பூனைக்கு யாராவது மணிகட்டத்தானே வேண்டும்.

Posted by அகத்தீ Labels:

 

சிறுகதை .9.

 

 [ பிரச்சார சிறுகதையே என உறுதி அளிக்கிறேன் ]

 

 


பூனைக்கு யாராவது

மணிகட்டத்தானே வேண்டும்.

 

 

 

 

அலுவலகத்தில் பணி புரியும் வந்தனா விபத்தில் கையொடிந்து படுக்கையில் கிடந்தாள் . அலுவலகம் வரும் வழியில் ஸ்கூட்டர் சாலையிலுள்ள பள்ளத்தில் தடுமாறி கீழே விழுந்ததால் இடது கையில் முறிவு ; சிறிய அறுவை சிகிட்சைக்குப் பின் வீட்டில் மருத்துவ விடுப்பில் ஓய்வில் இருந்தாள் .

 

ராமலிங்கம் ,ராமசுப்பு .ரெஜினா ,ஹேமா ,சியாமளா ,பத்மா .வேணுகோபால் , நாகபூசன் எல்லோரும் பார்க்க வந்திருந்தனர்.

 

 “ தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சுன்னு நெனச்சுக்க …” என்றாள் சியாமளா.

 

 “ ஹெல்மட் போட்டிருந்ததால தலையும் உயிரும் தப்பிச்சுன்னு சொல்லணும்..” ராமலிங்கம் சொன்னார் .

 

 “ ஏதோ இவ நல்ல நேரம் இதோடு போச்சு அப்ப ஏதாச்சும் தண்ணீர் லாரி வந்திருந்தா ?” பத்மா அதிர்ச்சியை சொன்னாள் .

 

 “ சனிப் பெயர்ச்சி தன் கைவரிசையைக் காட்டி இருக்கு…  கடக ராசிக்கு இந்த சனிப் பெயர்ச்சி நல்லதில்லை …” ராமசுப்பு தன் சோதிடப் புலமையையும் அக்கறையையும் சேர்ந்து கண்ணீர் விட்டார் .

 

 “ கை கொஞ்சம் குணமானதும் ஒரு எட்டு திருநள்ளாறு போய்வந்திரு வந்தனா !”என சியாமளா அக்கறையைக் குழைத்து அலோசனை நல்கினாள்.

 

“ உங்க மாமியார்ட்ட சொல்லி குலதெய்வத்த வேண்டி மஞ்ச துணியில காச முடிஞ்சு வை..” பத்மா தன் பங்கிற்கு அட்வைசினாள்.

 

 “ இப்ப கொஞ்சம் நல்ல சாப்பாடு சாப்பிடணும் … நீ நான்வெஜ்தானே … ஆட்டுக்கால் சூப்பு வச்சு குடி …” ரெஜினா யோசனை .

 

 “ அப்பாடா !ரெஜீனா நீ ஒருத்திதான் உருப்படியா யோசனை சொல்லியிருக்க..” என ராமலிங்கம் சொன்னதும் எல்லோரும் முறைத்தனர் .

 

 “ உனக்கு நம்பிக்கை இல்லாம இருக்கலாம் … இவா கடக ராசி இந்த சனிப் பெயர்ச்சி கரெக்டா வேலையைக் காட்டி இருக்கே !” என ராமசுப்பு சந்தடி சாக்கில தன் அபிப்பிராயத்துக்கு வலு சேர்க்க முயற்சித்தார் .

 

 “ உன் ராசிக்கு அதிர்ஷ்டக் காற்று வீசப் போகுதுன்னு  நேற்றுதானே சொன்னே இண்ணைக்கு உனக்கு சஸ்பென்சன் ஆர்டர் வந்திருக்கே அதுக்கு என்ன சொல்லுவே …???” ராமலிங்கம் திருப்பி அடிக்க ,

 

“ இத அவரு சொல்லவே இல்லையே …” என ரெஜினா வருந்தினாள்.

 

“ ஆடிட்டின் போது ஸ்டாக் குறையுதுன்னு மெமோ கொடுத்திருக்காங்க … அதுக்கு இவரு கொடுத்த பதில் சரியா இல்லேண்ணு இப்போ சஸ்பென்சன் கொடுத்திருக்கா …” என சியாமளா சொன்னாள்

 

பேச்சு வந்தனாவிடமிருந்து ராமசுப்பு பக்கம் திரும்ப  , வந்தனா சிரித்தாள் .

 

“ அதை விடுங்க , கொஞ்சம் கேர்லஸ்ஸா இருந்திருக்காரு .. இன்னொரு தரம் யோசிச்சு பதில் சொல்லி சஸ்பென்சன கேன்சல் செய்ய வைக்கலாம்…” ராமலிங்கம் சொல்ல நிம்மதி பெருமூச்சு சூழந்தது .

 

எல்லோருக்கும் காபி வந்தது .குடித்துவிட்டு . ஒரு சிறு தொகையை ஒரு கவரில் போட்டு வந்தனாவிடும் கொடுத்தனர் .

 

 “ எதுக்குங்க காசெல்லாம் கொடுக்கிறீங்க …” என வந்தனா கேட்டாள் .

 

“ பார்க்க வரும் போது ஆப்பிள் வாங்கலாம் ,ஆரஞ்சு வாங்கலாம் ,காம்பிளான் வாங்கலாம்னு ஆளுக்கொரு யோசனை சொன்னாங்க … ராமலிங்கம் சார்தான் சொன்னாரு காசு கொடுக்கலாம்னு…” பத்மா உண்மையைப் போட்டுடைத்தாள்.

 

“அங்க பாருங்க ராமலிங்கம் சார் சொன்னமாதிரி  வீடு முழுக்க பழமும் ஹார்லிக்சும்தான்  அடைஞ்சு கிடக்கு … நோயாளிக்கு என்ன தேவை  என்ன இல்லைன்னு தெரிஞ்சுக்காமல் எதையோ வாங்கிப் போறது  சடங்குத் தனம்னு சார் சொன்னது சரிதானே…” ஹேமா சொல்லவும் ,எல்லோர் தலையும் ஆட்டினர் .

 

 “ சார் ! எனக்கு காச வாங்க ஒரு மாதிரியா இருக்கு ..” என்றாள் வந்தனா .

 

“ பார்த்தேளா ! அதுக்குத்தான் நான் அப்போதே சொன்னேன்..” என ராமசுப்பு இழுத்தார் .

 

“ நீங்க வந்ததே போதும் … காசு அது இதுன்னு எதுக்கு ?” வந்தனா சொல்ல ,

 

 “ அதுக்காக கையை நீட்டிட்டா வரமுடியும் ?” வேணுகோபால் கேட்டார் .

 

“ அதுதாம் மெடிக்கல் இன்சுரன்ஸ் இருக்கில்ல…” என்றாள் வந்தனா.

 

 “ அதுல 65 அல்லது 75 பிரசண்டேஜ் தருவாங்க மீதி நாமதான கட்டணும் .. அதுலேயும் தனியார் ஹாஸ்பிடல்ன்னா இன்சுரன்ஸ்ன்னு சொன்னாலே பில் கண்டமேனிக்கு போட்டுறான் … நம்ம பர்ஸ புடுங்காமல் ட்டிரீட்மெண்ட் இல்ல..” நாகபூசனம் விளக்கினார் .

 

 “ ஆமாம் … ஆமாம் ..” என எல்லோரும் தலையாட்டினர் .

 

 “ கெளரி பொண்ணுக்கு எப்போ கல்யாணம் … நான் வரமுடியாது .. என் பங்கு எவ்வளவுன்னு சொல்லுங்க கொடுத்திடுறேன்..” வந்தனா கேட்டாள் .

 

 திருமண கிப்ட் என்ன கொடுக்கலாம்னு பேச்சு திரும்பிச்சு ..

 

ஆளுக்கு ஒண்ணு சொல்ல …  “ராமசுப்பு இடையிட்டு மொதல்ல அவர்ட்ட கேளுங்கப்பா ன்னு ” பால ராமலிங்கம் பக்கம் தள்ளிவிட்டார் ராமசுப்பு.

 

வேணுகோபாலண்ணேன் உங்க வீட்டு கிரஹ பிரவேசத்துக்கு எத்தனை கடிகாரம் வந்திச்சுன்னு ராமலிங்கம் கேட்க …”

 

“ 18 கடிகாரம் 21 மில்க் குக்கர் ..” வேணுகோபால் பட்டியலை சொல்லத் தொடங்க …

 

“ வர்ற கிப்டெல்லாம் இப்படித்தான் வருது …” ராமசுப்பு அலுத்துக் கொண்டார் .

 “ அட ! எந்த பப்ளிக் பங்க்‌ஷனுக்கு போனாலும் ஏதோ மொமண்டம் ,சீல்டுன்னு ஒண்ணக் கொடுத்திடுறாங்க .. சால்வன்னு ஒண்ணை போத்திடுறாங்க ..அதெல்லாம் எதுக்கு ? அதனாலே என்ன உபயோகம்? இன்னைக்கு வரத் தெரியல .. எடத்தத்தான் அடைக்குது ” என ராமலிங்கம் சொல்ல எல்லோரும் அவரவர் பங்குக்கு பேசித் தீர்த்தனர் .

 

“ மரியாதை ,அன்பு ,கவுரவம் ,பாராட்டு  எல்லாம் சரி ! பணத்தை கொட்டும் போது எல்லோரும் யோசிச்சா நல்லது … இதத் திணிக்க முடியாது … நம்ம பண்பாடு மாறணும் …”

 

“ சம்மந்தப்பட்டவங்கள் கேட்டு செய்யலாம்னா அதுக்கும் இடமில்லை … கேட்க நமக்கு தயக்கம் , சொல்ல அவங்களுக்குத் தயக்கம் … என்ன செய்ய ?”

 

“ நான் திண்டுக்கல் புத்தக திருவிழாவுக்கு பேசப் போயிருந்தப்போ … மொதல்ல சுற்றிப் பார்த்தேன் … கூடவந்த விழா ஒருங்கிணைப்பாளர் ,” சார் ! நீங்க ஏதாவது உங்களுக்குத் தேவையான புத்தகத்தை சொல்லுங்கோ என்றார் … நான் தயங்கினேன் .. பின் சொன்னேன் … அதையே நினைவுப் பரிசாகக் கொடுத்தாங்க…” ராமலிங்கம் சொன்னார் .

 

 “ சார் !கெளரி பொண்ணு கல்யாணத்துக்கு காசில்லாமல் திணறுறா … நான்கூட ஒரு லோணுக்கு அரேஞ் பண்ணினேன் … பேசாமல் காசாக கெளரி கையில கொடுத்திரலாம் …” ஹேமா சொல்ல அதுவே முடிவானது .

 

ஆபிஸ்ல எல்லோருக்கும் இப்படி சொல்லியே லிஸ்ட் எடுப்போம்னு ராமலிங்கம் முடித்துவைத்தார் .

 

 “ எப்பம்மா ஆபிஸ் வருவே ..” ராமசுப்பு கேட்டார் .

 

“ சனிக்கிழமை கட்ட பிரிச்சிருவாங்க … அப்புறம் பிசியோதெரபிதான் … அப்புறம் வரவேண்டியதுதான் .. திங்கள் அல்லது புதன் ..”

 

“ புதன்தான் நல்லநாளு அண்ணைக்கே ஜாயிண்ட் பண்ணு … டைம் பார்த்துச் சொல்றேன் … மொதல்ல கோயிலுக்கு போயிட்டு வந்திடு” ராமசுப்பு விடாமல் தன் பஞ்சாங்க யோசனையைச் சொன்னார் .

 

ராமலிங்கம் சத்தம் போட்டு சிரித்தார் .

 

“ ஏன் சார் ! சிரிக்கிறீங்க ! இதெல்லாம் நம்புறவங்களுக்குத்தான் புரியும்” என ராமசுப்பு குரலை உயர்த்தினார் .

 

 “ சரி ! நம்புங்க ! விரல்ல அஞ்சு சொடக்கு போடுங்க எல்லோரும் ..” ராமலிங்கம் சொல்ல ,

 

“ ஏன் ? ஏன் ?” என எல்லோரும் கேட்க,

 

 “ பரவாயில்லையே பகுத்தறிவு வந்திடிச்சே ! போடுங்க சொல்றேன்..”

 

எல்லோரு சொடக்கு போட்டனர் .

 

 “ நாம இங்க சொடக்கு போட்ட நேரத்தில யாருக்கோ எங்கேயோ குழந்தை பொறந்திருக்குமா இல்லையா ?”

 

“ இதென்ன கேள்வி .. நிச்சயம் பிறந்திருக்கும்”

 

“ யாரோ எங்கேயோ செத்திருப்பாங்களா இல்லையா ?”

 

“ ஆமா ஆமா “

 

“ அப்போ ! இது யாருக்கு நல்ல நேரம் யாருக்கு கெட்ட நேரம் ?”

 

 “ ஆள விடு ராமலிங்கம் ! புறப்படுவோம் நேரம் ஆகிட்டே போகுது … வந்தனா நாங்க வரட்டா …”

 

எல்லோரும் கிளம்பினர் .

 

வழியில் ரெஜினா ஹேமாவிடம் சொன்னாள் , “ ராமலிங்கம் சார் ! சொல்றது சரிதான் ஆனாலும் ராகு காலம் ,எமகண்டம் ,சுபமுகூர்த்தம் இதெல்லாம் பார்க்காமல் நாம எதாவது செய்ய முடியுதா ? நாம நினைச்சாலும் வீட்டிலுள்ளோர் .. சுற்றி இருப்பவங்க பாடாய்ப்படுத்திவிடுறாங்களே … என்ன செய்ய ..”

 

 “ கஷ்டம்தான் ஆனாலும் இந்த பூனைக்கு யாராவது மணிகட்டத்தானே வேண்டும்..” என்றார் அருகில் இருந்த வேணுகோபால் .

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

4/12/2022.

 

 


 

 


0 comments :

Post a Comment