சிதைக்கப்பட்ட வாழ்க்கைச் சித்திரம்

Posted by அகத்தீ Labels:









சிதைக்கப்பட்ட வாழ்க்கையின் சித்திரம்


தேநீர் இடைவேளை(நாவல்),
ஆசிரியர் : சுப்ரபாரதிமணியன்,
41-பி , சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் ,
அம்பத்தூர், சென்னை - 600 098.
பக் : 102, விலை : ரூ. 85/

ஒரு புறம் பெரிய பெரிய பஞ்சாலைகள் மூடப்படுகின்றன . மறுபுறம் நகருக்கு வெளியே சிறிய சிறிய ஆலைகள் முளைக்கின்றன . இங்கு ஆண்களும் , பெண்களும் நவீனக் கொத்தடிமைகளாய் படும் அவதியும் அவலமும் நம்மை திடுக்குற வைக்கிறது . இந்த நாவலின் கதாநாயகன் யார் ? அப்படி யாருமில்லை? வில்லன் ? அது இந்த சமூக அமைப்பே . அதுதான் இந்நாவல் .வழக்கமான கதை சொல்லும் பாணி இங்கு இல்லை . முதல் பகுதியில் 10 கடிதங்கள் . அந்தக் கடிதங்கள் மூலம் சுமங்கலித் திட்டம் என்கிற மாயவலை , வேலையின்மை எனும் நெருக்கடியால் பொறியில் சிக்கிய எலியாய் வாழ்க்கை ,வறுத்தெடுக்கும் நோய் , கடன் எனும் மூழ்கடிக்கும் புதைசகதி ,குடியிருப்பு என நாமம் சூட்டப்பட்ட கொட்டடி ; சிறைக்கொட்டடிக் கொப்பான சீரழிவு , உரிமையை கேட்கவும் முடியா விலங்கு ,வயிற்றுப்பசி மட்டுமல்ல வாட்டும் உடல் பசியும் வாழ்வின் ரணமும் வலியும் வேதனையும் என எவ்வளவோ செய்திகள் ; படிக்கும் போதே மனது வலிக்கிறது . மூலதனத்தின் மூர்க்க வெறியால் சின்னாபின்னமாக்கப்பட்ட -சிதைக்கப்பட்ட வாழ்க்கை சித்திரமே ஒவ்வொரு கடிதமும் எனில் மிகை அல்ல.மல்லிகா , ரங்கநாதன் , செந்தில் ,அந்தோணிராஜ் இன்னும் பலர் வருகின்றனர் . இவர்கள் தனித்தனியாகப் பேசுகின்றனர். ஆயினும் அதில் ஒரு தொடர்ச்சியும் இருக்கிறது .

அத்தொழில் சார்ந்தும் சமூகம் சார்ந்தும் அவலத்தை அழுத்தமாகவே பதிவு செய்கிறது .அதே சமயம் அடுத்த இரு அத்தியாயங்களை ஆவலோடுபுரட்டினால் ஏதோ ஒரு வெறுமை சூழ்கிறது .அந்தோணிராஜ் டைரிக்குறிப்புகளைச் சொல்லும் இரண்டாம் பாகமும் , செந்திலின் டைரிக் குறிப்பாய் நீளும் மூன்றாம் பாகமும் என்ன சொல்ல வருகிறது ? அந்தோணி ராஜ் மூலம் சொல்லவரும் அரசியல் செய்தியாகட்டும் செந்தில் மூலம் படைப்பனுபவமாகட்டும் எதைச் சொல்லுகிறார் ?என்னுள் எழும் கேள்வி கோவைஞானிக்கும் எழுந்திருக்கிறது . முன்னுரையில் அவர் குறிப்பிடுகிறார் ;

 “இந்த நாவலில் ஷேக்ஸ்பியரைப் பற்றி .எம்.எஸ்.ஐப் பற்றிச் சொல்லித்தான் ஆகவேண்டுமா? நாவல் எந்த வடிவிலும் எதையும் எழுதி வைக்கலாம் என்ற பின் நவீனத்துவ விதியை இப்படி கடைப் பிடிக்கத்தான் வேண்டுமா ? மல்லிகா முதலியவர்களின் வாழ்க்கை பற்றி நாம் நமக்குள் தேடுகிறோம் . அவர்களுக்கெல்லாம் வாழ்க்கை அநேகமாக முடிந்துவிட்டது என்பது உண்மைதான் . கொட்டடிகளை விட்டு வெளியில் சென்ற பிறகு நோய்நொடிகளோடு வாழ்ந்து சாவார்கள் . இந்தக் கதையை ஏன் தொடர்ந்து சொல்லக்கூடாது ? செந்திலுக்கோ ராஜேந்திரனுக்கோ தன் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள வழியில்லை . நாம் புரிந்து கொள்கிறோம் . யதார்த்தவாதம் என்ற வடிவத்திற்குள்ளாகவே இவர்களின் அவலங்களைச் சொல்ல முடியாதா என்ன? நாவலின் வடிவத்தைச் சிதைப்பது என்பது இப்படித்தான் இருக்க வேண்டுமா ? இப்படி வடிவத்தைச் சிதைப்பதின் மூலம் நாவலாசிரியருக்கோ நமக்கோ கூடுதலாக சுதந்திரம் கிடைக்கிறதா ? இப்படியெல்லாம் வாசகனைத் திணற அடிப்பதின் மூலம் நாவலாசிரியர் எதைச் சாதிக்க விரும்புகிறார் ?”


இக்கேள்விகள் இந்நாவலோடு சம்மந்தப்பட்டது மட்டுமல்ல ..

இவ்வளவுக்கு இடையிலும் முதல் பகுதி - அந்த பத்து கடிதங்கள் நெஞ்சைப் பிசையத்தான் செய்கின்றன . சிதைக்கப்பட்ட வாழ்வின் அவலங்களை உள்வாங்கி சமூகக் கோபத்தைப் பற்ற வைக்க இந்நூல்பயன்படுமே ! படியுங்கள்!


சு.பொ.அகத்தியலிங்கம்
நன்றீ : தீக்கதிர் புத்தக மேசை 13-09-2015


0 comments :

Post a Comment