உரைச் சித்திரம் : 12.

Posted by அகத்தீ Labels:

 

உரைச் சித்திரம் : 12.

 

கர்வமும் வேண்டாம் !

கழிவிரக்கமும் வேண்டாம் !

 

 


 

 

விலங்குகள் ,பறவைகள் ,புழு பூச்சிகள் ,மரம் செடி கொடிகள் என நம்மைச் சுற்றி இருக்கும் உலகில் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விதத்தில் சிறப்பானது ; ஒவ்வொன்றிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ள செய்திகள் உண்டு .

 

தமிழ் சங்க இலக்கிய பரப்பு நெடுகிலும் இத்தகைய நுண் நோக்கு நிறைந்து காணப்படும் . தமிழர் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர் .இயற்கையிடமிருந்து கற்றுக் கொண்டனர் . அவற்றை அடுத்த தலைமுறைக்கு சிந்தனைப் புதையலாய் கையளித்துச் சென்றனர் .அவற்றில் சில இக்கால அறிவியல் மற்றும் சமத்துவ உலகுக்கு பொருந்தாமல் போகலாம்.ஆயின் ,காலவெள்ளத்தில் கரையாத உண்மைகளும் நிரம்ப உண்டு.

 

புலவர் காரியாசானின் சிறுபஞ்சமூலத்தில் இருந்து சில காட்சிகளைப் பார்ப்போம்.

 

சிலந்திப்பூச்சிக்கு தன் முட்டையே எமனாகுமாம். பெண்சிலந்தி தன் கடைசி முட்டையை இட்டதும் இறந்துவிடும் .

 

மான் ,ஆடு ,மாடு இன்னபிற விலங்குகளுக்கு கொம்பு எமனாகிவிடும் . புலி ,சிங்கம் ,சிறுத்தை போன்ற விலங்குகள் வேட்டையாட துரத்தும் போது மரம் செடி கொடிகளுக்கு இடையே புகுந்து மான்,ஆடு ,மாடு போன்றவை ஓடுமல்லவா ,அப்போது கொம்புகள் அவற்றில் சிக்கிக் கொள்ளும் ; பலியாகிவிடும்.

 

கவரிமான் தன் மயிரை இழந்தால் உயிர் நீத்துவிடும் என்கிற ஒரு செய்தி நீண்டகாலமாக உலவுகிறது .

 

நண்டுக்கு அதன் குஞ்சே எமனாகிவிடும் என்பதையும் அறிவோம்.

 

இப்படி நான்கு இயற்கைச் செய்திகளைச் சொன்ன புலவர் ,அடுத்து நெத்தியடியாய்ச் சொன்னதுதான் “டாப்”

 

ஒருவர் பேசும் வசைமொழிகளே அவருக்கு எதிரியாகிவிடும்.

 

சரிதானே !

 

இன்னொரு பாடலில் புலவர் சொல்கிறார் ;

 

வான் குருவி எனப்படும் தூக்கணாங்க் குருவி மிக வலிமையாக கூட்டைக் கட்டுகிறது .மின்மினிப் பூச்சியை விளக்காக வைத்து அந்தரத்தில் தொங்கி தூக்கணாங்குருவி கூடுகட்டுவது அற்புதமானது.

 

அரக்கு பூச்சி என்றொரு பூச்சி கல்யாண முருங்கை ,பூவரசம் மரம் இவற்றில் குடியேறி அவற்றின் சாற்றை உண்டு எச்சிலாய் துப்பும் ; அது காய்ந்து அரக்காகும் .அதன் வலிமை அதிகம்.

 

உலண்டு என்கிற பட்டுப்புழுக்கள் பின்னும் பட்டுநூலின் மென்மை தனித்துவம் மிக்கது .

 

ஒருவகை அந்துப் பூச்சிகள் குட்டிகுட்டி மரக்குச்சிகளை ஒண்றிணைத்து கூட்டுப்புழுவாக வாழும் .கோல்கூடு அல்லது புழுக்கூடு என அழைக்கப்படும் அவற்றினை பார்த்து வியக்காமல் இருக்க முடியுமா ?

 

அதேபோல் தேன்கூடு .அதனை யோசிக்க யோசிக்க வியப்பே மிஞ்சும் .

 

இப்படி இயற்கையின் வியப்பான செய்திகளைச் சொல்லிவிட்டு புலவர் ஓங்கி உரைப்பது என்ன தெரியுமா ?

 

ஒருவர் எளிதாய் செய்துவிடுகிற செயலை இன்னொருவர் அதேபோல் செய்துவிட முடிவதில்லை . ஒவ்வொருவருக்கும் அவர் செய்யும் செயல் எளிது ;பிறர் செய்யும் செயல் அரிது . எதையும் குறைத்து மதிப்பிடாதீர்I

 

 

இன்னொரு பாடலில் மிகச்சாதாரண்மாக உண்மையைப் போட்டுடைத்து விடுகிறார் காரியாசான்.

 

 “எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்” என்கிற சொலவடை சொல்வதென்ன ? எல்லாம் தெரிந்த ஒருவர் என யாரும் கிடையாது ; இருக்கவும் முடியாது.

 

அதுபோல் எதுவும் தெரியாத சாணி மூளை என வசைபாடுவோம் . ஆனால் அப்படி எதுவும் தெரியாத  “சுத்த சூன்யம்” யாரும் கிடையாது ;இருக்கவும் முடியாது.

 

இரண்டுக்கும் நடுவில்தான் நாமெல்லாம்.

 

இவன் தங்கக் கம்பி ,அப்பழுக்கில்லாதவன் என சிலரைச் சுட்டுவோம் .இதுவும் மிகைக்கூற்றே . கெட்ட குணமோ ,கெட்ட சிந்தனையோ துளியும் இல்லாதவர் எவரும் இல்லை.

 

இவன் /இவள் மகா அயோக்கியன்/ள் மருந்துக்கும் நல்லகுணம் இல்லை என வெறுப்போம் . ஆனால் அந்தக் கல்லிலும் ஈரம் இருக்கும் ;ஒரு புல் தலைநீட்டும் .முழுக்க கெட்டவர் என்று யாருமில்லை .இருக்கவும்முடியாது .

 

இரண்டுக்கும் நடுவில்தான் நாமெல்லாம்.

 

நான் இருபதாயிரம் புத்தகங்கள் படித்துவிட்டேன் . நூல்கள் எல்லாவற்றையும் படித்துவிட்டேன் என்கிற அகந்தை யாருக்கும் வேண்டாம் . எல்லா நூல்களையும் பழுதறக்கற்றவர்கள் என்று யாருமில்லை ;இருக்கவும் முடியாது .

 

ஆகவே கர்வமும் வேண்டாம் ! கழிவிரக்கமும் வேண்டாம் !

 

இங்கே நான் விவரித்த மூன்று சிறுபஞ்சமூலம் பாடல் காட்சிகளை .இப்போது கீழிருந்து மேலாக அசை போடுங்கள் !

 

மீண்டும் சொல்கிறோம் ;

கர்வமும் வேண்டாம் ;கழிவிரக்கமும் வேண்டாம் !

 

 

சிலம்பிற்குத் தன்சினை கூற்றம் நீள்கோடு
விலங்கிற்குக் கூற்றம் மயிர்தான் - வலம்படா
மாவிற்குக் கூற்றமாம் ஞெண்டிற்குத் தன் பார்ப்பு
நாவிற்கு நன்றல் வசை

(சிறுபஞ்சமூலம் - 11)




“வான்குருவிக் கூடுஅரக்கு வால்உலண்டு நூல் புழுக்கோல்

தேன்புரிந்து யார்க்கும் செயல்ஆகா - தாம்புரீஇ

வல்லவர் வாய்ப்பன என்னார் ஓரோ ஒருவர்க்கு

ஒல்காது ஓரொன்று படும்”                                            

                                                         - (சிறுபஞ்சமூலம்: 25)

ஒருவன் அறிவானும் எல்லாம், யாதொன்றும்
ஒருவன் அறியாதவனும், ஒருவன்
குணன் அடங்க, குற்றம் இலானும், ஒருவன்
கணன் அடங்கக் கற்றானும், இல்.                                       [ சிறுபஞ்சமூலம்:29]

 

 

கர்வமும் வேண்டாம் !

கழிவிரக்கமும் வேண்டாம் !

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

28/5/2022.

 

0 comments :

Post a Comment