கடவுள் கணக்கும் கவலையும் ….

Posted by அகத்தீ Labels:

 

கடவுள் கணக்கும் கவலையும் ….

 

கடவுள்கள்கூட எல்லோரும் சமம் அல்ல .கார்ப்பரேட் கடவுள்கள் , வசதியான கடவுள்கள் ,கஞ்சிக்கு வழியில்லாத கடவுள் , புலால் சாப்பிடாத கடவுள் ,புலால் சாப்பிடும் கடவுள் ,தீண்டக்கூடிய கடவுள் ,தீண்டாமை அனுஷ்டிக்கும் கடவுள் ,சீசனுக்கு சீசன் வந்து போகும் கடவுள், சாதிக்கொரு கடவுள் ,கலவரம் செய்யும் கடவுள், சேரிக்கு வர மறுக்கும் கடவுள் இப்படி விதவிதமாய் உண்டு .

 

ஆனால் எந்தக் கடவுளும் ஏழையை இரட்சித்ததாய் இதுவரை சாட்சிகள் இல்லை .கடவுள்கள் எப்போதும் லஞ்சம் அதுதான் காணிக்கை கொடுக்கும் பணக்கார பக்தர்களுக்கும் , வேஷம் கட்டி மோசடி செய்யும் சாமியார்களுக்குமே துணையாக இருக்கின்றன .

 

இந்தியா முழுவதும் ஆறு லட்சத்து 49 ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்கள் இருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன . இவற்றில் கிராம தேவதைகள் ,நாட்டார் கோயில்கள் , தெருவோர திடீர் கோயில்கள் அடங்காது .

 

தமிழ் நாட்டில்தான் அதிகம் கோயில்கள் இருப்பதாக கூறப்படுகிறது . அதாவது சுமார் 79 ஆயிரம் கோயில்கள் தமிழ் நாட்டில் உள்ளதாக புள்ளிவிவரம் காணப்படுகின்றது . இதில் 38,675 கோயில்கள் மட்டுமே அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் வருகின்றன .

 

கோவில்கள் இவ்வளவு இருந்தாலும் எல்லா கோயிலும் ஒன்றல்ல . தமிழ் நாட்டை எடுத்துக் கொண்டால்  அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ரூபாய் 2 லட்சத்துக்கு மேல் பத்து லட்சம் வரை வருமானம் வரும் கோயில்கள்  492  தான் . பத்து லட்சத்துக்கு மேல் வருமானம் வரும் கோயில்கள் 536 மட்டுமே !

 

ஆக 2.66 விழுக்காடு கோயில்கள் அதாவது 1,028 கோயில்கள் மட்டுமே  வசதி படைத்த சாமிகளைக் கொண்டது . மீதி 97 விழுக்காடு சாமிகள் அதாவது 37,647 கோயில்களில் சாமியின் அன்றாட சோற்றுக்கும் துணிக்கும் விளக்குக்கும் பெரிய கோயில்கள் கொடையாளர்கள் தயவில் அண்டிப் பிழைப்பவைதான் .

 

சிதம்பரம் போல் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வராத கோயில்கள் , சங்கர மடம் ,மேல்மருவத்தூர் ,கோவை ஜக்கி , கல்கி , வேலூர் பொற்கோயில் போன்ற பலவும்  கள்ளப் பணமும் கறுப்புப் பணமும் புரளும் பெரும் நிறுவனங்கள் எந்தக் கட்டுபாடும் அற்ற தனியார் கொள்ளைக் கூடங்கள் .

 

வந்துபோன அத்திவரதர் கணக்கையே ஊன்றி கவனித்தால் ஆட்டையப் போட்டதே அதிகம் என்பதை அறியலாம்.

 

திருப்பதிதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய கார்ப்பரேட் கடவுள் .  வட்டிக்கடைக்கு ஊருக்கு ஊர் கிளை திறப்பதுபோல் திருப்பதி மாநில மாநிலமாய் கிளை திறக்கிறது .அங்கு எல்லா கணக்குமே நாமம்தான் என்கின்றனர் விபரம் தெரிந்தவர்கள் .

 

அயோத்தி ராமர் கோயிலை திருப்பதி போல் இன்னொரு மாபெரும் கார்ப்பரேட் கோயிலாக்க சங்கிக்கூட்டம் திட்டமிட்டு வருகின்றது .பெரும் ஊழல் இப்போதே அதை சுற்றி அரங்கேறிவிட்டது .

 

திருவனந்தபுரம் பத்மனாமசாமிகள் கோயிலுக்குள் சுரங்க அறைகளில் பாதுக்காக்கப்படும் தங்கம் ,வெள்ளி ,வைரம் ,வைடூரியம் எல்லாம் நாட்டுக்கும் மக்களுக்கும் கிஞ்ஞ்சிற்றும் பயனற்று “ பூதம் காத்த புதையலாய்” வீணாக அடைந்து கிடக்கிறது .

 

இவை இந்து மதக் கணக்கு மட்டுமே . மசூதி ,தர்க்கா ,சர்ச் ,வழிபாட்டிடம் , குருத்துவாரா,புத்த விஹார் ,சமண கோயில் இத்யாதி இத்யாதி கணக்குகள் தனி . ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல என்பதே உண்மை .

 

 

புதிதுபுதிதாய் தினம் தினம் முளைக்கும் கோயில்கள் ,சர்ச்சுகள் ,மசூதிகள் ,தர்க்காக்கள் ஏராளம் . ஏராளம்.

 

கோயில் இல்லா ஊரில் குடியிருக்காதே என்று சொன்னார்களாம் முன்பு ; இப்போது கோயிலோ மசூதியோ ,தர்க்காவோ ,தேவலாயமே , பிள்ளையாரோ ,மேரியோ ஏதோ ஒன்று இல்லா தெருவோ ,சந்து ,பொந்தோ இந்தியாவில் இல்லவே இல்லை .இதுபோக வீடு , அலுவலகம் ,அடுக்ககம் , பிய்ந்த குடிசை ,ஓடும் வாகனங்கள் எங்கும் ஏதோ ஒரு கடவுள் ஒட்டிக்கொண்டே இருப்பார் . ஆனால் விமோச்சனம்தான் கண்காணாத் தொலைவில்.

 

ஏற்கெனவே உள்ள சடங்குகள் ,சம்பிரதாயங்கள் ,மூடநம்பிக்கைகள் போதாது என புதிது புதிதாக தினம் ஏதோ ஒன்றை கதை கட்டி பரப்பியவண்ணம் உள்ளனர் .அதுவும் யூ டியூப்புகளும் இணைய சங்கிகளும் 24 x 7 மணி நேரம் மூளையைக் கசக்கி பொய்யையும் புனை சுருட்டையும் விற்றுக்கொண்டே இருக்கின்றார்கள் .போலி அறிவியலையும் புனைசுருட்டையும் கலந்து வியாபாரம் கனஜோராய் நடக்கிறது .

 

இவற்றைச் சுற்றி பெரும் பொருளாதார வட்டம் இயங்குகிறது .இந்த மதநிறுவனங்கள் சார்ந்த்து ஒரு கொள்ளைக்கூட்டமே பவனி வருகிறது . பல லட்சம் மக்களின் அன்றாட வாழ்வாதாரம் இவற்றை சுற்றியே பின்னப்பட்டு உள்ளது .

 

இவற்றைச் சுற்றி அரசியல் இயங்குகிறது .அதிகார மையம் இயங்குகிறது .மூடநம்பிக்கைகளும் அறியாமைகளும் இவற்றைச் சுற்றி கட்டமைக்கப்படுகின்றன .

 

பண்பாடும் தத்துவமும் வாழ்நெறியும் கூட இவற்றை சுற்றியே கட்டமைக்கப் படுவதால் அறிவுக்கும் சமத்துவத்துக்கும் விலங்கிடப்படுகிறது .

 

அதேசமயம் பள்ளி ,கல்லூரி ,மருத்துவமனை என மக்கள் நலம் சார்ந்த பணிகளுக்கு இவற்றிலிருந்து செலவிடும் தொகை குறுகிய சதவீதமே.

 

மூளையில் பிணைக்கப்பட்டுள்ள இந்த நம்பிக்கை விலங்கை உடைப்பது அவ்வளவு எளிதானதல்ல . ஆயின் சமூக சமத்துவத்துக்கான தொடர் போராட்டத்தில்  இவற்றை அம்பலப்படுத்தாமல் கடந்து செல்லவே முடியாது .

 

செம்பில் களிம்பு சேராமல் சாம்பலால் துலக்கிக் கொண்டே இருப்பது போல் மனித மூளையில் கசடுகள் சேராமல் அறிவியல் துணையோடு கேள்விகள் எழுப்பிக் கொண்டே இருக்க வேண்டும். வேறு வழி இல்லை.

 

 

சுபொஅ.

1/9/2023.

 

 


0 comments :

Post a Comment