ஒவ்வொரு நாளும்......

Posted by அகத்தீ Labels:

 









ஒவ்வொரு நாளும்

நடை பயிற்சியின் போது

கடந்துபோகும்

தண்ணீர் லாரிகளின் எண்ணிக்கை

கூடிக்கொண்டே போகிறது.

 

ஒவ்வொரு தெருவிலும்

இரவும் பகலும்

ஆழ்துளைக் கிணறு தோண்டும்

இயந்திரத்தின் இரைச்சல்

கேட்டுக்கொண்டே இருக்கிறது .

 

வீட்டின் பின்புறமுள்ள

சில நூற்றாண்டுகள் பழமையான எரி

ஆலை ரசாயணக் கழிவுகளால்

நிரம்பி நாற்றமெடுக்கிறது

 

குடிநீர் கேன் விநியோக

சப்தமும் காட்சியுமாய்

ஒவ்வொரு நொடியும்

நகர்ந்து கொண்டே இருக்கிறது.

 

வானம் தினசரி இருண்டு

நாலு தூறல் போட்டு

போக்கு காட்டிக்கொண்டே இருக்கிறது .

 

குளிர் நகரத்தில்

ஸ்வெட்டர்கள் பீரோவில்

அடைபட்டுவிட்டன

ஏசியும் ஃபேனும் மின்நுகர்வை

அதிகரித்துக் கொண்டிருக்கிறது .

 

பழியை யார் மீது போடலாம் ?

மூளையை கழற்றி வைத்துவிட்டு

மூக்கையும் கண்ணையும்

தீட்டிக் கொண்டிருக்கிறோம்.

நாக்கு தடித்துக் கொண்டிருக்கிறது.

 

சரி ! சரி ! யோசித்தது போதும்

தண்ணீர் லாரியில் அடிபடாமல்

தெருவில் நடக்கப் பழகு முதலில்.

 

சுபொஅ.

17/10/23. பெங்களூர்.

 

 



0 comments :

Post a Comment