கிருஷ்ணப் பருந்து சுத்த சைவம்!!!

Posted by அகத்தீ Labels:

 


 

 

 

சிறுகதை .1.

 

[ பிரச்சார சிறுகதையே என உறுதி அளிக்கிறேன் ]

 

கிருஷ்ணப் பருந்து சுத்த சைவம்!!!

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

 


பத்து மணி அலுவலகத்துக்கு எட்டு மணிக்கே புறப்பட்டுவிடுவான்.நகருக்கு வெளியே உருவான புதிய லே அவுட்டில் குடியிருக்கிறான் . பஸ்ஸைப் பிடிக்கவே ஒரு கி.மீ நடக்கணும் .அந்த பஸ் ஸ்டாப்பில் எல்லா பஸ்ஸும் நிற்காது . அது தேசிய நெடுஞ்சாலை . பஸ் ,பலவித கார்கள் ,பைக்குகள் ,ஸ்கூட்டிகள் என எல்லா வாகனமும் விரைந்து கொண்டிருக்கும் .பஸ் ஸ்டாண்டிலும் பெரும்கூட்டம் இருக்கும் . பெண்களுக்கு பஸ்ஸில் இலவசம் என்பதால் அடுத்த ஊருக்கு போய் வேலை செய்யவும் பெண்கள் குவிகின்றனர் .இந்தக் கூட்டத்தோடு ராமசுப்புவும் பயணிக்க நிற்கிறான் .

 

மூன்று பஸ் நிற்காமல் போய்விட்டது . இரண்டு பஸ்ஸில் அடித்துபிடித்து ஏறிய கூட்டத்தில் இவன் முட்டிமோதி ஏறமுடியாமல் கோட்டைவிட்டான் . அடுத்ததாக வந்த பஸ்ஸில் தொற்றி ஏறியவன் முட்டி மோதி நகர்ந்து உள்ளே நின்று கொண்டான் . காசை கை மாற்றி அனுப்பி டிக்கெட் வாங்கி பேண்ட் பாக்கெட்டில் பதுக்கிக் கொண்டான் .வண்டி சென்று கொண்டிருந்தது .

 

 

ராமசுப்பு ஒரு தனியார் அலுவலகத்தில் கிளார்க் வேலை பார்க்கிறான் . நான்கு பேர் வேலையை இவன் ஒருத்தரே பார்த்துவிடுவதால் முதலாளிக்கு இவனை பிடிக்கும் . மூன்று பேர் சம்பளத்தை மிச்சம் பிடித்துக் கொடுத்தால் பிடிக்காதா என்ன ? யூனியன் போராட்டம் இவை எல்லாம் தப்பு என்பது இவன் இரத்தத்தில் ஊறிய சமாச்சாரம் .முதலாளிக்கு இவனை ஸ்பெஷலாகப் பிடிக்க இது போதாதா ? ஆனாலும் எக்ஸ்டரா சம்பளம் ,சலுகை எதுவும் கொடுக்க மாட்டார் .அவனும் கேட்கமாட்டான் . வேலையைச் செய் பலனை எதிர்பாராதே என்பது உண்மையான வேத உபதேசமாச்சே ! மாடா உழைச்சாலும் அதுக்கேற்ற சம்பளம்கேட்கக் கூடாதே!

 

ராமசுப்புவுக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு அடிக்கடி கனவில் மூழ்கிவிடுவான் .அப்போது தத்துவ விசாரணையும் தொடங்கிவிடுவான் . தான் அக்மார்க் பசு நெய்யால் செய்யப்பட்ட சுத்த ஹிந்து என நம்புகிறவன்.கனவும் அப்படித்தான் .

 

தூங்கும் போதுதான் எல்லோருக்கும் கனவு வரும் .ராமசுப்புவுக்கோ நிற்கும் போது ,நடக்கும்போது ,சாப்பிடும் போது , மனைவி மக்களைக் கொஞ்சும் போது , சாமி கும்பிடும்போது ,அலுவலகத்தில் பணியாற்றும் போது என எப்போது கனவு விரியும் என்று சொல்லவே முடியாது .

 

அன்று பஸ்ஸில் நிற்கும் போது கனவு இறக்கை கட்டியது . இவன் ஆமையில் உட்கார்ந்து பயணிக்கிறான் .கூர்ம அவதாரம் தசாவதாரங்களில் இரண்டாவது . இவனைத்தாண்டி குதிரையில் ,கழுதையில், மாட்டுமுதுகில் என ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வாகனத்தில் இவனைத் தாண்டி விரைகின்றனர் . இவன் புன்னகைக்கிறான். தன்னை முந்திச் செல்கிறவர் மீது கோவமோ வெறுப்போ இல்லை . ஆமை நகர்ந்து கொண்டே இருக்கிறது . “யோவ ! முன்னால நகரு!”ன்னு யாரோ தள்ளிவிட விழித்துக் கொண்டான் . இன்றைய கூர்ம அவதாரக் கனவை எண்ணி அவனுக்கு அவனே பாராட்டிக் கொண்டான் . தெய்வ கடாட்சம் இல்லாமல் இப்படிக் கனவு வருமா ?

 

அலுவலகத்தில் வேலையில் மூழ்கிப்போனான் .மதிய உணவுக்குப் பின் நாற்காலியில் சாய்ந்தவன் அப்படியே கனவுலகில் சஞ்சரிக்கலானான்.சொர்க்க வாசலில் நிற்கிறான் .

 

உள்ளேவிட எமதர்மன் மறுக்கிறான் . “ நீ ! இந்து கடையில் சாமான் வாங்கவில்லையே ஏன் ? இந்து இந்துக் கடையில் இந்துப் பொருட்களைத்தானே வாங்க வேண்டும் ?” எமதர்மனின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்தான்.

 

“ மேனஜர் கூப்பிடுறாரு!”ன்னு குரல் கேட்டு விழித்து ஓடினான் . “ அந்த கத்தார் ,ஓமன் , துபாய் ஆர்டருக்கு சரக்கு இன்னிக்கே அனுப்பணும் ! போண் போட்டு நிலவரம் விசாரி !” மேனஜர் உத்தரவு மீற முடியுமா ? வேலையில் மும்முரமானான் .

 

மாலை வீடு திரும்பும் போது வழக்கமாக மளிகை கடன் வாங்கும் பாய்கடை முன் நின்றான் . மனைவி எழுதிக் கொடுத்த பட்டியலை நீட்டினான் . திடீரென்று கனவு நினைவு வர பட்டியலை மடித்து பாக்கெட்டில் போட்டுக்கொண்டு நகர்ந்தான் . இவனின் விசித்திர நடவடிக்கையைப் பார்த்து பாய் சிரித்துக் கொண்டார் .

 

வீட்டில் நுழைந்ததும் மனைவி “ இண்ணிக்கும் மறந்திட்டீங்களா ?” எனக் கெட்டார் . பதில் சொல்லாமல் கைகால் முகம் கழுவி சாமி படங்கள் முன் நின்று கும்பிட்டு நெற்றியில் திருமன் இட்டுக்கொண்டான் . மனைவி தந்த பில்டர் காபியை சுவைத்தவாறே , மனைவியிடம் சொன்னான் , “ இனி ! பாய் கடையில் சாமான் வாங்காதே ! இந்துக் கடையிலேயே இந்துப் பொருட்களையே வாங்கு !”

 

 “ பாய் கடன் தரமாட்டேன்னு சொன்னாரா ? அவரு அப்படி சொல்றவரு இல்லியே !”

 

 “ பாய் சொல்லலை ..” என இழுத்து தன் கனவைச் சொன்னான் . ” கர்மம் ..கர்மம் ..இந்த பாழாப்போன கனவு வியாதி உங்களவிட்டு எப்போது தொலையுமோ ?” என தலையில் அடித்துக் கொண்டே தர்மபத்னி சொல்ல ; அவர் அஞ்ஞானத்தில் பிதற்றுவதாய் அமைதியாக இருந்தான்.

 

 “ சரிங்க ! இப்ப குடிச்சேளே பில்டர் காபி … அது எந்த வேதத்திலே சொல்லப்பட்டிருக்கு ?” என நமட்டுச் சிரிப்புடன் கேள்வியை வீசினாள் .

 

 “ அது … நரஸூஸ் காபி ..ன்னு” இளித்தான் .

 

 “ நைட்டுக்கு என்ன டிபன் ?” என பேச்சை மாத்தினான் .

 

 “ நானும் அடுக்களைய சுத்தி சுத்தி பார்த்துட்டேன் ..  முஸ்லீமோ தலித்தோ சம்மந்தப்படாத இந்து மட்டுமே செய்த எந்தப் பொருளும் வீட்ல இல்ல ..

 

 “ அம்மா ! நீயும் அப்பா மாதிரி மெண்டலாயிடாதே …” என மகன் எரிச்சலோடு கத்த ..

 

 “ குண்டூசி முதல் ராக்கெட் வரை . அரிசி முதல் மருந்து வரை ,துணி முதல் காஸ்மெட்டிக்ஸ் வரை எந்தப் பொருளை எடுத்தாலும் அதில் எல்லா மதத்தவர் ,சாதியினர் வியர்வையும் ரத்தமும் இருக்கு … இந்துக்கடை இந்து சாமன்னு சொல்றது மரை கழண்ட பேச்சு ..” கல்லூரி படிக்கிற பொண்ணு பொரிந்தாள் …

 

 “ அம்மா ,  ஐநூறு ரூபாய் எடுத்துகிட்டேன் ..நானும் அக்காவும் முருகேசன் கடைக்கு போய் பீப் பிரியாணி வாங்கிட்டுவந்து சாப்பிடுறோம் …” என்றான் மகன்

 

 “ஸ்கூட்டருக்கு இந்து பெட்ரோல் போடணும் அதுக்கு காசு எடுக்கலியே !”என்றார் மகள் .

 

நடப்பது எதையும் கவனியாது அவன் கனவில் மூழ்கினான்.

 

 “ என்ன பழையபடியும் கனவா ?” என மனைவி சலிக்க , எதையும் சட்டை செய்யாமல் அவன் பேசலானான் , “ ஒரு கிருஷ்ணப் பருந்து பறந்து வந்தது , திருக்கழுகுன்றத்தில போய் சாப்பிட்டுட்டு …”

 

“ கழுகு அசைவம் அல்லவா ?” மனைவி சந்தேகம்.

 

 “ போடி ,கிருஷ்ண பருந்து சுத்த சைவம்தான் .அந்தப் பருந்து கர்ப்பக விருட்சத்தையும் தூக்கி வந்து நம்ம வீட்டு வாசலிலே நட்டது . அப்போ அங்கே ஒரு காமதேனு பசு தானா வந்தது .அதை நான் அந்த மரத்திலே கட்டிப்போட்டேன் .இனி இந்து பொருட்கள் மட்டுமே நம் கடையில்… ராமராஜ்யம் வந்துகொண்டிருக்கிறது…”

 

 “ ஆமாம் ஆமாம் அவங்க இயேசு வருகிறார்ன்னு சொல்றாங்க நீங்க ராமராஜ்யம் வருதுன்னு சொல்றீங்க … பயித்தியம் முற்றிப்போச்சு…” மனைவி மீண்டும் தலையிலடித்துக் கொண்டு சொன்னாள்.

 

 “ அவனுகு பயித்தியம் முற்றியாச்சு ..அவனுக்கு மட்டுமில்லே நாட்டுக்கே பயித்தியம் பிடிச்சாச்சு … கேரளாவின் சாதிக் கொடுமை கண்ட விவேகானந்தர் பைத்தியக்கார தேசம்னு சொன்னாராம் … இப்ப இருந்தா இந்தியாவே பைத்தியக்கார நாடாகிக்கொண்டு வருதுன்னு காறி துப்பி இருப்பார்..” என வாசலைக் கடந்து உள் நுழைந்தார் ராமசுப்புவின் அப்பா.

 

 

 

 


0 comments :

Post a Comment