சிட்டுக்குருவியை கொஞ்சத் தோன்றுதே !

Posted by அகத்தீ Labels:

 

சிட்டுக்குருவியை கொஞ்சத் தோன்றுதே !

 


“ ஊரோடும் உறவோடும்

பொழுதளந்த காலமது

பேரின்ப மகிழ்வினிலே

மனமெழுந்த சொர்க்கமது

கிராமத்து வாழ்வு.”

இப்படி தன் கிராமத்து வாழ்வைக் கொண்டாடும் கவிஞர் ஓசூர் சிபிஜெ.

 

கிராமத்தில் கடன்வாங்கி வாழை நட்டவன்  படும்பாட்டை முதல் கவிதையிலே பாடுகிறார் .பேரறிஞர் அண்ணாவின் செவ்வாழை , அதற்கு முன்பு எழுத்தச்சனின் வாழக்குல [மலையாளம் ] , நவகவியின் ஊரோரம் தோட்டத்தில .. என்கிற பாடல் இவற்றின் வாரிசாய் “ நெருப்பைக் கட்டி” என்கிற முதல் கவிதை . அதன் முடிவு இன்னும் அழுத்தமாய் யதார்தத்தோடு நெருங்கிவிட்டது.

 

 “…… …… ……

…… …… …..

அத்தக்கூலிக்கு

செங்கலறுக்க

கிராமத்தவிட்டு

குடும்பத்தோட !”

 

இந்தியா இரண்டாய் இருப்பதை பலர் பாடி இருக்கின்றனர் .சிபிஜெ சற்று வித்தியாசமாய் காண்கிறார் ;

 

 “…. …. ….

அத்துக்கூலியால்

வாழ்வு நகர்த்த

வயிற்றை நிரப்பும்

கோவிட் இந்தியா

…. … … … … ….

சட்டவிதியை

முழுங்கி

எக்காளமிடும்

நவஇந்தியா.”

 

இவரின் முதல் கவிதைத் தொகுப்பான “ இருந்தும்… இல்லாமலும்” நூலை தொகுத்து முன்னுரை தந்தவன் எந்த அடிப்படையில்  “ குரங்கின் வால்பிரிய,” எனும் இக்கவிதை நூலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் கண்டு மகிழ்கிறேன்.பாராட்டுகிறேன் .இன்னும் செல்ல வேண்டியது நெடுந்தூரம் என சுட்டிக்காட்டுகிறேன்.

 

 “ பனிபொழியும்

காலமாகினும்

அனல் பறக்கும்

காலமாகினும்

சிட்டுக்குருவிகள்

வட்டமடித்து

சிறுதுரும்பை

அலகில் கோர்த்து

உணவூட்டும்

அழகைப் பார்த்து

கொஞ்சத் தோணுதே

பாடம் கற்கத் தோணுதே

மகிழ்ச்சி அள்ளி வீசுதே “

 

என கொஞ்சி மகிழும் “சிட்டுக்குருவி” கவிதை , பட்டுக்கோட்டையை நினைவூட்டுகிறது .

 

 “ உச்சி வகுந்தெடுத்து

ஒத்தச்சட பின்னிக்கிட்டு

ஓரப்பார்வை பார்க்கையிலே

வெட்கம் வந்து மோதுதடி

வெள்ளி மலை குயிலே “

 

எனத் தொடங்கும்  “காப்பான்” எனும் பாடல் அருமை .நாட்டுப்புற இசையின் துடிப்பு அதில் உள்ளது .

 “ தொற்று படரா

நிலமேதுமில்லை

வேலியற்ற காற்றின்

திசைவழியில் மிதக்கும்

வாழ்க்கை படகு

வற்றாக் கடல் மேலே

வானக்குடை கீழே

தத்தளிக்கும் அலையில்

நித்திய கண்டமாய்

மீனவன் உயிர்.”

 

கொரானா இவரின் பலகவிதைகளில் இடம் பிடித்துவிட்டது .இதை காலத்தின் கோலம் என்பதா ? கவிஞரின் மனிதம் என்பதா ?

 

 

 “ லாக்டவுன் இந்தியா”, “டிராமா கம்பெனி” “தொடப்படா சவங்கள்”. “கொரானா” உட்பட பலகவிதைகள் அரசியல் சவுக்கடி .

 

 “குரங்கின் வால்பிரிய” எனத் தொடங்கும்  “நூல் ஏணி” கவிதை படிமலர்ச்சியைச் சொல்லி பாடுபொருள் எதுவாயினும் என அழுத்தி பார்வையைச் சொல்கிறார் .

 

பேரப்பிள்ளைகளைப் பார்க்க அரபுநாடு சென்ற சிபிஜெ அங்கும் சமூகப்பார்வையை தொலைக்காமல் கவிதை எழுதுவது நன்று .

 

 “ எழுத்தாயுத விழிப்பில் எழுவதானதே எழுத்து” எனும் கவிஞர் நூல் நெடுக்க இவ்வழியில் பயணிக்க முயன்றுள்ளார் .

 

இன்னும் நிறைய கவிஞரிடம் எதிர்பார்த்து ,வாழ்த்துகிறேன்.

 

குரங்கில் வால்பிரிய , [கவிதை நூல்] , ஆசிரியர் : ஓசூர் சிபிஜெ ,

வெளியீடு : KRIDISW , தொடர்புக்கு : 9994729943. பக்கங்கள் : 72 ,விலை : ரூ.90/

 

 

சுபொஅ.

26/8/2022.

 

 

 

 


0 comments :

Post a Comment