மதிய நேரம் .அந்த கோவில் வாசலில்

Posted by அகத்தீ Labels:

 

மதிய நேரம் .அந்த கோவில் வாசலில் பள்ளி விட்டு வரும் பேத்திக்காகக் காத்திருந்தேன்.
அந்த வழியாக வேலைக்குச் செல்லும் ஏழு பெண்கள் கோவில் வாசலில் நின்றனர் . பூட்டிய கோவில் கதவின் முன் மிகுந்த மரியாதையுடன் நின்றனர்.
அதில் ஒரு பெண் சர்ச்சுகளில் கும்பிடுவதுபோல் சிலுவைக் குறியிட்டு கும்பிட்டாள் .
இன்னொருத்தி முஸ்லீம் பெண் . செருப்பை கழற்றி ஓரமாக விட்டுவிட்டு அமைதியாக தோழிகளுடன் நின்றிருந்தாள்.
ஜீன்ஸ் போட்ட பெண் ஒருத்தி ஸ்டைலாக ஒரு கும்பிடு போட்டுவிட்டு வெளியே நின்றாள் .
சுரிதார் போட்ட பெண் கைகுவித்து வணங்கிய படியே வெளியே நின்றாள் .
சேலை கட்டிய இரு பெண்கள் கிட்டே போய் கும்பிட்டுவிட்டு கோவில் சுவற்றில் சாய்ந்து நின்றனர்.
இன்னொரு சேலை கட்டிய பெண் சாமிக்கு எதிரே விழுந்து கும்பிட்டாள்.பின் உட்கார்ந்து தாலியில் குங்குமத்தை பயபக்தியோடு வைத்தாள். இவள்தான் அதிக நேரம் சாமி கும்பிட்டவள்.
எல்லோரும் இவளுக்காக பொறுமையாய் காத்திருந்தனர்.
பூட்டிய கதவுக்கு பின்னாலிருந்த அனுமார் யாரை ஆசிர்வதித்திருப்பார் ? இதில் எவர் ஆகமநெறிப்படி கும்பிட்டவர் ?
பாரத்தை சாமியிடம் இறக்கி வைத்துவிட்ட நிம்மதியில் சாலையில் அடியெடுத்து வைத்தனர் ஏழு பேரும் ;
" அந்த சூப்ரவைசர் பார்வையே சரியில்லை. அவன் கண்ணில கொள்ளி வைக்க , கம்பெனியை மூடப் போகிறார்களாமே ? எங்கே வேலை தேடுவது ?எங்கே கடன் வாங்குவது ?" என பேசியபடியே நடந்தனர்.
இவ்வளவுதான் கடவுள் நம்பிக்கை. மதம் அவர்களுக்குள் தடையல்ல. பிரச்சனை எல்லோருக்கும்தான்.
சுபொஅ.
All react

0 comments :

Post a Comment