ஒத்திகைப் பார்த்து அரங்கேற்ற நாடகமா வாழ்க்கை?

Posted by அகத்தீ Labels:

 https://mail-attachment.googleusercontent.com/attachment/?ui=2&ik=a1c27c2814&view=att&th=13b838c14f692270&attid=0.3&disp=inline&realattid=f_haj8fod12&safe=1&zw&saduie=AG9B_P8Jwgzgm1gYsL_arrEyuBOH&sadet=1355123033016&sads=YSweoaE1i5fYOqN0gjZLSSfi3zw&sadssc=1


ஒத்திகைப் பார்த்து அரங்கேற்ற 
நாடகமா வாழ்க்கை?

சு.பொ. அகத்தியலிங்கம்


[திருமணம் குறித்து ஆறுகட்டுரைகளுக்குத் திட்டமிட்டேன் இது ஐந்தாவது  நிறைவுக் கட்டுரை.12-08-2012 , 30-09-2012 , 14-10--2012,  4-11-2012 மற்றும் 18-11-2012 தேதிகளில் முந்தைய கட்டுரைகளின் பதிவைக் காண்க.]
இந்த அலசல் தொடர் எழுதத் துவங்கிய பிறகு நிறைய மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள். இன்று இதை எழுதிக்கொண்டிருக்கும்போது ஒரு அலைபேசி அழைப்பு. நண்பர் பேசிக்கொண்டிருந்தபோது அவர் மனைவி அலைபேசியை வாங்கிப் பேசினார். ” ரசிக்கத் தெரியாதவருடனும் சிரிக்கத் தெரியாதவருடனும் எப்படி வாழ்வது?”நான் சொன்னேன்,  “ ரொம்ப கஷ்டம்தான்.”

ஆம். அவர் கேள்வி நியாயமானது. கணவனோ மனைவியோ எதையும் ரசித்து அனுபவிக்காமல் - சுவைத்து இன்புறாமல் - கேலி, வேடிக்கை , விளையாட்டு இவற்றை சிரித்த முகத்தோடு எதிர்கொள்ளாமல் - எப்போதும் இறுகிய முகத்தோடும் விறைப்பாகவும் இருந்தால் தாம்பத்தியம் சங்கீதமாக இருக்காது. அபசுரமாகவே ஒலிக்கும். பாராட்டுவதால் நமக்கு எந்த நட்டமும் இல்லை. ஆனால் பிணைப்பு வலுப்பெறும். ரசிக்கப் பழகுங்கள் - சிரிக்கப் பழகுங்கள்  - பாராட்டப் பழகுங்கள்  வாழ்த்தப் பழகுங்கள்;  வாழ்வில் சுவைகூடிக்கொண்டே இருக்கும்.

“இருபது வருடம்
குடும்பம் நடத்தி முடிந்த பின்
ஒரு நாள் சண்டையின் போது
பரஸ்பரம்
பரிமாறிக் கொண்ட வார்த்தைகள்:
ஏமாற்றித் தலையில் கட்டிவிட்டனர்.”
-எப்போதோ படித்த கவிதை வரிகள் இவை. நிறையப்பேர் வாழ்க்கையில் இது உறுத்தும் நிஜமல்லவா!

 “ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்” என்பது பழமொழி. இது என்ன கணக்கு என்பதறியோம். ஆனால் திருமணமான கொஞ்ச நாளிலேயே சின்னச் சின்னக் கசப்புகள் தலைதூக்கத் துவங்கி விடுகின்றன. இதற்கு சரியான முறையில் முகங்கொடுக்கத் தவறினால் கசப்பு காயமாகிறது. எல்லாக் காயங்களையும் காலம் ஆற்றிவிடுவதில்லை. சில காயங்கள் தானே காய்ந்து உதிர்ந்துவிடும். சில காயங்கள் நாள்பட்ட ரணமாகி சீழ்பிடித்துவிடும். அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிலை கூட வரலாம்.  மணமுறிவுக்கு இட்டுச்சென்றுவிடலாம். அல்லது வாழ்க்கை சுமையாகிவிடலாம். ஈரக்கம்பளியைப் போர்த்திக் கொண்டு மழையில் நனைபவர் கதியாய் வாழ்க்கை ஆகிப்போவதை யார்தாம் விரும்புவார்? வீம்பும் வறட்டுப்பிடிவாதமும் அப்படித்தான் ஆக்கிவிடும். எனவே சிலவற்றை மனம் திறந்து பேசுவது நல்லது.

நேற்று சண்டை, இன்று சரசம்
நேற்று இரவு குடித்துவிட்டு வந்த கணவன் மனைவியை அடிக்க, மனைவி திருப்பி அடிக்க அந்த குடிசைப் பகுதியே ரணகளமாக இருந்தது. இன்று காலையில் குத்துக்கல்லில் உட்கார்ந்து இருவரும் கொஞ்சிக்கொண்டிருக்கின்றனர். அது எப்படி சாத்தியமாயிற்று ? அவர்களுக்குள் எதுவும் ஒளிவு மறைவு கிடையாது. கோபதாபங்களை அவ்வப்போது செட்டில் செய்து விடுவார்கள். சிக்கல் அதிகமானால் வெட்டிக் கொண்டு பிரிந்து விடுவார்கள். அவரவருக்கான இன்னொருவாழ்வை அமைத்துக்கொள்வார்கள். ஏனெனில் யாரும் யாரையும் சார்ந்து இல்லை. இருவரும் உழைப்பவர்கள். உண்பவர்கள். சேமிப்பும் இல்லை, சொத்தும் இல்லை, நாளையைப் பற்றிய பயமும் இல்லை. அன்றாடம் செத்துப்பிழைக்கிற வாழ்வுதான், ஆயினும் அதில் அவர்கள்  சுதந்திரமாய் இருக்கின்றனர். அவர்களின் வாழ்க்கைத்தரம் படுபாதாளத்தில் தொடர்ந்து இருப்பது ஆரோக்கியமல்ல. அதுகுறித்தும் பேசலாம். ஆனால் அது வேறு தளம். 

சமூகத்தின் மேல்தட்டில் இருப்பவர்களுக்கு அமையும் பணம் சார்ந்த கட்டற்ற வாழ்க்கையும், எதுவுமற்ற அடித்தட்டு மக்களின் வறுமை சார்ந்த சுதந்திர வாழ்க்கையும் வேறுவேறானவை. ஆயினும் அவர்கள் இருசாராரும் பிடிக்காததை சுமந்துகொண்டு அழுவதில்லை. ஆனால் இடைப்பட்ட தட்டில் வாழ்வோர்தான் போலிப்பெருமை, சாதி வீம்பு, சம்பிரதாயத் தளை, சடங்குகளென்னும் விலங்கு... இவை போன்றவற்றில் சிறைப்படுத்திக் கொண்டு தாங்களும் அழுகிறார்கள். மற்றவர்களையும் நோகவைக்கிறார்கள். 

இதை உடைக்க முயல்கிறபோது பெண் தரப்பிலிருந்தே பொதுவாக முட்டுக்கட்டை போடப்படுகிறது. சில இடங்களில் ஆண்களும் அப்படியே. அல்லது   “ எனக்கு ஒண்ணும் இல்லை..ஆனால் மனைவி ஒத்துக்க மாட்டேங்கிறாங்க. வீட்ல ஒரே சண்டை,” -என பழியைப் பெண் தலையில் தூக்கிப்போட்டுத் தப்பிவிடுகிறார்கள். உரசலே இல்லாமல் சீர்திருத்தங்களை ஒருபோதும் அமல்படுத்த முடியாது. சில சீர்திருத்தங்களைப் பற்றியொழுக குடும்ப ஜனநாயகத்தில் சற்று அத்துமீறல்கள் செய்தால் தப்பில்லை.

சுயநலம் சார்ந்த ஆதிக்கம் தவறு. அதேசமயம் கோட்பாட்டில் பற்றி நிற்கும்போது சில கசப்புகள் தவிர்க்கமுடியாதுதான். மூடப் பழக்கவழக்கங்களை உடைத்தெறிய வலியை, சமூக எதிர்ப்பை, சொந்தபந்தங்களின் விமர்சனங்களை நீங்கள் தாங்கி நில்லுங்கள். இன்று தூற்றுவோரும் நாளை போற்றுவார்கள். அறிவியலும் சமத்துவமும் அன்பும் கலந்த புதிய வாழ்க்கைப் பண்பாட்டை படைத்து உங்கள் சந்ததி நாளை முன்னேறுவார்கள். பிரசவவலி போன்றதுதான் சாதி, சடங்கு, சம்பிரதாயங்களை மூடப்பழக்கங்களை மீறுவதால் ஏற்படும் வலி. இதை உணர்தலும், உணர்த்துதலும் வேண்டும்.

நீளும் சங்கிலி

குடும்பம் என்பது கணவன் மனைவிமட்டுமல்ல. கணவனின் அம்மா, அப்பா, சகோதரர்கள், சகோதரிகள் அதுபோல் மனைவிக்கும் அம்மா, அப்பா, சகோதரர்கள், சகோதரிகள் என உறவுச் சங்கிலி நீளும். எல்லோரையும் எப்போதும் திருப்திப் படுத்துவது சாத்தியம் இல்லை. ஆனால் இயன்றவரை அனுசரித்துப் போகப் பழக வேண்டும். சிலரிடம் பேசப்பேச புரிதல் மேம்படும். சிலரிடம் மவுனம் காப்பதே இருவருக்கும் நல்லதாக இருக்கும். முடிந்தவரை யாரையும் வெட்டிவிடாமல் நிறை குறைகளோடு அங்கீகரித்து வாழ்வதே உத்தமம். அவரவர் வாழ்க்கைக்கு ஒரு நியாயம் இருக்கும். அதைப் புரிய முயன்றாலே பாதி சிக்கல் அவிழும். யார் மீது உனக்குக் கோபமோ அவராக ஒரு நிமிடம் உன்னைக் கற்பனை செய்து அவர் தரப்பு நியாயங்களை அசைபோட்டால் பிரச்சனை தீரலாம், அல்லது காரம் குறையலாம். கணவன் மனைவி இடையே ஏற்படும் மனஸ்தாபங்களையும் இப்படி பரிசீலித்தால் விடை தானே பிறக்கும். மூன்றாம் நபர் சமரசத்தைவிட இது மேலானது. 

கோபம் பலவகைகளில் வாழ்க்கையை நரகமாக்கும். ஆயினும்   ‘கோபப்படாமலே வாழ்க’ என்பது வெறும் திண்ணைத்தூங்கி வேதாந்தமாகத்தான் இருக்கும். நடைமுறையில் குடும்பத்தில் சிலவற்றை சகித்துக்கொள்வதும் கூட ஆபத்துதான். வாழ்க்கையில் எங்கே கோபப் படுகிறோம் எதற்குக் கோபப்படுகிறோம் என்பதுதான் முக்கியம்.

ஒரு குட்டிக்கதை இங்கு  நம் கண்ணைத் திறக்கும் . ஒரு நல்ல பாம்பிடம்  “இனி யாரையும் கொத்தாதே ”என ஒரு ஞானி புத்திமதி சொன்னார். பாம்பும் திருந்தியது. கொத்துவதை நிறுத்தி சாந்தசொரூபி ஆகிவிட்டது. சில நாள் பொறுத்து அந்தப் பாம்பு குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடப்பதைப் பார்த்து ஏன் இப்படி என ஞானி விசாரித்தார்.  “அமைதியாக இருப்பதால் எல்லோரும் அடிக்கிறார்கள், ”என்றது பாம்பு.  “உன்னிடம் கொத்தாதே என்றுதானே சொன்னேன், சீறாதே என்று சொல்லவில்லையே, ”என்றார் ஞானி. பாம்புக்குப் புரிந்தது. பிழைத்தது.

படுக்கையறைக்குப் பள்ளியறை என்ற பெயரும் உண்டு தமிழில். அது மிகப் பொருத்தமானது. அது வாழ்க்கையின் சுருதியை சரியாக மீட்டுவதற்குக் கற்றுத்தரும் பள்ளியல்லவா! மன்மதக்கலை சொல்லித் தெரிவதில்லை என்பது தப்பான பார்வை. பாலியல் குறித்த அரைகுறை ஞானம் பல பிரச்சனைகளுக்கு காரணமாகிவிடும். வாழ்க்கைப் பாடத்தை அன்றாடம் சொல்லித் தரும் பள்ளியறையை சரியாக பயன்படுத்த மருத்துவ மனநல அறிவியல் ரீதியான புரிதல் தேவை. அரைகுறை செக்ஸ் வைத்திய வியாபாரிகளிடம் யோசனை கேட்டு ஏமாந்துவிடக்கூடாது. நேர்மையான மருத்துவரிடம் யோசனை பெறுவது அவசியம். படுக்கையறை திருப்தியும் மகிழ்ச்சியும் வாழ்க்கை சமுத்திரத்தில் நீந்தவும் முத்துக்குளிக்கவும் நம்பிக்கைதரும். காதல் என்பது வாழ்க்கையின் கடைசித் துளிவரை உயிர்த்துடிப்பு தரும் அமுதமாகும். ஆம் முதுமையிலும் காதல் வற்றாது. கடைசிவரை கூட வரும். ஆனால்...

சிக்கல்களின் வேர்

இந்திய சமூகத்தில் பெண்ணுக்கோ பையனுக்கோ திருமணம் முடிந்தாலே பெரியவர்களுக்கு இனி என்ன வேண்டியிருக்கிறது என்கிற தப்பான கண்ணோட்டம் உள்ளது. பல குடும்பச் சிக்கல்களின் வேராக இது உள்ளது. இது போக்கப்பட வேண்டும். சாகும் வரை அவரவருக்கான வாழ்க்கை இருக்கிறது. காதல் உண்டு. ஆசாபாசங்கள் உண்டு. விருப்பு வெறுப்பு உண்டு. முதியோரின் வாழ்வுரிமையை வெறுமே அங்கீகரிப்பது மட்டுமல்ல, உரிய கவுரவம் அளிப்பதும் அவசியம். வீட்டில் இட நெருக்கடிகூட பலர் மன அழுத்தத்தை அதிகரிக்குமே!  கணவனின் பெற்றோரை மனைவியும், மனைவியின் பெற்றோரை கணவனும் மதிக்கக் கற்றுக் கொண்டால் வாழ்க்கை இனிக்கும்.

பெரியவர்களின் ஆலோசனையும் உதவியும் குடும்பப் படகு மூழ்கிவிடாமல் காக்கும். அதே சமயம் பெற்றோர்களும் தாங்கள் சொல்வதும் செய்வதும் மட்டுமே சரி என்றும், “ நாங்கள் பார்க்காததா, எங்களுக்கு இல்லாத அனுபவமா” என்றும் முறுக்கி நிற்காமல்; பிள்ளைகளின் முயற்சிகளுக்கும் செயல்பாடுகளுக்கும் முட்டுக்கட்டை போடாமல் இருக்கப் பழகுங்கள். அவர்களாகக் கேட்கிறபோது மட்டும் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். அவர்கள் முடிவெடுக்கட்டும். வாழ்க்கை அவர்களுக்கும் உங்களைப் போலவே கற்றுக்கொடுக்கும் அல்லவா?

இளைஞர்கள் முதியோருக்கு ஊன்றுகோலாக மாற வேண்டும்; முதியவர்களின் சொற்கள் இளைஞர்களின் ஊக்க டானிக்காக வேண்டும். பெற்றோர் சொத்தில் மகனுக்கும் மகளுக்கும் சமபங்குண்டு என்பது எவ்வளவு நியாயமோ; அதே நியாயம் மகனைப் போன்றே மகளும் தங்கள் சம்பாத்தியத்தில் சாத்தியமான ஒரு பங்கை தன் பெற்றோருக்கு வழங்கலாம் என்பதும் நியாயம். மனைவியை இப்படி வழங்கச் சொல்வது அதீதம் என சிலர் கருதக்கூடும். கசப்பாக இருக்கும். ஆயினும் அதை நோக்கி பயணித்தாக வேண்டும். அப்போதுதான் சமத்துவம் என்பதன் பொருள் முழுமையாகும். 

அடுத்து தங்கமும் பட்டும் பிரச்சனையாகாத வீடுண்டோ? தங்க நகை சேமிப்பே. ஆத்திர அவசரத்துக்கு அடகுவைக்கப் பயன்படும். யாரிடமும் கையேந்தி நிற்கவேண்டாம். இந்தியப் பொருளாதாரத்தில் இது ஒருவகை பாதுகாப்பு அரணே. மண்ணிலும் பொன்னிலும் முதலீடு செய்து சேமிப்பது சரியே. ஆகவே வீட்டில் நகை வாங்க நினைப்பது தப்பல்ல. ஆயின் வட்டிக்கு கடன் வாங்கி அட்டிகை வாங்கினேன் அட்டிகையை விற்றும் வட்டியே அடைய வில்லை என்பது நமது அனுபவம் அல்லவா?

அட்சயதிரிதியைக்கு நகை வாங்கினால் அதிர்ஷ்டம் பொங்குமாம். சமீபத்தில் தங்க வியாபாரிகள் உருவாக்கிய மூடத்தனம். உண்மையில் “ நீங்கள் அடகு வைத்த நகையை மீட்டு நல்ல விலைக்கு விற்க ... ஏஜன்சியை அணுகவும் ”என்பது போன்ற விளம்பரங்கள் நம் வாழ்க்கை யதார்த்தத்தைக் காட்டவில்லையா?

அந்தஸ்துக்காகவோ - அடுத்தவர் வாங்கிவிட்டார் ஆகவே நாமும் வாங்க வேண்டும் என வறட்டு கவுரவத்துக்காகவோ நகை,பட்டுப்புடவைக்காக வீட்டையே ரணகளமாக்குவது தேவையா? பட்டோ, நகையோ, பாத்திரங்களோ, வீட்டு உபயோகப் பொருட்களோ எதுவும் தேவை - தேவையில்லை என்பதை அவரவர் குடும்ப பட்ஜெட்டிலிருந்து முடிவெடுக்க வேண்டுமே தவிர யாரையும் ஒப்பிட்டுப் பார்த்தல்ல.

 சேமிக்கப்பழகு

கணவன் மனைவி இருவரும் வரவு செலவை எழுதுகிற பழ்க்கம் இருப்பின், அதைக் கூட்டாகப் பரிசீலிக்க இருவருக்கும் பொறுமையும் பக்குவமும் இருப்பின், தேவையற்ற செலவுகள் எது எது என கண்டறிந்து இருவரும் தவிர்க்க முடியுமாயின் ஆசைப்பட்டதை வாங்கலாம். அப்போதும் நகைச் சீட்டு, ஏலச்சீட்டு, பைனான்ஸ் என ஏமாறாமல் சேமிக்கப் பழக வேண்டும். என் நண்பர் இரண்டு மாதத்துக்கு ஒருமுறையோ அல்லது கையில் காசு சேரும் போதோ ஒரு கிராம், அரை கிராம் என தங்க, வெள்ளிக் காசுகள் சேர்ப்பார். ஒரு போதும் அவற்றை நகையாக்கியதில்லை. அது போல் அன்றைக்கு மற்றவர்கள் யோசித்துப்பார்க்கத் தவறிய காடுகரைகளில் மிகமிக சொற்ப விலைக்கு சில இடங்களை வாங்கிப்போட்டார். அவர் மனைவி ஒற்றை செயின் அதுவும் கவரிங்கில் வாழ்ந்து பழகிவிட்டார். அவரது தங்கக் காசு சேமிப்பும் இந்த மனைகளும் பிள்ளைகள் மேல்படிப்புச் செலவுக்கும் திருமணத்துக்கும் பின்னர் கை கொடுத்தது. பலர் வறட்டுத்தனமாக இருந்து இன்று கடனை சுமக்கிறார்கள்.

சிக்கனம், சேமிப்பு உபதேசம் எல்லோருக்கும் பொருந்துமா? வருவாய் எப்போதாவது முட்டிமோதி சொற்பம் ஏறும் . ஆனால் செலவு மாதாமாதம் தாவித்தாவி உயரும்.  இன்றைய சூழலில் சிக்கனம் பற்றிய உபதேசம் வெறும் பேச்சாகிவிடுமே. உண்மைதான். எனினும் இதற்குள் வாழப்பழகியாக வேண்டுமோ!

விதியும் மீறலும்

சாலைவிதிகளை கறாராகப் பின்பற்றி வண்டி ஓட்டியாக வேண்டும். மீறினால் உயிருக்கு ஆபத்து. அதே சமயம் சாலையில் நீ விதிப்படி வண்டி ஓட்டிச் செல்ல எதிரே வருகிறவன் விதியை மீறி வருகிற போது உன்னைக் காப்பாற்றிக் கொள்ள சில விதிமீறல்கள் தவிர்க்கமுடியாது. குடும்பத்துக்குள்ளும் அப்படித்தான். இதைப்புரிந்து கொள்ளவேண்டும். வறட்டு சூத்திரத்திற்குள் பயணிப்பது சாலையிலும் சாத்தியம் இல்லை. வாழ்க்கையிலும் சாத்தியம் இல்லை.

பொதுவாக நெறிமுறைகளில் நின்றொழுக வேண்டும். நெருக்கடி கழுத்தை நெரிக்கும்போது சவாலை எதிர்கொள்ளுகிற சாதுரியமும் வேண்டும். பொய்யை மூலதனமாக்கி வாழநினைத்தால் முதலில் வெற்றி கிட்டலாம். ஆனால் பெரும் சிக்கலில் சிக்கி அழிவது திண்ணம். அதே நேரம் சின்னச் சின்ன பொய்கள் வாழ்க்கைக்கு தேவைப்படும். பிறரை வஞ்சிக்காத அந்த பொய்களையும் ரசிக்கப்பழகுங்கள்.

சொந்தம் பந்தம் ஊர் உறவு இவற்றை ஒதுக்கி வாழ்வது இயலாது. அப்படி வாழவும் கூடாது. பொதுநலன் சார்ந்த விஷயங்களில் ஊரோடு ஒத்துழைப்பது அவசியம். சாதி,சடங்கு,மூடத்தனம் இவற்றை மீறத்தான் வேண்டும். ஆம், நிர்வாணதேசத்தில் கோவணம் கட்டுவது பைத்தியக்காரத்தனம் என ஊரே உறவே எதிர்ப்பினும் கோவணமாவது கட்டுவதே அறிவுடமை. மற்றவர்களையும் கட்டச் செய்ய முயல்வதே பெருமை. அதில் கோபதாபம் எதிர்கொள்ள நேரினும் அஞ்சாமல் முன்செல்ல வேண்டும்.

(அடுத்து வரும் புத்தர் பற்றிய குட்டிக்கதையைப் படித்து மனதில் கொள்ளலாம்)

 “மனித உள்ளம் தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்யம்
இவையுண்டு தானுண்டு என்போன்
சின்னதொரு கடுகு போல உள்ளம் கொண்டோன்
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்!
கன்னலடா என் சிற்றூர் என்போன் உள்ளம்
கடுகுக்கு நேர் மூத்த துவரை உள்ளம்
தொன்னையுள்ளம் ஒன்றுண்டு
தனது நாட்டுச் சுதந்திரத்தால்
பிறர் நாட்டைத் துன்புறுத்தல்
ஆயுதங்கள் பரிகரிப்பார், அமைதி காப்பார்,
அவரவர்தம் வீடு நகர் காக்க
வாயடியும் கையடியும் வளரச் செய்வார்
மாம்பிஞ்சி உள்ளத்தின் பயனும் கண்டோம்
தூய உள்ளம் அன்பு உள்ளம் பெரிய உள்ளம்
தொல்லுலக மக்களெல்லாம் ஒன்றே என்னும் தாயுள்ளம்
தனிலன்றோ இன்பம் ஆங்கே
சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்ததாலே!”
-என்பார் பாவேந்தர் பாரதிதாசன். மனித உள்ளத்தை கடுகு உள்ளம், துவரை உள்ளம், தொன்னை உள்ளம், மாம்பிஞ்சி உள்ளம், தாயுள்ளம் என வகைப்படுத்தியுள்ளார்.

கடுகு உள்ளத்தவராய் தன்னலம் மட்டுமே கருதி வாழ்தல் தீது. நாம் நிம்மதியாய் வாழ குடிநீர், சாலை, பொது சுகாதாரம், மின்சாரம், கல்வி, மருத்துவம் என எல்லாம் வேண்டுமே! அப்படியானல் அவற்றைப் பெற சமூக மனிதனாவது இன்றியமையாது அல்லவா? எனக்கு அரசியல் பிடிக்காது என ஒதுங்குவதும் ஒருவகை அரசியலே. அது கொடுமைகளுக்குத் துணை போகிற அரசியல். தனியார்மயமும், தாராளமயமும், உலகமயமும் ஒவ்வொருவர் வீட்டு அடுக்களைக்குள்ளும் படுக்கறைக்குள்ளும், சம்மணம் போட்டு உட்கார்ந்துகொண்டு : நாம் எதை உண்ண வேண்டும், எதை உடுத்த வேண்டும், எதைப் பருக வேண்டும், எதைப் படிக்கவேண்டும், எதை ரசிக்க வேண்டும், எதை வெறுக்க வேண்டும், எதை விரும்பவேண்டும் எனக்கட்டளை இடுகிறதே! இதைப் பற்றிக் கவலை கொள்ளாமல் இருக்க முடியமா?

என்ன செய்வது? ஒவ்வொரு தனிமனிதனும் சமூகத்தின் அங்கமே. சமூகத்துக்கு சளி பிடித்தால் தனிமனிதன் மட்டும் தப்ப முடியுமா? முடியாது. சளிக்கு சமூகம் மருந்து சாப்பிட தனிமனிதன் மருந்து சாப்பிட்டாக வேண்டும். கணவனும் மனைவியும் எதோ ஒருவகையில் பொதுவாழ்வோடு தொடர்பு கொள்வது இயல்பானது. இன்றியமையாதது. இதன் பொருள் எல்லோரும் தீவிர அரசியல் ஊழியராக வேண்டும் என்பதா? இல்லை. ஆர்வம் உள்ளவர் அப்படியாகலாம். ஏனையோர் ஏதோ ஒருவகையில் தன்னைச் சுற்றி நிகழ்கிறவற்றை யொட்டி வினையோ, எதிர்வினையோ ஆற்றியாக வேண்டும். சமூக சிக்கலும் யதார்த்தமும் புரிகிறபோது குடும்பச் சிக்கல்கள் பிரச்சனைகள் இவற்றின் காரண காரியம் புலப்படும். வாழ்க்கை மேலும் வசப்படும். பொது வாழ்வு சுமையல்ல. தேவை. கைவிலங்கல்ல கைவிளக்கு.

புற்றா சிப்பியா?

முன்கூட்டியே ஒத்திகை பார்த்து அரங்கேற்றுகிற நாடகமல்ல வாழ்க்கை. திடீர் திருப்பங்களும் எதிர்பார விபத்துகளும் இங்கே அதிகம். எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாவதும், எதிர்பாரா இன்ப அதிர்ச்சிகளும் தொடரும். உங்கள் கணக்குகளையும் சூத்திரங்களையும் மீறியதே உங்கள் வாழ்க்கை. 

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என அஞ்சிக் கொண்டே வாழ்வது கிட்டத்தட்ட செத்துப் போய்விட்டதற்குச் சமம். அதே சமயத்தில் அந்த சிப்பியில் முத்து கிடைக்கலாம் என வெறும் கனவில் முழம் போடவும் வேண்டாம். புற்று குறித்த விழிப்புணர்வும் - முத்து குறித்த தேடலும்தான் வாழ்க்கை. வாழ்ந்து காட்டுங்கள். 

இங்கே சொன்னவை எல்லாமும் உங்களுக்குப் பொருந்தலாம் அல்லது தேவைப்படாமல் போகலாம். கொள்ளுவன கொள்க! தள்ளுவன தள்ளுக! அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு! விசாலாப் பார்வையால் விழுங்கு மக்களை! வெள்ள அன்பால் இன்பம் சேர்! வாழ்க்கை வாழ்வதற்கே!

வண்ணக்கதிர் - தீக்கதிர் [ 9-12-2012]



1 comments :

  1. Unknown

    படுக்கையறைக்குப் பள்ளியறை என்ற பெயரும் உண்டு தமிழில். அது மிகப் பொருத்தமானது. அது வாழ்க்கையின் சுருதியை சரியாக மீட்டுவதற்குக் கற்றுத்தரும் பள்ளியல்லவா! - ஆமாம். வாழ்க்கைக்கான பாடங்களைக் கற்பிக்கும் ஆரம்பப் பள்ளிக்கூடத்தின் அறை.

    அட்சயதிருதியைக்கு தங்கம் வாங்கினால் அதிர்ஷ்டம் பொங்கும் என்றால், கடைக்காரன் எதற்கு விற்க வேண்டும்? அவனே வைத்துக் கொண்டால் அதிர்ஷ்டம் அவனுக்கு ரொம்ப பெருகுமே.... வியாபாரத்துக்கு செய்யும் தந்திரம். World Gold Council என்ற அமைப்பு இப்படியெல்லாம் சிந்திச்சு விற்பனைய உயர்த்தறாங்க. இதுக்காக கடைக்காரங்க இந்த அமைப்புல உறுப்பினரா இருந்து சந்தா கட்டுறாங்க... ஏமாந்து போறது நம்ம பொதுஜனம்தான்.

Post a Comment