உரைச் சித்திரம். 24. மரம் பட்டுப் போகுமளவுக்கு மருந்துப் பட்டை உரிப்பரோ ?

Posted by அகத்தீ Labels:

 

உரைச் சித்திரம். 24.

 

மரம் பட்டுப் போகுமளவுக்கு 

மருந்துப் பட்டை உரிப்பரோ ?

 

 


 

 “அழகிய நெற்றியுடையாய் ! நான் சொல்லுவதைக் கேளாய் !

மருந்துக்கு உகந்த பயன் மிக்க மரமே ஆயினும், மருந்து தேவை என்பதினாலேயே அம்மரம் படுப்போகும் அளவுக்கு யாரேனும் மருந்தை எடுப்பரோ ? மருந்துப் பட்டை உரிப்பரோ ?

உடல் வருந்தத் தவம் செய்பவராயினும் தம் வலிமை முற்றாய் சீரழியும் வகையில் தவம் செய்வரோ ?

அரசர் எனில் வரி வசூலிப்பது தவிர்க்க முடியாததுதான் ; ஆயின் ,மக்களின் வாழ்க்கையே நொந்தழியும் வண்ணம் வரிவசூலிப்பரோ ?

காதலர் என்னுயிரையும் தன்னுயிருடன்  சேர்த்து பொருளீட்ட சென்றாரா ? அவரைப் பிரிந்தால் நான் செத்துவிடுவேன் என்பதை அறியாமல் அதீத பொருள் ஈட்டும் ஆசை கொண்டு விரைந்தாரா ?இதுதான் ஆண்களின் இயற்கை குணமோ ?

கேட்டுச் சொல்வாய் தோழி!”

 

காதன் பிரிவால் மெலிந்த காதலி தோழியிடம் கடுமையாக இப்படிப் பேசியதாக , கணி புன்குன்றனார்  எனும் புலவர் நற்றிணை [ 226. பாலை ] பாடலொன்றில் விவரித்துள்ளார் .

பேசவந்தது காதலர் பிரிவை , கூடவே சுட்டியது வாழ்வியல் நெறியை. இதுதான் பொதுவாய் சங்க இலக்கிய செல்நெறி.

 

நற்றிணையில் காவட்டனார் எனும் புலவர் இன்னொரு காட்சிவழி வாழ்நெறி காட்டுகிறார்.அதனைப் பார்ப்போம்.

 

தற்போது செங்கம் என்று அழைக்கப்படும் ஊர் சங்க இலக்கியத்தில் ‘செங்கண்மா’ என அழைக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர் . சிவந்த கண்களை உடைய ‘செங்கண்மா’ எனும் ஓர் விலங்கு அங்கு மிகுதியாகக் காணப்பட்டதால் அவ்வூர் செங்கண்மா என அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது . நன்னனின் இவ்வூர் பற்றி நற்றிணையில் காவட்டனார் விவரிக்கிறார் .

 

சேயாற்றின் கரையில் அமைந்த ஊர்‘‘செங்கண்மா’. அவ்வூரில் மக்களிடம் செல்வம் குவிந்திருந்தது .எவ்வளவு தெரியுமா ? அவர்கள் விரும்பிய வாறெல்லாம் செலவு செய்தும் நிறைய மிஞ்சியிருக்குமாம் . அச்செல்வம் கேட்பாரற்றுத் திருடர் பயமற்று தெருவில் கிடக்குமாம்.

அங்குள்ள மக்களும் பஞ்சம் பட்டினி என அடிக்கடி ஊர்விட்டு ஊர் செல்ல வேண்டிய தேவை இல்லாமல் அங்கேயே நீண்ட காலமாக  வாழும் குடிமக்களாகவே இருப்பார்களாம்.

காலியிடம் இல்லாமல் நெருக்கமாகக் கட்டப்பட்ட வீடுகளுடன் அதன் கடைவீதி அமைந்திருக்குமாம். நீரோடும் ஆறுபோல் மக்கள் நடமாடும் தெருக்கள் அமைந்திருக்குமாம் .

அந்த ஊரைக் காண்பதற்கு முன்னர், அதனை இகழ்ந்து பேசியவர்கள்கூட ஒருமுறை அங்கு வந்து பார்த்துவிட்டால் மக்கள் வெள்ளத்தைப் பார்த்து வியப்படைந்து வய்பிளந்து நிற்பார்களாம் .

அங்குள்ள குறுகிய தெருக்களில் மக்களின் ஆரவாரம், கடலொலி போலவும், இடிமுழக்கம் போலவும் கேட்டுக் கொண்டேயிருக்குமாம்.

மாடங்கள் மலைபோல் மழைமேகத்தைத் தொடும் அளவு ஓங்கி உயர்ந்திருக்குமாம் . ஊரைச் சுற்றியுள்ள காட்டில் பனி பொழிந்து கொண்டேயிருக்குமாம். பனி பொழியும் அந்தக் காட்டில் பல்வேறு வண்டினங்களின் ஒலி கேட்டுக் கொண்டிருக்குமாம்.

இதுதான் அவ்வூரின் அடையாளம்

அந்த இடத்துக்கு நீங்கள் சென்று விட்டால், நன்னன் அரண்மனை அங்கிருந்து அதிக தொலைவில் இல்லை என்று உணர்ந்து கொள்ளலாம்.   

 

இவ்வாறு நன்னன் அரண்மனைக்கு நம்மை  ஆற்றுப்படுத்துகிற சாக்கில் ;  வர்ணனை மூலம் ஊரின் வாழ்விலக்கணத்தை காட்சிப் படுத்ததிவிட்டார் காவட்டனார். !

 

சேரமான் கணைக்கால் இரும்பொறையின் பாடலும் செய்தியும் சற்று வித்தி யாசமானது.

 

சேரமான் கணைக்கால் இரும்பொறை என்பவர் சேர அரசர் என அறியப்படுகிறது .  இவர் சோழன் செங்கணான் என்பவரோடு போரிட்டு தோற்றார் . சோழமன்னனால் பிடிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கபட்டார். சிறையில் வாடிய அவர் ஒருமுறை தாகத்துக்குத் தண்ணீர் கேட்டார் .அப்போது காவலர் காலந்தாழ்த்திக் கொடுத்ததால் அதனைக் குடிக்க மறுத்து ஒரு பாடலைப் பாடிவிட்டு வீழ்ந்ததாக சொல்லப்படுகிறது. உண்மை யாரறிவார் ?அப்போது அவர் தனது நிலைக்கு இரங்கிப் பாடிய பாடல்  புறநானூற்றின் 74 ஆவது பாடலாக உள்ளது. அதனைக் கொஞ்சம் பார்ப்போம்.

 “குழந்தை இறந்து பிறந்தால் விழுப்புண் இன்றி இறந்ததாக இழுக்கு நேரும் எனக் கருதுவர் சேரர்கள் . குழந்தை என்றுகூட எண்ணாமல் அதன் மார்பில் வாளால் காயம் ஏற்படுத்திய பின்னரே புதைப்பார்கள் .

போரில் கலந்து கொண்டு ஏற்பட்ட விழுப்புண்ணாக அந்த காயத்தைக்  சேரர்கள் எண்ணிக் கொள்வோம். வீரம் என்பது சிறு குழந்தைக்கும் இருக்க வேண்டும் என்பது எங்களின் உயிர் பாரம்பரியம் .

இத்தகைய வீர மரபில் இருந்து வந்த என்னை நாய் போன்று சங்கிலியால் கட்டிப் போட்டு தண்ணீர் குடிக்கச் சொல்கிறீர்களே ! இதனை நான் ஏற்றுச் செய்தால் இந்த உலக்கத்தில் உள்ளோர் என்னை மதிப்பார்களா?”

 

என வினா தொடுத்து தன்னுடைய தன்மானத்தை வெளிப்படுத்தியதோடு தண்ணீர் அருந்தாமலே இறந்ததாக ஒரு நம்பிக்கை .இது புறநானூற்றுச் செய்தி. தமிழ்நாட்டில் சில சமூகங்களிடையே இன்னும் இந்த வழக்கம் உள்ளதே …

 

மானம் பெரிதென வாழ்ந்திடச் சொன்ன மண் இது .

மருந்தே ஆயினும் அளவொடு என சொன்ன மரபு இது .

 

 

“மரம் சா மருந்தும் கொள்ளார், மாந்தர்;

உரம் சாச் செய்யார், உயர்தவம்; வளம் கெடப்

பொன்னும் கொள்ளார், மன்னர்- நன்னுதல்!-

நாம் தம் உண்மையின் உளமே; அதனால்

தாம் செய்பொருள் அளவு அறியார்; தாம் கசிந்து, 5

என்றூழ் நிறுப்ப, நீள் இடை ஒழிய,

சென்றோர்மன்ற நம் காதலர்; என்றும்

இன்ன நிலைமைத்து என்ப;

என்னோரும் அறிப, இவ் உலகத்தானே.”

 

நற்றிணை [ 226. பாலை ]              கணி புன்குன்றனார்  

 

“நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின்

பதி எழல் அறியா பழம் குடி கெழீஇ

வியல் இடம் பெறாஅ விழு பெரு நியமத்து . . . .[480]

யாறு என கிடந்த தெருவின் சாறு என

இகழுநர் வெரூஉம் கவலை மறுகின்

கடல் என கார் என ஒலிக்கும் சும்மையொடு

மலை என மழை என மாடம் ஓங்கி

துனி தீர் காதலின் இனிது அமர்ந்து உறையும் . . . .[485]

பனி வார் காவின் பல் வண்டு இமிரும்

நனி சேய்த்து அன்று அவன் பழ விறல் மூதூர் .”

 

நற்றிணை 378 காவட்டனார்

 

”குழவி இறப்பினும், ஊன் தடி பிறப்பினும்,

ஆள் அன்று என்று வாளின் தப்பார்,

தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய

கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்

மதுகை இன்றி வயிற்றுத் தீத் தணியத்

தாம் இரந்து உண்ணும் அளவை,

ஈன்மரோ இவ் உலகத்தானே

புறநானூறு . 74 - சேரமான் கணைக்கால் இரும்பொறை

 

 

மானம் பெரிதென வாழ்ந்திடச் சொன்ன மண் இது .

மருந்தே ஆயினும் அளவொடு என சொன்ன மரபு இது .

 

[ எமது உரைச் சித்திரம் அடித்த பகுதியோடு நிறைவாகும்.]

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

24/11/2022

 

 

 

0 comments :

Post a Comment