என்றும் எங்கும் ..

Posted by அகத்தீ Labels:

 


என்றும் எங்கும் ..

 

 அவனை

வழியனுப்பும் போது

ஞாபகமாக

ஜோல்னா பையை

தோளில் மாட்டிவிடுங்கள்

இல்லாவிடில்

அடையாளம் தெரியாமல்

குழம்பிவிடுவார்கள் !

 

 அந்த ஜோல்னா பையில்

நான்கு ஐந்து

புத்தகங்களை போட்டு

அனுப்ப மறக்க வேண்டாம்!

இல்லாவிடில்

புத்தகங்களைத் தேடி

மீண்டும் பூமிக்கு

அவன் வந்துவிடக்கூடும் !

 

 பூதவுடலுக்கு

குல வழக்கம் ,

குடும்ப சம்பிரதாயம்

சாதி ,மத சடங்குகள்

எதையும் செய்துவிடாதீர் !

மீறிச் செய்தால்

பிணமும் எழுந்து நின்று

போராடத் தொடங்கிவிடும் !

 

 செங்கொடி போர்த்தி

அனுப்பி வையுங்கள்

சொர்க்கமோ நரகமோ

அநீதியும் அறியாமையும்

தாண்டவமாடும் இடமெங்கும்

போராட கொடி வேண்டும்

அவன் என்றும் எங்கும்

போராளிதானே !

 

 

புண்ணிய நதியில் கரைத்தோ

புனித சமாதி எழுப்பியோ

அவனை காயப்படுத்தி விடாதீர்!

மருத்துவ மாணவர் கற்க

உடல் தானமாகுக !

இறந்தும் பாடமாவான் !

 

 

அவன் படத்துக்கு

படையல் போடுவதோ

நாயக பிம்பத்தை

கட்டமைக்கவோ வேண்டாம்!

நினைவுகள் காலவெளியில்

கரைந்து போகட்டும் !

முளைத்தெழட்டும் முன்னிலும்

வீரியமான புதிய தலைமுறை !

 

சுபொஅ.

[ 2023 மே மாதம் எழுதியது .ஏனோ பதிவிடாமல் இருந்துள்ளேன் . 12/12/23 ல் பதிவிடுகிறேன். செண்டிமெண்டாக யாரும் வாசிக்க வேண்டாம் . ]

 

 

 

 

 


0 comments :

Post a Comment