அளவுகோல்களை உடைத்தெறியுங்கள் !!!

Posted by அகத்தீ Labels:




// போட்டியில் வென்றும் முருகனுக்கு கனி மறுக்கப்பட்டது ; போட்டியே கர்ணனுக்கு மறுக்கப்பட்டது ; இதுதானே தரம் தகுதியின் லட்சணம் ?//


அளவுகோல்களை உடைத்தெறியுங்கள் !!!

சு .பொ . அகத்தியலிங்கம்.







ஞானசிகாமணிகளே ! அறிவின் பிதாமகன்களே ! உங்கள் அளவுகோல்களை உடைத்தெறியுங்கள் ! அறிவை விசாலாமாக்குங்கள் !



பாபம் ,புண்ணியம் ,பவித்திரம் ,சாதாரணம் , தர்மம் ,அதர்மம் , வார்த்தை விளையாட்டுகளை நிறுத்துங்கள் !

அறம் , விழுமியம் , தகுதி ,திறமை , நீதி ,நேர்மை சொற்சிலம்பங்கள் இனியும் வேண்டாம் விட்டொழியுங்கள் !

வில்லுக்கு விஜயன் , சொல்லுக்கு அகத்தியன் என இன்னும் எத்தனை நாள் பொய் பித்தலாட்டம் செய்யப்போகிறீர்கள் ?



ஞானசிகாமணிகளே ! அறிவின் பிதாமகன்களே ! உங்கள் அளவுகோல்களை உடைத்தெறியுங்கள் ! அறிவை விசாலாமாக்குங்கள் !



ஏகலைவனோடு எந்தப் போட்டியில் அர்ச்சுனன் ஜெயித்தான் ? கட்டை விரலை காணிக்கை கேட்டதாலன்றோ பிழைத்தான் ?

கர்னனின் குலம் கோத்திரம் கேட்டு போட்டியை தவிர்த்ததாலன்றோ அர்ச்சுனனன் போட்டியின்றி ஜெயித்தான் ?

கர்ணனின் கவச குண்டலத்தை யாசித்துப் பெற்றும் ; குந்தி மூலம் நிபந்தனைகள் விதித்தும்தானே போர்க்களத்திலும் வென்றான் ?



ஞானசிகாமணிகளே ! அறிவின் பிதாமகன்களே ! உங்கள் அளவுகோல்களை உடைத்தெறியுங்கள் ! அறிவை விசாலாமாக்குங்கள் !




கர்ணனின் புண்ணியங்களையும் பார்ப்பானாய் வேஷமிட்டுப் போய் தானம் பெற்றுத்தானே கர்ணனை கொன்றான் கிருஷ்ணன் ?

பஞ்சபாண்டவரும் பாண்டுவின் இரத்த வாரிசுகளா ? குந்தியும் மாத்திரியும் சுதந்திர உறவில் பெற்ற பிள்ளைகளுக்கு எது உரிமை ?

குந்தி பெற்ற தர்மன் ,அர்ச்சுனன் ,பீமன் பெறும் உரிமை ,சலுகை கர்ணனுக்கு ஏன் மறுக்கப்பட்டது ?



ஞானசிகாமணிகளே ! அறிவின் பிதாமகன்களே ! உங்கள் அளவுகோல்களை உடைத்தெறியுங்கள் ! அறிவை விசாலாமாக்குங்கள் !





போட்டியில் வென்றும் முருகனுக்கு கனி மறுக்கப்பட்டது ; போட்டியே கர்ணனுக்கு மறுக்கப்பட்டது ; இதுதானே தரம் தகுதியின் லட்சணம் ?

மூன்றடி என்பது மகாபலிக்கு மட்டும் எல்லையற்று நீண்டதும் ; கொன்றதும் தானே உங்கள் தர்மத்தின் அளவுகோல் ?

வேதம் படித்த தொல்குடி மகன் சம்புகன் தலையைக் கொய்தவன்தானே உங்கள் மகாபுருஷன் ராமச்சந்திர பிரபு ?


ஞானசிகாமணிகளே ! அறிவின் பிதாமகன்களே ! உங்கள் அளவுகோல்களை உடைத்தெறியுங்கள் ! அறிவை விசாலாமாக்குங்கள் !






எள்ளுப்பாட்டியும் கொள்ளுப்பாட்டியும் இடுப்புவலியால் துடித்தபோது ஓடிவந்தது நாசுவத்திதானே ?

அவள் வராவிடில் சந்ததி ஏது ? சமஸ்கிருதம் தெரியாதென அவள் மருத்துவம் படிக்க தடை போட்டது யார் ?

அந்த தடையை உடைத்ததும் ; அவள் மருத்துவம் படிக்க இடம் ஒதுக்கியதும் எம் தாடிக்காரன் போராட்டமல்லவா ?


ஞானசிகாமணிகளே ! அறிவின் பிதாமகன்களே ! உங்கள் அளவுகோல்களை உடைத்தெறியுங்கள் ! அறிவை விசாலாமாக்குங்கள் !


நீங்கள் எப்போதும் பூணூலால் அளக்கிறீர்கள் ! நாங்களோ எப்போதும் பனைநாரால் அளக்கிறோம் ; அதிலென்ன பிழை ?

நீங்கள் எப்போதும் புராணப்புளுகுகளால் புன்னகைக்கிறீர்கள் ! நாங்களோ உண்மைக் கதைகளால் உருகவைக்கிறோம் ; தவறென்ன ?

நீங்கள் யாககுண்டத்தில் உணவை துணியை எரிக்கிறீர்கள் ; நாங்கள் வியர்வையால் படைத்தளிக்கிறோம் ; எது தேவை ?



ஞானசிகாமணிகளே ! அறிவின் பிதாமகன்களே ! உங்கள் அளவுகோல்களை உடைத்தெறியுங்கள் ! அறிவை விசாலாமாக்குங்கள் !



0 comments :

Post a Comment