குடிக்கதை -2

Posted by அகத்தீ Labels:

 

 உங்களுக்கும் கடவுளுக்கும் என்ன பிரச்சனை ?”- ஆன்மீகப் பெரியவர் மெல்லக் கேட்டார் .

 

 “ இல்லாதவரோடு எனக்கு என்ன பிரச்சனை ?” அவன் சிரித்துக் கொண்டே சொன்னான் .

 

 “ ஊர் உலகமே அவர் இருப்பை ஒப்புக் கொள்ள நீங்கள் மட்டும் நிராகரிப்பது சரியா ?”

 

 “ ஊர் உலகமே பூமி தட்டை என்ற போது ஒருத்தன் மட்டுமே பூமி உருண்டை என்றான் ; இன்று உலகமே பூமி உருண்டை என ஒப்புக்கொண்டுவிட்டதே ..” அவன் உறுதியாகச் சொன்னான்.

 

 “ விஞ்ஞானத்தாலும் விடை காணா முடியா கேள்விகள் நிறைய இருக்கே ?” என கேட்டுவிட்டு வென்றது போல் சிரித்தார் .

 

 “ மெய்தான் . விடை காணாத கேள்விகள் விஞ்ஞானத்திலும் உண்டு . ஆயின் நேற்று தெரியாதவற்றை இன்று தெரிந்து கொண்டது ; இன்று தெரியாததை ஆராய்ந்து கொண்டிருக்கிறது ,நாளை விடை காணக்கூடும் . ஆன்மீகம் விடை தேடும் முயற்சியை கைவிட்டு சரணாகதி அடைய அல்லவா சொல்கிறது … உலகத்தின் வளர்ச்சி தேடலில்தான் ஏற்பட்டது ,இனியும் அப்படித்தான் ;சரணாகதியில் அல்ல”அவன் உறுதியாகச் சொன்னான்.

 

 “ நீ… [கோவத்தில் நீங்கள் நீ ஆனது ] நம்பாவிட்டால் ; கடவுளுக்கு என்ன நட்டம் ? உனக்குத்தான் அவரின் கருணைக் கடாட்சம் கிடைக்காது..”

 

 “ நான் அதை எதிர்பார்க்கவும் இல்லை ;யாரிடமும் யாசிக்கவும் இல்லை ; இல்லாதவரிடம் கருணை கடாட்சம் எதிர்பார்ப்பது ஏமாளித்தனம்தானே..”

 

 “ மரணத்தின் விழிம்பில் நிச்சயம் நீ கடவுளை அழைப்பாய் அவர் அப்போது உனக்கு உதவமாட்டார் …?”

 

“ அப்படியே ஆகட்டும்! அன்றாடம் கடவுளிடம் மன்றாடும் பலகோடி மக்களுக்கு கடைக்கண் பார்வையைக்கூட திருப்பாமல் இருக்கிறாரே ஏன் ?”

 

“ உன்னிடம் பேசிப்பேசி தலைவலி வந்துவிட்டது..” என சொல்லியபடியே பையிலிருந்து மாத்திரைகளை எடுத்து விழுங்கி தண்ணீர் குடித்தார் .

 

அவன் சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன .

அவரோ விருட்டென்று எழுந்து விடைபெற்றார் .

 

சுபொஅ.

13/3/2023.

0 comments :

Post a Comment