காலத்தின் காலடிகளாய் முகநூல் பதிவுகள்….

Posted by அகத்தீ Labels:

 

 


காலத்தின் காலடிகளாய்

முகநூல் பதிவுகள்….

 

 நேற்று மதத்தின் பகைமையைக் காட்டி பாகிஸ்தான் அணியை வெறுக்கச் சொன்னீர்கள் … வெறுத்தோம்.

 

இன்று இனத்தைக் காட்டி இலங்கை அணியை வெறுக்கச் சொல்கிறீர்கள்…வெறுக்கிறோம்.

 

நாளை மொழியைக் காட்டி கர்நாடக அணியை வெறுக்கச் சொல்வீர்கள்…வெறுப்போம்.

 

அப்புறம் சாதியின் பெயரால் பக்கத்து தெரு அணியை வெறுக்கச் சொல்வீர்கள்… அதையும் வெறுப்போம்.

 

வெறுப்பின் விதைகளை ஊன்றிக்கொண்டே செல்லுங்கள்.உங்களுக்கு என்ன … கல்லாப் பெட்டி நிரம்பினால் போதும்.ஆனால் வெட்டிச் சாகப் போவது நாங்கதானே !

 

வாழ்க வேற்றுமையில் ஒற்றுமை !”

 

07/04/2014 ல் முகநூலில் கருப்பு கருணா பதிந்தது . இன்றும் படிக்கையில் நம்மோடு உயிரோடு பேசுவது போல் உள்ளதே .

 

இதே போன்ற கருப்பு கருணாவில் நூற்றுக் கணக்கான பதிவுகளை – கடந்த பத்தாண்டில் எழுதியவற்றை ஒரே புத்தகத்தில் வாசிப்பது என்பது புதுமையான அனுபவமே .”நட்பின் வாசல்…” அந்த அரிய வாய்ப்பை நம்முன் திறந்துவிட்டுள்ளது .

 

முகநூல் பதிவுகளை நூலாக்கும் முயற்சி அண்மையில் அதிகரித்துள்ளது . ஆயின் ஒருவர் மறைவுக்கு பின் அவரது பதிவுகளைத் தொகுத்து உலவவிடும் முதல் நூல் இதுவாகத்தான் இருக்கும் .

 

கருப்பு கருணா ஒரு இடதுசாரி கள செயல்பாட்டாளர்,நாடகக் கலைஞர் அவரது வீரியமிக்க அரசியல் சமூகப் பார்வையை இந்நூல் முழுக்க தரிசிக்கலாம்.

 

அவன் யார் ? சுருங்கச் சொல்லிவிட்டான் .17/10/2020ல் போட்ட பதிவை வாசியுங்கள் ;

 

“நூற்றாண்டு கண்ட கம்யூனிச இயக்கத்தில் ஒரு உறுப்பினராக இருப்பது பெருமைக் குரிய ஒன்று .இதெல்லாம் சொன்னால் புரியாது . வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும் .

நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

 

03/12/2019 ல் ஓர் பதிவின் மூலம் “ ஒரு ஏழெட்டு வருசத்துக்கும் முன்னாடி….. கவின்மலர்தான் அரிச்சுவடி போட்டு கத்துக் கொடுத்தார் . அதுதான் இப்போ இந்த அளவுக்கு வந்து நிக்குது . அந்த வகையில் நம்ம குரு கவின்தான்…” என தன்னை முகநூலுக்கு அழைத்து வந்தவர் அவர்தான் என்கிறார் .

 

 “ அரசன் அன்று கொல்வான் … தெய்வம் நின்று கொல்லும் .. இதற்கு என்ன சார் அர்த்தம் ?

ரெண்டு பயலுமே கொல்வாங்கன்னு அர்த்தம் … என்ன கொஞ்சம் முன்னபின்ன இருக்கும் …அம்புடுத்தான்,” [28/01/2017]

 

நூல் நெடுக அன்றாட அரசியல் சமூக நிகழ்வின் மீதான கறாரான எதிர்வினை மிக அழுத்தமாக பதிவாகி இருக்கிறது . பெரும்பாலும் பதிவின் சாரமே செய்தியை உள்ளடக்கி இருக்கும் .அந்த குறிப்பிட்ட நிகழ்வையும் சேர்த்து அசைபோட முடிந்தால் கூர்மை தைக்கும்.

 

 “அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டே கோயிலுக்கு செல்கிறேன்:எல்.முருகன்.

அதே அரசியல் சட்டம்தான் எல்லோரும் கோயில் கருவறைக்குள் போகலாம்னு சொல்லுது ..முடிஞ்சா ட்ரை பண்ணிப் பாருங்க முருகன்.”

06/11/2020 ல் போட்ட இப்பதிவு நறுக்கென்று தலையில் குட்டும்.

 

சொல்லச் சொல்ல நீளும் .இடம் கருதி நீட்டவில்லை .!

 

அட ! பழைய முகநூல் பதிவுகளை வாசிப்பதில் அப்படி என்ன சுவை இருக்கப் போகிறது என்கிறீர்களா ? வாசித்துதான் பாருங்களேன்.

 

முன்பெல்லாம் தினசரி நாட்குறிப்பு ’டைரி’ எழுதுகிற பழக்கம் பலரிடம் இருந்தது . பொதுவாய் அவற்றில் சொந்த சோகக்கதைகளும் கொண்டாட்டமும் குடும்ப வரவு செலவும் இருக்கும் . அடுத்தவர் டைரியை ரகசியமாகப் படிப்பதில் அப்படி ஒரு ஈர்ப்பு சிலருக்கு இருக்கும் . சில குடும்ப ரகசியம் வெளிப்படும் .அந்த டைரிகளை புரட்டி அலசினால் அதனுள்ளும் ஓர் சமூகச் செய்தியோ அரசியல் செய்தியோ நிச்சயம் இருக்கும் . தமிழ்ச் செல்வன் தன் தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸ் டைரியை தொகுத்து வெளியிட்டது நினைவுக்கு வருகிறது .சுப்பாராவ் எழுதிய ’தாத்தாவின் டைரி’ கதை அழுத்தமான செய்தி சொன்னது . இன்று டைரி எழுதும் பழக்கம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றே நினைக்கிறேன்.

 

முகநூல் டைரிக்கு மாற்றல்ல ; அதற்கும் மேம்பட்டது ; ஆயின் ரகசியம் கிடையாது . சொந்த புலம்பல் ,ஆரவாரம் எல்லாம் இருக்கும் .ஆயின் அதுமட்டுமே அல்ல . அன்றாடம் ஏதேனும் ஒரு செய்தியை நல்லதோ கெட்டதோ சரியோ தவறோ நம்மை எழுத வைத்துவிடும் .இது ஓர் சமூக ஊடகம் ஆகவே விரைவாய் ஓர் கருத்தை செய்தியைக் கொண்டு சேர்ப்பதில் ,எதிர்வினையாற்றுவதில் ஒரு முக்கிய பங்கு ஆற்றுகிறது .

 

இன்று வாய்மொழி இலக்கியம் வரலாற்று ஆய்வில் ஓர் இடத்தைப் பெறத் துவங்கிவிட்டதைப்போல , நாளை முகநூல் பதிவுகளும் ஆய்வுப் பொருள் ஆகுமோ ? யாமறியோம் !

 

இந்த நூலை நீங்கள் படியுங்கள் . வரிசையாகப் படிக்கக்கூட வேண்டாம் . அங்கும் இங்குமாய் அலைபாய்ந்தும் துணுக்குகளைக் கொறிப்பதுபோல் கொறிக்கலாம் . இந்நூல் நமக்கு மூன்று செய்திகளை வலுவாகச் சொல்கிறது .

 

1] கவிதை மொழி ,சிறுகதை மொழி ,நாவல் மொழி ,கட்டுரை மொழி ,ஆய்வு மொழி என்று இருப்பதைப்போல் முகநூல் மொழி தனித்துவமானது என்பதை இந்நூல் சொல்லித் தரும்.

 

2]கேலி ,கிண்டல் , எள்ளல் ,ஏகடியம் ,நக்கல் ,நையாண்டி ,குத்தல் ,குதறல் ,விவரம் , நுட்பம் ,விமர்சனம் , வியாக்கியானம் என எல்லாம் கலந்து நம் அரசியலை பரந்த பகுதிக்கு கொண்டு செல்ல வழிகாட்டும் நூல் .

 

3] நம்மிடம் பெரும் எண்ணிக்கையிலான மத்தியதர வர்க்கம் உண்டே . அவர்களிடம் நவீன வசதிகள் உண்டே. அவர்கள் முகநூலை கண்டு கொள்ளாமல் இருப்பது சரியா ? எல்லோரும் நம் கருத்துகளை அவரவர் கறபனை கைத்திறன் கலந்து அளித்தால் , வரும் பதிவுகளை ஆதரித்தால் நம் பரப்புரை வலுவாகுமே ! இந்நூல் அதற்கு தூண்டுகோல் ஆவதாக !

 

தொகுத்தளித்த சிராஜுதீனுக்கு வாழ்த்துகள்!

 

நட்பின் வாசல் ,

[ ‘கருப்பு கருணா’வின் முகநூல் நிலைத்தகவல் குறிப்புகள் ]

தொகுப்பு : சிராஜுதீன் ,

வெளியீடு :பாரதி புத்தகாலயம் ,தொடர்புக்கு : 044- 24332424 /24330024/24332934 ,9498062424 ,விலை : ரூ. 384/ பக்கங்கள் :360/.

 

சுபொஅ.

11/11/2022.

 

0 comments :

Post a Comment