உரைச் சித்திரம் – 2.

Posted by அகத்தீ Labels:

 

உரைச் சித்திரம் – 2.

 

வாழ்தலின் நெறி…….

 

 

 

 

மலையைக் கற்பனை செய்யுங்கள் , அதன் உச்சியில் வட்ட முழுநிலா ! அடடா ! அடடா!  கற்பனைசெய்தாலே அழகு சொட்டுகிறதே !

 

மலைபோல் யானை நிற்கிறது , அதன் மீது ஒருவர் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார் ,அவர் பொன்வண்ணத்தில் குடை பிடித்திருக்கிறார் .

 

மேலே சொன்ன இரண்டு காட்சியையும் அருகருகே வரைந்து பாருங்கள் அதன் பேரழகும் மதிப்பும் புலப்படும் .

 

யானை மேல் உட்கார்ந்திருப்பவர் முடிசூடிய மன்னர் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ !

 

ஆனால் அந்த மாமன்னரும் ஒரு நாள் இறந்து போனார் . அப்போது பிணம் என இழிந்த நிலையானார் !

 

யாக்கை நிலையற்றது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ ?

 

சூரியன் ஒவ்வொரு நாளும் உதிக்கிறாள் . வாழ்வு ஒவ்வொரு நாளாகக் குறைந்துகொண்டு போவதை சொல்லிச் செல்கிறான் .

 

சாவு எல்லோருக்கும் வரும் ! எப்போது வேண்டுமானாலும் வரும் !

 

சாவு உங்களைத் தேடி வரும் முன் , நாலு பேருக்கு நல்லது செய்யுங்கள் !

 

சங்க இலக்கியங்களின் ஒன்றான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான நாலடியார் வரைந்து காட்டும் சித்திரங்களே மேலே சுட்டியவை 

 

நாலடியார் மட்டுமல்ல சங்க இலக்கியம் நெடுகிலும் இத்தகு யாக்கை நிலையாமை குறித்து நிறையவே பேசப்படுகின்றது .

 

சாவைக் காட்டி மிரட்டவோ – சாக்குருவி வேதாந்தம் பேசவோ அல்ல . ஒன்றிரண்டு அப்படியும் இருக்கலாம் ;ஆயினும் பெரிதும் மேலோங்கி இருப்பது அதுவல்ல ; வாழ்தலின் அறத்தை நெறியைச் சொல்லவே !

 

சாவு எந்த நொடியிலும் வரட்டும் கவலையில்லை .வாழும் ஒவ்வொரு நொடியும் நல்லன நினை ! நல்லன செய் ! ஊருக்கு உழை ! ஒல்லும் வகையெல்லாம் அறன் வழி செல் !

 

 

 

மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத்
துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில். [21]





வாழ்நாட்கு அலகுஆ வயங்கொளி மண்டிலம்
வீழ்நாள் படாஅது எழுதலால் - வாழ்நாள்
உலவாமுன் ஒப்புர வாற்றுமின்; யாரும்
நிலவார் நிலமிசை மேல். [22]



ஒவ்வொரு நொடியிலும் பயனுற வாழ்வதென்பது பிறர் நலன் பேணலே !

ஆம் . நொடிகளுக்கிடையே வாழ்ந்தாலும் கோடி மின்னலைப்போல் வாழவேண்டும் .சரிதானே !

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

20/3/2022.

0 comments :

Post a Comment