ஆவணங்களைத் தேடி….

Posted by அகத்தீ Labels:

ஆவணங்களைத் தேடி….

 

நான் என் கட்சி அரசியல் வாழ்வில்  நினைவுகளை அசைபோட்டு பதிவுகள் சிலவற்றைப் போட்டேன் . அதனையொட்டி  தோழர்கள் சிலர் அப்போதைய புகைப்படங்களை சேர்த்து பதிவிடலாமே என கருத்து தெரிவித்தனர் .

 

முதலாவதாக அன்றைய காலகட்டத்தில் அலைபேசி கிடையாது ,ஷெல்பி கலாச்சாரத்துக்கு வாய்ப்பே இல்லை . ஒரு ஆர்ப்பாட்டத்தை புகைப்படம் எடுத்து தீக்கதிருக்கு அனுப்புவது என்றாலே பணம் தேவைப்படும் காலம் எனவே அக்காலத்தில் படங்கள் குறைவு .

 

இரண்டாவதாக , தங்களை முன்னிலைப் படுத்துவதை பெரிதாக விரும்பாத காலம் அது . நான் பொதுவாக புகைப்படங்களில் ஆர்வம் காட்டியதில்லை . புகைப்பட சேகரிப்பும் என்னிடம் இல்லை .எனக்குத் தேவையும் இல்லை.

 

 ‘ஊரிலே கல்யாணம் மார்பிலே சந்தணம்’ என்பது போல எந்த நிகழ்வாயினும் அதில் தாம் அழைக்கப்பட்டாலும் அழைக்கப்படாவிட்டாலும் - அழைப்பிதழிலே பெயர் இடம் பெறாமல் இருந்தாலும் , மேடையில் கூச்சப்படாமல் ஏறி உட்காருவோர் அப்போதும் உண்டு . போட்டோக்களில் எங்கே நின்றால் உட்கார்ந்தால் தன் முகம் நன்கு பதிவாகும் என்கிற கணக்கோடு நிற்போர் உண்டு . இப்போதும் அத்தகையோர் உண்டு .

 

மேடையில் யார்யாரை எங்கெங்கு உடகாரவைப்பது என்பது நிகழ்வின் முக்கியத்துவத்தைப் பொறுத்தது . அதற்கென சில ஒழுங்குகளைக் கடைப்பிடிப்பது அவசியமும் கூட . ஆனால் சிலருக்கு அது பொருட்டே அல்ல . அன்றும் இன்றும் இதனை நாகரீகமாக உணர்த்துவது எளிதாக இல்லை .

 

சிலருக்கு இயல்பாகவே போட்டோ ஃபேஸ் இருக்கும் .அழகாகத் தெரிவர் . எவ்வளவு பெரிய கூட்டத்திலும் அவர் முகம் பளிச்சிடும் .சிலரை எத்தனை போட்டோ எடுத்தாலும் உம்மென்றே இருப்பார் . சிரிப்பு மருந்துக்கும் இருக்காது .

 

பொதுவாய் போட்டோ கான்சியஸ் - போட்டோவின் மீதான கவனம் முன்னைவிட இப்போது அதிகரித்திருக்கிறது .சில வேளை கொஞ்சம் அதீதமாகவும் போய்க் கொண்டிருக்கிறது .

 

ஆயிரம் சொன்னாலும் புகைப்படங்கள் முக்கிய ஆவணம் என்பதை மறுப்பதற்கில்லை . ஆகவே புகைப்படங்களையும் ஆவணப்படுத்துவது தேவையாகிறது .

 

நம்முடைய மூத்த முன்னோடிகள் பலரை நாம் மறந்தே விட்டோம் . பெயரை நினைவுக்கு கொண்டு வருவதே மிகச் சிரமம் . முகத்தை நினைவுக்கு கொண்டு வருவது இன்னும் சிரமம் .

 

தயவுசெய்து கட்சி அலுவலகங்களில் புகைப்படங்களின் கீழ்  பெயரை குறிப்பிட்டு வையுங்கள் .இயன்றால் அவரைப் பற்றி மூன்றோ நான்கோ வரிகளில் சிறு குறிப்பும் வைத்தால் நல்லது . புதிதாக வருவோர் அறிந்துகொள்ள ஏதுவாகும் .

 

நம் மாவட்ட சிபிஎம் கட்சி அலுவலகங்கள் ,இதர அமைப்புகளின் அலுவலகங்களில் ஊரறிந்த தலைவர்களில் புகைப்படம் இடம் பெறுகிறது மிக்க மகிழ்ச்சி .

 

ஆயின் , ஒவ்வொரு மாவட்டத்திலும் நினைவு படுத்த வேண்டிய தோழர்கள் ,வேராய் இருந்த தோழர்கள் பலர் உண்டு . அவரின் புகைப்படங்கள் உண்டா இல்லையே !

 

எடுத்துக்காட்டாக, சென்னை மாவட்டக் குழு அலுவலகங்களின் சுவற்றில் தோழர்கள் கஜபதி , சி பி தாமோதரன் , கே எம் ஹரிபட் , பி .ஜி .கே .கிருஷ்ணன் , எஸ்  கே சீனிவாசன் , மேயர் எஸ் கிருஷ்ணமூர்த்தி ,ருக்குமணி அம்மாள் , சாரி ,சர்க்கரைச் செட்டியார் என நீளும் பட்டியலில் உள்ளோர் படங்கள் உண்டோ ?  

 

இதை எழுதும் போது என்னால் பல தோழர்களின் பெயரையும் முகத்தையும் நினைவுக்கு முழுதாய் கொண்டுவர முடியவில்லை . சொல்ல வேண்டிய பட்டியல் இன்னும் நிறைய இருக்கிறது என்பதே உண்மை .

 

சென்னை [ அதாவது இன்றைக்கு ஆறு மாவட்டங்கள்]  வரலாறே எழுதப்படவில்லை .யாருக்கும் அக்கறை இருப்பதாகவும் தெரியவில்லை .இந்த லட்சணத்தில் இந்தப் படங்களைப் பற்றியா கவலைப்படப் போகிறார்கள் என தோழர்கள் சிலர் புலம்புவதும் காதில் விழுகிறது . நாம் சங்கை ஊதிவைப்போம் … யாருக்காவது சரியெனத் தோன்றலாம் அல்லவா ?

 

 

இளைய தலைமுறையே ! நீங்கள் உங்கள் முன்னோடிகளைத் தேடித்தேடி உரிய இடம் அளிப்பீர் என நான் உறுதியாக நம்புகிறேன். ஏனெனில் அது காலத்தின் தேவை அல்லவா ?

அதுபோல் நாட்டை உலுக்கிய போராட்டங்களின் புகைப்படங்களும் ஆவணப்படுத்தப்பட வேண்டும் . அதுவும் வரலாற்றின் ஓர் அங்கமே ! அதுமட்டுமா ? இப்போதெல்லாம் வீடியோக்களும் ஆவணமே ! ஆக ,இனி ஆவணக் காப்பு என்பது பொருட் செலவும் தொழில்நுட்ப ஞானமும் கலந்ததே !

 

இடையில் ஒரு நினைவு , திமுக தொழிற் சங்கமான தொமுச பேரவையின் வரலாறு நூலாக வந்துவிட்டது .சிஐடியு வரலாறு எப்போது வரும் ?

 

பத்து ஆண்டுகளுக்கு முன்பே உலக தொழிற்சங்க உதவியுடன் தமிழக தொழிற்சங்க போராட்ட வரலாறு தொகுக்கும் பணி நடைபெற்றது .தோழர் சந்திரசேகரன் நாயர் அதில் பணியாற்றியதாக நினைவு .

 

ஆக ஆவணங்கள் இருக்கும் . இந்திய மாணவர் சங்கத்தோடு தொடர்புடைய வரலாற்று மாணவர்களும் இருப்பர் . சிஐடியு வரலாற்றை எழுதலாமே !

 

ஆவணங்களை சேகரிப்பீர் ! பாதுகாப்பீர் ! நிச்சயம் எதிர்காலம் நம் வரலாற்று வேரைத் தேடும் . தவிக்கவிட்டுவிடாதீர்கள் !

 

என் எதிர்பார்ப்பும் ஆசையும் நிறைவேறும் காலம் விரைவதாக !

 

 

சு.பொ.அகத்தியலிங்கம். 5/4/2022.

 .


0 comments :

Post a Comment