ரெளத்திரம் பழகிக்கொண்டே இருக்கிறேன்……

Posted by அகத்தீ Labels:

 


ரெளத்திரம் பழகிக்கொண்டே இருக்கிறேன்……

 

நேற்று முழுவதும் என் பிறந்த நாளுக்கு [15/6/1953] வாழ்த்துமழை பொழிந்த அனைத்து உள்ளங்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.தோழமை அன்பில் திக்குமுக்காடிப் போனேன். நன்றி ! நன்றி! நான் ஓர் கம்யூனிஸ்ட் என்பதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி [ மார்க்சிஸ்ட்] உறுப்பினர் என்பதுமே என் மகிழ்வும் பெருமையும்.

 

இந்த ஆண்டு பிறந்த நாளை வர்ஜீனியாவில் பேரப்பிள்ளைகளோடு கழித்த பின்னார் 16 ஆம் தேதிதான் ஊர்திரும்பத் திட்டமிட்டிருந்தோம் . எதிர்பாராவிதமாக கிழே விழுந்து என் இணையருக்கு இடது கை தோள்பட்டை அருகே முறிவு ஏற்பட்டதால் அவசரமாக ஆறாம் தேதியே புறப்பட்டு பெங்களூர் வந்து அறுவை சிகிட்சை செய்ய வேண்டியதாயிற்று . இப்போது நலம் மீண்டு வருகிறார். வாழ்வும் போராட்டமும் பிரிக்கவே முடியாதது . இன்பமும் துன்பமும் இரவும் பகலுமாய் மாறி மாறி கடந்து போய்க்கொண்டே இருக்கும் .இதுதானே வாழ்க்கை .

 

நாங்கள் அவசரமாக ஊர் திரும்ப நேரிட்ட போதும் என் மகன் வழிப் பேரன் முகிலன் [ வயது 11 ]அவசர அவசரமாக ஒரு மணி நேரத்தில் வரைந்து அளித்த ஓவியமே இப்பிறந்த நாளுக்கு நான் பெரிதும் மகிழும் பரிசாகும் . இங்கே அந்த ஓவியத்தைப் பகிர்ந்துள்ளேன் மகிழ்வோடு . என் மகள் வழிப் பெயரன்  சஞ்சை ஹஷ்மி பெரியாரை அம்பேத்கரை மார்க்ஸைப் பயிலத் தொடங்கி இருக்கிறான் என மகள் சொல்லும் செய்தியைவிட எனக்கு  இனிய பிறந்த நாள் பரிசு உண்டா ? பேத்திகள் சங்கமித்திரா ,மேகா சொன்ன வாழ்த்தினும் பெரிதுண்டோ !

 

என் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் முகநூலிலும் அலைபேசியிலும் என்னை வாழ்த்தி மகிழும் அன்புத் தோழர் K.சின்னையா குரலை இனி கேட்கவே முடியாது என்பதே இந்நாளில் என் பெரும் துயரம் .என் பேரிழப்பு.

 

வயது ஒன்று கூடிவிட்டது . அனுபவம் மேலும் பக்குவப்படுத்திவிட்டது . ஆனாலும் உலகிலும் இந்தியாவிலும் நிலவும் சமூக அரசியல் சூழல் நெஞ்சம் பதைக்க வைக்கிறது . யுத்த வெறி ,சுரண்டல் வெறி ,மதவெறி ,சாதிவெறி,இனவெறி,நிறவெறி ,தேசியவெறி,மொழிவெறி ,பிரதேசவெறி ,என எந்தப் பெயரால் வெறி கொள்ளினும் வெறுப்பு இருள் சூழும் ;அன்பு பலியாகும்;மானுடம் தேம்பி அழும். இதற்கு எதிராய் ரெளத்திரம் பழகிக்கொண்டே இருக்கிறேன். போரற்ற உலகம் , சுரண்டல் எதிர்ப்பு , சமத்துவம் , அறிவியல் பார்வை ,சமூகநீதி ,பகுத்தறிவு,பாலின சமத்துவம், மானுட அன்பு , ஆதிக்க எதிர்ப்பு ,மூடநம்பிக்கை எதிர்ப்பு , இவற்றை என்னால் இயன்றவரை பேசிக் கொண்டே இருக்கிறேன் . எழுதிக் கொண்டே இருக்கிறேன் .இனியும் தொடரும் . இதுவே என் பிறந்த நாள் செய்தி.

 

வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் மீண்டும் நெஞ்சம் நிறைந்த நன்றி !

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

16/06/25.

 

 


வாழ்க "சாணி"நக்கித்தனம் !

Posted by அகத்தீ Labels:

 


யாருக்காக எழுதுவாய் ?
யாருக்காக அழுவாய் ?
பற்றி எரியும் டெல்அவிஸ்ஸுக்காகவா ?
அகமதாபாத் மரண ஓலத்துக்காகவா ?
கலவர நெருப்பில் பொசுங்கும் மணிப்பூருக்காகவா ?
பசியில் துடிக்கும் பாலஸ்தீனக் குழந்தைகளுக்காகவா ?
லாபவெறியிலா பூமிப்பந்தையே சூறையாடுவதற்கு எதிராகவா ?
வெறுப்பும் பொய்யும் மட்டுமே
வசுதைவ குடும்பகமாக்குவதற்கு எதிராகவா ?
போடா போ ! புண்ணாக்கு !
இதையெல்லாம் விவாதிக்க நாங்கள் என்ன வெட்டிப் பயலா ?
மாம்பழச் சண்டை
அணில் ஆட்டம்
முருகக் கடவுளை முச்சந்திக்கு இழுத்து பகடை உருட்டும் சகுனி பெருமை
"பயில்வான் ரங்கநாதன்" "இந்து நேசன்" வகைறா சூடான செய்திகள்
எவ்வளவோ இருக்கு !
போடா போ !புண்ணாக்கு!
உன் அன்பையும் மனிதத்தையும்
பகுத்தறிவையும் நேர்மையையும் தூக்கி உடைப்பில் போடு !
வாழ்க "சாணி"நக்கித்தனம் !
சுபொஅ.
14/06/25

நான் சொல்ல வேண்டுமோ

Posted by அகத்தீ Labels:

 அவர்களின் மூக்கு அலாதியானது

மாட்டுக்கறி வாசம் மட்டுமே அறிந்தவை.


அவர்கள் கண்ணின் பார்வை வித்தியாசமானது
குல்லா மட்டுமே கண்ணில் தெரிந்தவை

அவர்கள் கைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை
தங்களவர்களுக்கு மட்டும் சலுகை காட்டுபவை

அவர்களின் கால்கள் அபூர்வமானவை
கலவரம் செய்ய மட்டுமே ஓடுபவை

அவர்களின் இதயம் அரியவகை
வெறுப்பை மட்டுமே உமிழ்பவை

அவர்களின் மூளை விசித்திரமானவை
பொய்களும் புராணப் புளுகுகளும் மட்டுமே நிரம்பியவை

அவர்கள் யாரென
நான் சொல்ல வேண்டுமோ

சுபொஅ.
13/06/25.

அண்டா வாயும் அகல வாயும்

Posted by அகத்தீ Labels:

 




அண்டா வாய் … அகல வாய்…..

 

 

எந்த ஊருக்கு போனாலும் அந்த ஊரு சாப்பாட்டை ருசி பார்த்துவிட வேண்டும் .  “நண்டு திங்கிற ஊரில் நடுகண்டம் நமக்கு” என்பது சொலவடை . உங்களுக்கு ஏதேனும் மருத்துவரீதியான ஒவ்வாமை இருக்குமெனில் மட்டுமே தவிர்க்கலாம் என்பது பொதுவிதி .

 

ஆகவே ,நீங்கள் அமெரிக்கா போனால் அங்கு ஸ்பெஷல் ஹும் பர்க்கர் [HUMBURGER] தான்  .  அதுவும் மாட்டுக்கறி பன்றிக்கறி பர்க்கர்தான் .  வெஜ்ஜெல்லாம் கிடையாது .அதைச் சாப்பிடாமல் வரலாமோ ! ஆயின் ,அதைச் சாப்பிட உங்களுக்கு முன்கூட்டியே ஸ்பெஷல் பயிற்சி தேவை . அதாவது உங்கள் வாயை அண்டா வாயாகவும் அகல வாயாகவும் ஆக்கிப் பழக வேண்டு .மூன்று நான்கு அங்குலம் வாயைத் திறக்காமல் பர்க்கரை வாயில் நுழைக்கவே முடியாது .அமெரிக்காவில் பலர் இரண்டு கையாலும் வாயில் பர்க்கரை திணிப்பதை பார்த்தபோது எனக்கு அப்படித்தான் தோன்றியது .

 

சரி ! வாயைக் கிழிக்கும் பயிற்சி தேவை இல்லை . காபி மட்டும் குடிக்கலாம் எனில் அதற்கும் “ நீட்” தேர்வு எழுத வேண்டும் . சும்மா சொல்லவில்லை . ஒரு நாள் ஒரு காபி ஷாப்பில் என் மருமகள் எங்களுக்கு காபி ஆர்டர் செய்த போது பார்த்தேன் . சும்மா காபி என கேட்க முடியாது . உடனே கம்ப்யூட்டர் நிறைய கேள்வி கேட்கும் . உங்களுக்கு அந்த ரக இந்த ரக காபி கொட்டையா எந்த ரக காபி கொட்டை , பாலூற்றியா ஊற்றாமலா , பாலெனில் எந்தப்பால் மாட்டுப்பாலா அந்தப்பாலா இந்தப்பாலா , சர்க்கரை வேண்டுமா வேண்டாமா , சர்க்கரை வேண்டுமெனில் அந்தச் சர்க்கரையா இந்தச் சர்க்கரையா எந்தச் சர்க்கரை , சூடாகாவா ஐஸ் காபியா , அந்தக் கோப்பையிலா இந்தக் கோப்பையிலா  இப்படி அது கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லி முடிக்கும் முன் காபி குடிக்கும் ஆசையே போய்விடும் போலிருக்கிறது . [ ஒரு சினிமாகூட இதைக் கேலி செய்து வந்துள்ளது ]

 

இன்னொரு நாள் சப்வே என்ப்படுகிற நீண்ட மெக்சிக்கன் வெஜ் பர்க்கர் ஆர்டர் போட  மருமகளுடன் உடன் இருந்தேன் அப்போது கம்ப்யூட்டர் கேட்ட கேள்விகளுக்கு என்னிடம் பதிலே இல்லை ; மருமகளிடம் கேள்விகளைத் தள்ளிவிட்டுவிட்டு நான் வேடிக்கை மட்டும் பார்த்தேன் .  நெடிய பரிட்சைக்கு பின்தான் பர்க்கர் வந்தது .அங்கு எல்லாமும் அப்படித்தான் வரும் .

 

 

ஆனால் ஒன்று ,வடிவேல் ஊத்தப்பம் ஆர்டர் சொன்ன கதைபோல் இருக்காது ; நாம் கேட்டபடியே வரும் .

 

எந்த நாட்டுக்குப் போனாலும் அந்த நாட்டு ஸ்பெஷல் என்னவென்று கேட்கவும் சாப்பிடவும் கூட பொது அறிவு தேவைப்படுகிறது …

 

கோமியம் குடிக்கவும் மாட்டுச் சாணி உருட்டி விழுங்கவும் மட்டும் பகுத்தறிவு தேவைப்படாது . ஆமாம். ஆமாம்….  

 

சுபொஅ.

03/06/25

வர்ஜீனியா .

 

 


வள்ளுவன் தமிழ் மையம்

Posted by அகத்தீ Labels:

 





 

 


 “இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்ப தில்.”   ( திருக்குறள் : 621)

 

துன்பங்களைக் கண்டு கலங்காதிரு ! முகமலர்ச்சியோடு எதிர்கொள் ! அதுவே அதனை வெல்வதற்குத் தக்க வழி . அடுத்து இன்பம் காத்திருக்கும் .

 

இன்று என் மனம் ஏனோ இதில்  நிலைகுத்தி நிற்கிறது .  

 

 சனிக் கிழமை [ 31/05/25 ] வர்ஜீனியாவில் எமது நாள் அப்படித்தான் நகர்ந்தது சற்று எதிர்மறையாக . இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதுதானே !

 

ஆம். அன்று காலை எழுந்தது முதல் இரவு உணவு வரை . ஒரே உற்சாகம் .மகிழ்ச்சி . அடுத்தூர்ந்தது .. ? கடைசியில் பார்ப்போம். அது சொந்தக் கதை .

 

இங்கு ஓர் புகைப்  படத்தில் ஏடுகள் தொங்கிக் கொண்டிருக்கும் . அது எழில் கொஞ்சும் “திருக்குறள் ஆலமரம்” . அதில் தொங்கும் 1330 திருக்குறள்களையும் தம் கையால் வரைந்தவர்கள் மாணவச் செல்வங்கள் . ஆசிரியர்களும் இதர தன்னார்வலர்களும் கூடி வடிவமைத்த இந்த திருக்குறள் ஆலமரத்தை வ.த.மை ஆம் வர்ஜீனியாவில் உள்ள  “வள்ளுவன் தமிழ் மையம்”  சாதித்திருக்கிறது .

 

15 ஆண்டுகளுக்கு முன் 15 மாணவர்களுடன்  துவக்கப்பட்ட  வள்ளுவன் தமிழ் மையம் எனும் தமிழ் கற்றுக் கொடுக்கும் பள்ளி இன்று முதல் நிலை முதல் எட்டாம் நிலை வரை 700 மாணவர்களுடன் ஆலமரமாக வளர்ந்துள்ளது . சனிக்கிழமை தோறும் நடக்கும் இப்பள்ளியில் முழுக்க முழுக்க ஊதியமின்றி உழைக்கும் ஆசிரியர்கள் தன்னார்வலர்கள் தன் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க ஆர்வம் காட்டும் தமிழ் மக்களின் பேராதரவு இவையே அடிஉரம் .

 

இப்பள்ளியின் 15 வது ஆண்டுவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது . அமெரிக்க தேசிய கீதம் அதைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்ந்து என  எடுத்த எடுப்பிலேயே தன் பண்பாட்டு முத்திரையை வலுவாய் பதித்தது . நிகழ்வின் கருப்பொருள் வள்ளுவமே . வள்ளுவமும் தமிழுமே நிகழ்வு நெடுக ஓங்கி ஒலித்தது .

 

மாணவ மாணவிகளின் ஒவ்வொரு கலைநிகழ்வுக்கும் இடையில் மாணவர் இருவரின் அறிமுக உரையாடலும் வள்ளுவம் சார்ந்தே அமைந்தது . மாணவர் பங்கேற்கும் ஓர் ‘மினி பட்டி மன்றமும் ‘ இடம் பெற்றது .அதுவும் வள்ளுவம் சார்ந்ததே .

 

மொத்தம் 44 நிகழ்வுகள் இடம் பெற்றன ஒவ்வொன்றும் தமிழ் தமிழ்  என முழங்கின .தமிழ் பண்பாடு மிளிர்ந்தது .பறை , ஒயில் ,கும்மி , முளைப்பாரி ,காவடி , பொய்க்கால்குதிரை ,சிலம்பம் , வாய்ப்பாட்டு ,சேர்ந்திசை ,பரதநாட்டியம் ,கர்நாடக இசை , அறிவியல் விழிப்புணர்வு என கலக்கி எடுத்தனர் . சாதி ,மத வண்ணம் எங்கும் பூசிக்கொள்ளாத தமிழ் உணர்வாக வள்ளுவன் உணர்வாக மொத்த நிகழ்வும் எம்மைக் கட்டிப் போட்டது . ஏதேனும் ஒன்றை மட்டும் தனியே குறித்தால் நிகழ்வின் ஊடும் பாவுமாய் இருந்த மனிதமும் பண்பாடும் முழுதாய் பிரதிபலிக்காது என்பதால் பொதுவாய்ச் சொன்னோம். ஆயினும் நிகழ்வு முழுக்க நாட்டுபுறவியலும் தமிழும் தமிழ் பண்பாடும் நீக்கமற நிரவி இருந்தது குறிபிடத்தக்கது . ஆகவேதான் இறுதிவரை கைதட்டலும் ஆரவாரமும் அரங்கில் நிரம்பி வழிந்தோடியது .

 

என் பேரன் முகிலன்  காவடி ,பொய்க்கால்குதிரை ஆடியதும் ; என்  பேத்தி மேகா பறை இசைக்கு ஆடியதும் எமக்கு பெரு மகிழ்ச்சி . மிகுந்த மனநிறைவு.

 

 

அமெரிக்க செனட் உறுப்பினர் . நாடாளுமன்ற உறுப்பினர் . தூதுரக அதிகாரி உட்பட பலர் சிறப்பு விருந்தனராக வந்து கலந்து கொண்டதும் ; செனட் சார்பாக வள்ளுவன் தமிழ் மையத்தைப் பாராட்டி பட்டயம் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது .  எட்டாம் நிலை தேர்வு பெற்றவர்களுக்கு பட்டம் அளிக்கப்பட்டது . தமிழ்நாடு அரசு வழிகாட்டுதலோடும் பாடதிட்டங்கள் , தேர்வு எல்லாம் வடிவமைக்கப்படுவதால் அமெரிக்க கல்வித்துறையும் இங்கு பெறும் சான்றிதழை அங்கீகரிக்கிறது . தனிப்பட்ட யாரையும் முன் நிறுத்தாமல் குழுவாக அனைவரும் இயங்கியதும் வெளிப்பட்டதும் அந்த அமைப்பைப் பாராட்டத் தோன்றியது .

 

வர்ஜீனியாவிலும் அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் இதுபோல் தமிழ் கற்பிக்க பலவேறு பள்ளிகள் நடத்தப்படுவதாக அறிகிறோம்.

 

வள்ளுவன் தமிழ் மையம் போல் மற்றவைகளும் இயங்குமெனில் நிச்சயம் மகிழ்ச்சியே !

 

காலை 11 மணிக்கு துவங்கிய நிகழ்வுகள் இரவு 7 மணிக்குத்தான் நிறைவுற்றது [ இடையில் மதிய உணவு , மாலை சிற்றுண்டி  இரவு உணவும் அங்கேதான் ஏற்பாடு]

 

இந்த நிகழ்வுகளை ஒருங்கிணைத்த அனைவருக்கும் பாராட்டுகள்

 

காலை முதல் மாலைவரை வர்ஜீனியாவில் இருக்கும் உணர்வே யாருக்கும் இல்லை .தமிழ்நாட்டில் ஒரு பள்ளியில் கூடிக் கொண்டாடிய மன நிறைவு .

 

########################

 

இரவு உணவை முடித்து அரங்கிலிருந்து புறப்படும் போது என் இணையருக்கு சின்ன விபத்து . உடன் மருத்துவ சிகிட்சையின் பொருட்டு எம் பயணத்தை பத்துநாட்கள் முன்நகர்த்த [ ஜூன்5 , 6 ]வேண்டியதாகிவிட்டது . ஜூன் 6 இரவு பெங்களூர் வந்து சேர்வேன் .ஆபத்தொன்றும் இல்லை . பயப்படத் தேவை  இல்லை . அமெரிக்க மருத்துவத்துறையின் கோரமும் கொடூரமும் பகற்கொள்ளையும் புரிந்தது .பிறகு எழுதுவேன்.   

 

ஆரம்பத்தில் சுட்டிய குறளுக்கு மீண்டும் செல்கிறேன்.

 

சுபொஅ.

02/06/26

வர்ஜீனியா .