ஓர் உண்மை நிகழ்வு ஓர் உளவியல் பார்வை ஓர் அபாய எச்சரிக்கை

Posted by அகத்தீ Labels:







ஓர் உண்மை நிகழ்வு
ஓர் உளவியல் பார்வை
ஓர் அபாய எச்சரிக்கை

எம் .ஜி. ஆர் மறைந்த போது சென்னை அண்ணா சாலையில் கடைகள் சூறையாடப்பட்டன . மறுநாள் நாளேடுகளில் அப்படங்கள் வெளியாயின . அந்த அண்ணா சாலையிலும் கூவம் ஓரமும் வாழும் அடித்தட்டு மக்களில் ஒரு சிறு பகுதியினர் கடைகளில் புகுந்து கொள்ளை அடித்துள்ளனர் . ஒருவன் ஒரு கையில் வலது கால் ஷூ இடது கையில் இன்னொரு வலது கால் ஷு , எந்தெந்த பொருள் தேவை ,சரி ,பொருத்தம்  என்கிற பாகுபாடெல்லாம் கிடையாது கையில் கிடைத்ததை கைநிறைய வாரி எடுத்தனர் . ஒவ்வொரு படமும் இதையே சொன்னது .

மறு நாள் எல்லோரும் வன்முறை ,கலவரம் , இன்னும் இது போல் மோசமான சித்தரிப்புகளை அள்ளி வீசினர் . ஒரே ஒரு உளவியல் அறிஞர் சொன்னார் . இது வன்முறையோ ,சூறையாடலோ அல்ல .ஆண்டுக் கணக்காய்  அதே இடத்தில் உண்டு ,உறங்கும் அவர்களுக்கு அங்கே ஷோ ரூமில் வைக்கப்பட்ட பொருளெல்லாம் வெறும் காட்சி பொருளாகவும் எட்டாக் கனியாகவுமே இருக்கும் . ஆனால் அவற்றை அனுபவிக்க வேண்டும் என்கிற ஆசை உள்மனதில் இருக்கும் . ஏற்ற தாழ்வான சமூக அமைப்பில் ஏழைகளால் வெறும் கனவு மட்டுமே காண முடியும் . அப்படிப்பட்ட சூழலில் உள்மனக் கொதிப்பு ஏதேனும் ஒரு சூழலில் இப்படி தாறுமாறுக்க வெடிக்கும் . ஆக இது புரையோடிப் போயிருக்கிற சமூக ஏற்ற தாழ்வின் – சமூக அநீதியின் கோப வெளிப்பாடு !

இப்போது நடையாய் நடக்கிற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நிலையும் இதேபோல் மிகவும் வஞ்சிக்கப்பட்ட நிலைதான் . முறைசாராத் தொழிலாளர் நிலையும் இதுதான் . ஒடுக்கப்பட்ட  - ஓரம் கட்டப்பட்ட - வாழ்வை இழந்து நிற்கிற ஒவ்வொருவர் நிலையும் இதுதான் .ஒன்றல்ல இரண்டல்ல நாற்பது அல்லது ஐம்பது கோடி மக்களின் நிலை இதுவே ! இவர்களில் உள்ளக் குமுறல்  ஒரு நாள் வெடித்துச் சிதறும் போது  நாடு என்ன ஆகும் ? கற்பனை செய்து பாருங்கள் .  “எனக்கு அரசியல் வேண்டாம்  தானுண்டு தன் வேலையுண்டு” என இருக்கும் நடுத்தர மனிதரையும் விட்டு வைக்கது . சூறையாடலும் ,கொள்ளையும் பெருமளவு அரங்கேறும் . எல்லாம் அடித்து நொறுக்கப்படும் . இந்த பேராபத்து நம் தலையின் மீது தொங்கும் கத்தியாய் இருக்கிறது.

ரஷ்யப் புரட்சியில் ஓர் காட்சி இங்கே நினைவுகூரத்தக்கது . லெனின் தலைமையிலான புரட்சிப் படை மாரிக்கால அரன்மனையை சுற்றி வளைத்தது . மக்கள் வெள்ளம் அரன்மனைக்குள் கட்டற்றுப் பாய்ந்தது .போனவர்கள் அரன்மனையின் ஒவ்வொரு பொருளாக சூறையாட ஆரம்பித்தனர் . அப்போது லெனின் தலையிட்டு , “ இனி இது நமது பொருள் .நமக்குச் சொந்தம் .இதனை யாரும் தனிப்பட்ட முறையில் சூறையாடக்கூடாது . நமது அரசு எல்லோருக்கும் உரியதை வழங்கும்.” என உறுதிகூற குண்டூசிகூட திருடப்படாமல் கூட்டம் விடை பெற்றது . புரட்சிகரமான கட்சியும் புரட்சிகரமான தலைமையும் புரட்சிகரமான அரசியல் விழிப்புணர்வும் இதைச் சாதித்தன . [ நேரில் கண்ட ரஷ்யப் புரட்சி ,உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் ஆகிய நூல்கள் வாசிக்கவும்.]

நாளை இந்தியாவில் எம் ஜி ஆர் சாவின் போது நடந்ததுபோல் நடக்க வேண்டுமா ? ரஷ்யப் புரட்சியின் போது நடந்தது போல் நடக்க வேண்டுமா ? விடை , எந்த அளவு மக்களுக்கு வர்க்க அரசியலை போதிக்கிறோம் என்பதைப் பொறுத்தே . வரலாறு தன் சுமையை இப்போது கம்யூனிஸ்டுகள் தோளில் ஏற்றி வைத்து விட்டது .

நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் ?

சு.பொ.அகத்தியலிங்கம்.

0 comments :

Post a Comment