பெருங்கடலெனிலும்..

Posted by அகத்தீ Labels:








பெருங்கடலெனிலும் ..

-          சு.பொ.அகத்தியலிங்கம்


குழந்தை இளமை முதுமை
இன்பம் எதுவென
நண்பர் வினவினர்

ஒன்றின் இனிமை
இன்னொன்றில் உண்டோ?
ஒவ்வொன்றையும்
வாழ்ந்து பார்ப்பதே
வாழ்வெனப் பகர்ந்தேன் .

வலிமிக தருவது
எதுவென சொல்க!
கேள்வி தொடர்ந்தது ..

அவ்வப்போது
அவ்வலி பெரிது
வலியும்
வாழ்வின்  கூறென்றறிக        !


முதுமையும் சுவையோ ?
அழுத்தும் சுமையோ
ஐயம் அகற்றுக
என்றே வினவினன்..

சுவையும் சுமையும்
கலந்தததே வாழ்வு
அனுபவ நெருப்பில்
எஃகாய் மாறின்
சுமையும் சுவையே!

தன் வலி பிறர் வலி அறிந்து
சூழ் நிலை உணர்ந்து
தகவமைத்தலில் அடங்கும்
வாழ்வின் ரகசியம் .

இதன் பொருள்
அடங்கி ஒடுங்கலோ
ஆமையாய்
ஓட்டில் பதுங்கலோ அல்ல .


விசாலாப் பார்வையால்
மக்களை விழுங்கி
வெள்ள அன்பால்
மானுடம் நனைத்து
கொடுமைக்கு எதிராய்
நெஞ்சுரம் நல்கி
மேலும் மேலும்
மானுடம் தழைக்க
நாளும் பொழுதும்
நாமே உரமாய் சொரிதல்

ஐயா ! ஐயம் கேட்டேன்!
நாவில் வரையும் சொற்கோலம்
வாழ்வுக்கு உதவுமோ ?
சொல்லுக நீவீர்!

நல்லது! கேட்டாய் !
சொல்வது கேட்பாய் !
வைராக்கியத்தோடு
வாழ்ந்து பார்
வாழ்வின்
ஒவ்வொரு கணமும்
உன்னதமானதே !

பிறவி பெருங்கடலென
அஞ்சுதல் வெறுத்தல்
ஆகாது என்றும்

பெருங்கடலலெனிலும்
அலையொடு எழுந்தும் விழுந்தும்
அலையோடு பழகியும்
ஆழ நீந்தியும்
அகலம் நீளம் அடிமுடி
தேடி அலைந்தும்
மூச்சை அடக்கி
முத்துக்குளித்தும்….

அடடா! இன்பம்!
அதுவே வாழ்வென
அனுபவம் காட்டும்.



0 comments :

Post a Comment