ஆளுமையின் அடையாளம்

Posted by அகத்தீ Labels:



ஆளுமையின் அடையாளம்



சு.பொ. அகத்தியலிங்கம் 

பகத்சிங் என்ற பெயரே இன்றும் இளைஞர்களுக்கு உணர்ச்சி ஊட்டிக் கொண்டிருக்கிறது. இந்தப் பெயரைக் கண்டு அன்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தி யம் நடுங்கியதில் பொருள் உண்டு. ஆனால் இன்றும் இப்பெயரை முடிந்த வரை ஆளும் வர்க்கம் வரலாற்றில் இருட் டடிப்பு செய்கிறது. வெறுமே தீவிரவாதி என்ற அடைமொழிக்குள் பகத்சிங் என்கிற மாபெரும் ஆளுமை யை சிறையிடுவதற்கே ஆளும்வர்க்க வரலாற்று ஆசிரியர்களும் கல்வியாளர் களும் தொடர்ந்து முயற்சித்து வருகின் றனர். ஆயினும் அனைத்தையும் மீறி சூரியனாய் இளைஞர்களின் மன வானில் பகத்சிங்கே சுடர்விட்டுப் பிர காசித்துக் கொண்டிருக்கிறான்.

கார ணம், அவனது ஆளுமைத் திறன்.பகத்சிங்கின் ஆளுமை இன்றைய இளைஞர்களுக்கு மிகச்சிறந்த வழி காட்டியாகும். இதுகுறித்து எண்ணற்ற எடுத்துக்காட்டுகளை முன்வைக்க இயலும். ஆயினும் இங்கே ஒன் றிரண்டை மட்டும் சுட்டிக்காட்ட விழை கிறேன். ஆளுமை என்பது ஆற்றல் நீரோட்டத்தோடு நீச்சலடிப்பதல்ல. எதிர்நீச்சல் போடுவதாகும். செக்கு மாடாக ஒரே வட்டத்தில் சுற்றிச் சுற்றி வருவதல்ல. உழவு மாடாக ஆழமாகவும் அகலமாகவும் உழ உதவுவதாகும். ஆளுமை என்பது தொலைநோக்கு கொண்டது. சுயநலம் இல்லாதது. விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருப்பது. இலட்சிய உறுதியோடு இருப்பது.

துணிவோடு சாவல்களை சந்திப்பது. ஆழமான அறிவுத்தேடலும் விசாலமான மனசும் கொண்டிருப்பது. இவை அனைத்துக்கும் பகத்சிங் எடுத் துக்காட்டாக இருக்கிறான்.பகத்சிங்கை சிறையிலிருந்து விடு விக்க அவரின் தந்தை முயற்சித்த போது எப்படியாவது விடுதலை கிடைத் தால் போதும் என்று சும்மா இருக்க வில்லை. தந்தையை கண்டித்து அன் போடு அவன் எழுதிய கடிதம் பகத்சிங் கின் மன உறுதிக்கும் தெளிந்த சிந்த னைக்கும் சாட்சியாகும். அதில் தந்தை தன்னைக் கேட்காமல் மனு அளித்தது தவறு என்றும், அது தனக்கு மிகுந்த மனவேதனையைத் தருவதாகவும் குறிப்பிட்டான். தந்தை என்ற முறை யில் அவர் மகன் மீது காட்டிய பாசத்தை பகத்சிங் புரிந்துகொண்டு அதே சமயம் தனது லட்சியத்திற்கு அந்த பாசம் இடையூறாக வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். அந்த நெடியக் கடிதத்தில் ஒரு இடத்தில் குறிப்பிடு கிறான், எனது உயிர் அந்த அளவிற்கு அருமையானது அல்ல. எனது கோட்பாடு களை விலையாகக் கொடுத்து வாங்கும் அளவிற்கு அது ஒன்றும் அத்தனை மதிப்புடையதல்ல.

எனது வழக்கைப் போலவே மிகவும் கடும் குற்றச்சாட்டு களுடனான வழக்குகள் என் சக தோழர்களுக்கும் உண்டு. தாங்கள் அனைவரும் ஒரே பொதுவான கொள்கை வழி நின்று கடைசி வரை ஒரே மாதிரி அதற்காக எவ்வளவு விலை கொடுக்க வேண்டியிருந்தாலும் சரி, செயல்படுவ தென முடிவு செய்திருக்கிறோம். இதில் பகத்சிங்கின் லட்சியக் கட்டுப்பாடும் பொது வாழ்வின் இலக்கணமும் ஒரு சேர வெளிப்படுவதைக் காணலாம். இதுதானே ஆளுமையின் முக்கிய வரையறை.ஒருவர் இளமையில் கடவுள் மறுப் பாளராக திகழ்வது எளிது, இயல்பானது. பகத்சிங்கும் இளமையில் அவ்வாறு திகழ்ந்ததில் வியப்பில்லை. ஆனால், பிரச்சனைகள் குரல் வளையை நெரிக்கும் போது, சோதனைகள் அடுத்தடுத்து வறுக்கும்போது எதிர்காலம் நிச்சயமற்ற தாய் தெரியும்போது அப்போதும் கடவுள் மறுப்பு பேசுகிறவர்கள் மிகவும் சொற்பம். மரணபயம் எல்லாவற்றையும்விடக் கொடுமையானது. அதுவும் மரணத் தேதி ஒருவருக்கு நிச்சயிக்கப்பட்டு விட்டப் பிறகு ஒருவர் உணர்ச்சி வசப்படாமல் தொடர்ந்து அறிவுப்பூர்வ மாக செயலாற்றுவது என்பது அபூர்வ மானது. அது மிக உயர்ந்த ஆளுமையும் ஆகும்.

பகத்சிங் சிறையிலிருந்த காலத் தில் அதுவும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுவிட்டப் பின்பு அவரது சக சிறை தோழன் ஃபணீந்திரநாத் கோஷ் என்பவர் பகத்சிங்கை பலமுறை சந் தித்து விவாதம் செய்தார். ஃபணீந்திர நாத் கடவுள் நம்பிக்கையாளர். அவர் பகத்சிங்கை கடவுள் பக்கம் திருப்பு வதற்காக பலமுறை விமர்சனம் செய் தார். அவருடைய கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் பதில் சொல்லு கிற விதத்தில் சிறையிலிருக்கிறபோது எழுதிய நூலே நான் ஏன் நாத்தி கனானேன். அந்த நூலில் கடைசியில் எழுதினான், இன்னல்கள் அனைத் தையும் அதிகபட்சத் துணிவுடன் எதிர் கொண்ட நாத்திகவாதிகளைப் பற்றி நான் படித்திருக்கிறேன். எனவே, நானும் எனது கடைசி மூச்சிருக்கும் வரை தூக்குமேடையிலும் கூட தலை நிமிர்ந்து நிற்பதற்கே முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் என்றான். சொன்னபடியே பகத்சிங் இறுதிவரை நாத்திகராக திகழ்ந்தான் என்பது அவ னுடைய அறிவார்ந்த ஆளுமையின் உயர்ந்த எடுத்துக்காட்டு.

பகத்சிங் சாகசப் பிரியன் அல்ல. இன்னும் சொல்லப்போனால் இந்த சாகசங்களைவிட அதிமுக்கியப் பணி கள் உண்டு என்கிற தெளிந்த தொலை நோக்கு அவனிடம் இருந்தது. சாதாரண மாக ஆக்சன்களில் பங்கெடுப்பவர் களையும் தூக்குமேடை ஏறுபவர்களை யும்தான் புகழ்தேடி வருகிறது. அவர்கள் நிலை ஒரு பெரிய மாளிகையில் தலை வாசலில் பதிக்கப்பட்ட வைரம் போன் றது. ஆனால், அஸ்திவாரத்திற்குள் விழுந்து கிடக்கும் ஒரு சாதாரண கல்லுக் குள்ள முக்கியத்துவம் அந்த வைரத் திற்கு இல்லை என்றான். மேலும் அவன் கூறுகிறான், நமது இயக்கம் வைரங் களைத் திரட்டியதே தவிர அஸ்திவாரக் கற்களை சேர்த்து வைக்கவே இல்லை. அதனால்தான் நாம் இத்தனை மாபெரும் தியாகங்கள் புரிந்தும் மாளிகையை கட் டவே ஆரம்பிக்கவில்லை. இன்று நமக் குத் தேவை அஸ்திவாரக் கற்களே. இப் படிக் கூறியதோடு இல்லாமல் தொடர்ந்து வலியுறுத்தினான்.

தியாகமும் உயிர்பலி யும் இரண்டுவிதமானவை. ஒன்று குண் டடிபட்டும் தூக்கிலிடப்பட்டும் மரணத் தைத் தழுவுவது, இதில் கவர்ச்சி அதி கம் இருந்தாலும் கஷ்டம் குறைவு தான். 2வது வாழ்க்கைப்பூராவும் மாளிகை யை சுமந்து கொண்டிருப்பது . போராட் டம் நடந்து கொண்டிருக்கும் போது, நமக்கு எதிரான சூழ்நிலையில் நமது தோழர்கள் ஒவ்வொருவராக நம்மை விட்டுப் போய்க்கொண்டிருக்கும் போதும் நாம் ஒரு சில தேறுதல் வார்த் தைகளுக்காக தவிக்கிறோம். அப்படிப் பட்ட நேரங்களில் தட்டுத் தடுமாறாமல் தமது லட்சியபாதையை விட்டுச் செல் லாதவர்கள் மாளிகையின் சுமையால் அசைந்து கொடுக்காதவர்கள், பளு வுக்கு பயந்து தோள்களை கீழே இறக்காதவர்கள், ஒளிமங்கிவிடக் கூடாது என்பதற்காகத் தம்மைத்தாமே எரித்துக் கொள்பவர்கள், பாதையில் இருள் சூழ்ந்துவிடக்கூடாது என்பதற் காக தம்மை மெழுகுவர்த்தியைப் போல் கரைத்துக் கொள்பவர்கள் உயிர்த் தியாகம் புரிபவர்களைக் காட்டிலும் சிறந்தவர்கள் இல்லையா...? ஆம் பகத்சிங் வெறும் உயிர்த்தியாகங்களை நமக்கு போதிக்கவில்லை. அவனும் புரிந்து கொள்ளவில்லை.

அர்ப்பணிப்பும் தொலைநோக்கும் கொண்ட நெடிய பய ணத்தைத் தான் அவன் கனவு கண்டு கொண்டிருந்தான். அவனுடைய ஆளு மை நொடியில் மடியும் மின்மினிப்பூச்சி போன்றதல்ல. யுகங்களைத் தாண்டி ஒளிரும் நட்சத்திரம் போன்றது.தொழிலாளிகளையும் விவசாயி களையும் திரட்டுவதுதான் தான் கொண்ட லட்சியத்தை அடைய உறுதியான வழி முறை என்பதை பகத்சிங் ஒருபோதும் மறக்கவில்லை. அவன் நாடாளுமன்றத் தில் வெடிகுண்டை வீசியபோதும் கூட அதில் யாரையும் உயிர்பலியாக்க வேண் டும் என்கிற தீய நோக்கம் இருக்கவில் லை. மாறாக இந்த நாட்டு மக்கள் தங்களு டைய தூக்கத்திலிருந்து விழித்தெழ அது வெடியோசையாக இருக்க வேண் டும் என்றே கருதினான். அவ்வாறே செயல்பட்டான். குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு தனது லட்சியத்தை பிரகடனம் செய்தான். வெள்ளைக் காரை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்திய முதலாளிகள் அமர்வதால் எந்த நன் மையும் தொழிலாளிகளுக்கும், விவசாயி களுக்கும் ஏற்படப்போவதில்லை என் பதை பிசிறில்லாமல் எடுத்து வைத் தான்.

சுரண்டல் ஆதிக்க நுகத்தடியி லிருந்தும் அந்நிய ஆதிக்க நுகத்தடியி லிருந்தும் ஒரு சேர விடுதலைப்பெற வேண்டும் என்பதே பகத்சிங் நோக்க மாகவும் முழக்கமாகவும் இருந்தது.1. இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி வெல்லட்டும்) 2. தொழிலாளி வர்க்கம் வெல்லட்டும். 3. ஏகாதிபத்தியம் ஒழியட் டும் என்ற மூன்று லட்சிய முழக்கங் களையே மையமாகக் கொண்டு பகத் சிங் செயல்பட்டான் என்பதை நினை வில் கொள்ள வேண்டும். அதுமட்டு மல்ல மானுடத்தை நேசிப்பதில் நாங்கள் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல. எங்களுக்கு யாரிடத்திலும் தனிப்பட்ட முறையில் பகைமை இல்லை. நாங்கள் எல்லோரையும் எப்போதுமே அன்போடுதான் நேசித்து வந்தோம். என்பதை மீண்டும் மீண்டும் சொன்னது மட்டுமல்ல. சொன்னபடி நடந்தும் வந்தான். தனிநபர் கொலை களையோ அர்த்தமற்ற வெடிகுண்டு வீச்சுகளையோ பகத்சிங் ஒருபோதும் ஏற்றுக்கொண்டவனல்ல. சமூகத் தின் சகலப் பிரச்சனைகளையும் ஆழ மாகவும் நுட்பமாகவும் அலசி அதற்குத் தீர்வுகாண வேண்டும் என எப்போதும் துடித்துக் கொண்டிருந்தவன்.

பயங்கர வாதம் ஒருபோதும் புரட்சியாளர்களின் நோக்கம் அல்ல என்பதை அறிந்தவன் மற்றவர்களுக்கும் உணர்த்தியவன். அதே நேரத்தில் தேசத்திற்காகவும் உழைக்கும் மக்கள் நலனுக்காகவும் மரணத்தை ஆலிங்கனம் செய்யவும் தயாரான ஆயிரக்கணக்கான இளைஞர் களால்தான் உண்மையான விடியலை கொண்டு வரமுடியும் என்பதிலும் அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண் டிருந்தான். ஆயினும், தனிநபர்களால் இவற்றை சாதிக்க முடியாது. லட்சிய நோக்குடைய அறிவியல்பூர்வமான தொலைநோக்குத் திட்டம் கொண்ட நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழி லாளி விவசாயிகளின் கட்சித் தேவை என்பதை சோசலிசமே சமூகத்தின் எதிர்காலம் என்பதனை பகத்சிங் உணர்ந்திருந்தான். அதனை அழுத்த மாக மீண்டும் மீண்டும் அவனுடைய வார்த்தைகளில், பேச்சிலும் எழுத்தி லும் கடிதங்களிலும் குறிப்புகளிலும் சிந்தனைகளிலும் பதிவு செய்து கொண்டே இருந்தான்.ஒரு சிறு கட்டுரையில், பகத்சிங் கின் மொத்த ஆளுமையையும் வரைந்து காட்டுவது எளிதானதல்ல. ஆயினும் அவன் ஆரம்பம் முதல் இறுதி வரை அளவற்ற அறிவுத்தேடலுடனும், எல் லையற்ற மன உறுதியுடனும் திகழ்ந் தான்.

குறுகிய சாதி, மத, இன எல்லை களைத் தாண்டியவனாக புதிய உலகக் கண்ணோட்டம் கொண்டவனாக சோச லிச சமூகத்தின் தூதுவனாக சமூக மாறுதலின் சாரதியாக ஒட்டுமொத்தத் தில் இந்திய இளைஞர்களின் நம்பிக் கையின் குறியீடாக திகழ்ந்தான். மகாத் மாக்கள் அவனது பாதையை ஏற்க வில்லை. எதிர்த்தனர், விமர்சித்தனர், கைகொடுக்கத் தயங்கினர், கைவிட் டனர். ஆனால், இளைஞர்கள் அவனை கொண்டாடினர். மக்கள் தங்கள் நெஞ்சில் அவனை வரைந்து கொண் டனர். இந்திய சமூகத்தின் குறிப் பாக இளைஞர் சமூகத்தின் மனச்சாட்சி யாய் இன்றும் அவன் விளங்குகிறான். நாளையும் அவ்வாறே விளங்குவான்.

நன்றி : தீக்கதிர்  23-03-2014

0 comments :

Post a Comment