பெருங்கனவு

Posted by அகத்தீ Labels:

 


பெருங்கனவு

 

 

யாரும் எழுதாத கவிதையை

நான் எழுத வேண்டும் .

யாரும் வரையாத ஓவியத்தை

நான் வரைய வேண்டும்.

யாரும் இசைக்காத பாடலை

நான் பாட வேண்டும்.

யாரும் பயணிக்காத திசையில்

நான் பயணிக்க வேண்டும்.

 

இயற்கையில் எல்லையற்ற ஆற்றலை

நீ பாடி முடித்து விட்டாயா ?

இயற்கையின் வண்ணங்களை வனப்பை

நீ தீட்டி முடித்து விட்டாயா ?

இயற்கையின் எண்ணற்ற சங்கீதத்தை

நீ நகலெடுத்து முடித்து விட்டாயா ?

இயற்கையின் ஆழத்துள் விரிவினுள்

நீ பயணித்து முடித்துவிட்டாயா ?

 

மானுடத்தின் வற்றா துயரத்தினை -உன்

கவிதை முற்றாக சொல்லி முடியவில்லை.

மானுடத்தின் முடிவற்ற பன்முகத்தை –உன்

தூரிகை இன்னும் தீட்டி முடியவில்லை.

மானுடத்தில் முடிவுறா கனவுகளை –உன்

பாடலில் இசைக்கவே இல்லை .

மானுடத்தில் எல்லையற்ற சக்தியை – உன்

பயணம் இன்னும் நெருங்கவே இல்லை.

 

நாள்தோறும் புதியன விரும்பு

நாள்தோறும் பழமையை மீறு

நாள்தோறும் துணிந்து முடிவுசெய்!

நாள்தோறும் எதிர்நீச்சல் போடு

நாள்தோறும் அறிவினைத் தேடு

நாள்தோறும் அநீதியை எதிர் !

நாள்தோறும் அன்பை விதை!

நாள்தோறும் மானுடம் போற்று !

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

24 /10 /2022.

 

 

 

0 comments :

Post a Comment