பசியாப் பழம்

Posted by அகத்தீ Labels:



பசியாப் பழம்






பாட்டிசொன்ன செய்திகள்
பசுமையாய் நினைவுத்திரையில்

ஒன்று தின்றால் போதுமாம்
ஆயுளுக்கும் பசி எடுக்காதாம்

ராமர் வனவாசம் போகையில்
இதைத்தான் சாப்பிட்டாராம்

எந்தப் பருவத்தில் எங்கே விளையும் ?
யாருக்கும் இங்கே தெரியவில்லை .

ஏடுகள் தேடிச் சலித்தேன்
எந்தக் குறிப்பும் அகப்படவில்லை

கல்வெட்டில் இருக்குமோ ?
தொல்லியியலாளர் கைவிரிக்கின்றனர்

ஒரு வேளை அமைச்சர்
அறிந்திருக்கக் கூடுமோ ?


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில்
கேட்டுப் பார்ப்போமா ?




ஆதர் அட்டையும் பான் கார்டும்
அவசியம் காட்டவேண்டுமோ ?


கனவும் குழப்பமுமாய் நாட்கள்
நகர்ந்ததன்றி ஒரு தடயமும் சிக்கவில்லை


காய்த்திரி மந்திரம் ஜெபிக்கும் பெரிய
மூளைக்காரருக்கு அறிந்திருப்பாரோ ?


சூத்திரன் அதைத் தின்பதற்கு
சாஸ்திரங்கள் அனுமதிக்குமோ ?


எது எப்படியோ என்னுள் பேராசை
பெருவெள்ளமாய் மடைகடக்கிறது


பசியாப் பழம் எமக்கு கிடைத்துவிட்டால்
பசிவயிற்றைக் கிள்ளாதாகையால்


வேலைக்கு அலைய வேண்டாம்
விலைவாசிக்கு கலங்க வேண்டாம்


போராடவும் தேவையில்லை
போராடத் தூண்டவும் தேவையில்ல .


ஆனாலும் ஒரு சந்தேகம்
ஜி எஸ் டி வரி உண்டா ?


- சு.பொ.அகத்தியலிங்கம் .










0 comments :

Post a Comment