தோல்வியின் வாக்குமூலம்

Posted by அகத்தீ Labels:




தோல்வியின் வாக்குமூலம்





ஒரு நாள் ஒரே ஒரு நாள் மட்டும்
அரசியல் பேசாமல் இருக்க உன்னால் முடியுமா ?
சவால்விட்டது நண்பன்தான் எனினும்
ஏதோ ஒரு வேகத்தில் ஒப்புக்கொண்டேன்.


10..9..8..7..6..5..4..3..2..1..
மரணம் எப்போது வரினும் வரவேற்க தயார்


என்ன நண்பா
அரசியல் பேசமாட்டேன் என்றவன்
மரணத்தைப் பேசத் தொடங்கிவிட்டாய் …



வாழ்வு குறித்து பேசத் தொடங்கினால்
அரசியல் நிச்சயம் வந்துவிடும் என்பதால்
மரணம் குறித்து பேசுகிறேன்


சரி … ஒரு சின்னக் கேள்வி
மரணத்தில் அரசியல் இல்லையா ?
கேள்வியை வீசிவிட்டு
வெற்றிப் புன்னகை பூத்தான் நண்பன்.


அதுதானே
சிசு மரணம்
விவசாயிகள் தற்கொலை
பட்டினிச் சாவுகள்


சாவின் அரசியல்
வாழ்வின் தொடர்ச்சி அல்லவா?


நண்பனிடம் தோல்வியை ஒப்புகொள்வதில்
கவுரவம் என்ன வேண்டிக்கிடக்கிறது.


சு.பொ.அகத்தியலிங்கம்
06 /07/2017


0 comments :

Post a Comment