#இதுவே தருணம்

Posted by அகத்தீ Labels:



#இதுவே தருணம்
ஒற்றையடிப் பாதையில்
காலில் செருப்புமின்றி
இருட்டை மிதித்து நடந்த நாட்களில்
அவர்களின் கனவு என்னவாக இருந்திருக்கும்?
செம்மண் சாலையில்
மாட்டு வண்டியினைப்
பின் தொடர்ந்து நடந்த நாட்களில்
அவர்களின் கனவு என்னவாக இருந்திருக்கும் ?
கிராமத்து தெருவில்
கார் ஒன்று நுழைந்த போது
ஊரே கூடி வேடிக்கை பார்த்த நாட்களில்
அவர்களின் கனவு என்னவாக இருந்திருக்கும் ?
ஒரு வழிச் சாலை
இருவழிச் சாலை
நான்கு வழிச் சாலை
ஆறு வழிச் சாலை
மேம்பாலம்
அடுக்கு பாலம்
விரிந்து விரிந்து விரிந்து
நகர் வீங்கி வீங்கி வீங்கி
இப்போது
அவர்களின் கனவு என்னவாக இருக்கிறது
குடிநீர் …காற்று … பசுமை … தூய்மை ..
ஒற்றையடிப் பாதையிலேயே
நின்றிருக்க முடியுமா ?
ஒற்றையடிப் பாதைக்குத்
திரும்பிப் போக முடியுமா ?
அதுவும் சாத்தியமல்ல
இதுவும் சாத்தியமல்ல
எங்கே தவறு செய்தோம் ?
நுகர்வு எனும் பெரும்பசியில்
நாம் தின்றது எவை ? செரித்தது எவை ?
மீதம் இருப்பது எவை ? எவை ?
இன்னும் நம்பிக்கை இற்றுவிடவில்லை ?
யோசிக்கவும் செயல்படவும்
இதுவே தருணம்!!!
சு.பொ.அகத்தியலிங்கம்.
21 ஜூன் 2019 .இரவு .8.02

0 comments :

Post a Comment