உரைச் சித்திரம் : 3.

Posted by அகத்தீ Labels:

 


உரைச் சித்திரம் : 3.

 

குறை நிறைகளோடு பழகுவோமே !

 

 

ஒவ்வொரு மரத்துக்கும் ஓர் இயல்பு உண்டு . அதை நம் சமூகம் நன்கறியும் .

 

கமுகு மரத்தை அதாவது பாக்கு மரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் ; நாள் தோறும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும் . அப்போதுதான் காய்த்துக்கொண்டே இருக்கும் .தண்ணீர் பாய்ச்சுவது நின்றுபோனால் காய்ப்பதும் நின்று போகும் .

 

தென்னை மரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அவ்வப்போது அதாவது விட்டு விட்டு நீர் பாய்ச்சினும் காய்ப்பதை நிறுத்தாது .

 

அதே வேளை பனை மரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் எப்போதோ பாய்ச்சிய தண்ணீருக்கு காலம் முழுவதும் பயன் தரும் .

 

நட்பும் அப்படித்தான் . சிலர் நட்பு பாக்கு மரம் போன்றது , பணத்தால் குளிப்பாட்டிக் கொண்டிருந்தால் மட்டுமே நட்பு நீடிக்கும் . சற்று வற்றினாலும் நட்’பூ’ உலர்ந்து உதிர்ந்து விடும்.

 

சிலர் நட்பு தென்னை போல அவ்வப்போது அதாவது வாய்ப்புள்ள போது மட்டும் பணமோ உதவியோ செய்து மகிழ்ந்தால் போதும் ; காலம் நெடுக நட்’பூ’ புன்னகைக்கும் .

 

சிலர் நட்பு பனை போன்றது . எப்போதோ செய்த ஒன்றை வாழ்நாள் முழுவதும் மறவாது கொண்டாடும் .குதுகலிக்கும் .நட்’பூ’ மணம் வீசிக்கொண்டே இருக்கும் .

 

இந்த நட்பு நீடிக்க என்ன செய்ய வேண்டும் ?

 

அரிசியாக அப்படியே விளைவதில்லை . நெல்லாகவே விளையும் .நெல்லில் உமி இருக்கும் . உமியை நீக்கித்தான் அரிசியை எடுக்க வேண்டும் . உமி இருக்கிறது என்பதால் அரிசி வேண்டாம் சோறு வேண்டாம் எனச் சொல்ல முடியுமா ?

 

பொங்கிப் பாயும் தண்ணீரில் நுரை கொப்பளித்து வரும் .எனக்கு நுரை பிடிக்காது எனவே தண்ணீரே வேண்டாம் எனச் சொல்வோமா ?

 

அழகிய பூவாயினும் அங்கு அதில் புல்லி வட்டம் இருக்கும் , ரோஜா பூவை எடுத்தால் முள் இருக்கும் . ஆதலால் பூக்களை வெறுப்போமோ ?

 

நாம் நண்பராக வாரி அரவணைத்தவரிடமும் சில குற்றங் குறைகள் இருக்கும் . குற்றங் குறை இல்லாத மனிதர் யார் ? குற்றம் பார்க்கின் சுற்றம் உண்டோ ? நட்பு உண்டோ ?

 

காதலாயினும் நட்பாயினும் குறை நிறைகளோடு ஏற்கப் பழகுவதுதானே வாழ்வை இனிதாக்கும் ! சின்னச் சின்ன குற்றங்களைக் கண்டு வெறுக்கத் துவங்கினால் ஒவ்வொருவரும் தனித்தே இருக்க வேண்டியதுதான்.

 

நாம்தான் அணை கட்டுகிறோம் .தண்ணீரைத் தேக்குகிறோம். ஏதோ காலச் சூழலால் அணை உடைந்து நீர்ப் பெருக்கெடுத்து ஓடுகிறது . கோபப்பட்டு என்ன செய்ய ?

 

அதற்காக மீண்டும் அணை கட்டாமல் இருக்க முடியுமா ?தண்ணீரைத் தேக்காமல் இருக்க முடியுமா ?

 

சில நேரங்களில் நாம் விரும்பி நட்பு கொண்டோர் நாம் வெறுக்கும் சில செயல்களைச் செய்துவிடக்கூடும் . சொற்களைக் கொட்டிவிடக்கூடும் . அந்த ஒன்றைச் சொல்லியே நட்பை காவு கொடுக்க இயலுமா ? காதலுக்கும் இதுவே !

 

நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் – அதாவது பிளஸ் அண்ட் மைனஸ் இரண்டும் கலந்துதான் நட்பும் காதலும் .அப்படியே ஏற்பதும் தொடர்வதுமே வாழ்க்கையின் வெற்றி !

 

இப்படி எல்லாம் நம்மை செப்பனிடும் நல்ல வழிகாட்டியே சங்க இலக்கியங்கள் .நாலடியார் வரைந்த சில செய்திகளை இங்கு தீட்டிக் காட்டினேன் .

 

நீங்களும் அசை போடுங்கள் !

 

 

கடையாயார் நட்பிற் கமுகனையார்; ஏனை
இடையாயார் தெங்கின் அனையர்; - தலையாயார்
எண்ணரும் பெண்ணைபோன்று இட்டஞான்று இட்டதே,
தொன்மை யுடையார் தொடர்பு.

216



நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும்
நெல்லுக் குமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.

221




செறுத்தோறு உடைப்பினும் செம்புனலோடு ஊடார்
மறுத்தும் சிறைசெய்வர் நீர்நசைஇ வாழ்நர்
வெறுப்ப வெறுப்பச் செயினும் பொறுப்பரே
தாம்வேண்டிக் கொண்டார் தொடர்பு.                                        222



 

குறை நிறைகளோடு மக்களை அரவணைக்கப் பழகுவோமே !

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

24/3/2022.

0 comments :

Post a Comment