ? நாயமா?
[ தலைப்பு தோழர் விஜய்சங்கரிடமிருந்து சுட்டது ]

தெருநாய்கள் குறித்து “நீயா நானா”வில் சூடான விவாதம் நடைபெற்றது. விலங்கபிமானிகளின் மனிதாபிமானம் ,கருணை ,அன்பு எல்லாம் எப்படிப்பட்டவை என பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது . நீங்கள் கட்டாயம் பாருங்கள் !

அந்த விவாதத்தில் வந்த இன்னொரு முக்கிய விவகாரம் என்ன தெரியுமா ? நாய்களை தத்து எடுத்து அதற்கு கருத்தடை செய்ய , தடுப்பூசி போட என இந்த ஜீவகாருண்ய என் ஜி ஓக்கள் அரசிடமும் சில நிறுவனங்களிடமும் சில ஆயிரம் கோடிகள் மானியமாகப் பெறுகின்றனர் . ஆனால் அவர்கள் அப்படி நிதி பெற்று செய்ததாக கணக்குக் காட்டுவதற்கும் உண்மைக்கும் இடையே மிகப்பெரிய இடை வெளி உண்டு . ஆக இங்கு பெருமளவு நிதிசுருட்டல் நடக்கிறது . ஆக பணபாசம்தான் நாய்பாசமாகிறது . இதை விவாதத்தில் சிலர் சுட்டிய போதும் என் ஜி ஒ நபர்கள் கண்டு கொள்ளாமல் கடந்து சென்றனர் . அது விவாதத்தின் மையமாகிவிடக்கூடாது என கவனமாகத் தவிர்த்தனர் .இதை ஊடகங்கள் பேசுவதே இல்லையே . ஊழலைப் பற்றி அன்னா ஹாசாரே மாதிரி செலக்டிவாக பேசும் புனிதப் போலிகளல்லவா இவர்கள் ! சரி ! நாய்க்கு வருவோம் !

பெங்களூரி அஜ்மிரா போன்ற அபார்ட்மெண்டுகளில் நாய் வளர்ப்போர் நாயை வெளியே [ காம்பவுண்டுக்கு உள்ளே ] அழைத்துவரும் போது நாய் பீயை அளாவும் பாதுகாப்பாய் குப்பை தொட்டியில் போடவும் கடமைப்பட்டவர்கள் . மீறினால் அபராதம் உண்டு .

பல அபார்ட்மெண்டுகளில் நாய் பூனை வளர்க்க அனுமதியில்லை .

நான் அமெரிக்கா போயிருந்தேன் .அங்கே தெருநாய்களே இல்லை .ஆனால் காலையிலும் மாலையிலும் நாயை பிடித்துக் கொண்டு நடை பயிற்சி செல்வோர்தான் மிகமிக அதிகம். இன்னும் சொல்லப்போனால் பலர் கையில் இரண்டு நாய்கள் கூட இருக்கும் . நாய்கள் மீது மோதாமல் நடை பயிற்சி செல்வது ஒரு சர்க்கஸ் . மதியம்கூட நாய் நடை இருக்கும் .அதற்கு நேரம் காலம் கிடையாது .நள்ளிரவில் எட்டிப் பார்த்தாலும் நாலுபேர் நாயோடு திரிவார்கள் !

நாய் வளர்ப்பவர்களே நாய் கழிவுகளை அப்புறப்படுத்தி அதற்குரிய தொட்டியில் பாதுகாப்பாக பொதிந்து போடவேண்டும் .சாலையில் நாய் கழிவைவிட்டுச் செல்ல முடியாது . மீறினால் அபராதம் உண்டு .

வயதானவர் வீட்டு நாய்களை காலை மாலை வெளியே அழைத்துச் செல்ல டாக்மென் உண்டு . அது அங்கு ஒரு பிழைப்பாக சிலருக்கு உள்ளது .

நாய் யாரையாவது கடித்தால் நாய் வளர்ப்போரே மருத்துவச் செலவை ஏற்க வேண்டும் . அபராதம் தண்டனை எல்லாம் உண்டு .

வழிநெடுக விலங்கு மருத்துவ மனைகள் உண்டு . வெளிஊர் செல்வோர் சில நாட்கள் பாதுகாப்பாக விட்டுச் செல்ல நாய் காப்பகங்கள் உண்டு . நாய்களுக்கு பியூட்டி பார்லரெல்லாம் உண்டு .சூப்பர் மால்களில் நாய் உணவுகள் ,உடைகள் ,இதர நாய் அயிட்டங்களுக்கு பெரிய செக்ஷன் தனியாக இருக்கிறது .

அங்கு நாயை நாய் என்று சொன்னால் கோவித்துக் கொள்வார்கள் . ஹி ,ஷி , என்று தான் சொல்ல வேண்டும் .

அமெரிக்காவில் நாயாகப் பிறக்க வேண்டும் என்பார்கள் .அந்த அளவு அது செல்லப் பிராணி .

மீண்டும் சொல்கிறேன் அங்கு தெருநாய்கள் ஒன்றைக்கூட பார்க்கவே முடியாது .

இங்கு தெருநாய்கள் பிரச்சனைதான் சவாலனது . அதிலும் ராபிஸ் நாய் பிரச்சனை மிகவும் ஆபத்தானது . இதனை சும்மா மேம்போக்கப் பார்க்க முடியாது .

இங்கே வீட்டில் வளர்ப்போரின் செல்லநாய்கூட தெருவைத்தான் அசுத்தப்படுத்தும் ; அதைக்கூட இந்த விலங்கபிமானிகள் அள்ளி அப்புறப்படுத்த மாட்டார்கள் ! அவ்வளவுதான் அவர்களின் சமூக அக்கறை .

தெருக்கள் எங்கள் குழந்தைகள் ,முதியோர் , மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பாக நடக்கத்தான் ; வெறிநாய்களின் வேட்டைத்திடல் அல்ல .

12/08/25 அன்று நான் பதிவிட்ட கவிதையை காலப் பொருத்தம் கருதி மீண்டும் …

நரகமா சொர்க்கமா ?



வெறிநாய்களைக் கொல்லாதீர்கள் !
ஜீவகாருண்யம் பேணுங்கள் !
தெருவெல்லாம் வெறிநாய்கள்
பைரவனின் ஆசிர்வாதங்கள்
பச்சைக் குழந்தைக்குத்தான்
பகவானின் ஆசிர்வாதமில்லை
நாய்கடியில் சாதிமத பேதமில்லை
நாள்பார்த்து கோள்பார்த்து நாய்கடிப்பதில்லை
சொல்லுங்கள் ஜீவகருண்யரே !
நாய்கடித்து ரேபிஸில் செத்தால்
போவது சொர்க்கம்மா நரகமா ?

சுபொஅ.
01/09/25.

சுற்றிலும் பேரிரைச்சல்

Posted by அகத்தீ Labels:

 


சுற்றிலும் பேரிரைச்சல்

அமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்தார்

அருகே படுத்திருந்தவர்

‘ஹச்’ என பெரும் தும்மல் போட்டார்

“ தூக்கத்தைக் கெடுக்காமல் தள்ளிப்போய் தும்மு ‘

என்றவாறு தூக்கத்தை தொடர்ந்தார்

சுற்றிலும் பேரிரைச்சலோடு !

 

சுபொஅ.