நேரச் சிக்கல்
….
எங்கும் வாழ்க்கை
ஒரே செக்குமாட்டுத்தனம்தான்.
அன்றாடம்
என்ன செய்வது என்பதை
அவரவர் வாழ்க்கை
வட்டம் தீர்மானித்துவிடுகிறது.
அந்த நிகழ்ச்சி
நிரலை நிறைவேற்றவே
நேரம் காலம்
போதவில்லை
இயற்கையோடு
மல்லுக்கட்டும் மனிதனால்
ஒரு நாளைக்கு
24 மணி நேரம் என்பதையும்
ஒரு வாரத்துக்கு
எழு நாட்கள் என்பதையும்
சற்று அதிகரித்து
அமைக்கவே முடியாதா ?
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொருத்தரும்
நேர மேலாண்மையில்
திணறித்தான்
போகிறார்கள் !
கணவன் மனைவி
இரண்டே பிள்ளைகள்
என
திட்டமிட்ட
குடும்பமாய் இருந்தாலும் …
வார இறுதிகூட
வரமாகவில்லை
துவைக்க சுத்தம்
செய்ய
அடுத்த வாரத்திற்கு
தயார் செய்ய
ஓடிப்போகிறது
வந்த தடம்
தெரியாமல் சனி ஞாயிறு !
துவைக்க பாத்திரம்
கழுவ
வீடு பெருக்க
சமைக்க
வீட்டில்
இருந்தபடியே
பொருட்களை
வாங்க
நவீன அறிவியல்
கை கொடுத்தாலும்
சள்ளை பிடித்த
வீட்டு வேலை ஓய்ந்தபாடில்லை !
கணவனும் மனைவியும்
பகிர்ந்து செய்தாலும்…
குழந்தை வளர்ப்பில்
இருவரும் பங்கேற்றாலும்
மாட்டிக்கொண்ட
பொறிக்குள்
ஓடி ஓடி களைக்கும்
எளியைப் போல
வாழ்க்கை
இயந்திரத்தில் சிக்கிய மனிதஎலி
ஓடி ஓடி ஓடி
ஓடி …. வாடி வாடி வாடி வாடி
காலமும் கடந்து
போய் … காலன் கை முடிவதோ
வாழ்க்கையின்
இலக்கணம் ?
இயற்கையை
ரசிக்கவோ
அன்பினில்
திழைக்கவோ
மானுடம் போற்றவோ
கவலையை மிதிக்கவோ
கனவினில்
மிதக்கவோ
நேரம் காலம்
வாய்த்திட
வரம் யார்
தருவார் ?
வாழ்க்கை
உன் கையில்தான்…..
சுபொஅ.
08/04/25,
வர்ஜீனியா
[ இங்கு பொதுவாய்
எல்லோரும் பேசிக்கொள்ளும் வாழ்க்கையின் ”நேரச் சிக்கல்” என்னை இப்படி எழுத வைத்துவிட்டது .]