ஊருக்கு ஆயிரம் கண்கள்.

Posted by அகத்தீ Labels:

 

 “நீங்கள் ஏன் கோவிலுக்கு வருவதில்லை ?”

ஊருக்கு ஆயிரம் கண்கள்.

 

எனக்கு கன்னடமோ , இந்தியோ தெரியாது .ஆங்கிலமும் அரைகுறை .தமிழ் மட்டும்தான் தெரியும்.

 

பெங்களூர் வந்த பின் ஊர் புதிது . நட்பு வட்டமும் இல்லை .முதலில் திணறினேன் . பின்னர் நடை பயிற்சி வழி ஓர் முதியோர் வட்டம் நெருக்கமாக எலக்ட்ராணிக் சிட்டி நிலாத்திரி நகரில் வலம் வந்தேன் . தமிழ் ,மலையாளம் ,தெலுங்கு ,வங்காளி என பலமொழி நண்பர்கள் .சாலை சாக்கடை வசதி என பொதுப் பிரச்சனைகளில் முதியோர் நாங்கள் குடியிருப்போர் சங்கம் வழி தலையிட 2013 -2017 வரை அங்கு ஊரறிந்த  “சீனியர் சிட்டிசன்ஸ்” ஆனோம்.

 

2017 பொம்மசந்த்ரா காச்சநாய்க்கன்ஹள்ளியில் போலீஸ் லே அவுட் அருகே  ஓர் அடுக்ககத்தில் மகன் வீடு வாங்க குடியிருப்பு மாறியது . அடுக்ககத்தில் எல்லோருடனும் அறிமுகமானவரானேன்.  எல்லோரும் மிகுந்த மரியாதை தந்தனர் . அன்பைக் கொட்டினர் .ஆனால் அந்த மரியாதையே எல்லோரிடமும் ஓர் மரியாதைக்குரிய தூரத்தையும் தொடரச் செய்துவிட்டது.

 

தற்செயலாக அசோக் லேலண்டு தோழர் பன்னீர் செல்வம்  அவர்களைச் சந்திக்க இருவரும் எங்கும் சுற்றினோம். இப்போது அவரும் ஓசுரூக்கே மீண்டும் சென்றுவிட்டார் .

 

நான் நினைப்பேன் , “இங்கு யாரையும் எனக்குத் தெரியாது .” ஆயின் அனுபவம் வேறாக இருக்கிறது . “ஊருக்கு ஆயிரம் கண்கள்” என்பதை நிறைய சம்பவங்கள் சொல்லிச் செல்கிறது . ஒன்றிரண்டு சுவரசியமான செய்திகளைக் கூறுவேன்.

 

சில நாட்கள் முன்பு நடை பயிற்சி முடித்து வரும் போது , நடை பாதையில் ஒரு பழவண்டிக்காரியிடம் பழங்கள் வாங்கினேன். அவர் கேட்டார் ,” சார்! போலீஸ் லே அவுட்டா ? அபார்ட் மெண்டா ?” நான் சொன்னேன்.” அபார்ட் மெண்ட்” . அந்த அம்மா சொன்னார் , “ நீங்க டெய்லி வாக்கிங் போவதைப் பார்ப்போம். நீங்க ஒரு நாள் கூட ஒயின் ஷாப்பில நுழைஞ்சு பார்க்கலை . எங்களுக்கு உங்கள பிடிக்கும் .அண்ணைக்கு ஒரு லேடி அந்த காய்கறி அம்மாவிடம் அதிகமாக பேரம் பேசியபோது ,நீங்க வந்து பேரம் பேசாமல் காய்கறி வாங்கினது மட்டுமல்ல ;அந்த லேடியிடம் ஆண் லைன்ல பேரமா பேசுறீங்க … இவங்க கொள்ளை அடிச்சு பங்களவா கட்டப் போறாங்க … என எங்களுக்காகப் பேசுனதை நாங்க எல்லோரும் பேசி பேசி சந்தோஷப்பட்டோம்…” இப்படி அந்த அம்மா பேசின போது ஊரு நம்மை உற்றுப் பார்ப்பது தெரிந்தது . கன்னடம் கலந்த தமிழில் பேசினாலும் புரிந்தது .

 

நான் வழக்கமாக வாக்கிங் போகும் போது வழியில் பலர் வணக்கம் சொல்வார்கள் .நானும் சொல்வேன் .பேச்சு கிடையாது . ஒரு வீட்டு வாசலில் அம்மா ,மகள் ,பேத்தி என நிற்பார்கள் .நானும் அவர்களும் பரஸ்பரம் வணக்கம் சொல்லுவோம். அவர்கள் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த தெலுங்கு குடும்பம் . தமிழ் பேசுவார்கள் . கொரானா காலம் நடை பயிற்சியை முடக்கிப் போட்டது . அதன் பின் நடை பயிற்சி தொடர்ந்த போது அவர்கள் உரையாடினர் . அண்மையில் ஒரு நாள் அவர்களைக் கடக்கும் போது  “ சார் !” என அழைத்தனர்.

 

“ நீங்க ஐயரா ? அய்யங்காரா ?”- பாட்டி கேட்டார் .

“நான் மனுஷன்…” என் பதில்.

“ இல்லை சார் ! நான் நீங்க ஐயர் அல்லது அய்யங்கார்ன்னு சொல்றேன் .என் மகள் முதலியார் ,கவுண்டர்ன்னு எதாவதுதான்னு சொல்றா ,எம் பேத்தி கிறிஸ்டியன்னு சொல்றா நீங்க யாரு ?”

“ நான் மனுஷன்மா ! எனக்கு சாதியும் இல்லை .மதமும் இல்லை …” என நான் பேசி முடிக்கும் முன்பே ,

“ அப்ப நீங்க கறுப்புச் சட்டை பெரியார் கட்சியான்னு…” பாட்டி கேட்டார் .

“ எனக்கு பெரியாரைப் பிடிக்கும் .நான் கம்யூனிஸ்ட்ன்னு” சொன்னேன்.

எல்லோரும் சிரித்து விடை கொடுத்தனர் .இப்போதும் அவர்களை கடக்கும் போது தினசரி வணக்கம் சொல்கிறேன் ; அவர்களும் புன்னகையோடு வணக்கம் சொல்கின்றனர் .

 

இன்னொரு அனுபவம் போலீஸ் லேஅவுட் நண்பர்கள் என்னை சாட்டர்டே பார்ட்டிக்கு அழைத்தனர் . எல்லாம் மது குடிக்கத்தான் . கைச் செலவு கிடையாது .யாராவது ஸ்பான்சர் பிடிப்போம் என்றனர் .அதில் எல்லோரும் ரிட்டர்யைடு போலீஸ்..” , [ பன்னீர் செல்வம் மூலம் அறிமுகமான] ஒரு ரிட்டயர்டு போலீஸ் அதிகாரி இவரு தீக்கதிரு இதில் எல்லாம் பங்கேற்க மாட்டாருன்னு சொல்ல … எல்லோரும் விளக்கம் கேட்க என்னைப் பற்றி ஒரு குட்டி அறிமுகம்..”

 

எல்லோரும் கை கொடுத்தனர் .பார்ட்டிக்கு அழைத்ததவர்  ஸாரி கேட்டார் . அதன் பின் பார்க்கும் இடத்தில் எல்லாம் எல்லோரும் வணக்கம் சொல்வார்கள் .சிலர் காம்ரேட் என அழைத்து நமஸ்காரம் சொல்வார்கள் .  ஒரு பிள்ளையார் சதுர்த்தி அன்று சில இளைஞர்கள் என்னை மறித்து நன்கொடை புத்தகத்தை நீட்டினார்கள் .பார்ட்டிக்கு அழைத்தவர் தலையிட்டு ,” சார் !கம்யூனிஸ்ட் ! அவர விட்டுருங்க..” என்றார் . அதன் பின்னர் அந்த இளைஞர்களும் வழியில் புன்னகையோடு வணக்கம் சொல்கின்றனர் .ஊர் நம்மை கவனித்துக் கொண்டே இருக்கிறது .

 

இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். இன்னொரு சம்பவம் முன்பே சொல்லியிருக்கிறேன் .மீண்டும் சொல்வதில் பிழையில்லை.

 

அடுக்ககம் வந்து ஒரு ஆறேழு மாதங்கள் ஆகி இருக்கும் . நான் நடை பயிற்சி செல்லும் போது ஒருவர் குறுக்கே பைக்கை நிறித்தினர் .  “சார் !உங்கள டெய்லி பார்க்கிறேன். பேசணும் ”என்றார் . “சரி” என்றேன்.

 

 “ நீங்க கிறிஸ்டியனா ?”

 “ இல்லை.”

 “ உங்களப் பார்த்த முஸ்லீம் மாதிரியும் தெரியலையே..”

 “ என்ன விஷயம் சார்!”

“ நான் இங்கு கவுன்சிலர் …பிஜேபி..”

“ தெரியும் சார் ! நண்பர்கள் சொன்னார்கள்..”

 “ ஓண்ணு மில்லே நீங்க டெய்லி இப்படி போறீங்க அனுமார் கோயில் பார்த்து ஒரு நாள் கூட கும்பிட்டதா தெரியலை … உங்க மகன் ,மருமகள் ,மனைவி யாரும் கோவில் பக்கம் வந்ததாத் தெரியவில்லை …”

 “ நான் சிரித்தேன் …உங்க நம்பிக்கை வேற என் நம்பிக்கை வேற நான் சயின்சை மட்டுமே ஏற்பவன்…”

“ சார் ! நீங்க பெரியார் கட்சியா ?”

“ இல்லை.பெரியாரைப் பிடிக்கும் . நான் கம்யூனிஸ்ட் .சிபிஎம்…” என்றேன்.

 “ அதனாலென்ன பரவாயில்லை … ஒவ்வொருவருக்கும்  அவரவருக்கு பிடிச்ச கட்சி … உங்க வீட்ல யாருமே சாமி கும்பிட மாட்டாங்களா ?”

“ என் மனைவி எப்போதாவது கோவிலுக்கு செல்வதுண்டு .பூஜை ,படையல் எல்லாம் எங்க வீட்ல எப்போதும் கிடையாது…”

 “ தெரிஞ்சுக்கிறதுக்குத்தான் கேட்டேன் … தப்பாக நினைக்காதீங்க…” என்றார்

“ தெரிஞ்சிக்கிறது தப்பே இல்லை” என்றபடி விடை பெற்றேன்.

 

அப்புறம் பார்க்கும் போதெல்லாம் வணக்கம் சொல்வதோடு சரி ! அங்கு சாமுண்டேஸ்வரி கோயில் கட்ட நிதி வசூலித்துக் கொண்டிருந்த போது ஒரு கும்பலோடு எதிர் கொண்டேன் .மற்றவர் நிதி கேட்க ”சார் ! கம்யூனிஸ்ட் ஜெர்னலிஸ்ட் மீடியா ஆளுன்னு “ சொல்லி மற்றவர்களை விலக்கிவிட்டார் .எல்லோரும் விடை பெற்றனர்.

 

ஊருக்கு ஆயிரம் கண்கள் …

உன்னைப் பார்த்துக் கொண்டே இருக்கிறது …

 

சுபொஅ.

31/3/2023.

0 comments :

Post a Comment