“எட்டு மணி நேர வேலை” : யாரோ போட்ட பிச்சை அல்ல…

Posted by அகத்தீ Labels:

 



  “எட்டு மணி நேர வேலை” : யாரோ போட்ட பிச்சை அல்ல…

 

அண்மையில் வெளியான நூல் . ஆனால் ஒரிரு மாதங்களில் உருவான நூல் அல்ல .” இந்த புத்தகத்தின் கருத்துகள் நீண்ட நாட்களாக நான் களமாடிய கருத்துகளாகும் .” என நூலாசிரியர் கூறிய வாக்குமூலம் மெய்யென்பதை நூலை வாசிப்போர் உணர்வர் .

 

இந்நூல் குறித்து  ‘ஐம்பொறி’ யூ டியூப்பில் நாலய்ந்து அறிமுகங்கள் காணக்கிடைக்கின்றன . ஏற்கெனவே சில நூலறிமுகங்களும் வெளிவந்து விட்டன . ஆகவே இங்கே என் பணி வழிமொழிவது மட்டுமே !

 

இந்நூல் நான்கு முக்கிய கேள்விகளுக்கு விடைகூற முனைந்துள்ளதாகவே நான் கருதுகிறேன் .

 

1] உழைப்பு – கூலி –லாபம் – வேலைநாள் இவற்றுக்கு இடையே உள்ள அரசியல் பொருளாதார உறவு என்ன ? உபரி மதிப்புக்கும் வேலைநாளுக்கும் இடையிலான உறவின் சித்தாந்தத் தொடர்பு என்ன ?

 

2] தொழிற்புரட்சியின் காலகட்டத்தில் நேரம் காலம் இல்லாமல் உழைக்கும் கரங்களும் குழந்தைத் தொழிலாளியும்  முதலாளிகளுக்கு  தேவைப்பட்டது ஏன் ? அதனை உருவாக்க செய்யப்பட்ட சட்டபூர்வ மற்றும் சட்டபூர்வமற்ற முயற்சிகளின் வரலாறும் வலியும் ரணமும் எத்தகையது ?

 

3] 18 மணி நேர உழைப்புச் சுரண்டலில் இருந்து எட்டு மணி நேர உழைப்புக்கு உழைக்கும் வர்க்கம் வந்து சேர கடந்து வந்த கரடு முரடான கண்ணீரின் வெப்பம் மிகுந்த பாதை எது ?

 

4] எட்டு மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து உலகெங்கும் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் சிந்திய ரத்தத்தின் சுவடுகள் எவை ? எவை ? போராடிப் பெற்ற சட்டங்கள் எவை ? எவை ? அதற்கு இன்று வந்துள்ள பேராபத்து யாது ?

 

இப்படி எழும் அடிப்படைக் கேள்விகள் சார்ந்து 13 பகுதிகளாக இந்நூல் அமைந்துள்ளது .

 

முதல் இரண்டு கேள்விகளுக்கு விடை சொல்லும் போது இருந்த ஆற்றின் வேகம் ,அப்புறம் சட்டென பாய்ச்சல் வேகத்தில் நகர்ந்து விடுகிறது . வரலாற்றை ஏற்கெனவே ஒரளவு உள்வாங்கியவர்களுக்கு நினைவூட்டலாக அவை போதும் .ஆயின் புதிய வாசகர்களுக்கு இன்னும் கொஞ்சம் விரிவாகப் பேசியிருக்கலாம் . நூலின் பக்க அளவு ஒரு வேளை தடை ஆகியிருக்குமோ !

 

தோழர் வீரராகவன் ஆய்வு செய்து எழுதிய “ சென்னை பெருநகர தொழிறசங்க வரலாறு “[ அலைகள் வெளியீட்டகம்] ,தோழர் பி.ராமமூர்த்தி எழுதிய  “தொழிற்சங்க இயக்கம் எனது நினைவுகள்” [ பாரதி புத்தகாலயம்],சிங்காரவேலர் சிந்தனைக் களஞ்சியம் மூன்று தொகுதிகள் [ நியூ செஞ்சுரி புக்ஸ் வெளியீடு ] இவற்றிலிருந்து சில செய்திகள் ,மேற்கோள்கள் சேர்க்கப்பட்டிருந்தால் இன்னும் வலுவாயிருக்குமோ ? ஒரு வேளை இது என் பேராசையோ !

 

 “ மக்கள் உற்பத்திக் கருவிகளையும் நிலத்தையும் இழந்த பிறகுதான் வேலை நேரம் என்பது சமூகப் பிரச்சனை ஆகிறது என்பதை பொதுவாக அறிவோம் . இதனை வரலாற்று ரீதியாக தகவல்களைச் சேகரித்து , எல்லையற்ற வேலை நேரம் என்ற கொடுமை எப்படி உழைக்கும் மக்களை நரகத்தில் தள்ளியது என்பதில் தொடங்கி வர்க்கப் போராட்டம் காரணமாக வேலை நேரத்திற்கு எல்லை எப்படி வந்தது என்பதை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது .” இப்படி தோழர் வே.மீனாட்சிசுந்தரம் முன்னுரையில் கூறியிருப்பதைவிட அதிகமாக நான் என்ன சொல்லிவிட முடியும் ?

 

 

இளம் தொழிற்சங்க ஊழியர்களுக்கு தொடர்ந்து நடத்தப்பட வேண்டிய வகுப்பிற்கான ஓர் தலைப்பின் பாடக்குறிப்புகளே இந்நூல் எனில் மிகையாமோ ?

 

வாசிப்பீர் !

வேலை நாள் : ஒரு வரலாற்றுப் பார்வை ,

ஆசிரியர் : அ.பாக்கியம் ,

வெளியீடு : தூவல் பதிப்பகம் ,

54 ,கரிகாலன் தெரு , ஜி எஸ் நகர் , ஆர் ஏ புரம் ,சென்னை – 600 028 . 

அலைபேசி : 94863 44333 , மின்னஞ்சல் : vedhaperumal@gmail.com

பக்கங்கள் : 160 , விலை : ரூ.200 /

 

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

10/10/2023.


0 comments :

Post a Comment