சங்க இலக்கியத்தின் வழி தமிழர் பண்பாட்டு வேரைக் கொண்டாடி...

Posted by அகத்தீ Labels:

சங்க இலக்கியத்தின் வழி

தமிழர் பண்பாட்டு வேரைக்கொண்டாடி…..

 

 


 

 சங்கச் சுரங்கம் – முதலாம் பத்து – கடவுள் ஆயினும் ஆக “ எனும் நூலை வாசிக்கத் துவங்கிய நொடியிலிருந்து ஏற்பட்ட வியப்பும் மகிழ்ச்சியும் அளவில்லை .ஆர் .பாலகிருஷ்ணனின் ஆழ்ந்த தேடலும் புலமையும் இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் புன்னகைக்கிறது .

 

எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் அலுவலகத்தில் ஓர் மாலையில் சமுத்திரம் ,சிகரம் செந்தில்நாதன் ,தயானந்தன் பிரான்ஸிஸ் , நான் ,ஆர் .பாலகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்த முதல் நாள் நினைவுக்கு வருகிறது ; அப்போது சிந்துவெளி நாகரிகத்தில் திராவிட வேர் குறித்து ஊர் பெயர்களூடே அவர் விவரித்த காட்சி மனத்திரையில் ஆழப்பதிந்துள்ளது .

 

இந்நூல் வழக்கமான சங்க இலக்கிய விவரிப்போ , நயந்துரையோ அல்ல அதற்கும் மேல் மானுட பண்பாட்டில் தமிழரின் உயரிய பங்களிப்பை இன்றைய காலத் தேவையூடே நுணுகி அலசி காட்சிப் படுத்தியுள்ள களஞ்சியம். பத்து தொடர் உரையின் தொகுப்பு இந்நூல் .

 

 “…… …… …… ….. …. ….. …. …. …. ….. …..

….. ……. …… …… ……. ….. ….. ….. ….. ….. ….

பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை

ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே

மாரி பொய்ப்பினும் ,வாரி குன்றினும்

இயற்கை அல்லன் செயற்கையில் தோன்றினும்

காவலர்  பழிக்கும்இக் கண்கள் ஞாலம்

அதுநற்கு அறிந்தனை யாயின் ,நீயும்

நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது

பகடுபறம் தருநர் பாரம் ஓம்பிக்

குடிபுறம் தருகுவை யாயின்நின்

அடிபுறம் தாங்குவர் அடங்காதோரே”

 

இந்தப் பாடலை முதல் உரையில் சுரங்கத்திலிருந்து அரங்கத்திற்கு கொண்டு வரும் போது நூலாசிரியர் சொல்கிறார் , “ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சாதாரணப் புலவர் மன்னனைப் பார்த்து ஓர் அறிவுரை சொல்லியிருக்கிறார் . அதனை ஆவணப்படுத்தியுள்ளனர் .இப்போதைய சூழலுக்கு கற்பனை செய்து பாருங்கள் .ஓர் இலக்கியவாதியோ அல்லது ஊடகவியலாளரோ இடித்துச் சொல்வதற்கான வாய்ப்பு உள்ளதா ?”

 

முழுப்பாடலையும் சுட்டிவிட்டு பொருளைச் சொல்லுகிறார் ,” …. …இவ்வாறு நீ வெற்றி பெறுவதற்கு நீ கொண்டு செல்லும் படை மட்டும் காரணமல்ல , உன் நாட்டில் உழுகின்ற விவசாயிகளின் நெல்லினால் விளைந்த பயனும்தான் காரணம் . விவசாயிகளின் கலப்பை பயிரை மட்டுமல்ல ,உனது வெற்றியையும் கொடுக்கிறது . இவ்வாண்டில் மழை வரவில்லை என்றாலும் வளம் குன்றினாலும் இயற்கை பிரச்சனைகள் அல்லாது செயற்கைப் பிரச்சனைகள் வந்தாலும் மக்கள் காவலரைத்தான் குறை சொல்லுவார்கள் . அதாவது மன்னன் மீதுதான் பழிபோடுவார்கள் . அதனால் நீ விவசாயிகள்தான் உனது அரசு ,நாடு என்ற அடிப்படையைப் புரிந்துகொண்டு அவர்களைக் காத்து ,அவர்களுக்கு ஆதரவாய் இருந்தாலே போதும் மற்றவை எல்லாம் இதில் அடங்கிவிடும் .”

 

முதல் உரையில் இடம் பெறும் இந்த சித்தரிப்பே நூலின் செல்திசையை நமக்கு சுட்டிவிடுகிறது . ஒவ்வொரு உரைக்கும் எடுத்தாண்டுள்ள தலைப்பை கூர்ந்து நோக்கினாலே நூலின் ஆழமும் அகலமும் விளங்கும் .

 

1.சங்கச் சுரங்கம் அறிமுகவுரை , 2.பசிப்பிணி மருத்துவன் , 3. பிறர்கென முயலுநர் , 4.பருத்திப் பெண்டிர் ,  5.கடவுள் ஆயினும் ஆக , 6.கல்லா இளைஞர் , 7.முதுவோர்க்கு முகிழ்த்த கை ,8.இமிழ் பனிக்கடல் ,9.சேண் நடும் புரிசை ,10 .இடுக ஒன்றோ ! சுடுக ஒன்றோ ! என்கிற பத்து உரையும் நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்த விவசாயம் , பொதுநலம் , நெசவு , உழைக்கும் பெண்கள் , தோளில் கை போடும் நம் சாமி ,கல்வி ,கல்வி அறிவின்மை , முதியோர் குறித்த பார்வை , சுற்றுச் சூழல் , செங்கல் ,வீடு , மரணம் என நிறையப் பேசுகின்றன .

 

ஒவ்வொன்றையும் படித்து முடித்த பின் தமிழ் சமூகம் குறித்த பெருமிதத்தோடு ஒவ்வொருவரும் தாம் தமிழனாகப் பிறந்த பேறை எண்ணி இறும்பூதெய்தாமல் இருக்க முடியுமா ?

 

ஒவ்வோர் உரை குறித்தும் தனித்தனியே நிறைய எழுதலாம் . நூலறிமுகத்தின் எல்லை கருதி பத்து உரை குறித்து பத்து செய்திகளும்  கேள்விகளுமாய் மட்டுமே எழுதப் போகிறேன்

 

1] “மண்ணில் விளைந்து வாய்வழி வளர்ந்த மரபுகளின் ஆவணம்,” சங்க இலக்கியம் எனக்கூறும் நூலாசிரியர் ; சங்க இலக்கியத்தில்  “மீள் நினைவுகள் இருக்கின்றன,” என்கிறார் . மிகச் சரிதான் . நீண்ட இலக்கிய பரப்பினூடே நம் பண்பாட்டு அரசியலை நிறுவும் நுட்பமான முயற்சி பாராட்டுக் குரியது,தோராயமான கால எல்லையும் ,மருதத்தில் அரசுருவாக்கம் நிகழ்ந்த படிநிலையும் சேர்க்கப்பட்டிருக்கலாமோ ?

 

2] பசிப்பிணி குறித்த தமிழ்ச் சமூகத்தின் அழுத்தமான பார்வையும் கனவும் எண்ணும் தோறும் ஆச்சரியம் கூடுகிறது . அதனை வலுவாகவே உரையில் நூலாசிரியர் பதிவும் செய்திருக்கிறார் .  ‘இரந்தும் உயிர் வாழும்’ சூழலும் இருந்திருக்கிறது ,  ‘கைமாறு கருதா ஈதல்’ குணமும் இருந்திருக்கிறது என இருபுறத்தையும் காட்சிப் படுத்திய  நூலாசிரியர் மத்திய அரசின் தானியக் கிடங்கின் பூட்டை உடைத்து அழிபசி போக்க தான் தன் அதிகாரத்தை பயன்படுத்தியது சங்க இலக்கியம் தந்த ஊக்கம் என்கிறார் . இப்பகுதியில் மணிமேகலையின் அட்சயபாத்திரம் குறித்து வலுவாகச் சொல்லியிருக்கலாமோ ? பாரதி வரை பயணிக்கும்போது மணிமேகலையும் பேசலாம்தானே ? தமிழ் மண்ணிலும் கற்பனா சோஷலிச வேர் இருந்ததை போகிற போக்கில் சொல்லி இருக்கலாமோ ?  [ 49 ம் பக்கம் பாரதியார் பாடல் வரியை வள்ளலார் வரியாகச் சுட்டிய பிழையை அடுத்த பதிப்பில் நேர் செய்க ]

 

3] அமிழ்தமே கிடைப்பினும் பகுத்துண்ணும் பண்பாட்டு பெருமை உரக்கப் பேசப்பட வேண்டிய செய்தியே . “ தமக்கென முயலா நோன்தாள் பிறர்கென முயலுநர் உண்மையானே,” என்கிற மானுடம் போற்றும் வாழ்நெறிக்கு ஈடில்லை . இது நமக்கு வழித்துணை என நூலாசிரியர் முடிவுக்கு வருவது முற்றிலும் நியாயந்தான்.

 

4] நெசவு , துணி வணிகம் ,உழைக்கும் பெண்கள் என விரிந்த பரப்பில் ஆற்றிய குறுகிய உரையாயினும் ஆழந்த ஆய்வுக்கு களம் காட்டும் முன்னெடுப்பாகும் . யாரேனும் செய்திருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது ; தொடர்ந்து செய்வதும் தேவையே .

 

5]  “ பெருங்கோயில்களில் இத்தகைய சாமி ஆடுதல் நிகழ்வு ஏன் நடைபெறுவதில்லை என்ற கேள்வியினைக் கேட்டால் , அதற்கு பதில் ,ஏனெனில் பெருங்கோயில்களில் உள்ள சாமியை உங்களுக்குத் தெரியாது ;உங்களைச் சாமிக்கும் தெரியாது .அதன் ஸ்தல புராணங்களில் யார்யாரோ இருக்கிறார்கள். அதில் சாதாரண மக்கள் இல்லை.” எனக் கூறும் நூலாசிரியர் , “ நாட்டார் தெய்வங்களை மக்கள் தங்களில் ஒருவரைப்போல் விளித்து கேள்வி கேட்கும் நடை முறைக் காணப்படுகிறது .” என்கிறார் .முருகன் வழிபாடு வெறியாட்டு குறித்து வலுவாகச் சொல்கிறார் . பரிபாடல் காலத்தில்தான் சுப்பிரமணியனும் தெய்வயானையும் முருகனோடு வலிந்து திணிக்கப்பட்டு நம் மூத்தகுடி வள்ளிக் குறத்தி சக்காளத்தி ஆக்கப்படும் கொடுமை நடக்கிறது .இந்த சமஸ்கிருதமயமாக்கல் அல்லது பார்ப்பணிய மயமாக்கல் குறித்து உரையில் சொல்லப்படிருப்பினும் நா.வானமாமலை சுட்டிக் காட்டியதுபோல் இன்னும் கூர்மையாகச் சொல்லப்பட்டிருக்கலாமோ ? குறிஞ்சி நிலம் போல் ஐவகை நிலத்திலும் நம் மண்ணோடும் மனதோடும் நிறைந்த சாமிகள் வேறு ; அதுபோல் நம் தாய் தெய்வங்கள் வேறு .இது குறித்து தனிநூலே ஆசிரியர் எழுதலாமே ? செய்வீர்களா ?

 

6]  “தொல்தமிழர் கல்விக் கொள்கை : அரசன் வெளியிட்ட அறிக்கை” என புறநானூற்றின் 183 வது பாடலை , “ உற்றுழி உதவியும்…. அவன் கண் படுமே,” எனும் பாடல் வரியைச் சுட்டுகிறார் .கல்வி ,கல்லாமை பற்றி நிறைய செய்திகளை இவ்வுரையில் அடுக்குகிறார் . படித்தவனே போற்றப்படுவான் என வரைந்து காட்டுகிறார் . கீழடியில் கிடைத்த எழுத்து பொறித்த பானையை சுட்டி கல்வியில் ஓங்கிய பழந்தமிழர் என பெருமிதம் கொள்கிறார் .அதே நேரம் கல்லாமை இருந்ததையும் சொல்கிறார் .  இக்கட்டுரை தமிழரை சுயபெருமிதம் கொள்ளத் தூண்டும் .அது தப்பில்லை .ஆயின் , கல்வியிலிருந்து சமூகத்தின் பெரும் பகுதியினரை விலக்கி வைக்கும் அநீதி எப்படி அரங்கேறியது என்பதையும் இவ்வுரைப் பரப்புக்குள் கொண்டுவந்திருக்க வேண்டாமா ?

 

7] முதியோருக்கான கொள்கை அறிக்கை பற்றி இன்றைக்குப் பேசுகிறோம் . அன்றைக்கே முதியோரை வணங்கி துணைநின்ற முதுவோர்க்கு முகிழ்த்த கை இருந்ததையும் முதியோர் குறித்த  தமிழ் சமூகத்தின் நுண்ணிய பார்வையையும் விரிவாகச் சுட்டுகிறது .பயனில் மூப்பையும் சொல்லத் தவறவில்லை .இன்றைக்கு முதியோர் குறித்த பார்வையும் முதியோர் இல்லம் குறித்த ஒருங்கிணைந்த பார்வையும் தேவை அல்லவா ? விவாதிக்க களம் அமைக்கும் உரை .

 

8] “ கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமம்” என்கிற சொற்றொடரை வைத்து மீன் தூங்குமா என கேள்வி எழுப்பி , தூங்கும் என விடையும் தந்துள்ளார் நூலாசிரியர் .கடல் என்பது பெரிதும் நெய்தல் நிலத்தோடு தொடர்புடையதுதான் எனினும் பிற நில மக்களுக்கும் கடல் தொடர்புடையதாய் இருப்பதை , பரதவர் வாழ்வை , கடலும் சுற்றுச் சூழலும் ,கடலும் இயற்கைப் பேரிடரும் என கடலுக்குள் மூழ்கி பல செய்திகளை சங்க இலக்கியத் துணையோடு நூலாசிரியர் தருகிறார் . நெய்தல் நிலம் சார்ந்த ‘ இரங்கலும் இரங்கல் நிமித்தமும்,’ குறித்து பரக்கப் பேசுகிறது . புவிவெப்பமாதல் குறித்து பேசும் காலகட்டத்தில் இம்மீள் பார்வை மிகத் தேவையான ஒன்று .

 

9] “ சிந்துவெளிச் செங்கல் ,சங்க இலக்கியச் சுடுமண் ,கீழடியின் செங்கல் சுவர் என்ற தொடர் நிகழவினைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் இவ்வுரையினுடைய முக்கிய விசயமாகும் .” என நூலாசிரியர் சொல்வது மட்டுமல்ல அத்திக்கில் நம்மையும் நகர்த்தியுள்ளார் . நாம்   உரக்கப் பேச வேண்டிய விசயமல்லவா இது ? அதற்கு விசைதருகிறது இவ்வுரை .

 

10] “ …. பொருள் நிலையாமை ,யாக்கை நிலையாமை ,வாழ்க்கையினுடைய நிலையாமை இதெல்லாவற்றையும் பேசி அதனுடைய உள்ளீடாக இருக்கும் வாழ்க்கையினை வாழச் சொல்லி வற்புறுத்துவதுதான் சங்க இலக்கியத்தின் குறிக்கோள் “ இவ்வாறு மரணம் குறித்த சங்க இலக்கிய பார்வையை விவரிக்கிறார் நூலாசிரியர் . ‘செய்ப எல்லாம் செய்தனன்’ அதாவது ஒருவன் வாழ்க்கையில் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வதையே வாழ்க்கை எனக் கொண்டாடும் பண்பாட்டு சித்தாந்தம் தமிழருடையது .ஆம்.சாக்குருவி வேதாந்தம் அல்ல , அனுபவித்து வாழும் நெறியே தமிழர் பெருமை .

 

 “ அடிப்படையில் பாலா சார் எந்தத் தத்துவத்தையும் சார்ந்து பார்க்கிறவர் இல்லை .திறந்த மனதோடு எல்லாவற்றையும் பார்ப்பதுதான் அவருடைய தத்துவம் .பன்மியம் என்பதுதான் அவருடைய தத்துவமாக உள்ளது . அதுதான் சங்க தத்துவம்கூட .” என தமிழ்ச்செல்வனின் வரையறை சரியானதுதான் .

 

இந்நூல் கொரானா கடுங்காலத்தில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமும் ,களம் இலக்கிய அமைப்பும் இணைந்து நடத்திய இணையவழி பத்து தொடர் உரைகளின் தொகுப்பு .  “முதல் பத்து”  என்பது “ டாப் டென் “ என்கிற பொருளிலோ , இது முதல் பத்து உரை இன்னும் தொடரும் எனும் பொருளிலோ இருக்கலாம் .எதுவாயினும் வேறல்ல .சரியே !

 

சிந்துவெளி நாகரிகம் தொட்டு இந்தியா முழுவதும் பரவியிருந்த திராவிட பண்பாட்டின் கூறாக சங்க இலக்கியத்தை பார்ப்பதும் , தமிழர் பண்பாட்டை அதன் அரசியல் வெப்பத்தோடு இந்நூல் பேசுகிறது .இந்நூலை ஒரு முறைக்கு இருமுறை வாசித்து உள்வாங்குவது மிக அவசியம். இந்தியாவின் பன்மைத்துவத்தை மறுக்கும் பாசிசம் கவ்வும் வேளையில் இந்நூல் புதிய சாளரத்தைத் திறக்கிறது .

 

இந்த நூல் சுட்டும் நியாயமான பெருமிதத்தோடு ; தமிழ்ச் சமூகம் வர்ணமாக கூறு போடப்பட்டதையும் வர்க்கமாக பிளவுண்டு நிற்பதையும் இணைத்து புரிந்து பண்பாட்டை மேலும் முன்னெடுக்க இந்நூலும் ஆயுதமாகட்டும் !

 

சங்கச் சுரங்கம் – முதலாம் பத்து – கடவுள் ஆயினும் ஆக ,

நூலாசிரியர் : ஆர்.பாலகிருஷ்ணன் ,

பக்கங்கள் : 264 , விலை : ரூ.270/

வெளியீடு :பாரதி புத்தகாலயம் ,

நூல் பெற : 044 24332424 / 24332924 / 24356935

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

 

 

 

0 comments :

Post a Comment