365.242190 நாட்களே ஓர் ஆண்டு ….

Posted by அகத்தீ Labels:

 


 


 

365.242190 நாட்களே ஓர் ஆண்டு ….

 

  “ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடாதீர்கள்!” எனக் கிணற்றுத் தவளைகள் ஆண்டு தோறும் கத்தும் .இந்த ஆண்டும் உண்டு . கார்கேரியன் காலண்டர் அதுதான் ஆங்கிலக் காலண்டர் அடிப்படையில் ஊதியம் வாங்கிக் கொண்டு ,வாழ்வை நடத்திக் கொண்டுதான் இக்கூச்சல் !

 

சரி ! விஷயத்துக்கு வருவோம் !

 

இப்போது காலண்டர் என்பது 12 மாதங்கள் . 365/366 நாட்கள் . நாள் என்பது 24 மணி நேரம் . சரி இது என்ன புதுத் தகவலா ? இதை ஏன் எழுதி கழுத்தறுக்கிறீங்க எனக் கேட்போரே ! இதைக் கண்டடைவதற்கே வரலாற்றில் எவ்வளவு காலம் பிடித்திருக்கிறது தெரியுமா ?

 

ஒரு நாளைக்கு 24 மணி நேரம் யாரோ ஒருவரின் கண்டு பிடிப்பல்ல ’வெங்கலயுகம்’ தொடங்கி [ அதற்கு முன்னரும் முயற்சிகள் உண்டு ]வான் பார்த்து , நிழல் , மணல் ,நீர் எனத் தொடங்கி இன்றைய நிலையை அடைய பெரும் பயணம் நடந்ததே வரலாறு . இப்போது காலண்டரைப் பார்ப்போம்.

 

நமக்கு வரலாறு என்பது கதைதானே !

 

ஒரு முறை நாரதர் கிருஷ்ணனிடம் “ நீ மட்டும் அறுபதினாயிரம் கன்னியருடன் இருக்கிறீர்கள் .எனக்கு ஒன்று தரக்கூடாதா ?” என்று கேட்டார் . “ என்னை நினைக்காத ஒரு பெண்ணை நீ அனுபவிக்க கடவாய்” என கிருஷ்ணரும் வரும் கொடுத்தார் .அப்படி ஒரு பெண் உலகத்தில் தேடித்தேடி அலைந்தும் எங்குமே கிடைகாததால் நாரதர் தன் முடிவை மாற்றி தானே பெண்ணாக மாறி கிருஷ்ணரைப் புணர்ந்து ’பிரபவ’ முதல் ‘அட்சய’ வரை 60 குழந்தைகளைப் பெற்றார் . இதுவே ஆரிய ஆண்டுக் கணக்கு அறுபதாகி சித்திரை வருடப் பிறப்பானது . உலகெங்கும் இதுபோல் எண்ணற்ற புராணப் புளுகுகள் எல்லா நாட்டிலும் உண்டு .

 

 

 

ரோஸலிண்ட் மைல்ஸ் எழுதிய ‘உலக வரலாற்றில் பெண்கள்’ என்ற நூலில் பெண்கள் தங்கள் மாதவிடாய் , மகப்பேறு காலம் இவற்றை வான் நோக்கி பெளர்ணமி ,அம்மாவாசையைக் கணக்கிட்டு நட்சத்திரம் நோக்கி பானை ஓட்டில் குறித்து வைத்ததே காலண்டரின் தொடக்கம் என்பார் .

 

விவசாய வேலைக்கு மழைப்பொழிவை அறிய வான் நோக்கி நடசத்திரம் , சந்திரனின் தேய்வும் வளர்ச்சியும் இவற்றை ஆதாரமாகக் கொண்டு கணக்கிடலே பின்னர் காலண்டர் ஆனது ;வானவியலுக்கும் அடிப்படை ஆனது என்பதும் உண்மை .

 

2013 ஆண்டு ஸ்காட்லாந்தில் தொல்லியல் ஆய்வாளர்கள்  ஒரு காலண்டரை கண்டடைந்தனர் . இது அபெர்டீன்ஷையரின் வாரன் ஃபீல்டில் [Warren FieldAberdeenshire ] 10,000 ஆண்டுகள் பழமையான காலண்டர் அமைப்பின் பண்டைய ஆதாரங்களாகும் . இந்த நாட்காட்டி "முதல் ஸ்காட்டிஷ் நாட்காட்டி " ஆகும். சுமேரிய நாட்காட்டியைத் தொடர்ந்து எகிப்திய, அசிரிய மற்றும் ஏலமைட் [EgyptianAssyrian and Elamite calendars. ] நாட்காட்டிகள் வந்தன. இந்தியாவில் பஞ்சாங்கம் இவ்வகையில் உருவானது .

 

காலண்டர் என்றாலே  ரோம் நாட்டில் லத்தின் மொழியில்  “ கூப்பிடு” [to call out] என்றுதான் பொருள் . பிரெஞ்சு மொழி இதே சொல்லை அப்படியே நாட்காட்டிக்கு பயன் படுத்தியது .உலகம் இதை அப்படியே சுவீகரித்துக் கொண்டது . வர்ஷா என்னும் வடசொல்லிலிருந்து மருவியது வருடம் என்று கூறலாம். வர்ஷா என்றால்பொழிதல்என்பது பொருள். விவசாயத் தோடும் பெண்களின் வாழ்வியலோடும் பிணைந்தே காலண்டர் உருவானது என்பர் அறிஞர் பெருமக்கள்  . ஆகவே பொழிதல் எனும் பொருள்பட வருடம் என்ற சொல்லை பழக்கத்தில் ஏற்கலாம்தானே .ஆண்டு என்பது தூய தமிழ்ச் சொல்.

 

 

ஆதியில் 12 மாதங்கள் இல்லை .பத்து மாதங்களே இருந்தன . ஏப்ரல் ,ஜூன் ,ஜூலை ,ஆகஸ்ட்  இப்படி மாறி மாறி ஆண்டின் தொடக்கமாக இருந்தது உண்டு .ஒவ்வொரு நாட்டிலும் கோமாளி மன்னர்கள் போட்ட கூத்து இதன் பின் கதையாகும் .

 

சந்திரனை அடிப்படையாகக் கொண்ட சந்திரக் காலண்டர் ,சூரியனை அடிப்படையாகக் கொண்ட சூரியக் காலண்டர் என இரண்டும் புழக்கத்தில் வந்தன.

 

ஜனவரியை முதல் மாதமாகக் கொண்ட கார்கேரியன் காலண்டர் [Garoorian calender ]1592 ல் புழக்கத்தில் வந்தது . சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கும் காலமான வட அயணக் காலம் [ உத்திராயண காலம் ] ஜனவரியிலேயே தொடங்குவதால் ஜனவரியே ஏற்புடையதாயிற்று .

அப்போதும் ஏப்ரல்தான் ”வருடபிறப்பு” என அடம்பிடித்தோரை மட்டம்தட்ட உருவானதே ”ஏபரல் ஃபூல்” என்ற சொற்றொடரும் நிகழ்வுகளும். தை முதல் நாள் தமிழர் புத்தாண்டு என்பதும் இதனை நெருங்கி இருக்கிறது . சித்திரையின் ஆபாசக்கதை முதலில் பார்த்தோம் . அதை மறப்போம்.

365.242190 நாட்களே ஓர் ஆண்டு . ஆகவேதான் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரி 29 நாட்களாகி 366 நாட்கள் கணக்கு வருகிறது . உலகம் வர்த்தக மற்றும் நடைமுறைக்கு கார்கேரியன் காலண்டரை ஏற்றுக்கொண்டாயிற்று .நம் சம்பளநாள் ,பிறந்த நாள் ,திருமணநாள் எல்லாம் இக்கணக்கில்தான் . இதை இன்னும் ஆங்கில ஆண்டென்று பிழையாகச் சொல்லி வருகிறோம் .என் செய்ய ?

 

கார்க்கேரியன் காலண்டர் வழக்கில் வந்தாலும் அவரவர் மதம் ,பண்பாடு ,நாடு ,பிரதேசம் ,மொழி சார்ந்து பல்வேறு காலண்டர்களும் புழக்கத்தில் உள்ளன .அவை வெறுமே சடங்கு ,சம்பிரதாய ,பண்பாட்டு ஆண்டுகளே!

 

தமிழர் நமக்கு ஜனவரி 1, மற்றும் தை முதல் நாளே புத்தாண்டுகள் .

 

இப்போதும் காலண்டரை இன்னும் திருத்தி சில நாட்கள் பின்னுக்கு கொண்டு போக வேண்டும் என்கிற குரல் வானவியலாளர்கள் மத்தியிலே எழுகிறது .நாளை உலகு ஏற்கக் கூடும் . மாறாதது எதுவும் இல்லை .சனாதனமாய் பழமைக் கட்டி அழுவது பேதமையே !

 

சுபொஅ.

31/12/24.

 

 

 

 


மூட்டைபூச்சி …

Posted by அகத்தீ Labels:

 



மூட்டைபூச்சி …

 

மூட்டைபூச்சி படுத்திய பாடுகளை

பேசியபடியே நடை பயிற்சி.

 இப்போதும் இருக்கிறதா மூட்டைபூச்சி

என்கிற சந்தேகம் வலுத்தது அப்போது

 

 

ரயிலில் ,பஸ்ஸில்

தியேட்டரில் ,லாட்ஸில்

கட்டிலில் ,பெஞ்சில்

பெட்டியில், படுக்கையில்

 

ஒட்டிக்கொண்டு வீடுவரும்

வீடுமுழுவதும் ஆக்கிரமிக்கும்

சுவர் முழுதும் மூட்டை பூச்சியைக்

கொன்ற கறைகள் மாடர்ன் ஆர்ட்டாய்

 

தூங்கவிடாது இரத்தம் குடிக்கும்

தோல் தடிக்கும் நோய் பரப்பும்

வேட்டியில் சட்டையில் பயணிக்கும்

விடாது கருப்பென துரத்தும்

 

மூட்டைப் பூச்சிக்கு பயந்து

வீட்டுக்கு தீ வைப்பார்களா ?

மூட்டைபூச்சி இல்லாத இடம்தேடி

முக்குடைபட்டதே அதிகம்

 

மூட்டைப்பூச்சி மருந்து குடித்து

செத்தவருண்டு ; மூட்டை பூச்சி

செத்ததில்லை ; போராடி போராடி

ஜெயித்தது நம் வரலாறு

 

Bedbug என்றால்தான் அடுத்த

தலைமுறைக்கு தெரியுமோ ?

அப்போதும் கூகுள் ஆண்டவர்தான்

அடையாளம் காட்டுவாரோ ?

 

மீண்டும் கொரானோ

மீண்டும் பிளேக் என்பதுபோல்

மீண்டும் மூட்டைபூச்சி வருமோ

ஆய்வறிஞர்கள் மிரட்டுவாரோ ?

 

நல்லவேளை மூட்டைபூச்சி

எந்த சாமிக்கும் வாகனமில்லை !

இருந்தால் எலிக்கு கட்டியது போல்

கோவில் கட்டியிருப்பார்கள் !

 

கொல்வது பாவமென எங்கும்

கும்பிட்டு தொழுதிருப்பார்கள்

மூட்டைபூச்சி வதை தடைகோரி

மூர்க்கர்கள் கொதித்திருப்பார்கள்!

 

மூட்டைபூச்சி படுத்திய பாடுகளை

பேசியபடியே நடை பயிற்சி.

 இப்போதும் இருக்கிறதா மூட்டைபூச்சி

என்கிற சந்தேகம் வலுத்தது அப்போது

 

 

குறிப்பு : ராஜஸ்தானத்தில் எலிக்கோயில் உண்டு .அங்கு தாரளமாய் எலி விளையாடும் .

எலிக்கோயில் : ராஜஸ்தான், பீகானேர் மாவட்டத்திலுள்ள தேஷ்னோக் கிராமத்தில். இங்கே எலி வழிபாடு பிரதானம். இங்கு இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட எலிகள் உள்ளன. [ தினமலர் , 04 மார்ச் 2014 ]

 

சுபொஅ.

19/12/24.


ஓரு வங்கி வீழ்த்தப்பட்ட பின்னணியில் ”மாயச் சதுகரம்”….

Posted by அகத்தீ Labels:

 

 


ஓரு வங்கி வீழ்த்தப்பட்ட பின்னணியில்

”மாயச் சதுகரம்”….

 

வரலாற்று ஆய்வாளர் ஆ.வெங்கடாசலபதி எழுதிய “ திருநெல்வேலி எழுச்சியும் வ உ சியும் 1908” எனும் ஆய்வு நூலுக்கு சாகித்திய அகடாமி விருது கிடைத்த மகிழ்ச்சியான இவ்வேளையில் , ’ வ உ சி ஏன் பழிவாங்கப்பட்டார் ’ என்பது குறித்தும் சில செய்திகளை போகிற போக்கில் சொல்லிச் செல்லும்  “மாயச் சதுகரம்” நாவல் குறித்து எழுத நேர்ந்தது மகிழ்ச்சியே !

 

நண்பர் முஹம்மது யூசுப் எழுதிய அனைத்து நூல்களையும் வாசித்தவன் என்கிற உரிமையோடும் எதிர்பார்ப்போடும் மாயச் சதுகரத்தை கையில் எடுத்தேன் .வாசித்து முடித்தேன் . மகிழ்ச்சி. தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அவர் புனையும் டாக்கு-ஃபிக்சன் வகை நாவல்தான் இதுவும் .

 

மிக அண்மைக்கால வரலாற்றிலேயே நாம் பார்க்கத் தவறுகிற மற்றும் மறந்துவிட்ட சில நிகழ்வுகளை அதன் பின் புலத்தை  நுண் அரசியலை புலனாய்வு செய்கிற பாணியில் இது எழுதப்பட்டுள்ளது .

 

 “ 10 பேர் இறந்த ’புளியந்தோப்பு கலவரம்’குறித்து இன்றும் பேசப்படுகிறது. ஐஸ் ஹவுஸ் நிறுவனத்தில் 300 பேர் அவதியுற்றார்கள் எனும் துயரத்தை’வெள்ளை யானை’ புனைவு பேசுகிறது அதே சென்னையில் 700 குடும்பங்கள் அவதிக்குள்ளான ‘அற்புதநாத்வங்கி’ திடீர் வீழ்ச்சி அதில் நிகழ்ந்த சாவுகள்” பற்றி ஏன் பேசுவதில்லை என்கிற கேள்வியை எழுப்பியதோடு அது சார்ந்து இந்த நாவலை முஹம்மது யூசுப் எழுதியிருப்பது பாராட்டுகுரியது .

 

செளம்யா .ஹென்றி ,தெளலத் என அற்புதநாத் வங்கி வீழ்ச்சியால் வாழ்வை இழ்ந்த மூன்று செல்வந்தக் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறைவழி இந்நாவல் பெரிதும் நகர்கிறது . வாழ்வை இழந்து தூத்துக்குடிக்கு குடி பெயர்ந்து ஒரே வளவில் வாழ்ந்த சங்கரன் ,எலிமா ,சுப்பாராவ் உள்ளிட்ட பன்னீரென்டு குடும்பங்களின் துயரம் தோய்ந்த நினைவுகளோடு பின்னிப் பிணைந்தது நாவல். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு வரும் மூன்றாம் தலைமுறையின் தேடல் வழி காட்சியாய் நகர்கிறது .

 

 மேலும் அரசியல் வாதியால் தந்தையையும் அண்ணனையும் இழந்த தெளலத் , தன் தந்தையை ஒரு ரவுடியிடம் பலிகொடுத்த ஹென்றி இவர்களின் நிகழ்காலக் கோவமும் ; நன்கு படித்து பத்திரிகைத் தொழிலுக்கு வந்து பின் வழக்கறிஞரான செளம்யாவின் புலாய்வு உத்தியும் சந்தர்ப்பச் சூழல்களுமாய் நாவல் நீண்டு நன்கு திட்டமிட்ட ஒரு பழிவாங்கல் கொலையோடு முடிகிறது .

 

பொதுவாய் பெரிய ரவுடிகள் ஒரு கட்டத்தில் கொலை செய்யப்படுவதும் அதன் பின்னால் போலிஸார் கைவரிசை இருப்பதும் ; அதன் தொடர்ச்சியாக இன்னொரு ரவுடி தலை எடுப்பதும் சென்னை தொடர்ந்து காணும் நிகழ்வு . ஆனால் இந்நாவலில் அது கொஞ்சம் பழிவாங்கலும் கொஞ்சம் சமூக அக்கறையுமாய் இறுதியில் இக்கொலை வடிவமைக்கப்பட்டுள்ளது .

 

செளம்யா ,சுப்பாராவ் , மூத்த வழக்கறிஞரும் திராவிடர் கழகத்தவருமான  மீனாட்சி சுந்தரம் ,சுப்பாராவ் a போன்ற கதாபாத்திரங்களின் உரையாடல் வழி பல வரலாற்று கேள்விகளை எழுப்பி ஒன்றோடொன்று முடிச்சுப் போட்டு நம்மை இன்னொரு கோணத்தில் சிந்திக்க உந்தித்தள்ளுகிறது இந்நாவல் .

 

திராவிட இயக்க வரலாற்றை எழுதுகிற போது எழும்பூர் குழு ,மயிலாப்பூர் குழு என இரண்டு குழுக்களின் மோதல் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் மோதல்தான் என்பதையும் , பார்ப்பனரல்லாதார் அமைப்பு தோன்ற விதைப் போட்ட நிகழ்வாகவும் குறிப்பிடுவார்கள் . இநத நாவலிலும் அது பேசப்படுகிறது .ஆனால் அவற்றின் பின்னால் இயங்கிய பொருளாதாரம் பண்பாடு அரசியல் குறித்து பேசுபவைகளை எளிதில் புறந்தள்ளிவிட முடியாது . அற்புதநாத் வங்கி வீழ்ச்சியோடும் இதன் கண்ணி நீளவதும் ; அன்னிபெசண்ட் , மார்வாடி , பார்ப்பன பொருளாதார அரசியல் லாபி எல்லாம் புதிய கோணமாகும் .

 

1918 ஆம் ஆண்டு சென்னை தொழிலாளர் சங்கம் தொடங்கப்பட்டதும் அதில் பி.பி .வாடியா ,திரு .வி.க .செல்வபதிச் செட்டியார் ஈடுப்பட்டதும் நாமறிவோம் . ஆயின் அப்போது சென்னையில் இருந்த வ. உ.சி 1908 லேயே தூத்துக்குடியில் தொழிலாளர்களுக்காகப் போராடிய வ.உ.சி , அப்ப்போதும் டிராம் ,ரயில்வே உடபட பல தொழிலாளர் கூட்டங்களில் பேசிய வ உ சி ; சென்னை தொழிலாளர் சங்க உருவாக்கத்தில் ஏன் பங்கேறகவில்லை ? இக்கேள்வி இந்நூலில் வழக்கறிஞர் மீனாட்சி சுந்தரம் வழி கேட்கப்படுகிறது .

 

அற்புதநாத் வங்கி வீழ்ச்சிக்கு பின்னர் முதன் முதலாக இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்டதே இந்தியன் வங்கி என்பது நம் பொது புத்தியில் உறைந்து போயுள்ள செய்தி .ஆயின் அது உண்மை அல்ல . இந்தியன் வங்கியை உருவாக்கிய பின்னரே அற்புதநாத் வங்கி வீழ்ச்சியானது .அதன் பின்னால் இயக்கிய அரசியல் பொருளாதார சூழ்ச்சிகளை தொட்டுக்காட்டுகிறது இந்நாவல் .

 

ஒவ்வொரு சொல்லுக்கு பின்னாலும் ஓர் வர்க்கத்தின் நலன் ஒழிந்திருக்கும் என்பது மார்க்சிய புரிதல் .அதனை சற்று விரிவாக்கி ஒவ்வொரு சொல்லுக்கு பின்னாலும் – ஒவ்வொரு நிகழ்வுக்கு பின்னாலும் ஓர் வர்க்கத்தின் நலனோடு வர்ணத்தின் நலனும் ஒழிந்தே இருக்கிறது என்கிற இந்திய நுண் அரசியல் இந்நாவலின் உள்ளுறையாகும். இவரின் அரசியல் பண்பாட்டு பார்வையோடு உடன்படவும் முரண்படவும் இந்நாவலில் இடம் உண்டு .

 

“வரலாறு என்பது வந்தியத் தேவனும் குந்தவை நாச்சியாரும் மட்டுமே அல்ல என்பதே தமிழனுக்கு கற்றுத்தரப்பட வேண்டிய விடயம்” என முன்னுரையில் நாஞ்சில் நாடன் முன்மொழிந்ததை நான் வழி மொழிகிறேன்.

 

முஹம்மது யூசுப்புக்கு வாழ்த்துகள் ! அதே சமயம் நாவலின் இறுதிப் பகுதி தமிழ் சினிமா கிளைமாக்ஸ் போல் அமைந்துவிட்டதாக எனக்குத் தோன்றுகிறதே ! இந்நாவலை ஓர் சினிமா எடுக்கலாம் .அதற்கான களம் உள்ளது .

 

இனி நீங்களே நாவலைப் படித்து ஓர் முடிவுக்கு வாருங்கள் !

 

மாயச் சதுகரம் , ஆசிரியர் : முஹம்மது யூசுப் ,

வெளியீடு : யாவரும் பப்ளிஷர்ஸ்,

தொடர்பு : 90424 61472  ,  yaavarum1@gmail.com  

www.yaavarum.com ; www.be4books.com 

பக்கங்கள் : 310 , விலை : ரூ.399/



சு.பொ.அகத்தியலிங்கம்.

19/12/24.

 

 

 


இரைச்சலின் நடுவே

Posted by அகத்தீ Labels:

 



இரைச்சலின் நடுவே

இருக்கப் பழகுகிறோம்

புழுக்கத்தின் நடுவே

உழைக்கப் பழகுகிறோம்

நாற்றத்தின் நடுவே

நடக்கப் பழகுகிறோம்

வெள்ளத்தின் நடுவே

பிழைக்கப் பழகுகிறோம்

வெறுப்பின் நடுவே

வசிக்கப் பழகுகிறோம்

சாக்கடைக் கல்லாய்

கிடக்கப் பழகுகிறோம்

மறந்தும் மனிதராய்

வாழ நினையோம் !

ச்சீ ..ச்சீ ! இழிநிலை !

சீறி எழு ! எரிமலை நீ !

 

சுபொஅ.

 


ரயிலோடும்…… செங்கொடியோடும் …..

Posted by அகத்தீ Labels:

 




ரயிலோடும்……  செங்கொடியோடும் …..

 

[ தென்சென்னை சிபிஎம் மாநில மாநாட்டை யொட்டி வெளியிடப்படும் மலருக்கான கட்டுரை ]

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

 

[ நினைவில் இருந்து எழுதுவதால் சில முக்கிய பெயர்கள்கூட விடுப்பட்டிருக்கலாம் . நிகழ்வுகள் குறித்த செய்தி காலவரிசையில் இல்லாமல் இருக்கலாம் .பொறுத்தருள்வீர்]

ழவந்தங்கலில் ரயில்வே நிலையம் அருகிலுள்ள எம் ஜி ஆர் நகரில் ஓர் குடிசையில் 1973 முதல் 1981 தாய் ,தந்தை ,அண்ணன் ,தம்பியோடு நான் குடியிருந்தேன் . எனது இடது சிந்தனை வலுப்பெற்றதும் நான் மார்கிசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானதும்  ,ஊழியரானதும் ,என் குடும்பமே கட்சி சிந்தனைக்கு ஆட்பட்டதும் அக்காலகட்டம்தான் . ரயிலும் என் அன்றாட வாழ்வும் அரசியல் பயணமும் பின்னிப் பிணைந்தது . கட்சியோடு நான் கட்டுண்டதில் ரயிலுக்கும் மிகப்பெரிய பங்குண்டு.

 

ரயிலில் நான் , தோழர்கள் குமாரதாஸ் , ஆர்பிஐ கேண்டின் பத்மநாபன் , உ.ரா.வரதராஜன் ,விஸ்வம்பரன் ,முண்டன் , ராஜன் , கோபிநாத் ,தீனா ,கந்தன் என் சகோதரர் சு.பொ.நாராயணன் ,ஜெயலட்சுமி ,முஸ்த்திரி  ,டிரைவர் ராஜி ,சேகர் , விஜய ஜானகிராமன் .ராமச்சந்திரன் [ இவர் பின்னர் ஒதுங்கிவிட்டார் ] ஆகியோர் ரயிலில் பிரச்சாரம் செய்து கட்சிப் பிரசுரங்கள் விற்ற நினைவு இன்னும் பசுமையாய் உள்ளது .

 

பழவந்தங்கலில் புறப்பட்டு பீச் சென்று அங்கிருந்து தாம்பரம் அங்கிருந்து பழவந்தங்கல் என பிரசுரம் விற்றபடியே பயணிப்போம் . ஒவ்வொரு ஸ்டேஷனிலும் பெட்டி மாறுவோம் . வழியில் கே.எம். ஹரிபட் ,சி.பி.தாமோதரன் ,மைதிலி சிவராமன் ,டி.ஜானகிராமன் , வழக்கறிஞர் சிவாஜி , டி.லட்சுமணன் ,ஸ்ரீதர் உடபட பலரை ரயிலில் சந்திப்போம் .

 

ஒருவர் பேச மற்றவர்கள் பெட்டிக்குள் சுறுசுறுப்பாய் துண்டுபிரசுர விநியோகம் நிதி வசூல் என சுழல்வோம். நான் பிரசுர விற்பனைக்கும் என் சகோதரர் தீக்கதிர் விற்பனைக்கும் பொறுப்பு .ரயிலில் உரத்த குரலில் பேசுவது நானும் , உ.ரா.வரதராஜனுமே [அவர் அப்போது ஆர் பி ஐயில் பணியாற்றிய போதும்  துணிந்து செய்வார்]குமாராதாஸ் ஆகியோரே . உண்டி வசூலில் பத்மநாபன் ,ராஜன் ,முண்டன் கில்லாடிகள் .

 

இது முடிந்த பிறகு டீக்கடையில் டீ ,பட்டர் பிஸ்கெட் அதைத் தொடர்ந்து என் குடிசையிலோ பத்மநாபன்  குடிசையிலோ அரசியல் அரட்டை ,விவாதம் அந்த நாட்கள் மறக்க முடியாதவை .

 

பறங்கிமலையிலிருந்து மீனம்பாக்கம் வரை தீக்கதி விநியோகம் செய்வது என் சகோதரர் தோழர் சு.பொ.நாராயணுனும் நானுமே .

 

ஆலந்தூர் ரயில் நிலையத்திற்கு அருகில் மாடியில் இருந்த ஓர் அறையில் அவசரகாலத்தில் பல தோழர்கள் சந்திப்போம் . நான் ,அண்ணாமலை ,வி.பா.கணேசன் , ஹரிபரந்தாமன் , சூணாம்பேடு வரதராசன் , செங்கல்பட்டு ராதாகிருஷ்ணன் ,சி.மணி, போஸ்டல் சின்ராஜ் ,ராஜன்மணி இன்னும் பலர் . ரகசிய கடிதம் செய்திகள் பரிமாற தலைமறைவுத் தலைவர்களோடு உறவு கொள்ள அது ஒரு தகவல் மையம் போல் இயங்கியது . தோழர் ஏ.கே.பத்மநாபன் அடிக்கடி வந்து தகவல் பரிமாறிச் செல்வார்.

 

பழவந்தங்கலில் தோழர் குமாரசாமி அறையில் தலைமறைவாக இருந்த தோழர்கள் பி.ஆர்.பரமேஸ்வரன் ,வே.மீனாட்சிசுந்தரம் போன்றோர் அடிக்கடி வந்து தங்கிச் செல்வர் .தோழர் து .ஜானகிராமன் ,கே.எம்.ஹரிபட் , சிவாஜி மிசாவில் கைதாகிவிட்டனர் .தோழர் சி.பி.தாமோதரனும் இறுதியில் கைதாகிவிட்டார்.

 

ரயில்வே லைனை ஒட்டி பறங்கிமலையில் மார்க்ஸ் மன்றம் இயங்கியது .பின்னர் பழவந்தங்கலில் வெண்மணிப் படிப்பகம் திறந்தோம் . சைதையில் தோழர் வை.கிருஷ்ணசாமி தட்சிணாமூர்த்தியின் அறை இன்னொரு சந்திப்பு மையம் .

 

சேத்துப்பட்டில் செபாஸ்டின் , க.மாதவ் வடபழநியில் கல்யாணசுந்தரம் உடபட பலர் ரயில் மூலம் தினசரி இணைந்து பணியாற்றியவர் ஆவார். சைதையில் உத்தண்டராமன் ,சிவகுமார் [சினிமா பேராசிரியராகிவிட்டவர்] தாம்பரம்தேவப்பிரகாஷ் ,ஸ்டாலின் மணி என பட்டியல் நீளும்.

 

பழவந்தங்கலில் 1976 ல் சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணியை உருவாக்கினோம் . நான் அதன் செயலாளர் .மாவட்ட அமைப்பும் அவசரகால பேயிரிட்டில் உருவாக்கினோம். 1977 முதல் மாவட்ட மாநாட்டில் நான் செயலாளர் ஆனேன் .

 

அப்போது சென்னை பீச்சுக்கு இடையே மின்சார ரயில் மீட்டர் கேஜ் ரயில்தான் .நாலு பெட்டி தான் .கூட்டம் நிரம்பி வழியும் . சிலநேரம் எட்டு பெட்டி இணைக்கப்படும்.  மீட்டர் கேஜை அகலரயில் பாதை ஆக்க வேண்டும் .பெண்களுக்கு தனிப் பெட்டி இணைக்க வேண்டும் . முதலிய கோரிக்கைகளை இணைத்து தினசரி மாலை ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் .கையெழுத்து இயக்கமும் நடத்துவோம் . எங்கள் போராட்டம் பெரும் அறிமுகமானது .பேராதரவு பெருகியது .

 

இந்த ஆர்ப்பாட்டங்களில் நான் பேசும் போது , “ நாங்கள் நெரிசலில் பயணிக்கும் போது  சொகுசு பயணத்துக்கு முதல் வகுப்பு பெட்டி ஏன் ?” என கேட்டேன் .ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த தோழர் என் .சங்கரய்யா என்னை அழைத்து .தினசரி ஆர்ப்பாட்டம் நல்லது .கோரிக்கைகள் நல்லது .பேசும்போது ஜாக்கிரதையாக இருங்கள் .முதல் வகுப்பில் பயணிப்போரை எதிரியாக்க வேண்டாம் . இப்படி சில யோசனைகளைச் சொன்னார் .

 

லட்சம் கையெழுத்துகளுடன் மூர்மார்கெட்டில் இருந்து ரயில்வே தலைமை அலுவலகம் வரை ஊர்வலமாகச் சென்றோம் .டிஜிஎம் கோவில் பிள்ளையை சந்தித்து மனு கொடுத்தோம் .தோழர் அய்யலுதான் அதற்கு ஏற்பாடு செய்தார் .எங்கள் கோரிக்கையை வலுப்படுத்த ஆதாரங்கள் ,புள்ளி விவரங்கள் அவர்தான் தந்தார் .ஆகவேதான் எங்களின் துண்டுப் பிரசுரம் எல்லோரையும் ஈர்த்தது .போராட்டம்  விளைவாய் முதலில் ஒண்பது பெட்டி கோரிகையும் பெண்களுக்கு தனிப்பெட்டி கோரிக்கையும் நிறைவேறியது .பின்னர் அகல ரயில்பாதையும் வந்தது .இதற்கான போராட்டத்திற்கு விதை போட்ட மகிழ்ச்சி நமக்கு இருப்பது இயற்கை .ஆனால் வெற்றியின் உரிமையை வலுவாக பதிவு செய்யத் தவறிவிட்டோம். இதயம் பேசுகிறது இதழில் தோழர் க.சின்னையாவும் ,சரஸ்வதி வரதராஜனும் அளித்த பேச்சியே முக்கிய பதிவு . ராணி மைந்தன் பேட்டி எடுத்திருப்பார் .

 

தூக்குமேடை பாலன் பல்லாவரத்தில் குடியிருந்தார் .அவரை ரயிலில் சந்தித்ததும் அதன் பின் அவரோடு பல நாட்கள் கலந்துரையாடியதும் என் நினைவில் இன்றும் உள்ளது .மலையாள மொழி பெயர்ப்பு நாவல்கள் மீது எனக்கு  அவர் ஈர்ப்பை ஏற்படுத்தியதை மறக்க முடியுமா ? குறிப்பாக  “நூறுபூக்கள் மலரட்டும்” என மலையாளத்தில் உன்னிபுத்தூர் கிருஷ்ணன் எழுதியது என நினைவு. அதுபோல் கேசவதேவ் எனும் எழுத்தாளர் தேசப்பிரிவினையை மையமாக வைத்து எழுதிய பைத்தியக்கார உலகம் போன்றவை புதிய இலக்கியத் தேடலை ஊக்குவித்தன .

 

அவசரகாலத்தில் ஒவ்வொரு ரயில் நிலையச் சுவரிலும் , “கடின உழைப்புக்கு ஈடு இணை ஏதுமில்லை” , “ காலந்தவறாமையே வெற்றியின் முதல்படி” “நாமிருவர் நமக்கிருவர்” இப்படி எண்ணற்ற வாக்கியங்களை மத்திய அரசின் ஆணைப்படி எழுதி வைத்திருப்பார்கள் .நாங்கள் இரவு போய் அதன் கீழே பகடி செய்யும் வார்த்தைகளை எழுதிவிடுவோம் . சுவரெழுத்தில் குமாரதாஸ் நல்ல ஸ்பீடு . தெளிவு . கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை  என்ற வாசகத்தின் கீழ் ஆமாம் ஈடான ஊதியமும் இல்லை ; இணையான போணசும் இல்லை என்று எழுதி வைத்தோம். இப்படி பல .

 

அவசரகாலம் பிரகடனபடுத்தப்பட்ட மறுநாள் முரசொலியில்  இந்திரா முகம் ஹிட்லராக மாறுவதாய் ஒரு கார்ட்டூன் வந்தது .நாங்கள் அதை காப்பி அடித்து பல போஸ்டர்கள் கையால் தயார் செய்து ரயில்களின் உள்பகுதியில் ஒட்டிவிட்டோம். மறுநாள் பரபரப்பானது . படங்கள் வரைவதில் என் இளைய சகோதரர் சு.பொ.ஐயப்பன் கைவண்ணம் உண்டு .

 

பழவந்தங்கலில் தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் நடத்தப்பட்ட கூட்டங்கள் குறிப்பிடத் தக்கன.  “ ஜனநாயகமும் சட்டமும் “ என்ற தலைப்பில் தோழர் சந்துருவும் [ பின்னர் நீதிபதியானவர் ] , “ வியட்நாம் வீரகாவியம்” குறித்து மைதிலி சிவராமனும் நடத்திய  வகுப்புகள் குறிப்பிடத்தக்கன . செந்தில்நாதன் , இளவேனில் பங்கேற்ற தமுஎச கூட்டங்களும் அவசரகாலத்திலும் இயங்கிய பாங்கிற்கு சாட்சி .

 

ரயில் மூன்று நான்கு தோழர்கள் உட்கார்ந்து கொண்டு எதிரும் புதிருமாய் பேசத்தொடங்கி சூடான  அரசியல் விவாதத்தை செய்வோம் . கட்சிப் பிரச்சாரம் இப்படி நடக்கும். ரயிலில் அரசியல் பேசுவதில் மெயில் சுப்பாராவ் , டெலிகிராப் ஊழியர் ஏ.கே.வீரராகவன் தனி முத்திரை பதிப்பார்கள் .

 

அவசரகாலத்தின் போது பல்லாவரம் கல்லுடைக்கும் குவாரி போராட்டம் மிக முக்கியமானது . தோழர் எஸ் .குமாரதாஸின் பங்கு அதில் மிக முக்கியமானது . கிட்டத்தட்ட பலமுன்னணி தோழர்கள் அங்கு செல்வோம் .அப்போது திரிசூலம் ஸ்டேஷன் கிடையாது .மீனம்பாக்கத்திலோ பல்லாவரத்திலோ இறங்கி ரயில் லைன் ஓரமாக நடந்து செல்ல வேண்டும் .மைதிலி சிவராமனை பலமுறை அவ்வாறு அழைத்துச் சென்றுள்ளோம் .

 

மேதினம் ,கட்சிக்கூட்டங்களுக்கு ஏழெட்டு பேர் சிவப்புக் கொடியுடன் ரயிலில் பிரச்சாரம் செய்தபடியே பயணிப்பதும் ; ரயிலின் உட்புறத்தில் தொடர்ந்து கையெழுத்து சுவரொட்டிகள் ஓட்டுவதும் எங்களின் வழக்கமாக இருந்தது .

 

இப்படி என் நினைவலைகள் முன்னும் பின்னும் காலக்கிரமமின்றி அலைபாய்ந்து  பழைய நினைவுகளை முன்னுக்கு கொண்டு வருகிறது .மின்சார ரயிலும் நாங்களும் கட்சியும் பின்னிப் பிணைந்திருந்த நாட்கள்.

 

என்னை கட்சி முழுநேர ஊழியராக கட்சி தேர்ந்தெடுத்த செய்தியை முதன் முதல் ரயிலில் மின்சார ரயிலி பயணித்துக் கொண்டே தோழர் கே.எம்.ஹரிபட் சொன்னபோது நம்ப முடியாமல் திணறிய நொடிகள் மறக்க முடியுமா ?

 

கட்சி முழுநேர ஊழியர் என்றால் , “ அமைப்புக்குள் இயங்குவது ; அமைப்பைக் கட்டுவது , போராடுவது  ;போராடத் திரட்டுவது , தத்துவத்தை இடைவிடாது கற்றுக்கொள்வது ; கற்றுக்கொடுப்பது , படிப்பது படிக்கச் செய்வது ,பயணிப்பது பயணிக்கச் செய்வது , முன்னுதாரணமாய் வாழ்வது ; ஏனையோர் வாழத்தூண்டுவது  ” வேறொன்றுமில்லை என தோழர் பி.ஆர் .பரமேஸ்வரன்  அன்று சொன்னது இன்றும் பசுமையாய்.

 

நெஞ்சில் கனல் மணக்கும் நினைவுகளை அசைபோட அசைபோட நீளும்.

குறிப்பு : கட்டுரை அனுப்பிய பிறகும்  பல செய்திகளும் தோழர்கள் பலரும் நினைவில் வந்து போக இரவு முழுவதும் தூக்கம் கெட்டது .அதிகாலை  கொஞ்சம் கண்ணசந்த நேரம் ஒரு கனவு சேத்துப்பட்டு ரயில் நிலையம் அருகே மூத்த மலையாளித் தோழர் பத்மநாபன் வெற்றிலைபாக்குக் கடையில் நிற்கிறேன். இன்னொரு மூத்த மலையாளித் தோழர் டாக்சி டிரைவர் வருகிறார் . என்ன வாலிபரே என அவரை கேலி செய்கிறார் தோழர்கள் செபாஸ்டினும் மாதவும் . அவர் பெயர் ஞாபகத்துக்கு வரவில்லை . தூக்கம் கலைந்து விட்டது . அவசரகாலத்திலும் அதன் பின்னரும் தோழர்கள் தகவல் பரிமாறவும் சந்திக்கவும் அது ஒரு உயிர் மையமாக இருந்தது அல்லவா ?

 

சு.பொ..

 


சரிதானே நான் சொல்றது ...

Posted by அகத்தீ Labels:

 


மாதந்தோறும் முடிவெட்டுவது போல் , தினசரியோ வாரந்தோறுமோ தாடி ,மீசையை ஒழுங்கு செய்வது போல் , அன்றாடம் தலைவாருவது போல் , அவ்வப்போது தலைக்கு சாயம் பூசுவதுபோல் உங்கள் புத்தக அலமாரியையும் குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுக்கிக் கொண்டே இருந்தால் வீட்டார் மகிழ்வார் .

நீங்கள் வாங்கிய புத்தகங்கள் ,படித்த புத்தகங்கள் அனைத்தையும் காலம் முழுவதும் கட்டிக்காக்க வேண்டியதில்லை .சாத்தியமும் இல்லை . உங்கள் அறிவு முதிர்ச்சிக்கு ஏற்ப தேவையானவற்றை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை தேவைப்படும் பிறருக்கோ நூலகங்களுக்கோ கொடுத்தால் பயன் அதிகமாகுமே !

வீட்டு நூலகம் என்பது எல்லாவற்றையும் அடைத்து வைக்கும் பெட்டி அல்ல ; அது அறிவின் தீபம் அதை அணைய விடாமல் ,புழுபூச்சி அரித்துவிடாமல் ,நூலாம்படை அடைந்துவிடாமல் , சுமையாக ஆகிவிடாமல் அவ்வப்போது தூண்டி விட்டு சுடர்விடச் செய்வது மிகமிக அவசியம்.

சரிதானே நான் சொல்றது ...

சுபொஅ.
24/11/24.


தோல்வியும் இனிதே !

Posted by அகத்தீ Labels:

 


வெற்றிக் கோட்டைத் தொட

வெறிகொண்டு ஓடியவன்

தோல்வியை எதிர்கொண்டபோது

சோர்ந்து புலம்பியவன்

அந்தி சாயும்போது

பேரன் பேத்திகளிடம்

தோற்றுப் போவதில்

எல்லையற்ற ஆனந்தம் கொள்கிறான்.

தோல்வியும் இனிதே !

 

சுபொஅ.

21/11/24.


நரி பரி

Posted by அகத்தீ Labels:

 


நரியை பரியாக்குவதும்

பரியை நரியாக்குவதும்

கடவுளின் பெயரால்

மந்திரிகளின் திருவிளையாடல் !

அன்று மட்டுமா இன்றும்

அதைப்போய்

ஊழல் முறைகேடு திருட்டு மோசடி

எனறெல்லாம் சொல்லலாமோ !

தப்பு ! தப்பு !

கன்னத்தில் போட்டுக்கோ !

அதானியாய நமஹா !

டிமோயாக நமஹா !

நிர்மலாய நமஹா !

அமிதாய நாமஹா !

 

சுபொஅ.

22/11/24.


டீக்கணக்கு ….

Posted by அகத்தீ Labels:

 





டீக்கணக்கு ….
சிறுவனாய் ஓடி ஆடி திரிந்த வேளை
காலையும் மாலையும்
அம்மா தந்த
கருப்பட்டி கடுங்காப்பி
அடிநாக்கில் இன்னும்….
விபரம் தெரிந்த பின்
காப்பி வில்லை , பஞ்சாரை [வெள்ளைச் சர்க்கரை] போட்ட
பால் ஊற்றிய காப்பி
சுவைக்கு பழகிய நாக்கு
தொழிலாளி ஆனபின்
மூன்று நான்கு வேளை
டீ க்கு அடிமையான நாக்கு…
திருமணத்துகு பின்
காலை பெட் காபி
அப்புறம் டீ
அவ்வப்போது
காபியும் கிடைக்கும்
பொதுவாழ்க்கைக்கு வந்தபின்
டீ இன்னொரு உணவானது
நாளைக்கு பத்தோ இருபதோ
கணக்கே இல்லாமல் நீண்டது ..
ஓய்வு பெற்றதும்
ஒட்டிக்கொண்ட சர்க்கரை வியாதி
தினசரி இரண்டு அல்லது மூன்று
சர்க்கரை இல்லா டீ
முதுமையின் அனுபவம்
சர்க்கரை இல்லா லெமன் டீ
புதினா டீ ,ஜீரக டீ , இஞ்சி டீ
ஏதோ ஒன்று
தினசரி இருமுறை …
எப்போதாவது
சர்க்கரை இல்லா டீயோ காபியோ…
அம்மா தந்த
கருப்பட்டி கடுங்காப்பி
அடிநாக்கில் இன்னும்….
சுபொஅ.

எப்போது வரும் ?

Posted by அகத்தீ Labels:

 



சாப்பிடும் போது

தெறித்த கவிதைப் பொறி

கணினியை திறந்ததும்

மறந்து போனது

இப்படித்தான்

கனவில் விரிந்த கற்பனை

எழுத உட்கார்ந்ததும்

ஏனோ நொண்டியடிக்கிறது

பேசுவதை தட்டச்சு செய்யும்

கணினி ’ஆப்’ போல

நினைத்ததும் பதிவாகும்

 ‘பென் டிரைவ் ஆப்’

எப்போது விற்பனைக்கு வரும் ?

 

சுபொஅ.

14/11/24.


காலங்கடந்து நிற்கும் அழியா சித்திரமாய்…

Posted by அகத்தீ Labels:

 





காலங்கடந்து நிற்கும் அழியா சித்திரமாய்…

 

 ”துணி” என்ற முதல்கதை ; ஷேப்பிங் மெஷினின் சூடான பிசிர்கள் காலில் கையில் விழுந்து மூன்றாம் பிறையாய் அரைவட்ட நிலவாய் கருப்பு தழும்புகள் உண்டான அனுபவமும் , பேண்ட் ,சட்டை ஆங்காங்கு பொத்தலான அனுபவமும் நான் தொழிலாளியாய் வேலைபார்த்த நாட்களை என்னுள் படமாய் விரித்தது .கமலாலயனும் என்னைப்போல்   ’டூல் அண்ட் டை மேக்கராய்’ வேலை செய்தவராயிற்றே. சூடுபட்ட அனுபவமே கதையாய் விரிந்துள்ளது .

 

பொதுவாய் கமலாலயன் மென்மையானவர் . அவர் குரல் மட்டுமல்ல எழுத்தும் அப்படித்தான் .ஆனால் பார்வை அழுத்தமானது ; புதிய மானுடத்தைக் கருக்கொண்டது .இந்நூலின் 15 கதைகளுமே அப்படித்தான் .இக்கதைகள் நான் ஏற்கெனவே படித்தவைதான். ஆயினும் இப்போது வாசிக்கும் போதும் நெஞ்சில் ஓர் சிலிர்ப்பை உருவாக்குகிறது .

 

போராட்ட களமும் சிறையும் எப்படி ஒருவனின் மனதில் அப்பிக்கிடந்த பயத்தையும் சுயநலத்தையும் துடைத்தெறிகிறது என்பதை இயல்பாய்ச் சொல்லும்  “ பார்வைகள் மாறும்”கதை .

தாயும் பிள்ளையுமாயினும் வாயும் வயிறும் வேறு வேறு என்பது போல் , கணவனும் மனைவியும் ஆயினும் ரசனையும் சுயமும் வேறு வேறு ஆனால் அதை மிதித்து துவைக்கும் ஆணாதிக்கம் இதை மென்மையாக ஆனால் வலுவாகச் சொல்லும் “ரசனை” .

சொந்த உழைப்பை நம்பி பிழைக்க மல்லுக்கட்டும் மனிதர்களின் வலியை ஒரு சிறு பட்டறையாளன் ஒரு வேன் டிரைவர் மூலம் மனதில் பதியம் போட்டுவிட்ட “ துணைகள்” ,

காக்கை குருவி எங்கள் ஜாதி என பாடுபவரல்ல வாழும் மனிதர்களாய் ,”குருவி குஞ்சுகளும் கலைந்த கூடுகளும்” கதையும் “குருவி” கதையும் இடம் பெற்றுள்ளன .

 

இப்படி ஒவ்வொரு கதையும் வாழ்வின் அன்றாட பாடுகளிலிருந்து முளைத்தவையாய் இருப்பதும் , அதே சமயம் வாழ்வை புதிய கோணத்தில் தரிசிக்க வைப்பதாக அமைந்திருப்பதும்தான் சிறப்பு .

 

44 தாழ்த்தப்பட்ட விவசாயக் கூலிகள் உயிரோடு கொழுத்தப்பட்ட கீழ் வெண்மணியின் துயரமும் கோபமும் கொப்பளிக்கும் சரித்திரத்தை ஒரு பத்திரிகை செய்தியாளர் மூலம் காலங்கடந்து நிற்கும் அழியா சித்திரமாய் படைத்து தந்திருக்கிறார் “தணியாத் தீயின் நாக்குகள்” கதையில் கமலாலயன் . இந்த ஒரு கதை போதும் இந்த நூல் சாகாவரத்தை பெற.

 

இன்னொரு வரலாற்றுக் கதையும் இதே போல் அமைந்து விட்டது . “ மடிகேரியின் கண்ணீர்” . கவுரம்மா என்ற எழுத்தாளரின் கதை .1936 களிலேயே பெண்ணியம் பேசிய ,சுயமாய் உலாவந்த , நீச்சல் ,டென்னீஸ் என ஆற்றலைக் காட்டிய ஓர் இளம் பெண்ணின் மரணத்தில் படிந்த ஆணாதிக்கத்தை read between lines என்பது போல் வரிகளுக்கு இடையே வலுவாய் உணர்த்திய பாங்கு மிகச்சிறப்பு .இக்கதை மிகவும் வலுவானது .

 

நூல் நெடுக பெண்ணியப் பார்வை மிக நுட்பமாய் ஓங்கி ஒலிக்கிறது .கடைசி கதை ,” ஒரு மாலைநேரத்து மயக்கம்” இதன் உயிர் சாட்சி என்றே சொல்லலாம் .ஓர் ஆணும் பெண்ணும் நண்பர்களாகப் பழகும் போது ஏற்படும் சில மனச்சறுக்கல்களை இருவரும் சரியாய் புரிந்து தவறுகளைக் களைந்து நட்பைப் தொடரும் பக்குவமே நட்பின் வேர் . அன்பு என்பது கண்டிக்கவும் அரவணைக்கவும் வழிநடத்தவும் மிகப்பெரும் ஆயுதமாகுமே !

 

 “பறப்பவர்களின் காலம்” ,”பற்றிக்கொள்ள” என்கிற இரண்டு கதைகளும்  அன்றாட நம் பயணத்தில் நாம் கடந்து போகிற காட்சிகள்தாம் .ஆனால் கமலாலயனின் இளகிய மனதில் அவை புதிய கோணத்தில் காட்சியாய் விரிந்துள்ளது .அதுபோல் இதர நான்கு கதைகளும் கூட நம்முள் மென்மையாய் வாழ்வின் பன்முகங்களை பதிய வைக்கிறது .

 

எனக்கு போணஸாக  இந்து தமிழ் தீபாவளி மலரில் வெளிவந்த “ ஒரு துளிக் காற்று” சிறுகதையையும் அனுப்பி இருந்தார் .அக்கதை அமெரிக்காவில் கழுத்தை மிதித்து நசுக்கும் வெள்ளை அதிகார பூட்ஸுக்கு எதிராக கறுப்பர்களின் குரல் ஓங்கி ஒலித்ததில் தொடங்கி , ஆஸ்த்மா நோயாளிகளின் வேதனையை துல்லியமாய் சொல்லி, மூச்சுத்திணறலை நம்மையும் உணரவைத்துவிட்டார் .

 

இந்த சிறுகதைத் தொகுப்பை வாங்கி வாசிப்பீர் ! வாழ்வின் வலிகளூடே புதிய மானுட அறத்தைப் பேண ஒரு பற்றுக்கோடு அகப்படும் !

 

 

இராமயணத்தை ,மகாபாரதத்தை திரும்பத் திரும்ப பல்வேறு கோணங்களில் எழுதிக் குவித்துக் கொண்டே இருக்கிறார்கள் .இந்த பண்பாட்டுத் திணிப்புக்கு எதிராய் நாம் நம் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் திரும்பத் திரும்ப பல்வேறு கோணங்களில் எழுத வேண்டாமா ? வந்தவை சிலவே .அவை போதாது .கமலாலன் சென்ற வருடமே மணிமேகலையை மறுவாசிப்பு செய்து ஓர் நாவல் எழுதத் தொடங்கியதை நான் அறிவேன் . வரும் ஆண்டிலாவது அந்த நாவல் அச்சேறச் செய்வாராக ! இது என் வேண்டுகோள் மட்டுமல்ல ;அன்புக் கட்டளையும்கூட.

 

தணியாத் தீயின் நாக்குகள் , [சிறுகதைத் தொகுப்பு] ஆசிரியர் : கமலாலயன் , வெளியீடு : பரிசல் புத்தக நிலையம் ,தொடர்புக்கு : 9382853646 /8825767500 மின்னஞ்சல் :  parisalbooks2021@gmail.com பக்கங்கள் : 156 , விலை :ரூ.160/

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

13/11/24.