இடதுசாரிகளும் புதிய உலகமும்

Posted by அகத்தீ Labels:


சோஷலிசம் காலாவதியாகிவிட்டதென ஒரு பகுதி அறிவிஜீவிகள் உரக்கப் பேசுகின்றனர்.சோஷலிசம் அல்லது மரணமென லத்தின் அமெரிக்க நாடுகளிலிருந்து அறைகூவல் வலுவாக எழுகிறது. எல்லாம் மாறும் என்ற விதியைத்தவிர எல்லாம் மாறும் என்பதே மார்க்சியமெனில் அந்த மார்க்சியமும் மாறாதாவென கேள்வி எழுப்புவோரும் உண்டு..

உலகமயமும் தாராளமயமும் தனியார்மயமும் மனித வாழ்வை மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது, மார்க்சியம் குறித்த மறுவாசிப்புக்கு உரிய தருணம் இது.’21-ஆம் நூற்றாண்டுக்கான சோஷலிசம் ‘ என்ற பெயரில் லத்தின் அமெரிக்கச் சிந்தனையாளர் மைக்கேல் லெபோவிச் எழுதிய நூல் மீதான விமர்சனம் விவாதமேடைக்கு அழைப்பு விடுத்து தீக்கதிர் ஏட்டில் 2010 பிப்ரவரி 4,5 தேதிகளில்வெளியானது. akathee.blogspot என்றமுகவரியிலுள்ள எமது ஃப்ளாக் ‘அகத்தீ‘ யில் பிப்ரவரி மாத பதிவிலும் பார்க்கலாம். அதன் தொடர்ச்சியே மார்த்த ஹர்னேக்கர் எழுதிய ‘இடதுசாரிகளும் புதிய உலகமும்‘ என்ற நூலாகும். ஆக இந்த இரண்டு நூலையும் .இரண்டின் மீதான எமது விமர்சனங்களையும் இணைத்து வாசித்து பயனுள்ள உரையாடல்கள் நடத்த முன்வருமாறு அழைக்கிறோம்.

நூல்கள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம். இது ஒரு அரசியல் நூல். ஆனால் இருப்பதைப் போற்றிட எழுதப்பட்ட நூல் அல்ல; எதிர்ப்பதற்காகவே எழுதப்பட்ட நூலும் அல்ல; வித்தியாசமாய் எழுத வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட நூலும் அல்ல; ஏதேனும் விவகாரத்தை உண்டாக்க வேண்டும் என்பதற்கான நூலும் அல்ல; மாறாக, மாற்றத்தைக் கொண்டுவர மனம் திறந்த விவாதத்திற்கு துவக்கபுள்ளியாகும் நூல். மனிதகுலத்தின் மீதான மாளாக்காதலோடும் - மார்க்சிய பற்றார்வத்துடனும் எழுதப்பட்ட நூல்.

நாலு பாகங்களாக - 14 அத்தியாயங்களாக இந்நூல் உள்ளது. முன்னுரையே முக்கியமான விவாதவெளியை நமக்கு அறிமுகம் செய்கிறது.
ஐம்பது வருடங்களுக்கு முன் இருந்த உலகின் சாயல் எதுவும் இல்லாத உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எனத் தொடங்கி; சோவியத் யூனியன் தகர்வுக்குப் பிறகு - நவீன தொழில்நுட்பச் சகாப்தத்தில் நிலவும் சூழலையும் விவரித்து, புரட்சி என்பதே பரந்துபட்ட மக்களைத் திரட்டுவது என்பதை முன்வைத்து அதற்கே இந்நூல் என்கிறது முன்னுரை. முதல் பார்வையில் முற்றிலும் சரி என்ற எண்ணமே துளிர்க்கும்.

முதல் பாகத்தின் தலைப்பே இடதுசாரிகளும் புதிய உலகமும் என்பதுதான். உலகமயம் என்பதனை நிலை நிறுத்துவதற்காக ஒற்றைக் கலாச்சாரத் திணிப்பு நடைபெறுவதை, மக்களை பிளவுபடுத்திக் கொண்டிருப்பதை, மக்களிடம் அதிருப்தி மேலோங்குவதை, சாத்தியமான புதிய மாற்றை; இந்தப் பாகத்திலுள்ள மூன்று அத்தியாயங்களும் விவரிக்கின்றன. ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒன்றுக்கு இரண்டுமுறை படிக்க வேண்டும்; ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொரு வார்த்தையிலும் உள்ளுறையாக இருக்கிற உண்மைகளை அசைபோட வேண்டும். பொலிவாரியக் கண்ணாடி மூலமே - லத்தின் அமெரிக்க அனுபவத்தின் ஊடாகவே - அவர் இவ்வுலகைத் தரிசிப்பது புலனாகும். அவற்றுள் நம் அனுபவத்தோடு பொருந்துவன பல. முரண்படுவன பல. ஆயினும் நம்நாட்டு அனுபவ உரைகல்லில் உரசியே நாம் உண்மையைத் தேட வேண்டும்.
புதிய இடதுசாரிக் கலாச்சாரத்தின் தேவையை மற்றும் இன்று இடதுசாரிக் கட்சிகள் சந்திக்கும் நெருக்கடியை விவரிக்கிறது இரண்டாவது அத்தியாயம். மார்க்சியம் நெருக்கடியில் இருக்கிறது என ஒப்புக்கொண்டு மார்க்சியத்தை நிராகரிக்கிற சக்திகளைப் போல் அல்லாமல், மார்க்சியம் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை இனங்காணும் முயற்சியாகவே இந்தப் பாகம் உள்ளது. இதில் நான்கு அத்தியாயங்கள் உள்ளன.

இன்றைய உலக நிலைமையில் இடதுசாரிகளை கடுமையாகப் பாதிக்கும் ஒரு விஷயம் உண்டென்றால் அது புதிய சவால்களை சமாளிக்கக்கூடிய கட்சி இல்லாததுதான் என்ற பீடிகை வலுவாகவே பதிவாகியுள்ளது. `மதம் ஒரு அபினி என்ற கண்ணோட்டத்தோடு மட்டுமே இன்றைய நடைமுறைகளை வகுக்க இயலுமா? ஜனநாயகத்தன்மை மறுக்கப்பட்ட கட்சி அமைப்பு எப்படி எதேச்சாதிகாரத்திற்கு போகிறது என்பதையும்; முற்றிலும் கீழ்படிந்த ஆளுமை அற்ற கட்சி உறுப்பினர்களை உண்டாக்கும் நிலை உருவாவதையும்; அதனால் தத்துவம் படிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி நடைமுறை உலகை காண மறுப்பதையும் நிறுவன பக்தி என்பது இடதுசாரிக் கோட்டையின் இதயத்தில் புகுந்து கிருமியாகிவிட்டதையும் ஆறு அத்தியாயங்களில் விளக்கப்பட்டுள்ளது.
`புதிய அரசியல் சாதனம் பற்றிய பார்வையை விவரிப்பது நான்கு அத்தியாயங்கள் கொண்ட மூன்றாவது பாகம், ஜனநாயகத்திற்கான போராட்டமும் சோஷலிசத்திற்கான போராட்டமும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்க முடியாதவை என்பதால் புதிய அரசியல் அமைப்பு ஜனநாயகத்தை தன்னுடைய லட்சியமாகக் கொள்ள வேண்டும் என்பதே இந்த அத்தியாயத்தின் மைய இழை. சர்வாதிகார ஆட்சிகளைத் தூக்கி எறியும் லத்தின் அமெரிக்க எழுச்சிகளூடே பெறப்பட்ட பாலபாடம் இது. அங்குள்ள சூழலில் இது பெரிதும் சரியாக இருக்கக்கூடும். அதனை வரலாறு தீர்மானிக்கட்டும். அரசியல் ஜனநாயகம் அது முதலாளித்துவ ஜனநாயகம்தான் எனினும் இங்கு அமலில் உள்ளது. இந்தியாவில் ஒருவித ஜனநாயகக் காற்று வீசுகிறது. ஆகவே லத்தின் அமெரிக்க அளவுகோல் இங்கு அப்படியே பொருந்திப்போகாது அல்லவா?
அனைவரும் பங்கேற்கும் ஜனநாயகம் என்று இந்நூலாசிரியர் வாதிடுவதை நம் நாட்டுச் சூழலில் எப்படிப் பொருள் கொள்வது? `சர்வாதிகாரம் என்ற சொற்றொடர் மக்கள் இதயத்தில் ஒருவித படிமத்தை வலுவாக உருவாக்கிவிட்டது. மார்க்ஸ் அதனை எப்படிச் சரியான பொருளில் உபயோகித்திருந்தாலும் `பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற சொற்றொடர் தற்போது தவறான பொருள் மயக்கத்தோடுதான் மக்களால் புரிந்துகொள்ளப்படுகிறது. எனவே ஜனநாயக உணர்வுமிக்க கட்சி இது என்ற எண்ணம் மக்களிடம் துளிர்விட `பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற சொற்றொடரைக் கைவிட வேண்டும் என்கிற இந்நூலாசிரியர் வாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்புடையது அல்ல.
தலைமை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவரும் சூழலில் புரட்சிகர ஒழுக்கம் உள்ள ஒரு தலைமையே இப்போதைய தேவை என நூலாசிரியர் வாதிடுவதை யாரும் மறுக்க முடியாது.

இடதுசாரிகளின் போராட்ட முறைகளும், ஸ்தாபன முறைகளும் ஈர்ப்பை இழந்துவிட்டன. சலிப்பை ஊட்டுகின்றன. அனைவருக்கும் பொதுவாக அலமாரியிலுள்ள ஒரு சிறு அறைக்குள் பொருந்திப் போகிறவர்கள் மட்டுமே, அதாவது வாரத்தில் ஏழு நாளும், நாளில் இருபத்தி நாலு மணி நேரமும் செயல்படுகிறவர்கள் மட்டுமே உறுப்பினர்களாக முடியும் என்கிற நிலையிலுள்ள இன்றைய நடைமுறையை இந்நூல் கேள்விக்குள்ளாக்குகிறது.
`தியாகம் பற்றிய பார்வையை தலைகீழாக மாற்ற இந்நூல் முன்வைக்கும் விவாதம்; இன்றைய நடைமுறையில் ஊறி கடந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்போர்களுக்கு கசப்பாகவே இருக்கும். சிலர் மனதுக்கு உவப்பாக இருப்பினும் அவர்களுக்குள் இருக்கும் ஒருவித போலித்தனம் இதனை மறுதலிக்கச் செய்துவிடும்.

`ஜனநாயக மத்தியத்துவம் என்ற கோட்பாடு உருவான சூழலில் அது சரியாக இருந்தது; தலைமறைவு கட்சிக்குத் தேவையாக இருந்தது. பகிரங்கமாகச் செயல்படும் ஜனநாயகச் சூழலில் இது பொருந்திப்போகுமா என்கிற விவாதம் இந்நூலில் வலுவாக முன்வைக்கப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரபூர்வமாக `ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டையும், `மேலிருந்து கட்டப்படும் கட்சி என்பதையும் வலுவாக இன்றும் பற்றிநிற்கிறது. எனவே நானும் அதனையே கூற வேண்டியவனாக இருக்கிறேன். எனினும் இந்நூலாசிரியர் இது பற்றிக் கூறுவதை ஒட்டியும் வெட்டியும் ஒரு பகிரங்க விவாதம் நடத்துவது புரிதலை செழுமைப்படுத்த தவறுகளைக் கைவிட அவசியத் தேவை அல்லவா? அதைச் செய்வதற்கு இதுவே தக்க தருணம். சோவியத் கட்சி அமைப்பை காப்பியடிப்பது மற்றும் கோஷ்டிகள் உள்கட்சி ஜனநாயகம் பற்றி எல்லாம் இந்நூல் பேசுகிறது. சால்க்கியா பிளீனம் என்ற சால்க்கியாவில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பு மாநாடு நிறைவேற்றிய ஸ்தாபன அமைப்புத் தீர்மானங்களும் - நிறைவேற்றிய கோட்பாடுகளும் வழிகாட்டல்களுமே இந்தியச் சூழலுக்குப் பொருத்தமானவை.

`உள்கட்சி ஜனநாயகம், `சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி? என்கிற இரண்டு புத்தகங்கள் - சீனக் கம்யூனிஸ்ட் தலைவர் லியோசூசி எழுதியது - ஏற்கெனவே வெளிவந்துள்ளன. அந்நூல்களுக்கு முன்னுரை வழங்கிய தோழர் இஎம்எஸ் கூறினார்: இந்நூலை நன்கு படியுங்கள். உள்வாங்கிக்கொள்ளுங்கள். ஆனால் இது சீன அனுபவம். நமக்கு வழிகாட்டுவது சால்க்கியா பிளீன முடிவுகளே என்றார் அதனையே இப்போதும் வழிமொழிவது தவறு இல்லை. அதே சமயம் திறந்த மனதோடு விவாதம் தொடங்குவதும் தப்பு இல்லை.

நான்காவது பாகம் சீர்திருத்தங்களிலிருந்து புரட்சிக்கு மாறிய பொலிவாரிய அனுபவத்தை புகட்டுகிறது. இதில் நான்கு அத்தியாயங்கள் உள்ளன. பொதுவான படிப்பினைகள் மட்டுமே இதிலிருந்து நாம் பெறமுடியும். அதே சமயம் `முதலாளித்துவமே இறுதியானது என்கிற மாயத்தோற்றத்தை உடைத்தெறியும் இந்த அனுபவங்கள். புதிய மாற்று சாத்தியம் என்பதை நிறுவி நம்பிக்கை ஊட்டுகிறது.

உலகின் பெரும் நகரங்களின் செல்வச் செழிப்பு மிக்க பகுதிகளில் சீரமைத்தல் மூலமும் ஒற்றைத்தன்மையாக்குதல் மூலமும் நாசகரத்தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறது. எங்கெங்கும் உலகளாவிய கலாச்சாரம் வெற்றி அடைந்துகொண்டிருக்கிறது என்கிற பொதுவான கசப்பான உண்மையை இந்நூல் பதிவு செய்கிறது. ஒளிக்காட்சி ஊடகங்கள் இந்தக் கருத்துப் போரில் காத்திரமான பங்கு வகிப்பதையும், அதில் இடதுசாரிகள் பிடிமானம் இல்லாமல் இருப்பதையும் இதனால் உருவாகும் வெற்றிடத்தையும் இந்நூல் சரியாக நிறுவுகிறது. புதிய அமைப்பு கோட்பாட்டை முன்னிறுத்துகிறது. பழைய கோட்பாட்டை கேள்விக்கு உட்படுத்துகிறது.

இந்நூலைப் படித்து முடித்த பின் நெஞ்சுக்குள் பூதாகரமாக தலைதூக்கும் கேள்விகள் பல. இதோ அவற்றுள் சில.

1. `பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் இன்றைக்கும் தவறாகவே புரிந்துகொள்ளப்படும் சூழலில் மீண்டும் மீண்டும் அதே சொற்றொடர் பயன்பாடு தேவையா? பார்வை மாற வேண்டாமா?

2. `ஜனநாயக மத்தியத்துவம் என்கிற கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புக் கோட்பாடு கட்சிக்குள் எதேச்சாதிகாரத்தனத்தை கொண்டுவந்துவிட்டதா? ஆளுமையற்ற படைப்பாக்கத்திறனற்ற கட்சி உறுப்பினர்களையும் ஊழியர்களையும் மட்டுமே உருவாக்கும் பாணியாக அது மாறிவிட்டதா? சோவியத் பாணி கட்சி அமைப்பு இன்னும் தேவையா?

3. எழுத்துக் கலாச்சாரமும் புத்தகக் கலாச்சாரமும் மேல்தட்டுக் கலாச்சாரமாக ஆகிவிட்டதால்; ஒலி-ஒளி ஊடகங்கள் மட்டுமே வெகுஜன கலாச்சாரமாகிவிட்டதால் இடதுசாரிகளாகிய நாம் செய்ய வேண்டியது என்ன?

4. `தொழிலாளி வர்க்கக் கட்சி `மதம் மக்களுக்கு அபின் போன்ற பார்வைகள் இப்போதும் பொருந்துமா?

5. மக்களிடமும் கட்சி அணிகளிடமும் நம்பிக்கை இழந்துள்ள கட்சித் தலைமை நம்பிக்கையைப் பெற புரட்சிகர ஒழுக்க விழுமியங்களை கைக்கொள்ள வேண்டாமா?

6. தத்துவமற்ற நடைமுறை குருட்டுத்தனமானது; நடைமுறையற்ற தத்துவம் மலட்டுத்தனமானது. இதில் ஏதேனும் ஒரு தவறை செய்பவர்களாகவே நிலைமை தொடர்வது ஏன்?

7. கருத்துப் பிரச்சாரம் என்பது ராணுவ ரீதியானதாக-வெறும் போதனையாக மட்டுமே இருக்க முடியுமா? ஜனநாயகபூர்வமான விவாதமாக்கப்பட-கருத்துப்போர் நடத்தப்பட வேண்டாமா?

8. கட்சித் தலைமை அறிவிக்கும் போராட்டங்கள் வெறும் சடங்காகவும், நம்பிக்கை ஊட்டாததாகவும் உள்ளதே. இதனை மாற்ற வேண்டாமா? பழைய போராட்ட வடிவங்கள் இன்றும் பொருந்துமா?

9. 24x7 என்ற செய்தி அலைவரிசை மாதிரி - அதில்கூட இடையிடையே விளம்பரம், விவாதம் எல்லாம் உண்டு. அதுவுமற்ற வகையில் கட்சி உறுப்பினர்களையும் கட்சி ஊழியர்களையும் கருதி குழாய்ப்புட்டு போன்று தொடர் இயக்கங்கள் நடத்துவது சரியா?

10. `மேலிருந்து கட்டப்படும் கட்சி என்பதற்குப் பதிலாக `கீழிருந்து வலுவான உள்கட்சி - ஜனநாயக ரீதியான கட்டமைக்கப்பட்ட கட்சிதானே இன்றைய தேவை?

இவையும் இவை போன்ற இன்னபிற கேள்விகளும் இந்நூலைப் படிக்கும் புரட்சிகர அக்கறை உள்ள கம்யூனிஸ்டுகள் எல்லோருக்கும் ஏற்படும்; அதன் விளைவாக எல்லாவற்றையும் இன்றைய சமூக அரசியல் பொருளாதாரச் சூழலில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் தெறிக்கும். இந்நூல் சொல்வது எல்லாம் சரி என்று நிச்சயம் கூற இயலாது, கூறவும் கூடாது. ஆனால் உண்மையைத் தேடிடத் தூண்டும்; துரத்தும்; தூக்கத்தைத் தொலைத்து சிந்திக்கத் தூண்டும் கேள்விகளை இந்நூல் விதைக்கிறது. இன்றையத் தேவையும் இதுவே. ஆகவே இந்நூலை அக்கறையோடு வாசியுங்கள்-விவாதியுங்கள். அதுவே எம் வேண்டுகோள்.
(இந்நூலுக்கு எழுதப்பட்ட அணிந்துரை)

இடதுசாரிகளும் புதிய உலகமும் - மார்த்தா ஹர்னேக்கர் தமிழில்: அசோகன் முத்துசாமி, வெளியீடு: பாரதி புத்தகாலயம், விலை: ரூ. 110\- பக். 200

3 comments :

  1. vimalavidya

    This is Very important recent book.Com.Asokan Muthusamy has translated and given to all loving leftists..By translating this book Com.Asokan has rendered a best service to left thinking people.
    The book review done by Com.Su.Po.Agasthiyalingam of Theekkathir daily is fantastic one.he boldly and honestly written the review and started a debate in the left world.The debate must be honestly done by the all leftist parties.The left parties cannot postpone the debate further long time.The need is growing fastly to change many organizational matters..
    Will the left parties have the COURAGE to conduct seminars/discussions on the subjects raised by the book author..
    If they do it they will grow..Otherwise stagnation is inevitable..Before the patient became "faint"the healthy/honest debate /discussions must start at all level..The views must be sincerely looked into..No other way for the left movements..
    All the Comments will be published by the blog OWNER I believe....

  1. karges

    சார் ஒரு சில விஷயங்கள விடறது முடியாது சார்.. "religion is nothing but opium of masses" இத விட்டுட்டு இந்தியா மாதிரி நாட்ல மதச்சார்பின்மை வாதங்கள முன் வைக்கறது , மார்க்சிஸ்டுகள் மீது தவறான பார்வையாக தான் வரும்... இப்பவும் கேரளா மகர ஜோதி பற்றி ஆராயும் உத்தேசம் அரசுக்கு இல்லைனுதான் அச்சுதானந்தன் சொன்னாரே ஒழிய,அது நிஜம்னும் சொல்லல பொய்னும் கொடி புடிக்கல அதே நேரத்துல.. ஹிந்து மதவாதமோ இசுலாமிய அடிப்படைவாதமோ தலை தூக்கும்போது மதசார்பற்ற கருத்துக்களை முன் வப்பதில் காங்ரசுக்கும் கம்யுனிஸ்டுகளுக்கும் வித்தியாசம் வேனும் சாரி (அந்த வித்தியாசம் இருந்தே தீரும் ஏனெனில் இரண்டும் வெவ்வேறு கொள்கையை கொண்டவை.. அரசியல் பார்வை தெளிவா இருக்கனும்னா ஒரு சில அடிப்படையான சித்தாத்ங்களிலிருந்து விலகாமலிருப்பது அவசியம்)

  1. அகத்தீ

    மேலே உள்ள அணிந்துரை கட்சி முடிவுப்படி பின்னர் நீக்கப்பட்டது
    சுபொ

Post a Comment