கை, கால் வெட்டப்பட்டாலும் தொண்டை இருக்கேய்யா....

Posted by அகத்தீ Labels:



அதுவும் அன்றைய சமூகச் சூழல் எப்படி இருந்தது? “தலித் வாழ்க்கையின் துயரம் இதுதான். பெண்களையும் சிறுமிக ளையும் பாலியல் ரீதியாகச் சுரண்டுவது என்பதை அந்த மக்களே தலைவிதியின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்வது.” காலங்கால மாக இதுவே நடைமுறை. இதனை உடைத்துத் தமக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைக்கு எதிராய் போராடி னார் பாந்த் சிங்கின் மகள் பல்ஜித்.



கை, கால் வெட்டப்பட்டாலும் தொண்டை இருக்கேய்யா....

சு.பொ.அகத்தியலிங்கம்.

“டாக்டர்களுக்குத்தான் இந்த விஷயங்கள் மிக நன்றாகத் தெரியும். என்னுடைய கைகளாலும் கால்களா லும் என்ன பயன்? நான் தொண்டையைக் கொண்டுதானே பாடப் போகிறேன்?”

தன்னுடைய இரண்டு கைகளையும் ஒரு காலையும் அகற்றிவிட - அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்த போது ஒருவர் இப்படிப் பேசுகிறார் எனில் அவர் எப்படிப்பட்ட துணிச்சல் காரராய் இருக்க வேண்டும் ?

இப்படியொரு அறுவை சிகிச்சைக்கு அவர் ஆளாக நேர்ந்தது நோயினால் அல்ல; சமூக அநீதியை சமரசமின்றி எதிர்த்ததற்கு ஆதிக்க சக்திகள் கொடுத்த பரிசு.

பாந்த் சிங் ஓர் மாக்ஹாபி சீக்கியர். அதாவது சீக்கிய சமூகத்தின் அடிமூட்டை யான ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்தவர். அநீதிக்கு தலை வணங்காதவர். சீக்கிய குருவான குரு கோவிந்தரையும், பகத் சிங்கை யும் தன் வழிகாட்டியாகக் கொண்டவர். செங்கொடி இயக்கத்தின் அருந்தவப் புதல்வர். தலித் கவிஞர் சாந்த் ராம் உதாசியின் கவிதைகளில் நெஞ்சைப் பறி கொடுத்தவர். தன் குரலால் அதற்கு உயிர் கொடுத்தவர். எழுச்சிக்கு விதை தூவியவர்.

சீக்கிய சமயம் சாதி சமத்துவம் பேசிடினும் இந்து மதத்தின் சாதியப் பெரு நோய் சீக்கிய சமூகத்திலும் சீழ்பிடித்து ஒழு கியது.

தலித் சீக்கிய பெண்களை ஜாட் உள்ளிட்ட ஆதிக்க சாதிகள் விருப்பம் போல் வேட்டை ஆடுவர்.கேள்வி கேட்க முடியாது. பழி தலித் பெண்கள் மீதே சுமத்தப்படும். பாந்த் சிங்கின் மகள் பல்ஜித் இவ்வாறு கும்பல் வன்புணர்வுக்கு ஆட்பட்ட போது மற்றவர் போல் அடங்கிப் போகாமல் எதிர்த்து நின்றார். அவமானங்களைப் பற்றி கவலைப்படாமல் தந்தையும் மகளும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக நின்றனர்.

அதுவும் அன்றைய சமூகச் சூழல் எப்படி இருந்தது? “தலித் வாழ்க்கையின் துயரம் இதுதான். பெண்களையும் சிறுமிக ளையும் பாலியல் ரீதியாகச் சுரண்டுவது என்பதை அந்த மக்களே தலைவிதியின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்வது.” காலங்கால மாக இதுவே நடைமுறை. இதனை உடைத்துத் தமக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைக்கு எதிராய் போராடி னார் பாந்த் சிங்கின் மகள் பல்ஜித்.

“தனக்கு வரதட்சணையாக ஒரு கைத்துப்பாக்கி வாங்கித்தா அப்பா !” என்கிற புரட்சிக் கவிதையை ஊட்டி வளர்த்த பாந்த் சிங்; அநீதிக்கு எதிராய் போராட உறு துணையானார். திருமணம் நின்று போனதைப் பற்றி சட்டை செய்ய வில்லை.பின்னர் ஒரு நல்லிதயம் கொண்டவன் மணந்தான்.

பாந்த் சிங் மீது ஆதிக்க சாதிக்கு கோபம் வர பல காரணங்கள் இருந்தன. உதாசியின் பாடல்களால் தலித்துகளுக்கு எழுச்சி ஊட்டி யது; செங்கொடி ஏந்தியது; சுயமரியாதை யுடன் சொந்தத் தொழில் செய்து சொந்தக் காலில் நின்றது. பொறுக்குமா? கையையும் காலையும் முறிக்க திட்டமிட்டனர். முறித்த னர். ஆனால் பாந்த் சிங் போராட்டம் அதன் பின்னரும் ஓயவில்லை; வீரியம் பெற்றது.

அந்த வீரக்கதையே இந்நூல். பாந்த் சிங், அவர் மனைவி ஹர்பன்ஸ், எட்டு குழந்தைகள் ‘இரண்டு இறந்தது போக’ எல்லோரும் ரத்தமும் சதையுமாய் உலவும் உயிர்க் காவியம் இது.

இந்நூல் நான்கு கோணங்களோடு அமைந்துள்ளது.

முதலாவதாக பாந்த் சிங்கின் துணிச்சல் மிக்க வாழ்க்கை. சுயமரியாதையும் போர்க்குணமும் தலித் சமூகத்தின் போர்குண மிக்க விழிப்புணர்வின் அடையாளமாக.
இரண்டு தலித் கவிஞர் சாந்த் ராம் உதாசியின் வாழ்க்கையும் வீரிய மிக்க புரட்சிப் படைப்புகளும் பாந்த் சிங்குக்கும் அவருக்கும் இடையிலான உறவும் ஒப்பீடும்.
மூன்று சீக்கிய சமூகத்தில் புரையோடிப்போன சாதியக் கொடுமையின் குறுக்குவெட்டுத் தோற்றம், பஞ்சாபின் அரசியல் சமூக போக்குகளூடே
நான்கு, இந்திய சமூக அமைப்பின் சாதிய கொடூர முகமும் அனைத்து நிறுவனங்களிலும் ஊடுருவி இறுகிப்போன சாதிய நச்சுமனமும் சுயநலமும்

“பாந்த் சிங் சார்ந்துள்ள அரசியல், கட்சி இயக்கம் அவற்றின் நடைமுறைகளோடு பாரதி புத்தகாலயம் கருத்து வேறுபாடு கொண்டிருந்த போதிலும் இந்நூல் முன்வைத்துள்ள கலகக்குரலின் முக்கியத்துவம் கருதி இப்புத்தகத்தை பதிப்பிக்கிறோம்.” என்கிற குறிப்பு பதிப்புரையில் இடம் பெற்றுள்ளது. இந்நூலில் எங்கும் நக்சலைட்டின் அரசியல் பேசப்படவில்லை. பாந்த் சிங்கை அதன் உறுப்பினராய் காட்டி உள்ளனர். தலித் மீதான ஒடுக்குமுறையும் அதற்கெதிரான கலகக்குரலுமே ஓங்கி ஒலிக்கிறதென்பது நூலைப் படித்த பின் தோன்றும் உண்மையாகும்.

கடைசி அத்தியாயத்தில் ஓர் அணில் செங்கொடியை உயரே தூக்கிக் கொண்டு போவது போன்ற காட்சிப் படிவம் வரையப்பட்டுள்ளது. இது உண்மையில் நடந்த நிகழ்வா அல்லது கவித்துவமான நம்பிக்கையூட்டும் முடிவுக்கான நிரூபண மாக வரைந்த காட்சியா? உறுதி சொல்ல இயலவில்லை. ஆயினும் இலக்கிய நுட்பமும் லட்சிய நம்பிக்கையும் பின்னிப் பிணையும் இடம் அது.

இந்நூல் நெடுக ஊடும் பாவுமாய் விரவி இருக்கும் உதாசியின் கவிதைகளை அசைபோடவும் உள்வாங்கவும் இந்நூலை வாசியுங்கள் என்றும் கூடுதலாகக் கூறலாம். அக்கவிதைகளோடு அதே இதயத் துடிப்போடு நூலை மொழியாக்கம் செய்த கமலாலயனுக்குஒரு ரெட் சலுயூட்!
உதாசியின் கவிதையோடு இப்போது விடைபெறுவோம்;

“திறப்புக்கூட அந்த இருண்ட மேகங்கள் வழிவிடுவதாயில்லை.
நாம் மந்திரங்கள் அறிந்தவர்கள் தாம்; எனினும் அந்தக்
கொடிய விஷப் பாம்பு சுதந்திரமாய்ச் சுற்றித் திரிகிறது.
கடவுளைவிடவும் பலம் வாய்ந்தவர் மக்கள் என்று
நாம் இன்னமும் அவர்களிடம் சொல்லவில்லை.
சங்கொலி இன்னமும் தம் பேரொலி முழக்கத்தைஎழுப்பவில்லை;
இருட்டின் அடர்த்தி மிகச் செறிவாய் இருக்கிறது.”

துணிவின் பாடகன் : பாந்த் சிங் ,
ஆசிரியர் : நிருபமா தத்.
தமிழில் : கமலாலயன்.
வெளியீடு : காம்ரேட் டாக்கீஸ்.
கிடைக்குமிடம் : பாரதி புத்தகாலயம்,
7,இளங்கோ சாலை, தேனாம் பேட்டை,
சென்னை –- 600 018.
பக் : 280 விலை : ரூ.240/-
தொ.பேசி: 044 -24332924

நன்றி : தீக்கதிர் , 17 ஜூன் 2019 , புத்தகமேசை.

0 comments :

Post a Comment