சொல் 99

Posted by அகத்தீ Labels:

தினம் ஒரு சொல் .99 [ 22 /12/2018 ] “ எல்லோருக்கும் உதவி பண்ணணும்னு டீச்சர்தானே சொல்லிக் கொடுத்தாங்க ; பரிட்சையில பக்கத்து பிள்ளைக்கு ஹெல்ப் பண்ணுனா திட்டுறாங்க …” என அந்த சிறுமி புகார் செய்தபோது சிரிப்பை அடக்க முடியவில்லை . குழந்தைகளின் உலகமே தனி .அதனை புரிந்து கொள்ள தனி பயிற்சியே தேவை . ஒரு குழந்தை இப்படி புரிந்து கொண்டதில் பிழையில்லை .ஆனால் பெரியவங்க பல பேர் எல்லாவற்றையும் வறட்டுச் சூத்திரமாகவே புரிந்து கொண்டு வாழ்க்கையை வெறும் சடங்குத்தனம் ஆக்கிவிடுகிறார்களே ? இன்று நவீன வாழ்க்கைச் சூழலில் வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. ஆங்கில ஞானம் அவசியமாய் இருக்கிறது .போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது .இதுவரை புரிதல் சரிதான் . ஆனால் ஆங்கிலமே அறிவு என மயங்குவது .தாய்மொழியைப் புறக்கணிப்பதும் . போட்டிக்கு பிள்ளைகளை தயாரிக்கிறோம் என்கிற பெயரில் அவர்களில் சுயத்தையே அழிப்பதும் எந்தவையில் நியாயம் ? வறட்டுத்தனம் எந்திரச் செயல்பாடு என இதைத்தான் சொல்லுகிறோம் . பதின்பருவ பிள்ளைகளை பூட்டி வைத்து கிணற்றுத் தவளை ஆக்கிவிடாதீர் என்கிறோம் . ஒரு பக்கம் அடக்குமுறையில் பிள்ளைகள் தவிக்கிறார்கள் ; கொஞ்சம் மூச்சுவிட இடம் கிடைத்தாலும் தடம் மாறிவிடுகிறார்கள் .மறுபக்கம் கடிவாளம் அற்ற குதிரையாய் அலையவிட்டு இடறி விழுந்ததும் வாயில் வயிற்றில் அடித்துக் கொள்கிறார்கள் . இதைத்தான் வறட்டுத்தனம் ,செக்குமாட்டுப் பார்வை என்கிறோம் .இது பழுதானது .கன்றுக் குட்டி மைதானத்தில் தாராளமாய் மேயட்டும் அதன் நுனி உங்கள் கைவசம் இருக்கட்டும் . உங்களின் ஒரு கண் அதன் மீது எப்போதும் இருக்கட்டும் .ஆக எதையும் இந்தக் கோடி அந்தக் கோடி என புரிந்து கொள்ளாமல் நிதானமான சீர்தூக்கிய அணுகுமுறை தேவை . “ வீணையின் நரம்புகளை இறுகக் கட்டாதீர் / நரம்புகள் அறுந்து போகும் இசைக்க முடியாது /வீணையின் நரம்புகளை தளர்வாகக் கட்டாதீர் / இசை அபஸ்வரம் ஆகிவிடும் / வீணையின் நரம்பை மிதமாய்க் கட்டுங்கள் ….” என்ற பொருளுடைய ஒரு பாடலைப் பழங்குடி விறகுவெட்டும் பெண் பாடக் கேட்டே புத்தர் ஞானம் பெற்றார் என்றொரு வழக்கு உண்டு . அது மெய்யோ பொயோ . ஆனால் பாடலின் சாரம் ஆகப்பெரும் ஞானமே ! வறட்டுப் பார்வையோ வளவள கொளகொள பார்வையோ வாழ்க்கைக்கு உதவாது . நிதானமான ,சரியான பார்வையை வாழ்க்கைப் பயணத்தில் வளர்த்தெடுத்தபடியே முன் செல்லுங்கள் ! Su Po Agathiyalingam

0 comments :

Post a Comment