உரைச் சித்திரம். 21. எந்த இறைச்சியும் எமக்கு பகையில்லை !

Posted by அகத்தீ Labels:

 

 


உரைச் சித்திரம். 21.

 

எந்த இறைச்சியும்

எமக்கு பகையில்லை !

எதையும் யார் வாயிலிருந்தும் பிடுங்கவும் மாட்டோம் !

யார் வாயிலும் எதையும் திணிக்கவும் மாட்டோம் !

 

 சைவம் ,அசைவம் என்ற சொற்களெல்லாம் மதம் சார்ந்தவை . உண்மையை பிரதிபலிக்காதவை . தாவர உணவு ,புலால் உணவு என்று சொல்லலாம் .அதுக்கூட பிழையே . புலால் உணவு ,தாவர உணவு என்றே வரிசைப்படுத்த வேண்டும். ஏனெனில் தமிழ்நாட்டில் பெரும்பான்மையோர் புலால் உண்பவரே அன்றும் இன்றும் . ஆகவேதான் புலால் மறுப்பு ,புலால் உண்ணாமை என வள்ளுவரும் இதரரும் பேசினர் . அதனை அடியொற்றி  புலால் ,அபுலால் என்று வேண்டுமானால் புதிதாகச் சொல்லப் பழகலாம்.

 

தமிழரின் ஆதிப் பண்பாடு புலால் உணவே . நெய்யில் பிசைந்த புலால்கூடிய சோற்றையே சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் காட்டும் .

 

இன்று பிரியாணி மிகுதியாய் விரும்பப்படும் ஓர் உணவு . ஊண்  [ இறைச்சி ] ,நெய் ,அரிசி கலந்து வேகவைத்த உணவை சங்க இலக்கியங்கள் பல இடங்களில் வியந்தோதுகின்றன. இது பிரியாணிதானே .காய்கறி கலந்தால் அது கூட்டாஞ்சோறு ,இறைச்சி கலந்தால் பிரியாணி அவ்வளவுதான்.

 

அக்காலத்தில் எண்ணை கிடையாது .நெய்யே பெரிதும் பயன்படுத்தப்பட்டன . எள்ளைப் பிழிந்து எடுக்கப்பட்ட நெய் எள்நெய் ஆனாது ; எண்ணை ஆனது . இப்போது அதனை நல்லெண்ணை என்கிறோம் . எண்ணை பொதுப் பெயராகிவிட்டது .

 

சங்க காலத்தில் புலால் உண்டதற்கான நிறைய சாட்சிகள் உண்டு .ஒன்றிரண்டை இங்கு பார்ப்போம்.

 

 

பதிற்றுப்பத்தில்  புலவர் குமட்டூர்க் கண்ணனார் சேர மன்னன் இமயவரம்பன் (இமையவரம்பன்) நெடுஞ்சேரலாதனை பற்றிப் பாடிய பாடல் ஒன்று கூந்தல் விறலியர் எனும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது . அழகிய கூந்தலை உடைய பெண் பாடகர் ஆடிப்பாடி சொல்லும் பாங்கில் அமைந்ததால் கூந்தல் விறலியர் என்றானதோ ! [ புலவர்கள் பிரச்சனை .நாம் பாட்டுக்குள் செல்வோம்.]

 

 உண்மின் கள்ளே! அடுமின் சோறே! அதாவது எல்லோரும் கள்ளைக் குடியுங்கள் ! சோற்றை ஆக்குங்கள் ! இறைச்சியை அறுத்து துண்டு துண்டாக்குங்கள் ! எல்லாவற்றையும் அடுப்பிலேற்றி வேகவையுங்கள் !

 

கருத்த முடியினை அவிழ்த்துவிட்டு ஐந்து வகையாய் பின்னலிட்டு , அல்குலும் குலுங்க ,புன்முறுவல் சிந்தி ,இளமை பொங்க ஆடும் கூந்தல் விறலியரே !

 

நீங்கள் அணிந்துள்ள பொன் அணிகளை கழற்றி வருவோர்க்கெல்லாம் இல்லை எனாது வழங்குங்கள் ! நீங்கள் அடுப்பிலே வேகவைத்த புலால் உணவை வருவோருக்கெல்லாம் வயிறார உண்ணத்தாருங்கள் ! சேர மன்னன் இயமவரம்பன் சேரலாதனிடம் பெற்ற பொன்னையும் பொருளையும் அவ்வாறு வழங்குதல் பிழையே இல்லை ! பெற்றதை உதவுமின் !

 

இந்த மண்ணுலகையெல்லாம் தன் குளிர்ந்த மழையால் குளிர்வித்து ,வளம் சேர்த்து செழிப்பைக் கொடுத்து காக்கும் மாமழை பல்லாண்டு பெய்யாமல் பொய்த்து ஊரே காய்ந்து வறண்டு துன்பமுறினும் சேரலாதன் தன் கொடையை நிறுத்தவே மாட்டான் ! தன்னை நாடி வருபவரை ஏமாற்றாமல் கேட்டதைத் தருவான். கள்ளைக் குடியுங்கள்..”

 

கள்ளும் அந்நாளில் போதையின் கூறாக இல்லை .உணவின் பாகமாகவே இருந்துள்ளது . ஒளவையும் கள் குடித்திருக்கிறார் .புறநானூறு [235] பாடலில் அதிகமான் பற்றி பெருமையுடன் சொல்வார் ,” சிறிய கள் பெறினே ,எமக்கு ஈயும் / மன்னே ! பெரிய கள் பெறினே ! யாம் / பாடத் தான் மகிழ்ந்துண்ணும்,” ஆகவே கள்குடியுங்கள் எனச் சொன்னது தமிழ் மரபே !

 

நற்றினையில் புலவர் இளந்தேவனார் இன்னொரு காட்சியை விவரிக்கிறார் ;

 

பளபளக்கும் வளையலை அணிந்த பெண்ணே ! நேற்று இரவு உன் வீட்டிற்கு வந்தவரோ அந்த பெரும் புகழுக்கு சொந்தக்காரர் ! நீ நெய்யை அள்ளிக் கொட்டி விலங்கின் கொழுத்த இறைச்சியை வேகவைத்த போது உண்டான ஆவியில் உன் முகம் வியர்த்து ,கண்ணையும்  மறைக்க மெல்ல குறுநடை நடந்து சென்ற உன்னை வாரிப் புணர்ந்தாரே ! பேரன்பால்தான். எப்படித் தெரியுமா ?

 

ஏ ! பெண்ணே ! பசி மிகுந்த யானை தன் பருத்த காலால் நிலத்தை உதைத்துக் கொண்டு போகும் . அந்த களர் நிலம் பெரும் புழுதியை அந்த உதைப்பில் கிளறி விட்டுவிடும் . அந்த புழுதி மூட்டத்தில் தடுமாறி மெல்ல நடந்து நெடுந்தூரம் சென்று சிறிய பாறையில் ஏறி அங்குள்ள கிணற்றில் நீரை அருந்தி தாகம் தணிக்கும் அதுபோல் உன்னிடம் வந்துள்ளார் !

 

பார்த்தீரா ! நெய்யில் இறைச்சியை வேகவைத்த காட்சி இது ! தீயில் மானைச் சுட்டுத் தின்னும் காட்சி புறநானூற்றில் . வன் பரணர் பாடுகிறார் . மான் வேட்டை அன்றைய சமூகத்தில் குற்றச் செயல் அல்ல .இன்று இயலாது .

 

 “தோட்டி நளிமலை நாடன் என்று போற்றப்படுபவன் அரசன் நள்ளி. தோட்டி எனப்படுவது இப்போது தொட்டபெட்டா என அழைக்கப்படுகிறது .நீலகிரியின் உயர்ந்த சிகரம் இது . இந்த கண்டீரக் கோப் பெருநள்ளி வெட்டுவக் குலத்தினன் . வல்வில் வேட்டுவன் என்றும் அழைக்கப்படுகிறான்.


நள்ளி தன்னை எப்படிப் பேணினான் என்பதை  புலவர் வன்பரணர் பாடுகிறார் . குளிரில் நடுங்குகிறது பருந்து .அதன் சிறகு பியந்திருக்கிறது . அது போல புலவரது ஆடை  கிழிந்திருந்ததாம். தன்னை அறியாமல் கால் போன வழியில் நடந்து தனக்குத் தெரியாத வேறொரு நாட்டுக்குள் அவர் வந்துவிட்டாராம்.

 

வழியில் ஒருவன் இவரது வறுமைக் கோலத்தையும், உடல் நலிவையும் ,சோர்ந்த முகத்தையும் கண்டானாம். அவன் மானை வேட்டையாடிவிட்டு வந்து கொண்டிருக்கிறான் ,கையில் அணிந்திருந்த காப்பில் இரத்தக் கறைபடிந்திருந்ததாம்  ; தலையில் திருமணி முடி அணிந்திருந்தானாம்.

 

பார்ப்பதற்கு  ஒரு செல்வக்குடியில் பிறந்தவன் போல்தான் காணப்பட்டானாம். அவனைப் பார்த்ததும் புலவர் அவனைத் தொழுது எழுந்தாராம். அவனோடு வந்த இளையர் வருவதற்கு முன்பே அவன் தன்னிடமிருந்த ஞெலிகோலில் தீ மூட்டி ; தான் வேட்டையாடிய மானைச் சுட்டுப் புலவரும் அவரது சுற்றத்தாரும் தின்னும்படி கொடுத்தானாம். அவர்கள் வயிறார உண்டு பசி நீங்கி, அருவி நீரைப் பருகிவிட்டுச் செல்லத் தொடங்கினார்களாம்.

 

உடனே அவன் தன் மார்பில் அணிந்திருந்த விலைமதிக்க முடியாத ஆரத்தையும், கையில் அணிந்திருந்த கடகம் எனப்படும் காப்பையும் கழற்றிப் புலவர்க்குக் கொடுத்தானாம்.

 

புலவர் அவனிடம், "நீர் யார்? எந்த நாட்டில் இருப்பவர்?" என்று வினவினாராம். அவன் எதுவுமே சொல்லாமல் போய்விட்டானாம்.

 

பின்னர் புலவர் அங்கே உடன் வந்த சிலரைக் கேட்டாராம். அவர்கள் சொன்னார்களாம் , தோட்டி மலை மக்களைக் காக்கும்,"நளிமலை நாடன் நள்ளி". முன்பின் அறியாமல் அறிமுகம்கூட இல்லாமல் பசியாற்றி – அள்ளிக் கொடுத்ததை என்னென்போம் ! என்னென்போம் !”

 

நற்றிணை காட்டும் இன்னொரு காட்சி புதிதானது .பன்றிக்கறி இங்கு விருந்தாகிறது.


தினைக்கதிர் அளவு கடந்து விளைந்து கிடக்கிறது . சொரசொரப்பான கழுத்தையுடைய ஆண் பண்றியும் - தோலாய் வற்றிய கொங்கையுடைய பெண் பன்றியும் கணக்கின்றி தினைப்பயிரை மேய்ந்து தள்ளாடி நடந்தது .

 

தெருவின் ஒடுக்கத்தில் மறைந்திருந்த கானவன் - காட்டில் வாழ்பவன் ; ஆண் பன்றியை வில்லால் அடித்துக்கொன்று எடுத்துச் சென்று மனைவியிடம் கொடுக்கிறான் . அவளும் சுற்றத்தார்களுக்கும் நண்பர்களுக்கும் அதைப் பங்கிட்டுக்  கொடுத்து தானும் சமைத்து கணவனுக்குப் பரிமாறுகிறாள்.

இத்தகைய பண்பாடு நிலவும் மலை நாடே ! ஆண் யானை புலியை எதிர்பார்த்து இருக்கும் இரவில்கூட வர அஞசாதவனே! பாம்புப் புற்றை கரடிக் கூட்டம் தோண்டும் வழியில் வராதீர் ..” இப்படித் தொடரும் அப்பாடல் .

 

இது மாதிரிக்கு சொன்னதுதான் . இப்போதும் தமிழ்நாட்டில் புலால் உண்போர் 90 விழுக்காட்டிற்கு அதிகம் . இங்கே மதப் புனிதம் பேசி நம் வாய்க்குள் கையை விட்டு அவர் விருப்ப உணவைப் பறிப்பது தகாத கொடுஞ்செயல் அன்றோ !

 

 

எந்த இறைச்சியும் எமக்கு பகையில்லை !

எதையும் யார் வாயிலிருந்தும் பிடுங்கவும்மாட்டோம் !

யார் வாயிலும் எதையும் திணிக்கவும் மாட்டோம் !



 

 

 “உண்மின் கள்ளே! அடுமின் சோறே!

எறிக திற்றி! ஏற்றுமின் புழுக்கே!

வருநர்க்கு வரையாது பொலங்கலம் தெளிர்ப்ப,

இருள் வணர் ஒலிவரும் புரி அவிழ் ஐம்பால்,

ஏந்து கோட்டு அல்குல், முகிழ் நகை, மடவரல்,           5

கூந்தல் விறலியர்! வழங்குக அடுப்பே!

பெற்றது உதவுமின்; தப்பு இன்று பின்னும்

மன் உயிர் அழிய, யாண்டு பல துளக்கி,

மண்ணுடை ஞாலம் புரவு எதிர்கொண்ட

தண் இயல் எழிலி தலையாது மாறி,      10

மாரி பொய்க்குவது ஆயினும்,

சேரலாதன் பொய்யலன் நசையே!”      

 

[ பதிற்றுப்பத்தில்  புலவர் குமட்டூர்க் கண்ணனார். ]

 

பைங் கண் யானைப் பரூஉத் தாள்உதைத்த

வெண் புறக் களரி விடு நீறு ஆடி,

சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபயப்

பாஅர் மலி சிறு கூவலின் தணியும்

நெடுஞ் சேண் சென்று வருந்துவர் மாதோ-      5

எல்லி வந்த நல் இசை விருந்திற்கு,

கிளர் இழை அரிவை! நெய் துழந்து அட்ட

விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி,

சிறு நுண் பல் வியர் பொறித்த

குறு நடைக் கூட்டம் வேண்டுவோரே.    10

 

 

இளந்தேவனார் நற்றிணை [41]

 

 

 “கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு அன்ன

பாறிய சிதாரேன், பலவுமுதல் பொருந்தித்,

தன்னும் உள்ளேன், பிறிதுபுலம் படர்ந்த என்

உயங்குபடர் வருத்தமும் உலைவும் நோக்கி,

மான்கணம் தொலைச்சிய குருதியங் கழற்கால்,      5

வான்கதிர்த் திருமணி விளங்கும் சென்னிச்,

செல்வத் தோன்றல், ஓர் வல்வில் வேட்டுவன்,

தொழுதனென் எழுவேற் கைகவித்து இரீஇ,

இழுதின் அன்ன வால்நிணக் கொழுங்குறை,

கான்அதர் மயங்கிய இளையர் வல்லே,            10

தாம்வந்து எய்தா அளவை, ஒய்யெனத்

தான்ஞெலி தீயின் விரைவனன் சுட்டு, நின்

இரும்பேர் ஒக்கலொடு தின்ம் எனத் தருதலின்,

அமிழ்தின் மிசைந்து, காய்பசி நீங்கி,

நல்மரன் நளிய நறுந்தண் சாரல்,           15

கல்மிசை அருவி தண்ணெனப் பருகி,

விடுத்தல் தொடங்கினேன் ஆக, வல்லே,

பெறுதற் கரிய வீறுசால் நன்கலம்

பிறிதொன்று இல்லை; காட்டு நாட்டோம் என,

மார்பிற் பூண்ட வயங்குகாழ் ஆரம்       20

மடைசெறி முன்கை கடகமொடு ஈத்தனன்;

எந்நா டோ? என, நாடும் சொல்லான்!

யாரீ ரோ! எனப், பேரும் சொல்லான்;

பிறர்பிறர் கூற வழிக்கேட் டிசினே;

இரும்பு புனைந்து இயற்றாப் பெரும்பெயர்த் தோட்டி          25

அம்மலை காக்கும் அணிநெடுங் குன்றின்

பளிங்கு வகுத் தன்ன தீநீர்,

நளிமலை நாடன் நள்ளிஅவன் எனவே.           

 

புறநானூறு .150 .புலவர் வன்பரணர்,

 

 

 


   “ பிணர்ச் சுவற் பன்றி தோல் முலைப் பிணவோடு,

கணைக் கால் ஏனல் கைம்ம்மிகக் கவர்தலின்,

கலதர் அரும்புழை அல்கி , கானவன்

வில்லின் தந்த வெண்கோட்டு ஏற்றை,

புனை இரும் கதுபின் மலையோன் கெண்டி,

குடிமுறை பகுக்கும் நெடுமலை நாடே!

உரவுச் சின வேழம் உறு புலி பார்க்கும்

இரவின் அஞ்சாய் ! அஞ்சுவல் - அரவின்

ஈர் அனைப் புற்றம் , கார் என முற்றி

இரைதேர் என்கினம் அகழும்

வரைசேர் சிறு நெறி வாராதீமே !”

 

[ நற்றிணை - 336 ]

 

எதையும் யார் வாயிலிருந்தும் பிடுங்கவும்மாட்டோம் !

யார் வாயிலும் எதையும் திணிக்கவும் மாட்டோம் !

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

7 /9 /2022.

 

குறிப்பு :

சங்க இலக்கியம் – வாழ்வு சார்ந்து நான் எழுதிவந்த  “உரைச் சித்திரம்” எனும் இத்தெடர் இதுவரை 21 பகுதிகள் வந்துவிட்டன .25 பகுதியானதும் நிறைவு செய்யலாம் எனக் கருதுகிறேன் .உங்கள் கருத்து என்ன ?

சுபொஅ.7 /9 /2022.


0 comments :

Post a Comment