வாழப்பழகு ! புதிதாக சிந்திக்கப் பழகு ! - 1

Posted by அகத்தீ Labels:

 

வாழப்பழகு ! புதிதாக சிந்திக்கப் பழகு ! - 1

 

 நேற்றையைப் போல் இன்று வாழ்க்கை இல்லை…” - அநேகம் பேர் இப்படித்தான் புலம்புகிறார்கள் .

 

 “ நேற்று போலவே இன்றும் வாழ்க்கை அப்படியே ஏன் இருக்க வேண்டும் ?” என்று யாருமே தனக்குள் கேள்வி கேட்பதில்லை .

 

 “ நேற்றின் சுவை நாக்கிலும் வாழ்விலும் ஒட்டிக்கிடக்கிறதே என்ன செய்ய ?” என அங்கலாய்க்கிறார்கள் .

 

 “ நேற்று சுவாசித்த காற்றையா இன்று சுவாசிக்கிறாய் ? நேற்று குளித்த தண்ணீரிலா இன்று குளிக்கிறாய் ? நேற்று உண்ட உணவையா இன்று உண்கிறாய் ? நேற்று உடுத்த உடையையா இன்று உடுக்கிறாய் ? நேற்று அனுபவித்த வாழ்க்கையையா இன்று அனுபவிக்கிறாய் ?நுகர்வுச் சந்தையில் பார்க்கும் ஒவ்வொன்றையும் முன்பு நீ யோசித்ததேனும் உண்டா ?” யதார்த்தம் நெற்றிப் பொட்டில் அறைந்து கேட்கிறது .

 

 “ இழந்ததைப் பற்றி பேசவே கூடாதா ?” என்கிறாய் .

 

 “ இழந்தது அதிகமெனில் பெற்றதும் அதிகமே . எதையும் இழக்காமல் எதையும் பெற முடியாது . எதை இழக்கிறாய் எதைப் பெறுகிறாய் என்பது மட்டுமே கேள்வி .” என்கிறது வாழ்க்கை அனுபவம் .

 

 “அந்த அனுபவம்தான் இழந்ததை எண்ணி அரற்றவைக்கிறது..” என சமாதானம் சொல்கிறாய் .

 

 “ மன இறுக்கத்தை அழுகை குறைக்குமெனில் சற்று அழலாம் .பிழை இல்லை .ஆயின் அழுகை ஒரு போதும் தீர்வல்ல. பிரச்சனைகளை சரியாக அலசினால் தீர்வு புலப்படலாம்.” – என ஞானிகள் சொல்லிச் சென்றது மறக்கக்கூடியதல்ல.

 

 “ அப்படியே நேற்றை மீட்டுவிட முடியுமா ?” – இப்படித்தான் கற்பனையில் உழல்கிறார்கள் .

 

 “கடந்த காலத்துக்குள் மீண்டும் வாழமுடியாது ;கடந்த காலத்தை போன்றும் வாழ முடியாது . நேற்றின் தொடர்ச்சியாக -  நேற்றின் அனுபவத்தோடு இன்று புதிதாக வாழப்பழகு !

 

“ தொலைத்து தலைமுழுக வேண்டியவற்றை இன்னும் சுமந்து திரிகிறாய் ; சுமந்து திரிய வேண்டியதை சாக்கடையில் வீசிவிட்டு பழம் பெருமை பேசுகிறாய் என காலம் உரக்கச் சொல்கிறது.

 

என்ன ? என்ன ?

 

பேசுவோம்…

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

15/3/2023.

 

 


0 comments :

Post a Comment